
இலக்கும் நோக்கமும்
2018 ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த, விளையாட்டு வீரரான காலின் ஓ பிராடி, இதுவரை நடைபெறாத ஒரு வகை நடையை மேற்கொண்டார். அவர் அனுதின தேவைக்கான பொருட்கள் அடங்கிய வண்டியை இழுத்துக் கொண்டே நடந்தார், இவ்வாறு, ஓ பிராடி அண்டார்டிகா பகுதி முழுவதும் தனியாக, 932 மைல்களை 54 நாட்களில் கடந்தார். அது ஒரு மறக்க முடியாத, அர்ப்பணமும், தைரியமும் உடைய பிரயாணமாக இருந்தது.
பனியிலும் குளிரிலும் தனிமையாக சோர்வடையச் செய்யும் நீண்ட தூரத்தை நடந்த அனுபவத்தைப் பற்றி, ஓ பிராடி கூறும் போது, “நான் ஆழ்ந்த முயற்சிக்குள் இழுக்கப்பட்டேன், முழு நேரமும் என்னுடைய கவனம் இலக்கின் முடிவையே நோக்கியிருந்தது, என்னுடைய சிந்தனை முழுவதையும் இந்த பிரயாணத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த அனுபவங்களையே நினைத்துக்கொள்ள அனுமதித்தேன்” என்றார்.
இயேசுவின் விசுவாசிகளாகிய நாமும் கைக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றினை இவ்வாக்கியம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் தேவனை மகிமைப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களுக்கு தேவனை வெளிப்படுத்துபவர்களாகவும் வாழ வேண்டும் என்பதையே இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஆபத்து நிறைந்த பாதை வழியே பயணிக்கும் பவுல், “என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” என அப்போஸ்தலர் 20:24ல் குறிப்பிடுகின்றார்.
நாம் இயேசுவோடுள்ள உறவில், நாம் அவரோடு நடக்கும் போது, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்வோமாக, ஒரு நாள் நம்முடைய இரட்சகரை முகமுகமாய் சந்திப்போம் என்பதைக் கருத்தில் கொண்டவர்களாய் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

ரகசியம்
சில வேளைகளில் என்னுடைய பூனை ஹீத்கிளிஃப், FOMO (Fear Of Missing Out) என்பதால் பாதிக்கப்படும். நாம் எதையாவது பார்க்காமல் விட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே வாழும் இந்த வியாதியினால், அது கஷ்டப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வரும் போது, ஹீத்கிளிஃப் வேகமாக வந்து, நான் வாங்கி வந்துள்ளவற்றை ஆய்வு செய்யும், நான் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும் போது, அது தன்னுடைய பின்னங்கால் பாதங்களில் நின்றுகொண்டு, நான் வைத்திருப்பவற்றை உற்றுப்பார்க்கும், நான் அவற்றை அதனோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கும். நான் அவற்றில், அதற்குப் பிடித்தமானதைக் கொடுக்கும் போது, அது, அதன் மீதுள்ள ஆர்வத்தை இழந்து, கோபத்தோடும், சலிப்போடும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.
எனக்கு அன்பான அந்த பூனையிடம், நான் கடுமையாக நடந்து கொள்வது ஒரு பாசாங்குத் தனம் தான். எனக்குள் இருக்கிற மேலும், மேலும் வேண்டும் என்கிற ஒரு திருப்தியற்ற பசி, என்னுடைய பூனையையும் தொற்றிக்கொண்டது. என்னுடைய திருப்தியற்ற பசியைக் குறித்து, நான் சிந்தித்துப் பார்க்கும் போது, “இப்பொழுது” என்பது எனக்குப் போதுமானதாக இல்லை.
திருப்தி என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவதில்லை, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் (பிலி. 4:11). என்னென்ன காரியங்கள் நம்மை திருப்திபடுத்த முடியும் என்று நாம் நினைக்கிறோமோ, அவற்றை விடாப்பிடியாக அடைந்து விடுகிறோம், ஆனால் வேறொன்றைப் பார்த்ததும், நம்முடைய மனநிறைவு கலைந்துவிடுகிறது. இந்த திருப்தியற்ற நிலை, சில வேளைகளில் நம்மை பதட்டதிற்கு இழுத்துச் செல்கிறது. இதனால், அநேகரைக் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து நம்மை ஒதுக்கிக் கொள்கின்றோம்.
இன்னும் கூறுவோமேயானால், உண்மையான சந்தோஷத்தை அநுபவிப்பதற்குப் பதிலாக, எதைக்குறித்து பயப்பட்டோமோ, அதையே அநுபவிக்கின்றோம். வாழ்வில் மிக மோசமான விளைவுகளை அநுபவித்த பின்பு, பவுல் உண்மையான திருப்தியின் “இரகசியத்தை” வெளிப்படுத்துகின்றார் (வச. 11-12). முழுமையான திருப்தியைப் பெற நாம் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் தேவனிடம் ஒப்படைக்கும் போது, நம்மால் விளங்கிக் கொள்ளமுடியாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்கின்றோம் (வச. 6-7). கிறிஸ்துவின் ஆழமான வல்லமைக்குள்ளும், அழகிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இழுத்துக் கொள்ளப்படுவோம்.

நிலைத்திருக்கும் விசுவாசம்
எர்னஸ்ட் ஷக்கில்டன் (1874-1922), 1914 ஆம் ஆண்டு, அண்டார்டிக்கா சமுத்திரத்தைக் கடக்கும் முயற்சியில், ஒரு குழுவினரை வழிநடத்தினார். இதற்காக ஆயத்தப்படுத்தின கப்பலுக்கு “எண்டியுரன்ஸ்” (சகிப்புத் தன்மையுடையது) என்று பெயரிட்டார். அந்தக் கப்பல், வெட்டெல் கடலில், கடுமையான பனியில் அகப்பட்டுக் கொண்டது. அவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு அதிக சகிப்புத்தன்மையோடு ஓட வேண்டியதாயிற்று. அவர்கள் உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த வகையிலும் முடியாத நிலையில், ஷக்கில்டனும் அவருடைய குழுவினரும், உயிர் காக்கும் படகுகள் உதவியால் அருகிலுள்ள யானைத் தீவின் கரையை அடைந்தனர். அக்குழுவின் அநேகர் அத்தீவிலேயே தங்கிவிட, ஷக்கில்டனும் மேலும் ஐந்து பேரும், இரண்டு வாரங்கள் நடந்து, 800 மைல்களைக் கடந்து, தெற்கு ஜியார்ஜியாவை அடைந்தனர். அங்கு வந்த பின், தங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு உதவியைப் பெற்றளித்தனர். தோல்வியடைந்த அவர்களின் பிரயாணம், வெற்றியாக முடிந்து, சரித்திரத்தில் இடம் பிடித்தது. ஷக்கில்டன் குழுவினர் அனைவரும் தப்பிப் பிழைத்ததால், அவர்களின் தைரியத்தையும், சகிப்புத்தன்மையையும் நன்றியோடு நினைப்போம்.
அப்போஸ்தலனாகிய பவுல், சகித்தலை நன்கு அறிவார். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக, ஒரு விசாரணைக்கு ரோமாபுரிக்குச் சென்ற போது, அவர் சென்ற கப்பல் கொடிய புயலில் சிக்கிக் கொண்டது. தேவதூதன் மூலம் அந்தக் கப்பல் மூழ்கிப் போகும் என்பதை பவுல் அறிந்து கொண்டான். பவுல் அக்கப்பலில் பிரயாணம் செய்த அனைவரையும் ஊக்கப்படுத்தி, கரையை அடையச் செய்தார். அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வர் என்ற வாக்கிற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார். அவர்களின் கப்பல் மட்டும் சேதமானது (அப். 27:23-24).
பேரழிவுகளை நாம் சந்திக்கும் போது, தேவனாகிய கர்த்தர் அனைத்தையும் உடனே சரியாக்கி விட வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் தேவன் நம்பிக்கையைக் கொடுத்து, நாம் சகித்து வளரும்படி செய்கிறார். பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும் போது, “உபத்திரவம் பொறுமையை………உண்டாக்குகிறது” (ரோம. 5:3) என்கிறார். எனவே, கடினமான நேரங்களில் தேவன் மீது நம்பிக்கையாயிருந்து, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.
எதிர்பாராத மாற்றம்
1943 ஆம் ஆண்டு, தெற்கு டக்கோட்டாவிலுள்ள ஸ்பியர்ஃபிஷ் என்ற இடத்தை வறண்ட காற்று தாக்கிய போது, அங்கு வெப்பநிலை,-4F இருந்து 45F (-20 டிகிரி C இருந்து 7டிகிரி C) ஆக உயர்ந்தது. இந்த திடீர் வானிலை மாற்றம், 49 டிகிரி வெப்பநிலை உயர்வு இரண்டே நிமிடங்களில் ஏற்பட்டது. இந்த பயங்கர வெப்பநிலை மாற்றம், அடுத்த 24 மணி நேரங்களில் வியத்தகு வகையில் 103 டிகிரிகள் உயர்ந்தது என அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது! 1972 ஆம் ஆண்டு, ஜனவரி 15 ஆம் நாள், லோமா, மான்டனா ஆகியோர் அவ்விடங்களில் வெப்பநிலை -54 டிகிரியிலிருந்து 49 டிகிரி ஃபாரன்கீட் (-48 டிகிரியிலிருந்து 9 டிகிரி செல்ஸியஸ்) ஆக உயர்ந்தது எனக் கண்டனர்.
இவ்வாறு ஏற்படும் திடீர் மாற்றங்கள் வெறுமனே வானிலையில் மட்டும் நிகழ்வன அல்ல, சில வேளைகளில் வாழ்க்கையையே மாற்றுகின்றன. இப்படியிருக்க, “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப்போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து, சம்பாத்தியம் பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள், நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே” (4:13-14) என்று யாக்கோபு நினைவுபடுத்துகின்றார். எதிர்பாராத நஷ்டம், வியப்பூட்டும் மருத்துவ அறிக்கை, பொருளாதார திருப்பங்கள் என்பதைப் போன்ற திடீர் மாற்றங்கள் ஏற்படலாமே.
நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் அநேக எதிர்பாராத காரியங்கள் நிகழலாம். இதனாலேயே, ஆண்டவருடைய சித்தத்தை எண்ணத்தில் கொள்ளாத “வீம்பு காரியங்களை” விட்டுத் திரும்புங்கள் (வச. 16) என்று யாக்கோபு கூறுகின்றார். அவர் நமக்குத் தரும் ஆலோசனையின் படி, “ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” (வச. 15) என்கின்றார். நம் வாழ்வின் காரியங்களெல்லாம் உறுதியற்றவை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நம் வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகளின் மத்தியில், நம்முடைய தேவன் நம்மை ஒருபோதும் விட்டு விலகுவதில்லை, நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே.

