வகை  |  odb

நான் யார் ?

டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப்  படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.

அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.

டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.

  தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.

நம்மை பெலவீனனாக  காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.

நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.

அதுவே அலுவலகமும் கூட

வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள லங்காஷயரைக் கடந்து சென்ற போது, என் கண்கள் பசுமையான மலைத் தொடர்களையும், அதன் அடிவாரத்தில் கல்வேலிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டு மந்தைகளையும் பார்த்தன. திரண்ட மேகங்கள் பிரகாசமான வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது. நான் காணச் சென்ற தியான மையத்தில் பணிபுரியும் பெண்ணிடம் இக்காட்சியைக் குறித்து சொன்ன போது, அவள்,” என்னுடைய விருந்தாளிகள் இவற்றைக் குறித்துச் சொல்லும் போதேயன்றி, மற்றபடி நான் அவற்றை கவனிப்பதேயில்லை, ஏனெனில் நாங்கள் இப்பகுதி யிலேயே அநேக ஆண்டுகளாக வசிக்கின்றோம். நாங்கள் விவசாயிகளாக இருந்த போது, இக்காட்சிகள் தான் எங்கள் அலுவலகமும் கூட !” என்றாள்.

நம் கண்களுக்கு எதிரே இருக்கின்ற அழகினை- அதுவே நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்து விடும் போது, நாம் அதைக் காணத் தவறி விடுகின்றோம். இயேசுவின் விசுவாசிகளான நாம், நம்முடைய ஆன்மீக கண்களைத் திறக்கும் படி ஆவியானவரைக் கேட்கும் போது, தேவன் நம்மில் செயல்படுகின்ற விதங்களை புரிந்து கொள்ள முடியும். இதனையே பவுலும் எபேசு சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார். இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்,  தம்மை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும்  தருகின்ற ஆவியை அவர்களுகளுக்கு கொடுக்க வேண்டுமென கேட்கின்றார் (எபே. 1:17). மேலும், நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய ஐசுவரியம் இன்னதென்றும், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் அறியும்படிக்கு தேவன் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் (வ.18-19).

தேவன் நம்மிலும், நம் மூலமாகவும் செயல்படுவதை நாம் காணும் படி தேவனுடைய ஈவாகிய கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை விழிப்புள்ள வர்களாக்குகின்றார். முன்னொரு நாள் அலுவலகமாக காட்சியளித்த்தை, இப்பொழுது தேவனுடைய ஒளியையும், மகிமையையும் வெளிப்படுத்தும் இடமாக உணர்த்துகின்றார்.

இயேசுவின் வருகையை எதிர்பார்த்து வாழ்

பாடகர் டிம் மெக்ரா எழுதிய “நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழ்” என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய சாவு நெருங்கி விட்டது எனத் தெரிந்து கொண்ட போது, அவன் செய்த நீண்ட வரிசையான காரியங்களை அப்பாடல் விளக்குகிறது. அவன் பிறரை எளிதாக நேசிக்கவும், மன்னிக்கவும் தெரிந்து கொண்டான், பிறரிடம் கனிவாகப் பேசக்கற்றுக் கொண்டான். நம்முடைய வாழ்வும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று தெரிந்து கொண்டு வாழ்ந்தால் நாமும் நன்றாக வாழ முடியும் என்பதை அப்பாடல் விவரிக்கின்றது.

நம்முடைய காலம் மிகவும் குறுகியது என்பதை இப்பாடல்  நமக்கு நினைப்பூட்டுகிறது. இன்றைக்கு செய்யக் கூடியவற்றை, நாளை என்று தள்ளி  போடாமல் இன்றே செய்வது அவசியம், ஏனெனில்  நாளை நமக்கு கிடைக்காமல் போகலாமே. இயேசுவின் வருகை எந்நேரமும் இருக்கலாம் என நாம் விசுவாசிக்கின்றோம்.(ஒரு வேளை இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட) மணவாளன் வரும் போது ஆயத்தமில்லாமலிருந்த ஐந்து “புத்தியில்லாத” கன்னிகைகளைப் போன்று அல்லாமல் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் படி தேவன் நம்மைத் தூண்டு கின்றார் (மத்தேயு 25;6-10)

மெக்ராவின் பாடல் முழுமையான கதையை நமக்கு வெளிப்படுத்த வில்லை. இயேசுவை நேசிப்பவர்களாகிய நாம் நாளை நமக்கு கிடைக்கவில்லையேயெனத் தவிப்பவர்கள் அல்ல. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25-26) என இயேசு கூறியுள்ளார். அவருக்குள் நம்முடைய வாழ்வு ஒருபோதும் முடிவதில்லை.

எனவே, நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழாதே. ஏனெனில் நம்முடைய வாழ்வு முடிவதில்லை. ஆனால் இயேசுவின் வருகையை எதிர் நோக்கி வாழ். அவர் சீக்கிரம் வருகின்றார்.

விசுவாசத்தில் உறுதியாயிருத்தல்

டெஸ்மாண்ட் டாஸ் என்பவர் இரண்டாம் உலகப்போருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் யுத்தம் செய்பவனாக அல்ல. அவனுடைய மத நம்பிக்கை அவனை துப்பாக்கியேந்தி செல்வதை அனுமதியாததால், டாஸ், போர் வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்தான். ஒரு யுத்தத்தின் போது, எதிரிகளின் மும்முரமான துப்பாக்கி குண்டுகளையும்  தாண்டி, எழுபத்தைந்து காயமுற்ற வீரர்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றான். அவனுடைய கதை ஒரு செய்தி படமாக வெளியிடப்பட்டது. ஹேக்சா ரிட்ஜ் என்ற திரைப்படமாகவும் வெளியானது.

கிறிஸ்தவ விசுவாச வீரர்களின் பட்டியலில் இத்தகைய தைரியமான நபர்களானள் ஆபிரகாம், மோசே, தாவீது, எலியா, பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறுகின்றன. ஆனாலும் பாராட்டப்படாத விசுவாச வீரர்களானள் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவும், யூத மதத் தலைவர்களால் தங்களுக்கு ஆபத்து நேரிடும் அபாயம் இருந்த போதிலும், இவர்கள் இயேசுவின் சரீரத்தை கேட்டு வாங்கி, யூதர்களின் முறைமையின் படியே அடக்கம் பண்ணினார்கள் (யோவா. 19:40-42). யூதருக்கு பயந்து இயேசுவின் அந்தரங்க சீடனாக இருந்த யோசேப்புக்கும், இரவு நேரத்தில் மட்டுமே இயேசுவைச் சந்தித்த நிக்கொதேமுவுக்கும், இது ஒரு தைரியமான செயல். (வச .38-39). இதில் இன்னும் நம்மைக் கவர்வது என்னவெனில், இயேசுகிறிஸ்து வெற்றியாக கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவதற்கு முன்னரே இவர்கள் தங்கள் விசுவாசத்தை உறுதியாய் வெளிப்படுத்தினார்கள். ஏன் ?

இயேசுவின் மரணம் நேர்ந்த விதமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளுமே (மத். 27:50-54) பயந்திருந்த இந்த சீடர்களின் விசுவாசத்தை முற்றிலும் உறுதிபடுத்தின. அவர்கள் மனிதனுக்கு பயப்படுவதைக் காட்டிலும், தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க கற்றுக் கொண்டனர். நாமும் இவர்களைப் போன்று, தேவன் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு, நமக்கு ஆபத்து நேரிடுவதாயினும் ,தைரியமாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவோம்.

பாதுகாப்பானது எனக்கருதப்படும் தவறான இடங்கள்

எங்களுடைய நாய் ரூபெர்ட் சிறிய குட்டியாக இருந்த போது, வெளியிடங்களுக்குச் செல்வதற்கு மிகவும் பயப்படும். நான் அதனை வலுக் கட்டாயமாக அருகிலுள்ள பூங்காவிற்கு இழுத்துச் செல்வேன். அப்படிச் சென்றிருந்த போது ஒரு நாள், நான் அதனைக் கட்டி வைத்திருந்த கயிற்றை விட்டு விட்டேன். அது வேகமாக ஓடி, தான் பாதுகாப்பான இடமெனக்கருதும் எங்கள் வீட்டை அடைந்தது .

இந்த அனுபவம், எனக்கு ஒரு மனிதனை நினைவுக்கு கொண்டு வருகின்றது. நாங்கள் அமர்ந்திருந்த விமானம், ஓடுதளத்தில் ஓட ஆரம்பித்ததும், அருகிலிருந்த       மனிதன் என்னிடம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தான். “நான் இந்த       விமான பயணத்தின் போது மது அருந்தி விடுவேன்” என்றான்.” “குடிக்க விரும்பவில்லை என்பது போல தோன்றுகின்றதே” என்றேன். “ஆம்” என்றான். “ஆனால் நான் மறுபடியும் குடிக்க ஆரம்பித்து விடுகிறேன்” என்றான். அவன் குடித்து விட்டான். அவன் விமானத்திலிருந்து இறங்கிய போது, அவனுடைய மனைவி அவனை அணைத்துக் கொண்டாள். அவன் அருந்தியிருந்த மதுவின் நாற்றத்தை முகர்ந்ததும் அவனைத் தள்ளி விட்டாள். இதனைக் காண்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது. மது அருந்தினால் தான் ,பாதுகாப்பாக இருப்பதாக அவன் எண்ணுகின்றான். ஆனால் அப்படியல்ல.

இயேசு தன்னுடைய பணிக்காலத்தை துவங்கியதும், “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்றார் (மாற். 1:15) மனந்திரும்புதல் என்பது எதிர் திசைக்குத் திரும்புதல். “தேவனுடைய ராஜ்யம்” என்பது நம்முடைய வாழ்க்கையை அவருடைய அன்பின் கட்டளைகளால் ஆளுகை செய்வதாகும். நம்மைச் சிக்க வைத்துவிடும் ஓரிடரத்திற்கு ஓடிச் செல்வதை விட ,அல்லது பயத்தாலும், அடிமைத்தனத்தாலும் ஆளுகை செய்யப் படுவதையும் விட, தேவன் நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுப்போமானால், அவர் அன்போடு நம்மை ஒரு புதிய வாழ்விற்குள்ளும், விடுதலைக் குள்ளும் நடத்திச் செல்வார்.

இன்றைக்கு, ரூபெர்ட் பூங்காவினுள் குரைத்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு ஓடுகின்றது. நான் விமானத்தில் சந்தித்த அந்த  மனிதனும் தான் பாதுகாப்பானது என நம்பிக் கொண்டிருக்கும் மாய இடத்தை விட்டு விட்டு இதே மகிழ்ச்சியையும், விடுதலையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஜெபிக்கிறேன்.