வகை  |  odb

மர்மமான உதவியாளர்கள்

தசைநார் தேய்வு என்ற நோயினால் லீலா வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள். ஒரு நாள், அவள் இரயில் நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது, அதிகமான படிகளை ஏற வேண்டியதிருந்தது. அங்கு நகரும் மின் படிகளும் இல்லை. அவளுக்கு கண்ணீர் வர இருந்த வேளையில், திடீரென ஒரு மனிதன் அங்கு வந்து, அவளுடைய பைகளைச் சுமந்து கொண்டு, அவளும் மெதுவாக படியில் ஏறும் படி உதவினார். அவள்  நன்றி கூறத் திரும்பிய போது, அவரைக் காணவில்லை.

மைக்கேல், ஒரு கூட்டத்திற்குச் செல்வதற்கு தாமதமாகிவிட்டது. ஓர் உறவின் மன முறிவினால் ஏற்பட்ட மனஅழுத்தம் ஒருபுறம், லண்டன் பட்டணத்தின் வாகன நெரிசல் மறுபுறம், இவற்றின் ஊடே கார் டயரில் காற்று இறங்கிவிட்டது. அவன் உதவியற்றவனாக, மழையில் நனைந்து கொண்டிருக்கும் போது, கூட்டத்திலிருந்து வ ந்த ஒரு மனிதன், காரின் பொருள் வைக்கும் பகுதியைத் திறந்து, காரை உயர்த்தி, டயரை மாற்றினான். மைக்கேல் நன்றி கூறத் திரும்பிய போது, அவரைக் காணவில்லை.

யார் இ ந்த மர்மமான உதவியாளர்கள்? இரக்கமுள்ள அந்நியர்கள்? அல்லது அதையும் விட மேலானவர்களா?

 பிரகாசமான தோற்றமும், இறக்கைகளும் கொண்ட உருவம் தான், நாம் தேவதூதர்களுக்கு  கொடுத்து வைத்திருக்கும் பிரபலமான உருவம். இதில் சிறிதளவே உண்மையுள்ளது. சில தேவதூதர்கள் இவ்வாறு தோன்றுகின்றனர் (ஏசா 6:2; மத் 28:3), மற்றும் சிலர் நிலத்தில் கால் பதித்து வருவதோடு, உணவு உண்ணவும் தயாராயிருக்கின்றனர். (ஆதி 18:1-5). அவர்களை நாம் சாதாரண மக்கள் என தவறாகவும் கருதக் கூடும். (நியா 13:16). நாம் அந்நியரை  உபசரிப்பதன் மூலம், சில வேளைகளில் தேவதூதரையும் உபசரிப்பதுண்டு என்று எபிரெயரை எழுதியவர் கூறுகின்றார். (13:2)

லீலாவுக்கும், மைக்கேலுக்கும் உதவியவர்கள் தேவதூதர்கள் தானா, என்பதை நாம் அறியோம். ஆனால், வேதாகமத்தின் அடிப்படையில் நாம் பார்க்கும் போது, அப்படியும் இருக்கலாம். தேவதூதர்கள் இப்பொழுதும், தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள் (எபி 1:14). அவர்கள் சாதாரணமாக நாம் தெருவில் பார்க்கும் மனிதர்களைப் போன்றும் வரலாம்.

ஒளியைப் பிரகாசித்தல்

ஸ்டீபன், தன் பெற்றோரிடம், தான் ஒவ்வொரு நாள் காலையும் சீக்கிரமாக பள்ளிக்குச் செல்ல வேண்டுமென கூறினான். ஆனால், அது ஏன் அத்தனை முக்கியமானது என அவன் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவனுடைய பெற்றோர், ஒவ்வொரு நாளும் அவனைப் பள்ளிக்கு, காலை 7:15 க்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்டீபன், ஜுனியர் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள், பனிபடர்ந்த நாளில் ஒரு கார் விபத்தில் மரித்துப் போனான். இதன் பின்னர், அவனுடைய பெற்றோர், ஸ்டீபன் ஏன் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு சீக்கிரமாகச் சென்றான் என்பதைக் கண்டு பிடித்தனர். ஒவ்வொரு காலையும், ஸ்டீபனும் அவனுடைய நண்பர்களும் பள்ளியின் நுழை வாயிலில் நின்று கொண்டு, அங்கு வரும் அனைத்து மாணவர்களையும் புன்சிரிப்போடும், கரங்களை அசைத்தும், அன்பான வார்த்தைகளாலும் வரவேற்றனர். இது அனைத்து மாணவர்களுக்கும், சிறப்பாக பிரபலமற்ற மாணவர்களுக்கும், தங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர் என்கின்ற ஓர் உற்சாகத்தைக் கொடுத்தது.

இயேசுவின் விசுவாசியான ஸ்டீபன், தன்னுடைய மகிழ்ச்சியை மற்றவர்களோடும், சிறப்பாக மிகவும் தேவையிலிருப்போரோடும் பகிர்ந்துகொள்ள விரும்பினான். தன்னுடைய  வரவேற்கும் எண்ணத்தோடு கூடிய அன்பின் செயலால், மிகச் சிறந்த முறையில், கிறிஸ்துவின் அன்பாகிய ஒளியைப் பிரகாசிக்கச் செய்தான்.

மத்தேயு 5:14-16 ல், இயேசு நம்மைக் குறித்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” எனவும், “மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” எனவும் வெளிப்படுத்துகின்றார். (வ.14). முற்காலத்தில், அநேகப் பட்டணங்கள் வெள்ளை சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டிருக்கும், அவை சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் போது, பிரகாசமாகக் காணப்படும். அது போன்று, நாமும் மறைந்து விடாமல், வீட்டிலுள்ள அனைவருக்கும் கிறிஸ்துவின் ஒளியைக் காட்டுவோம். (வ.15).

நாம் நம்முடைய ஒளியை பிறர் முன்பாக பிரகாசிக்கச் செய்யும் போது, (வ.16), அவர்களும் கிறிஸ்துவின் வரவேற்கும் அன்பை அநுபவிப்பார்கள்.

நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளது

நாம் வசிக்கும் கிரகம், சூரியனிலிருந்து  துல்லியமாக, மிகச்சரியான தொலைவில் இருப்பதால், அதன் வெப்பத்தின் சரியான பலனைப் பெற முடிகிறது. இன்னும் சற்று நெருங்கினால், புதனில் நடப்பது போன்று, பூமியிலுள்ள தண்ணீர் யாவையும் ஆவியாகி விடும். இன்னும் சற்று தள்ளிப் போனால், செவ்வாய் கிரகத்தில் நடப்பது போன்று, அனைத்தும் உறைந்து போகும். சரியான அளவு ஈர்ப்பு விசையை உருவாக்கும் படி, புவியின் உருவ அளவு அமைந்துள்ளது. ஈர்ப்பு விசை குறைவாக இருந்தால், நிலவில் உள்ளது போல எந்த உயிரினமும் வாழமுடியாமல் போய் விடும், அதிக ஈர்ப்பு விசை இருந்தால், நச்சு வாயுக்கள் எல்லாம் ஈர்க்கப்பட்டு, வியாழனில் உள்ளது போல் உயிரினங்கள் சுவாசிக்க முடியாத வளிமண்டலமாகி விடும்.

இயற்பியல், வேதியல், மற்றும் உயிரியலின் நுணுக்கமான பிணைப்புகளால் அமைந்துள்ள இவ்வுலகம், அதிநவீன படைப்பாளரின் கைத்திறனைக் காட்டுகின்றது. நாம் புரிந்து கொள்ள முடியாத காரியங்களைக் குறித்து, தேவன் யோபிடம் பேசும் போது, நாம் இந்த சிக்கலான  கைவினையின் ஒரு சிறிய பகுதியைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது, நீ எங்கேயிரு ந்தாய்?.....அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல் போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?” (யோபு 38:4-6) என தேவன் யோபுவிடம் கேட்டார். 

பரந்து விரிந்துள்ள படைப்புகளும், புவியின் மகா சமுத்திரங்களும், “கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டு வந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவரும்,…….இம்மட்டும் வா, மிஞ்சி வராதே.” (வ.8-11) என்றவருக்கு முன்பாக வணங்கி நிற்கிறதைக் காணும் போது, நம்மை வியக்கச் செய்கிறது. நம்மை வியக்கச் செய்யும், விடியற்காலத்து நட்சத்திரங்களின் பாடல்களோடு, நாமும் பாடுவோம், தேவ புத்திரரோடு சேர்ந்து நாமும் மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிப்போம். (வ.7), ஏனெனில் இந்த அகன்ற உலகத்தை தேவன் நமக்காகவே உருவாக்கியுள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் மீது நம்பிக்கையோடிருப்போம்.

தேவன் காத்திருந்தார்

டென்னிஸ் லெவர்டோவ், ஒரு புகழ் பெற்ற கவிஞராவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, அவளுடைய பன்னிரண்டாம் வயதில், புகழ் பெற்ற கவிஞரான டி.எஸ். எலியெட் என்பவருக்குத் தன்னுடைய பாடல்களை புத்திசாலித்தனமாக தபாலில் அனுப்பி வைத்தாள். பின்பு, தனக்கு ஒரு பதில் வருமெனக் காத்திருந்தாள். என்ன ஆச்சரியம்! எலியட் தன் கைப்பட எழுதிய இரண்டு பக்க ஊக்கமிகு வார்த்தைகளை அனுப்பினார். அவளுடைய  நீரோடையும் நீலக்கற்களும் (The Stream and the Sapphire) என்ற பாடல்களின் தொகுப்பிற்கு எழுதிய முகவுரையில் “கடவுள் நம்பிக்கையற்றிருந்த என் வாழ்வு எப்படி கிறிஸ்தவ நம்பிக்கைக்குள் கடந்து வந்தது” என்ற வழியை இப்பாடல்கள் காட்டுகிறது என்று எழுதியிருந்தாள். பிற்காலத்தில் அவள் எழுதிய பாடலான, (“Annunciation”) மரியாளுக்கு தேவதூதனின் வெளிப்பாடு பற்றிய பாடல், மரியாள் தன்னை தேவனுக்கு அர்ப்பணித்ததை விளக்குகின்றது. பரிசுத்த ஆவியானவர், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றும் படி, மரியாளைக் கட்டாயப் படுத்தி, தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர விரும்பவில்லை. அவருடைய நோக்கமெல்லாம், மரியாள் விருப்பத்தோடு, கிறிஸ்துவை தன்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. “தேவன் காத்திருந்தார்” என்ற இரு வார்த்தைகளும் அந்தப் பாடலின் மையமாக மிளிர்ந்தன.

மேரியின் கதையின் மூலம், லெவர்டோவ் தன்னுடைய வாழ்க்கையை உணர்ந்தார், தேவன் அவளுக்காக காத்திருக்கின்றார், அவளை நேசிக்கும்படி ஆவலாயிருக்கிறார் என்பதை உணர்ந்தாள். தேவன் எதையுமே அவளிடம் கட்டாயப்படுத்தவில்லை. அவர் காத்திருந்தார். இந்த உண்மையை ஏசாயாவும் விளக்குகின்றார். இஸ்ரவேலர் மீது தன்னுடைய அன்பை பொழியும் படி, தேவன் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் ஆயத்தமாக நிற்கின்றார், என்கிறார். “உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்” (30:18). தன்னுடைய ஜனங்களின் மீது இரக்கத்தைக் கொட்டும்படி ஆயத்தமாயிருக்கின்றார், ஆனாலும் அவர்கள் முழுமனதோடு, தான் கொடுக்க விரும்புவதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென காத்திருக்கின்றார் (வ.19).

நம்மைப் படைத்தவர், இவ்வுலகத்தின் இரட்சகர், நாம் அவரை வரவேற்க வேண்டுமென காத்திருக்கிறார். எளிதாக நம்மை மேற்கொள்ள வல்ல தேவன், பொறுமையோடு காத்திருத்தலையே செயல் படுத்துகின்றார். பரிசுத்த தேவன், நமக்காக காத்திருக்கிறார்.