
சத்தியமும் பொய்யும்
பிரசங்க பீடத்திலே என்னுடைய வேதாகமத்தை வைத்து, என்னுடைய பிரசங்கத்தை கேட்கக் காத்திருந்த முகங்களை வெறித்துப் பார்த்தேன். நான் ஜெபத்தோடும் ஆயத்தத்தோடும் தான் வந்திருந்தேன். ஆனால் ஏன் என்னால் பேசமுடியவில்லை?
நீ தகுதியில்லாதவன்! ஒருவனும் உன்னுடைய பேச்சை எப்போதும் கேட்கப்போவதில்லை. அதிலும் குறிப்பாய் அவர்கள் உன்னுடைய கடந்த காலத்தை அறிந்தவர்கள் எனறால், தேவனும் உன்னை பயன்படுத்தப் போவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக, என்னுடைய இருதயத்திலும் சிந்தையிலும் இந்த வார்த்தைகள் பலவகைகளில் திரும்பத் திரும்ப ஒலித்து, அந்த பொய்களை என்னை நம்பச்செய்தது. அந்த வார்த்தைகள் பொய் என்று எனக்குத் தெரிந்தாலும், அதின் பயத்திலிருந்தும் குற்ற மனசாட்சியிலிருந்தும் என்னால் மீள முடியவில்லை. நான் வேதாகமத்தைத் திறந்தேன்.
நீதிமொழிகள் 30:5க்கு நேராய் என் வேதத்தைத் திருப்பி, அதை வாசிப்பதற்கு முன்பாக, நிம்மதி பெருமூச்சிவிட்டேன். “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” என்று வாசித்தேன். வாசித்து என் கண்களை மூடியபோது, ஒரு தெய்வீக சமாதானம் என்னை ஆட்கொண்டது. அந்த கூட்டத்தில் என்னுடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன்.
நம்மை செயலிழக்கப்பண்ணும் மக்களின் எதிர்மறையான வார்த்தைகளின் வலிமையை நம்மில் பலர் அனுபவித்துள்ளோம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளெல்லாம் புடமிடப்பட்டவைகள்; நேர்த்தியானவைகள்; தெளிவாய் ஒலிக்கக்கூடியவைகள். நம்முடைய மதிப்பை அல்லது தேவனுடைய பிள்ளைகள் என்னும் நமது அங்கீகாரத்தை இழக்கச் செய்யும், ஆவியை நொறுக்கும் வார்த்தைகளை நாம் நம்பத் தூண்டப்படும்போது, கர்த்தருடைய புடமிடப்பட்ட வார்த்தைகள், நம் சிந்தையையும் இருதயத்தையும் பாதுகாக்கிறது. அவ்வாறு செய்யும்போது, சங்கீதக்காரனுடைய, “கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்” (சங்கீதம் 119:52) என்னும் வார்த்தைகளை நாமும் உச்சரிக்கமுடியும். நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை மாற்றி, தேவனைக் குறித்தும், நம்மைக் குறித்தும், மற்றவர்களைக் குறித்தும் நாம் புரிந்துக்கொள்ள நமக்கு வேதாகம் உதவுகிறது.

தேவ கிருபையில் வளருதல்
பிரபல ஆங்கில பிரசங்கியார், சார்லஸ் ஸ்பர்ஜன் (1834-1892) தன்னுடைய வாழ்க்கையை “முழு மூச்சில்” வாழ்ந்துள்ளார். தன் 19ஆம் வயதில் போதகரானார். வெகுவிரைவிலேயே பெரிய நற்செய்திக் கூட்டத்தில் பிரசங்கித்தார். தன்னுடைய எல்லா பிரசங்கங்களையும் தானே தொகுத்து, அவைகளை 63 பதிப்புகளாய் வெளியிட்டார். அத்துடன் பல்வேறு விளக்கவுரைகள், ஜெபத்தைக் குறித்த புத்தகங்கள் மற்றும் பல படைப்புகளையும் கொடுத்துள்ளார். வாரத்திற்கு ஆறு புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய ஒரு குறிப்பிட்ட பிரசங்கத்தில், “ஒன்றும் செய்யாமலிருப்பதே பாவத்திலும் பெரிய பாவம், அது பலரையும் பாதிக்கிறது... கொடூரமான செயலற்ற தன்மை! தேவனே எங்களை பாதுகாப்பீராக!” என்று எச்சரிக்கிறார்.
சார்லஸ் ஸ்பர்ஜன் புத்தி கூர்மையோடு வாழ்ந்திருக்கிறார். அப்படியென்றால், “அதிக ஜாக்கிரதையுள்ளவராய்” (1 பேதுரு 1:5) கிருபையில் வளர்ந்து தேவனுக்காய் வாழ்ந்திருக்கிறார் என்று அர்த்தம். நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாயிருந்தால், “அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்... இச்சையடக்கத்தையும்... பொறுமையையும்... தேவபக்தியையும்” நம்மில் ஏற்படுத்தி கிறிஸ்துவைப் போல் வளரும் வாஞ்சையையும் அதற்கான வாய்ப்பையும் தேவன் ஏற்படுத்தித் தருகிறார்.
வாழ்க்கையின் நோக்கம், திறமைகள், ஆற்றல் அகியவற்றில் நாம் அனைவரும் ஒருவரிலிருந்து மற்றவர் வித்தியாசப்படுகிறோம் என்பதினால் ஸ்பர்ஜனைப் போல் நாம் இருக்கமுடியாது. ஆனால் இயேசு நமக்காய் செய்ததை புரிந்துகொள்ளும்போது ஜாக்கிரதையாகவும் உண்மையாகவும் வாழ நாம் தூண்டப்படுகிறோம். அவருக்காய் வாழவும் அவரையே சேவிக்கவும் தேவன் நமக்குக் கொடுத்த ஆதாரங்களினால் நாம் பெலப்படுத்தப்படுகிறோம். சிறியதோ, பெரியதோ, நம்முடைய முயற்சிகளை தேவன் தம்முடைய ஆவியானவராலே அதிகாரப்பூர்வமாய் அங்கீகரிக்கிறார்.

தடைசெய்யப்பட்ட ஜெபங்கள்
செவ்வாய் கிரகத்தில் “ஆப்பர்டியூனிட்டி” என்னும் விண்வெளி ரோவர் வாகனம் பதினான்கு ஆண்டுகளாக நாசாவின் விமான உந்துவிசை ஆய்வுக் கூடத்திற்கு செய்தியைத் தொடர்புகொண்டிருந்தது. 2004இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டபின், 28 மைல்கள் தூரத்திற்கு அது பயணம் செய்து, ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து, பல காரியங்களை ஆய்வு மேற்கொண்டது. ஆனால் 2018இல் ஏற்பட்ட விண்வெளி புயலினால் அதின் சூரிய தகட்டில் தூசு படிந்ததால், அது அந்த வாகனத்தை செயலிழக்கப்பண்ணியது. அதினால் ஆப்பர்டியூனிட்டிக்கும் நாசா விஞ்ஞானிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
உலகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நபரோடு நம்முடைய தொடர்பை, இந்த தூசு படிவங்களினால் தடுக்க முடியுமா? ஆனால் ஜெபம் என்று வரும்போது, தேவனிடத்தில் தொடர்பு ஏற்படுத்தும் பாதையில் சில காரியங்கள் இடையூறாக அமைகிறது.
பாவத்தினால் தேவனோடுள்ள உறவைத் தடைசெய்ய முடியும் என்று வேதாகமம் சொல்லுகிறது. “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்கீதம் 66:18). இயேசு சொல்லுகிறார், “நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்” (மாற்கு 11:25). தேவனுடனான நம்முடைய தொடர்பை, சந்தேகம் மற்றும் உறவு ரீதியான பிரச்சனைகள் தடை செய்யக்கூடும் (யாக்கோபு 1:5-7; 1 பேதுரு 3:7).
ஆப்பர்டியூனிட்டியின் துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பு நிரந்தரமானது. ஆனால் நம்முடைய ஜெப தகவல்தொடர்பு தடைபடக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் தேவன் தடைசெய்யப்பட்ட நம்முடைய உறவை மீண்டும் அன்போடு புதுப்பிக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவரிடத்தில் திரும்பும்போது, உலகம் வியக்கும் ஆச்சரியமான தொடர்புக்கு உட்படுத்தப்படுகிறோம்: அதுவே நமக்கும் பரிசுத்த தேவனுக்கும் நேருக்கு நேரான உரையாடல்.

நமக்குத் தேவையான ஞானம்
மேகா தன் சிநேகிதியிடமிருந்து வந்த கொரியரைப் பிரித்துப் பார்த்தாள். சில நாட்களுக்கு முன்பாக அந்த சிநேகிதியுடன் உறவு ரீதியாக பிரச்சனை அவளுக்கு ஏற்படடிருந்தது. மிகுந்த ஆவலுடன் அந்த பரிசை திறந்துப் பார்த்தாள். அதில் பலவர்ண மணிகள் கோர்க்கப்பட்ட அழகான கழுத்து அணிகலன் இருந்தது. அத்துடன், “தேவனுடைய வழியை நாடு” என்ற வாசகம் எழுதப்பட்ட துண்டு காகிதமும் அதில் இருந்தது. மகிழ்ச்சியோடு மேகா அந்த சரப்பணியை தன் கழுத்தில் அணிந்துகொண்டாள்.
நீதிமொழிகள் புத்தகம் ஞானிகளின் வார்த்தைகளினால் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் தன் காலத்தில் ஞானியாய் வாழ்ந்த சாலமோனின் கைகளால் எழுதப்பட்டவைகள் அதிகம் (1 இராஜ. 10:23). நீதிமொழிகள் 1:7இல் “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற அஸ்திபார வாக்கியத்தில் துவங்கும் நீதிமொழிகளின் 31 அதிகாரங்களும், மதியீனத்தைத் தவிர்த்து ஞானத்தைத் தேடும்படிக்கு அழைப்புக் கொடுக்கிறது. எப்போது எதைச் செய்யவேண்டும் என்னும் ஞானமானது, கர்த்தருடைய வழியை நாடுவதின் மூலமாகவும், அவரை கனப்படுத்துவதினாலும் நமக்குக் கிடைக்கிறது. அறிமுக வார்த்தைகளில், “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்” (வச. 8-9) என்று வாசிக்கிறோம்.
மேகாவின் சிநேகிதி “தேவனுடைய வழிகளை நாடு” என்று ஞானத்தின் அஸ்திபாரத்திற்கு நேராய் அவளை வழிநடத்தினாள். மேகாவிற்கு தேவையான உதவி எங்கு கிடைக்கும் என்பதை அவளுடைய பரிசு அவளுக்கு காட்டியது.
தேவனைக் கனப்படுத்தி, அவருடைய வழிகளை நாடும்போது, நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஞானத்தையும் நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.
