
என்றுமுள்ள அன்பு
பல ஆண்டுகளுக்கு முன்னர், என்னுடைய நான்கு வயது மகன், ஓர் உலோகத்தகட்டில் பதிக்கப்பட்டிருந்த மரத்தாலான இருதயம் அமைப்பு, ஒன்றினை எனக்குப் பரிசாகக் கொடுத்தான். அதின் மத்தியில் “என்றும்” என்ற வார்த்தை எழுதப் பட்டிருந்தது. “நான் என்றும் உங்களை நேசிக்கிறேன், அம்மா” என்றான். நான் அவனை நன்றியோடு அணைத்துக் கொண்டேன். “நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றேன். அந்த விலையேறப் பெற்ற வெகுமதி, என்னுடைய மகன் என் மீது வைத்துள்ள முடிவில்லாத அன்பைக் காட்டியது. கடினமான நாட்களில் தேவன் அந்த இனிமையான பரிசின் மூலம் என்னைத் தேற்றி, ஊக்கப் படுத்தி, அவருடைய ஆழ்ந்த அன்பு எப்போதும் எனக்குண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றார்.
என்னுடைய மகனின் பரிசின் மூலம், வேதாகமம் முழுமையிலும் கூறப்பட்டுள்ள தேவனுடைய ஈவாகிய அவருடைய மாறாத அன்பு எனக்கு என்றுமுள்ளது என்றும், பரிசுத்த ஆவியானவர் அதை உறுதிபடுத்துகின்றார் என்பதை அவர் நினைவு படுத்துகின்றார், தேவனுடைய மாறாத நன்மைகள் என்றும் நமக்குள்ளது என்பதை நன்றியோடு போற்றிப் பாடுவோம். சங்கீதக்காரனைப் போன்று, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 136:1) என்று பாடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய நாமத்தை உயர்த்திப் பாடுவோம் (வச. 2-3). அவருடைய அளவற்ற அதிசயங்களையும், முடிவில்லாத ஞானத்தையும் தியானிப்போம் (வ.4-5). நம்மை என்றும் நேசிப்பவரை, வானங்களையும் பூமியையும் ஞானமாய் படைத்தவரை, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவரைத் துதிப்போம் (வச. 6-9).
சங்கீதக்காரன் பாடுகின்றது போல, என்றுமுள்ள அவருடைய கிருபையும், அன்பும் இப்பொழுது நம் வாழ்விலும் அவருடைய பிள்ளைகள் மீதும் தொடர்ந்து பொழிகின்றது.. நாம் எத்தகைய பிரச்சனைகளைச் சந்தித்தாலும் நம்மைப் படைத்தவர் நம்மோடிருந்து, நம்மை பெலப் படுத்தி, நம்மை நிபந்தனையற்று முற்றிலும் நேசிக்கிறேன் என்கின்றார், தேவனே, வாழ்வை மாற்றும் உம்முடைய மாறாத அன்பினைக் குறித்து எங்களுக்கு அநேகம் முறை நினைவு படுத்துவதற்காக நன்றி கூறுகின்றேன்.

சந்தேகமும் விசுவாசமும்
மேத்யூ கடுமையான தலை வலியினால் விழித்துக் கொண்டான், இது ஒரு வகை ஒற்றைத் தலைவலியாக இருக்கும் என எண்ணினான். ஆனால் அவன் படுக்கையை விட்டு எழுந்ததும் தரையில் சரிந்தான். அவன் ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட போது, மருத்துவர்கள் அவனை பக்க வாதம் தாக்கி இருக்கிறது என்றனர், மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் சிகிச்சை பெற்றபின்பு, அவர் சிந்திக்கும் மற்றும் பேசும் ஆற்றலைத் திரும்பப் பெற்றார், ஆனால் மூட்டு வலியோடு தான் நடக்க முடிகின்றது. விரக்தியினால் அடிக்கடி பாதிக்கப் பட்டாலும், யோபு புத்தகம் அவருக்கு மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது.
யோபு தன்னுடைய செல்வம் அனைத்தையும், தன்னுடைய பிள்ளைகளையும் ஒரே நாளில் இழ ந்தான். இந்த அதிர்ச்சி தரும் செய்திகளின் மத்தியிலும், அவன் முதலாவது தேவனை நம்பிக்கையோடு பார்த்தான், அவரே எல்லாவற்றையும் தந்தவர் என்று அவரைத் துதித்தான். குழப்பத்தின் மத்தியிலும் சர்வ வல்ல தேவனைப் போற்றினான் (யோபு 1:21). அவனுடைய உறுதியான விசுவாசம் நம்மை வியக்கச் செய்கின்றது. ஆனாலும், யோபு விரக்தியோடு போராடினார். அவன் சுகவீனமான போது (2:7) தான் பிறந்த நாளைச் சபித்தான் (3:1). தன்னுடைய வேதனையிலும், அவன் தன் நண்பர்களோடும் தேவனோடும் உண்மையாய் இருந்தான். கடைசியாக, நன்மையும் தீமையும் தேவனுடைய கரத்திலிருந்து வருகின்றது என்பதை ஏற்றுக் கொண்டான் (13:15; 19:25-27).
நம்முடைய வேதனையின் மத்தியில், நாம் நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையேயும், சந்தேகத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையேயும் ஊசலாடிக் கொண்டிருக்கலாம். நம்முடைய துன்ப நேரத்தில் ஊக்கம் இழந்தவர்களாக அல்ல, நம்முடைய கேள்விகளோடு தேவனிடம் வரும்படி நம்மை அழைக்கின்றார். சில வேளைகளில் நம்முடைய விசுவாசம் குன்றிப் போனாலும், என்றும் உண்மையுள்ள தேவன் பேரில் நம்பிக்கையோடிருப்போம்.

பேச முடியாத மனிதன்
ஒரு முதியோர் இல்லத்தில், முதியவர் ஒருவர், தன்னுடைய நகரும் நாற்காலியில் அமர்ந்திருந்தவாறு, ஓர் உயர் நிலைப் பள்ளியிலிருந்து வந்திருந்த வாலிபர்கள் இயேசுவைக் குறித்துப் பாடியப் பாடலை மிகவும் மகிழ்ச்சியோடு கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சில வாலிபர்கள் அவரிடம் பேச ஆரம்பித்தனர். அவரால் பேச முடியாது என்பதை அப்பொழுது கண்டுபிடித்தனர். பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்ட அவர், பேசும் திறனை இழந்தார்.
அந்த மனிதனோடு உரையாடலைத் தொடர முடியாத அந்த வாலிபர்கள் மேலும் பாடல்களைப் பாடினர், அவர்கள் பாட ஆரம்பித்ததும், ஒரு வியத்தகு காரியம் நடைபெற்றது, பேச முடியாத அந்த மனிதன் பாட ஆரம்பித்தார். உற்சாகத்தோடு, சத்தத்தை உயர்த்தி, “How Great Thou Art’ என்ற பாடலை தன்னுடைய புதிய நண்பர்களோடு சேர்ந்து பாடினார்.
அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அது ஒரு மறக்க முடியாத அநுபவமாக இருந்தது. அந்த மனிதன் தேவன் மீது கொண்டிருந்த அன்பு எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு, செவியால் கேட்கக் கூடிய ஆராதனையாக வெளிப்பட்டது – அது, உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மகிழ்ச்சி நிறைந்த ஆராதனை.
நம் அனைவருக்குமே சில வேளைகளில் ஆராதனை செய்வதற்குத் தடைகள் ஏற்படலாம், அது உறவுகளில் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம் அல்லது பணப் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது தேவனோடுள்ள உறவில் குளிர்ந்து காணப்படும் இருதயமாக இருக்கலாம்.
மாட்சிமையும் மகத்துவமும் நிறைந்த நமது சர்வ வல்ல தேவன் எல்லாத் தடைகளையும் உடைக்க வல்லவர் என்று நமது பேசமுடியாத நண்பர் பாடலின் மூலம் நமக்குச் சொல்லுகின்றார் “(O, lord my God, when I in awesome wonder, consider all the worlds Thy hands have made!” ) “என் தேவனுடைய கரங்கள் படைத்த, இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நான் பார்க்கும் போது நான் ஆச்சரியத்தால் திகைத்து நிற்கின்றேன்” என்பதே அவர் பாடிய பாடல்.
நீயும் தேவனை ஆராதிக்க போராடிக் கொண்டிருக்கின்றாயா? சங்கீதம் 96 ஐ வாசித்து, தேவன் எத்தனை பெரியவர் என்பதை சிந்தித்துப் பார். உன்னுடைய ஆராதனைக்குத் தடையாக இருந்த எதிர்ப்புகள் எல்லாம் துதியாக மாறும்.

நமக்காக ஜெபத்தை ஏறெடுப்பவர்
ஒரு சனிக் கிழமை, பிந்திய மதிய வேளையில், அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிடும்படி குடும்பத்துடன் அமர்ந்தோம். உணவு பரிமாறுபவர் எங்களது மேசையில் உணவுகளை வைத்தபோது, எனது கணவர் நிமிர்ந்து பார்த்து, அவருடைய பெயரைக் கேட்டார். அத்தோடு, “சாப்பிடும் முன்னர் நாங்கள் குடும்பமாக ஜெபிப்பது வழக்கம், இன்று உனக்காக நாங்கள் ஜெபிக்கும்படி ஏதாகிலும் இருக்கிறதா?” எனக் கேட்டார். அவனுடைய பெயரை நாங்கள் இப்பொழுது அறிவோம், சஞ்ஜெய் எங்களை ஆச்சரியத்தோடும், எதிர்பார்ப்போடும் பார்த்தான். சிறிது நேர அமைதிக்குப் பின்னர், அவன் தன்னுடைய நண்பனின் அறையில் தங்கியிருந்து அவனுடைய சோபாவில் தான் ஒவ்வொரு இரவும் தூங்குவதாகவும், அவனுடைய மோட்டார் வாகனம் பழுதடைந்து விட்டதாகவும் கூறி மனமுடைந்து போனான்.
என்னுடைய கணவர், தேவனிடம், சஞ்சைக்குத் தேவையானவற்றைக் கொடுக்குமாறும், அவனுக்கு தேவனுடைய அன்பைக் காட்டுமாறும் ஜெபித்தார். நாம் பரிந்து கேட்கும் ஜெபமும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேவைகளைத் தெரிந்து கொண்டு, தேவனுக்கு அவற்றைத் தெரியப்படுத்துவதை போல உள்ளது. நம்முடைய மிகப் பெரிய தேவைகளின் போதும், நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் நம் வாழ்வை கையாள முடியாது என உணரும் போதும், தேவனிடம் என்ன சொல்வது என்று அறியாமல் திகைக்கும் போதும், “ஆவியானவர் தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). ஆவியானவர் என்ன சொல்லுவார் என்பதை நாம் அறியோம், ஆனால் அது தேவன் நம்முடைய வாழ்விற்கு வைத்திருக்கும் சித்தத்தை நிறைவேற்றுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தமுறை நீ தேவனுடைய வழி நடத்தலுக்காக, தேவைகளுக்காக, ஒருவரின் வாழ்வின் பாதுகாப்பிற்காக ஜெபிக்கும் போது, அ ந்த இரக்கத்தின் செயல் மூலம் உன்னுடைய ஆவிக்குரிய தேவைகள் தேவனிடம் எடுத்துச் செல்லப் படுகின்றன என்பதை தெரிந்து கொள். அவர் உன்னுடைய பெயரை அறிவார், உன்னுடைய பிரச்சனைகளை அவர் பார்த்துக் கொள்வார்.
