வகை  |  odb

மூத்த சகோதரன்

எழுத்தாளர் ஹென்றி நோவென், ரஷ்யா தேசத்தில், செயின்ட் பீட்டஸ்பெர்க் என்ற இடத்தில், அதிக மணி நேரங்களைச் செலவிட்ட ஒரு காரியத்தை நினைவு கூருகின்றார். அது, ரெம்பிராண்ட் வரைந்த, மனம் திரும்பிய மகனின் படம். அந்த நாளின், பொழுது சாயும் வேளையில், இயற்கையின் ஒளி மங்கும் வேளையில், அருகிலுள்ள ஜன்னல் வழியே வரும் ஒளியின் மாற்றத்திற்கேற்றாற் போல், வெவ்வேறு காட்சிகள், அவருடைய கற்பனையில் தோன்றின. ஒவ்வொரு காட்சியும், கெட்டுப்போன மகனின் மீது தந்தை கொண்டுள்ள அன்பின் வெவ்வேறு நிலைகளை அவருக்கு வெளிப்படுத்தியது.

மாலை நான்கு மணிக்கு, அந்த படத்திலுள்ள மூன்று உருவங்களும் முன்னோக்கி நகர்வது போன்று, அவருக்கு காட்சியளித்தை விளக்குகின்றார். முதலாவது, மனந்திரும்பி, வீட்டிற்குத் திரும்பிய இளைய குமாரனை வரவேற்க, சிவப்பு கம்பளம் விரித்த தந்தையிடம், தன் கோபத்தைக் காட்டிய மூத்த மகன். நம்முடைய குடும்ப ஆஸ்தியின் பெரும் பங்கை செலவழித்துப் போட்டு, நமக்கு அவமானத்தையும், வேதனையையும் வருவித்தவனல்லவா இவன், என்கின்றான் (லூக். 15:28-30).

நோவெனின் மனதில் தோன்றிய அடுத்த இரு நபர்கள், இயேசு இந்த உவமையை கூறிய போது, அருகிலிருந்த இரு மத தலைவர்கள். இயேசு பாவிகளை நேசித்து, அவர்களோடு உறவாடிய போது, அவருக்கு பின்னாக முறுமுறுத்த நபர்கள் இவர்களே (வச. 1-2).

நோவென், இவர்கள் எல்லாரிலும் தன்னைக் கண்டார், தன்னுடைய வாழ் நாட்களை வீணாக்கிய இளைய குமாரனின் வாழ்விலும், குற்றம் கண்டுபிடிக்கும் மூத்த மகனிலும், மதத் தலைவர்களிலும், யாவரையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் தந்தையின் உள்ளத்திலும் தன்னைக் கண்டார்.

நாம் எப்படி இருக்கிறோம்? ரெம்பிராண்ட்டின் படத்தில் நம்மை எங்காகிலும் காண முடிகிறதா? இயேசு கூறிய ஒவ்வொரு கதையும், ஏதோ ஒரு வகையில், நம்மைப் பற்றியே கூறுகிறது,

அழகாக பாரங்கொண்டேன்

நடு இரவில் விழித்துக் கொண்டேன். நான் அரைமணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டேன். எனக்கு தூக்கம் வருவதாகவும் இல்லை. என்னுடைய சிநேகிதியின் கணவன் மருத்துவ மனையில் படுத்திருக்கிறார், அவரை பயப்படுத்தும் செய்தி வந்தது,” கேன்சர் மீண்டும் வந்துவிட்டது, அது, மூளையையும், முதுகுத் தண்டையும் பாதித்துள்ளது” என்பதுதான் அந்த செய்தி. என்னுடைய சிநேகிதியின் நிலை, என்னை முற்றிலும் பாதித்தது. எத்தனை பெரிய சுமை! நான் விழித்திருந்து ஜெபிக்க ஆரம்பித்தேன், என் ஆத்துமாவில் சற்று ஆறுதல் அடைந்தேன். நான் அவர்களுக்காக அழகாக பாரம் கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். இது எப்படி நடந்தது?

மத்தேயு 11:28-30 வசனங்களில், இயேசு சோர்வடைந்த நம்முடைய ஆத்துமாவிற்கு இளைப்பாறுதலை வாக்களிக்கின்றார். இது சற்று வித்தியாசமானது. நாம் குனிந்து, அவருடைய நுகத்தை ஏற்றுக் கொண்டு, அவருடைய பாரத்தை நாம் அரவணைக்கும் போது, இந்த இளைப்பாறுதல் கிடைக்கிறது (வச. 30). இதைத் தெளிவு படுத்துகின்றது. “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது “என்றார் இயேசு. நம் முதுகிலுள்ள பாரச் சுமையை இயேசு தூக்கிக் கொள்ள நாம் அனுமதித்து விட்டு, அவருடைய நுகத்தில் நம்முடைய தோளைக் கொடுக்கும் போது, அவரோடு இணைந்து, அவர் தருகின்ற சுமையைச் சுமக்கிறவர்களாகின்றோம், அவருடைய நுகத்திற்கு நாம் குனியும் போது, நாம் அவருடைய பாடுகளையும் பகிர்ந்து கொள்கின்றோம், அதன் மூலம் அவர் தரும் ஆறுதலிலும் பங்கடைகிறோம் (2 கொரி. 1:5).

என்னுடைய சிநேகிதியின் மீது கொண்டுள்ள கரிசனை, பெரிய பாரமாயிருக்கிறது. ஆனாலும், அதனை ஜெபத்தின் மூலம் தேவனிடம் கொண்டு வரும் படி, தேவன் தயை புரிந்ததால், நான் நன்றியுள்ளவளாயிருக்கிறேன். கொஞ்ச கொஞ்சமாக என் கவலை தணிந்து, நான் தூங்கி விட்டேன். காலை எழுந்த போது, அந்த அழகிய பாரம், இலகுவான நுகத்தின் அடியில் இலேசான சுமையாக மாறியது, இயேசுவோடு நடக்க ஆரம்பித்தேன்.

கடைசி மட்டும் கனி கொடுத்தல்

லெனோர் டன்லப், தனது தொண்ணூற்று நான்கு வயதிலும், இளமையோடு இருந்தார், அவள் கூர்மையான சிந்தனையும், பிரகாசமான சிரிப்பும் கொண்டிருந்தாள். அவள் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பை அநேகர் உணர்ந்தனர். அவள், எங்களுடைய ஆலயத்தின் வாலிபர்களோடு கொண்டிருந்த தொடர்பை யாவரும் அறிவர். வாலிபர்களோடு, அவள் பங்கு பெற்று வந்தது, மிக்க மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தது. லெனோரின் வாழ்க்கை யாவரையும் அசைக்கிறதாக இருந்ததால், அவளுடைய மறைவு, எங்களை மிகவும் பாதித்தது. ஒரு வலிமையான ஓட்டக்காரனைப் போன்று, அவள் தன்னுடைய வாழ்க்கை ஓட்டத்தை முடித்தாள். அவளுடைய மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வரை, தன்னுடைய ஆற்றலும், ஆர்வமும் குறையாமல், பதினாறு வாரங்கள் இயேசுவைக் குறித்த செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்வதில் முனைந்திருந்தாள்.

தேவனை கனப்படுத்திய, கனி நிறைந்த அவளுடைய வாழ்வு, சங்கீதம் 92:12-15ல் கூறப்பட்டுள்ளது போன்று உள்ளது. தேவனோடுள்ள உறவில் ஆழ்ந்து வேர் விட்டு வளர்ந்தவர்களின் வாழ்க்கை மொட்டுக்களும், மலர்களும், கனிகளும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் என இந்த சங்கீதம் விளக்குகிறது (வச. 12-13) இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரு மரங்களும், (பனை, கேதுரு) அதன் கனிக்கும், உறுதியான மரத்திற்கும் பேர் பெற்றவை. இவற்றின் மூலம் சங்கீதக்காரன் நீண்ட ஆயுளையும், செழிப்பையும், பயனையும் குறிப்பிடுகின்றார். நம்முடைய வாழ்வில் அன்பும், பகிர்தலும், உதவுதலும், மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தலும் காணப்படும் போது, நம் வாழ்வும் மொட்டுக்களையும், மலர்களையும், கனிகளையும் கொண்டுள்ளது என்பதை நினைத்து மகிழ்வோம்.

“மூத்தவர்கள்”, “பண்பட்டவர்கள்” என்று பெயர் பெற்றவர்களும் , வேர் விடவும், கனி கொடுக்கவும் முடியாதபடி, முதிர்வடைந்து விடவில்லை, லெனோரேயின் வாழ்க்கை இயேசுவின் மூலம், தேவனுக்குள் ஆழ்ந்து வேர் விட்டு, இதற்கும், தேவனுடைய நன்மைக்கும் சாட்சியாகவுள்ளது (வச. 15). நாமும் கூட இதேப் போன்று வளர முடியும்.

உண்மையான, ஆழ்ந்த வாஞ்சை

கீச்சொலி கொண்ட ஒரு சுண்டெலி, அதன் பெயர் ரீபிசீபி. இது நார்னியாவின் நடபடிகள் என்ற கதைகளில் வரும் வீரமிக்க கதாபாத்திரம்.

வினோதமான விலங்குகளும், மனிதரும் வாழும் ஒருகற்பனை உலகத்தில், ரீபிசீபி என்பது ஒரு வீரமிக்க சுண்டெலி. அது தன்னுடைய சிறிய வாளை வீசிய வண்ணம், போர்களத்தில் இறங்கியது. அது, பயத்தை புறம்பே தள்ளி விட்டு, ஓர் இருளடைந்த தீவிற்குள் நுழைந்தது. இந்த ரீபிசீபியின் தைரியத்திற்கான காரணம் என்ன? அந்த சுண்டெலியின் மனதிற்குள், எப்படியாவது அஸ்லான் தேசத்தை அடைந்து விட வேண்டும் என்றிருந்த ஆழ்ந்த ஆவல் தான் இதற்கு காரணம். “அது தான் என் இருதயத்தின் வாஞ்சை” என்று கூறியது .ரீபிசீபியின் உண்மையான, ஆழ்ந்த விருப்பம், அதனை அரசனுக்கு நேராக வழி நடத்தியது.

எரிகோவிலிருந்த பர்திமேயு என்ற குருடன், தன்னுடைய வழக்கத்தின் படியே ஓரிடத்தில் உட்கார்ந்து, குவளையிலிருந்த காசுகளை குலுக்கிய வண்ணம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது, அவ்வழியே இயேசுவும், திரள் கூட்டமும் வருவதை அறிந்தான். உடனே அவன், “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் ‘ என்று கூப்பிடத் தொடங்கினான் (மாற். 10:47). அக்கூட்டத்தினர் அவனை அமைதியாயிருக்குமாறு அதட்டினர், ஆனால் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை.

மாற்கு சொல்கின்றார், “இயேசு நின்றார்” (வ.49) அந்த கூட்டத்தின் நடுவில் ,இயேசு பர்திமேயுவிற்கு செவிகொடுத்தார். அவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய்?” என்று கேட்டார் (வச. 51).

அவனுடைய பதில் என்னவாயிருக்கும் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், பர்திமேயு தன்னுடைய ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் படி, இயேசு விரும்பினார். அவனுடைய உறுதியான விசுவாசத்தின் மூலம் வெளிப்படும் வல்லமையை அவர் அறிந்திருந்தார். “ஆண்டவரே, நான் பார்வை அடைய வேண்டும்” என்றான் பர்திமேயு. இயேசு அவனை வண்ணங்களையும், அழகையும், நண்பர்களின் முகத்தையும் முதல் முறையாக காணச் செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

எல்லா விருப்பங்களும் உடனே சந்திக்கப்படுவதில்லை. இங்கு தேவையானது என்னவென்றால், பர்திமேயு தன்னுடைய உள்ளத்தின் வாஞ்சையை இயேசுவிடம் எடுத்துச் சென்றான். இதை நன்கு கவனித்தோமேயானால், நம்முடைய ஆழ்ந்த விருப்பங்களும் , வாஞ்சைகளும் நம்மை இயேசுவிடம் வழி நடத்திச் செல்லும் என்பதைக் கண்டுகொள்வோம்.