வகை  |  odb

இயேசுவைப் போல

2014 ஆம் ஆண்டில், உயிரியலாளர்கள் பிலிப்பைன்ஸில் ஒரு ஜோடி ஆரஞ்சு பிக்மி கடல் குதிரைகளை கைப்பற்றினர். அவர்கள் கடல்வாழ் உயிரினங்களையும், ஆரஞ்சு பவள கடல் விசிறி என்னும் ஒரு உயிரினத்தையும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸ{க்கு அழைத்துச் சென்றனர். பிக்மி கடல் குதிரைகள் தங்கள் பெற்றோரின் நிறத்துடனோ அல்லது அவற்றின் சுற்றுச்சூழலுடனும் ஒன்றிணைகிறதா என்று கண்டறிய விரும்பினர். பிக்மி கடல் குதிரைகள் மந்தமான பழுப்பு நிறக் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, விஞ்ஞானிகள் ஒரு ஊதா நிற பவளக் கடல் விசிறி உயிரினத்தை தொட்டியில் விட்டனர். ஆரஞ்சு நிற பெற்றோரின் குழந்தைகள், ஊதா நிற கடல் விசிறிக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டது. அவைகளுக்கு இயல்பாகவே இருக்கும் பெலவீனமான சுபாவத்தை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறமாற்றிக்கொள்ளும் தேவன் கொடுத்த திறனைக்கொண்டு மாற்றியமைத்துக்கொண்டது.

சூழ்நிலையோடு ஒத்துப்போவது என்பது அவசியப்படக்கூடிய ஒரு சுபாவம். இருப்பினும், இரட்சிப்பைப் பெறவும், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் உலகில் தனித்து நிற்கவும் தேவன் நம் அனைவருக்கம் அழைப்புக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனை கனப்படுத்தும்படிக்கு கிறிஸ்தவ விசுவாசிகளை அப்போஸ்தலர் பவுல் வலியுறுத்துகிறார். நம்முடைய சரீரத்தை “ஜீவபலியாக” (ரோமர் 12:1) செலுத்துவதின் மூலம் அவருக்கு நாம் ஆராதனை செய்யமுடியும். பாவத்தால் நம்முடைய சரீரம் பெலவீனமடைந்ததால், நம்முடைய சிந்தையை புதுப்பித்து, “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” தேவனை மறுதலித்து பாவத்தை மகிமைப்படுத்தாமல் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆவியானவர் எடுத்துக்கொள்கிறார் (வச. 2).

இவ்வுலகத்திற்கு ஒத்த வாழ்க்கை வாழுவது என்பது வேதத்திற்கு புறம்பாய் வாழும் வாழ்க்கையாகும். ஆகிலும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நாம் இயேசுவைப்போல பார்க்கவும் ஜீவிக்கவும் முடியும்.

தீர்க்கதரிசிகளின் செய்தி

1906ஆம் ஆண்டு நடைபெற்ற பேஸ்பால் உலகத் தொடருக்கு முன், விளையாட்டு எழுத்தாளர் ஹக் புல்லர்டன் ஒரு புத்திசாலித்தனமான கணிப்பை முன்வைத்தார். வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சிகாகோ கப்ஸ் அணி முதல் மற்றும் மூன்றாவது ஆட்டங்களில் தோல்வியடைந்து இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று சொன்னார். மேலும் நான்காம் ஆட்டத்தில் மழைபெய்யும் என்றார். அவர் சொன்னதுபோலவே நடந்தது. பின்னர், 1919 இல், அவரது பகுப்பாய்வுத் திறன் மூலம் சில வீரர்கள் ஆட்டமிழப்பார்கள் என்று சொல்லியதும் நிறைவேறியது. அவர்கள் சூதாட்டக்காரர்களால் லஞ்சம் பெற்றதாக புல்லர்டன் சந்தேகித்தார். அதிலும் அவர் சொன்னபடியே நடந்தது.

புல்லர்டன் ஒரு தீர்க்கதரிசி கிடையாது. ஆனால் ஆதாரங்களை நன்றாக ஆராய்ந்தவர். எரேமியா தீர்க்கதரிசி நிஜத்தில் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிற்று. எருதின் நுகத்தை கழுத்தில் பூண்ட எரேமியா, யூதா பாபிலோனியர்களுக்கு அடிபணிந்து வாழும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் (எரேமியா 27:2,12). ஆனால் அனனியா என்னும் கள்ளத் தீர்க்கதரிசி அவனுக்கு விரோதமாய் பேசி, நுகத்தை உடைத்துப்போட்டான் (28:2-4,10). அனனியாவைப் பார்த்து எரேமியா, “அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை... இந்த வருஷத்திலே நீ சாவாய்” (வச. 15-16) என்று சொன்னான். இரண்டு மாதங்கள் கழித்து அனனியா செத்துப்போகிறான் (வச. 17).

புதிய ஏற்பாடு, “பூர்வகாலங்களில்... தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபிரெயர் 1:1-2) என்று சொல்லுகிறது. இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் வேதவாக்கியங்கள், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் ஆகியவற்றின் மூலம் தேவனுடைய சத்தியங்கள் நமக்கு இன்னும் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது

விட்டுவிடுங்கள்

கீத் பணிபுரிந்த புத்தகக் கடையின் உரிமையாளர் இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றிருந்தார். ஆனால் அவரது உதவியாளரான கீத் ஏற்கனவே பீதியில் இருந்தார். புத்தகக் கடை சீராக இயங்கினாலும், அதை தன்னால் நேர்த்தியாய் மேற்பார்வையிட முடியாது என்று கீத் சற்று பதற்றத்திலிருந்தார். ஆகையால் வெறித்தனமாய் தன்னால் முடிந்த அனைத்திலும் மூக்கை நுழைத்து செயல்பட துவங்கினார்.

“போதும் நிறுத்து” என்று அவரது முதலாளி ஒரு வீடியோ அழைப்பின் மூலம் அவரிடம் கூறினார். “நான் தினமும் உனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தும் வேலைகளை மட்டும் நீ செய்தால் போதும். கவலைப்படாதே கீத். சுமை உன் மீது இல்லை; அது என் மீது உள்ளது" என்று தெரியப்படுத்தினார்.

மற்ற நாடுகளோடு இஸ்ரவேலுக்கு கலகம் ஏற்படும்போது, தேவன் அவர்களை அமர்ந்திருக்கும்படி சொல்லுகிறார் (சங்கீதம் 46:10). அதாவது, “சுயமாய் முயற்சிசெய்வதை நிறுத்துங்கள், நான் சொல்வதைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்காக யுத்தஞ்செய்வேன்” என்று சொல்லுகிறார். எதுவும் செய்யாமல் இஸ்ரவேல் அமைதிகாக்கவில்லை; மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, சூழ்நிலையை கட்டுப்படுத்தும் தேவனை சார்;ந்துகொண்டனர்.

நாமும் அதையே செய்வதற்காய் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நம்பும் தேவன் சர்வத்தையும் ஆளுகிறவர் என்பதினால் அதை நம்மால் நேர்த்தியாய் செய்யமுடியும். “அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று,” “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்” (வச. 6,9). ஆகையால் அவருடைய அடைக்கலத்தையும் பெலத்தையும் நாம் நம்பலாம் (வச. 1). நம்முடைய வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை, அது தேவனிடத்தில் இருக்கிறது.

அந்நியர்களை உபசரித்தல்

ஆயிரக்கணக்கான உக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் போரிலிருந்து தப்பி பெர்லினின் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, அவர்கள் ஒரு ஆச்சரியத்தை எதிர்கொண்டனர். ஜெர்மன் குடும்பங்கள் அகதிகளுக்கு ஆதரவளிப்பதாக தங்கள் கைகளினால் எழுதப்பட்ட வாசகங்களை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். “இரண்டு பேரை உபசரிக்க முடியம்” என்று ஒரு அடையாளம் வாசிக்கப்பட்டது. “பெரிய அறை இருக்கிறது” என்று இன்னொரு வாசகம் தென்பட்டது. அந்நியர்களுக்கு ஏன் இத்தகைய உபசரிப்பு வழங்குகிறீர்கள் என்று ஒரு பெண்ணை கேட்டதற்கு, அவள், நாசிசவாதிகளிடமிருந்து தப்பிச்செல்லும் போது தனது தாய்க்கு அடைக்கலம் தேவைப்பட்டதாகவும், அத்தகைய தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தான் உதவ விரும்புவதாகவும் அவள் கூறினாள்.

உபாகமத்தில், தேவன் வெகுதொலைவிலிருந்து வரும் அயலகத்தார்களை உபசரிக்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஏன்? ஏனென்றால் “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்” (10:18). மேலும் அவர்களைப் பார்த்து, “எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” (வச. 19) என்றும் அறிவுறுத்துகிறார். அவர்களை பட்சாதாபத்துடன் பராமரிக்கும்படிக்கு தூண்கிறார்.

ஆனால் அதற்கு மறுபக்கமும் இருக்கிறது. ஆபிரகாம் தன்னுடைய வீட்டிற்கு வந்த விருந்தினர்களை உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டதுபோல (ஆதியாகமம் 18:1-5), சாரிபாத் விதவை எலியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து உபசரித்து ஆசீர்வதிக்கப்பட்டாள் (1 இராஜாக்கள் 17:9-24). தேவன் விருந்தினர்களை ஆசீர்வதிப்பதற்காக அல்லாமல், அவர்களை உபசரிக்கிறவர்களை ஆசீர்வதிப்பதையே அதிகம் விரும்புகிறார்.

ஒரு புதிய நபரை உங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பது என்பது கடினமானது. ஆனால், அந்த ஜெர்மானிய குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாமும் பெலவீனமானவர்கள் மீது அக்கறைகொள்ளும்போது, அவர்கள் மூலமாய் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்களுக்கு பாத்திரராக முடியும்.

உறுதியாய் தரித்திரு

நான் அறைக்குள் நுழைந்த பிறகு, என் உடல் தண்ணீருக்கு மேல் வசதியாக மிதந்தது, அறை இருட்டானது மற்றும் பின்னணியில் ஒலித்த மென்மையான இசை அமைதியாகிவிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த தண்ணீர்த்தொட்டிகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்ககூடியது என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் இந்த அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. உலகின் குழப்பம் நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன், என் உள் உணர்வுகளை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. நான் என்னை சமநிலைப்படுத்தி, புத்துணர்ச்சி பெற்ற நிலையில் என்னை கிடத்தினேன். மௌனமான அமைதி நிலையில் வல்லமை இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை பெற்றுக்கொண்டு, நமது வல்லமையைப் புதுப்பித்து, தேவனுடைய பிரசன்னத்தின் அமைதியில் நாம் மிகவும் வசதியாக இளைப்பாறக்கூடும். நாம் மௌனமாய் காத்திருக்கும்வேளையில், நம் வாழ்வில் உள்ள கவனச்சிதறல்களை நீக்கி, அவர் நம்மைப் பலப்படுத்துகிறார். அதினால் அவருடைய மெல்லிய சத்தத்தை நாம் இன்னும் தெளிவாகக் கேட்க முடியும் (சங்கீதம் 37:7).

இதுபோன்று நம்முடைய புலன்களை ஆசுவாசப்படுத்தும் அறைகள் நிச்சயமாக அமைதியின் ஒரு வடிவமாக இருந்தாலும், தேவனோடு இடைவிடாமல் நேரம் செலவழிக்க தேவன் நமக்கு ஒரு எளிமையான வழியைக் கற்றுக்கொடுக்கிறார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6) என்று சொல்லுகிறார். நாம் அவருடைய மகத்தான பிரசன்னத்தின் அமைதியில் வாழ்க்கையின் சவால்களுக்கான பதில்களைத் தேடும்போது, அவர் நம் நடைகளை ஸ்திரப்படுத்தி, அவருடைய நீதி நம் மூலம் பிரகாசமாக ஓளிரச்செய்வார் (சங்கீதம் 37:5-6).