“சரித்திரத்தில் இதுவரை காணாத சுகத்தை தரும் காலுறைகள்,” என்ற விளம்பரத்தைப் பார்த்தபோது என் முகத்தில் சிரிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, பாதங்களுக்கு ஒரு நல்ல செய்தி, வீடற்றவர்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான தேவை காலுறைகள். எனவே ஒவ்வொரு ஜோடி காலுறை வாங்கும் போதும், மற்றொரு ஜோடி தேவையுள்ள ஒருவருக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் எனவும் அந்த விளம்பரதாரர் தெரிவித்தார்.

முப்பத்தெட்டு வருடமாய் நடக்க முடியாமலிருந்த ஒரு மனிதனை இயேசு குணமாக்கிய போது அவன் எவ்வாறு சிரித்திருப்பான் என்று நினைத்துப் பார் (யோவா. 5:2-8). அதே வேளையில் தேவாலயத்தின் அதிகாரிகளின் முகத்தில் தோன்றிய பார்வையை எண்ணிப் பார்த்தால், அவர்கள் யாருமே, நீண்ட நாட்களாக உதவியற்றிருந்த ஒரு மனிதனின் கால்களையும், இருதயத்தையும் குறித்து இயேசு கரிசனை கொண்டதைக் குறித்து நல்லெண்ணம் கொண்டதாகத் தெரியவில்லை. ஓய்வுநாளில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்ற அவர்களுடைய சட்டத்தை மீறியவர்களாக இயேசுவையும், அந்த மனிதனையும் குறித்து குற்றம் சாட்டினர் (வச. 9-10, 16-17). இயேசு, இரக்கத்தின் தேவையை உணர்ந்த இடத்தில், அவர்கள் சட்டத்தைப் பார்த்தனர். 

இது வரையில் அம்மனிதனுக்கு தன்னுடைய கால்களை சுகப்படுத்தியவர் யாரென்றே தெரியாது. பின்னர் தான் தன்னை சுகப்படுத்தியவர் இயேசு என்று தெரிந்து கொள்கின்றான் (வச. 13-15) அதே இயேசு தன்னுடைய பாதங்களை மரத்தில் அடிக்கப்பட ஒப்புக்கொடுத்தார். இதன் மூலம் அம்மனிதனுக்கும், நமக்கும், உடைந்த சரீரமும், உள்ளமும், இருதயமும் கொண்டவர்களுக்கும், சரித்திரத்தில் இதுவரை கேட்டிராத நல்ல செய்தியைத் தந்துள்ளார் .