வகை  |  odb

வல்லமையோடு இணைக்கப்பட்டது

பலத்த புயலினால் எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதை அறிந்திருந்தும் (நம்மைச் சுற்றிப் பொதுவாக நடைபெறுகின்ற அசௌகரியங்கள்) எப்பொழுதும் போல நான் அறைக்குள் நுழைந்ததும் மின்விளக்கு சொடுக்கியை அழுத்தினேன். மின்விளக்கு வெளிச்சம் தரவில்லை. மின்விளக்கு வெளிச்சம் இல்லாத காரணத்தினால் நான் இருட்டுக்குள்தான் இருந்தேன். 
மின்சாரம் இல்லாமல் இருந்தும் வெளிச்சத்தை எதிர்பார்த்த அந்த அனுபவம் எனக்கு ஒரு ஆவிக்குரிய உண்மையை தெளிவாக நினைவூட்டியது. நாம் ஆவியானவரைச் சார்ந்திருக்கத் தவறினாலும், பல நேரங்களில் நாம் வல்லமையை எதிர்பார்க்கிறோம். 
  
1 தெசலோனிக்கேயரில், பவுல் எப்படியாக சுவிசேஷ செய்தியை தேவன் வரப்பண்ணினார் என்பதை எழுதுகிறார், "வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது”(1:5). நாம் தேவ மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்பொழுது, விசுவாசிகளாகிய நம் வாழ்வில் அவருடைய ஆவியின் வல்லமையை உடனடியாக அனுபவிக்க முடியும். அவ்வல்லமையானது அன்பு, சந்தோஷம், சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை நம்மில் வளர்க்கிறது (கலாத்தியர் 5:22-23). மேலும் வரங்களினால் நம்மைத் தகுதிப்படுத்தி சபைக்கு ஊழியம் செய்யவும், போதிக்கவும், உதவவும், வழி நடத்தவும் செய்கிறது (1 கொரிந்தியர் 12:28). 
  
பவுல் தனது வாசகர்களுக்கு "ஆவியை அவித்து போடுதல்" என்பது சாத்தியமே என எச்சரித்தார் (1 தெசலோனிக்கேயர் 5:19). நாம் தேவனுடைய பிரசன்னத்தையும், அவருடைய எச்சரிப்பையும் புறக்கணித்து, அவருடைய ஆவியின் வல்லமையை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன (யோவான் 16:8). ஆனால் தேவனுடனான நம் உறவிலிருந்து நாம் பிரிந்திருக்க வேண்டியதில்லை. தேவனின் வல்லமை அவருடைய பிள்ளைகளுக்கென்று எப்போதும் இருக்கிறது. 

நமது புகலிடம்

வட அமெரிக்காவில் எருமைகள் நடமாடிய இடம் அது. உண்மையில் அப்படியாகத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. அப்பகுதியில் மக்கள் மந்தைகளுடனும், பயிர்களுடனும் குடியேறும் வரை, சமவெளி இந்தியர்கள் காட்டெருமைகளை அங்கே பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். பியர்ல் துறைமுகத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரசாயன உற்பத்தித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது, பின்னர் பனிப்போர் ஆயுதங்களை, இராணுவ துருப்புக்களைத் திரும்பப் பெறும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு நாள் வழுக்கைக் கழுகுகளின் கூட்டம் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தது. விரைவில் அவ்விடத்தில் "ராக்கி மவுண்டன் ஆர்சனல் தேசிய வனவிலங்கு புகலிடம்” உருவானது. கொலராடோவின் டென்வர் பெருநகரத்தின் விளிம்புகளில் புல்வெளி, ஈரநிலம் மற்றும் வனப்பகுதி வாழ்விடமாகிய பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பகுதியானது இப்போது நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற சரணாலயங்களில் ஒன்றாகும். கருங்கால் ஃபெரெட்டுகள் முதல் வழுக்கை கழுகுகள், துளையிடும் ஆந்தைகள் வரை முந்நூறுக்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்குப் பாதுகாப்பான இல்லமாக இன்று உள்ளது. உங்களால் இதை யூகித்துப் பார்க்க முடிந்ததா? எருமைகள் நடமாடிய இடம். 
 
"தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்" (62:8) என சங்கீதக்காரன் கூறுகிறார். உலகில் உள்ள எந்தவொரு நம்பிக்கையான புகலிடத்தையும் விட, தேவனுடைய பிரசன்னம் நமக்கு உண்மையான அடைக்கலமாய், பாதுகாப்பாய் இருக்கிறது "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்" (அப்போஸ்தலர் 17:28), எனவே "எல்லா நேரங்களிலும்" நாம் நம்பிக்கை வைக்கக்கூடிய நமது அடைக்கலம் தேவனே (சங்கீதம் 62:8). அவர் நம்முடைய சரணாலயமாக இருக்கிறார். அவரிடம் நாம் தைரியமாக நம் எல்லா ஜெபங்களாலும் நம் இருதயத்தில் உள்ளவைகளை ஊற்றலாம். தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்: அவர் நேற்றும், இன்றும், எப்போதும் அடைக்கலமானவராகவே இருக்கிறார்

பிரிவு வார்த்தைகள்

 ஜான் பெர்கின்ஸ், மரிப்பதற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கிறார். இன நல்லிணக்கத்தின் போராளியாக அறியப்பட்ட பெர்கின்ஸ், “மனந்திரும்புதலே தேவனிடம் திரும்புவதற்கான ஒரே வழி. நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்கள்” என்று தன் கடைசி வார்த்தைகளை பதிவுசெய்கிறார்.  
இதே வார்த்தைகளை வேதாகமத்தில் இயேசுவோடு சேர்த்து அநேகர் பயன்படுத்தியிருக்கின்றனர். இயேசு, “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” (லூக்கா 13:3) என்று சொல்லுகிறார். பேதுரு, “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:20) என்று சொல்லுகிறார்.  
வேதாகமத்தில் வெகுகாலத்திற்கு முன்பாகவே அனைத்து ஜனங்களின் மனந்திரும்புதலை விரும்பிய ஒரு மனிதர் இருக்கிறார். தீர்;க்கதரிசியும், ஆசாரியனும், நியாயாதிபதியுமாயிருக்கிற சாமுவேல், “இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி” (1 சாமுவேல் 12:1) சொன்னது என்னவென்றால், “பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பெல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்” (வச. 20) என்று சொல்லுகிறார். தீமையிலிருந்து விலகி முழுஇருதயத்தோடும் தேவனை தேடச்செய்வதே அவருடைய மனந்திரும்புதலின் செய்தி.  
நாமெல்லாரும் பாவம் செய்து தேவனை விட்டு வழிவிலகிப்போனோம். நாமெல்லாருக்கும் மனந்திரும்புதல் அவசியப்படுகிறது. அதாவது, பாவத்தை விட்டு வழிவிலகி, நம்மை மன்னித்து வழிநடத்தும் இயேசுவிடம் திரும்புவது. தேவன் தன்னுடைய நாமத்தை கனப்படுத்தும் மனிதர்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்தும் மனந்திரும்புதலின் வல்லமையை அறிந்த ஜான் பெர்கின்ஸ் மற்றும் சாமுவேல் என்னும் இந்த இரண்டு மனிதர்களுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுப்போம்.

எதிர்பாராத இடங்களில் சுவிசேஷம்

நான் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு, அதிக முறை திரைப்படங்களிலும் டிவியிலும் பார்த்த ஹாலிவுட், கலிபோர்னியா போன்ற இடங்களை தற்போது நேரில் பார்க்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் மலையடிவாரத்தில், எனது ஹோட்டல் ஜன்னலில் இருந்து பார்த்தபோது, அந்த மகத்தான வெள்ளை எழுத்துக்கள், புகழ்பெற்ற அந்த மலைப்பகுதி முழுவதும் கெம்பீரமாய் படர்ந்திருப்பதை பார்க்கமுடிந்தது.  
வேறு ஒன்றையும் நான் பார்த்தேன். அதின் இடது பக்கத்தின் கீழே சிலுவை ஒன்று தென்பட்டது. அதை நான் எந்த திரைப்படத்திலும் பார்த்ததில்லை. அந்த தருணத்தில் நான் என் ஹோட்டலிலிருந்து வெளியேறி, அங்கிருந்த திருச்சபையில் இருக்கும் ஒரு சில மாணவர்களை அழைத்துக்கொண்டு இயேசுவைக் குறித்து அறிவிக்க புறப்பட்டேன்.  
ஹாலிவுட் போன்ற இடங்கள் தேவனுடைய இராஜ்யத்திற்கு முற்றிலும் விரோதமான கேளிக்கை ஸ்தலமாய் நாம் பார்க்கலாம். ஆனால் அங்கேயும் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்.  
பரிசேயர்கள், இயேசு கடந்து சென்ற இடங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள் எதிர்பார்த்த இடங்களுக்கு அவர் செல்லவில்லை. மாறாக, அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்த ஆயக்காரரோடும் பாவிகளோடும் நேரம் செலவழித்தார் (வச. 15). யாருக்கு கிறிஸ்து அவசியப்பட்டாரோ அவர்களோடு இயேசு இருந்தார் (வச. 16-17). 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இன்றும் எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்கள் மத்தியில் கிறிஸ்து தன்னுடைய நற்செய்தியை பிரஸ்தாப்படுத்துகிறார். அந்த ஊழியப்பணியில் நாமும் பங்கேற்பதற்கு கிறிஸ்து நமக்கும் அழைப்பு விடுக்கிறார்.

நீங்கள் தனிமையாயிருக்கும்போது

இரவு 7 மணியளவில், ஹ_ய்-லியாங் தனது சமையலறையில் அரிசி உணவையும் மீதியான மீன்களையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பக்கத்து அபார்ட்மெண்டில் இருந்த சுவா குடும்பமும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு எழுந்த அவர்களின் சிரிப்பு மற்றும்  உரையாடலின் சத்தமானது ஹ_ய்-லியாங்கின் அமைதியை பாதித்தது. அவருடைய மனைவி இறந்ததிலிருந்து அவர் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். அவர் தனிமையோடு வாழக் கற்றுக்கொண்டார். அது ஒருவகையான மனவலியை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவருடைய மேசையில் இருந்த உணவும் அதை உண்ணும் குச்சியும் அவரை வெகுவாய் பாதித்தது.  
அவர் படுக்கைக்கு செல்லும் முன்பு, ஹ_ய்-லியாங் அவருக்கு பிரியமான சங்கீதம் 23ஐ வாசித்தார். அவரை வெகுவாய் பாதித்த வார்த்தைகள் “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (வச. 4) என்பதே. ஒரு மேய்ப்பன் ஆடுகளோடு இடைபடும் இயல்பான செய்கையை விடுத்து, அந்த ஆட்டின் அனைத்து காரியங்களிலும் தலையிட்டு அதைப் பாதுகாக்கும் மேய்ப்பனை இவ்வார்த்தை பிரதிபலிக்கிறது (வச. 2-5). அது ஹ_ய்-லியாங்கிற்கு ஆறுதலளித்தது.  
நமக்காக அல்லது நம்முடன் யாரோ இருக்கிறார்கள் என்பது தனிமையான நேரங்களில் மிகவும் ஆறுதலாயிருக்கிறது. தேவனுடைய தெய்வீக அன்பானது அவருடைய பிள்ளைகளின் மீது எப்போதும் இருக்கும் என்று வாக்களிக்கிறார் (சங்கீதம் 103:17). அவர் நம்மை விட்டு விலகுவதில்லை (எபிரெயர் 13:5). நம்முடைய சமையலறையிலோ, பேருந்தும் வேலைக்கு செல்லும்போதோ, ஜனநெருக்கடியான சந்தைகளிலோ, எங்கெல்லாம் நாம் தனிமையாய் உணருகிறோமோ, அங்கெல்லாம் நம் மேய்ப்பன் நம்மோடிருக்கிறார். “தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” என்று நாமும் சொல்வோம்.