
ஒருவருக்கொருவர் உதவுதல்
சக் தே! இன்டியா! என்னும் பாலிவுட் (இந்தி) கற்பனைத் திரைப்படம் 2002ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டில் பங்குபெற்ற பெண்கள் ஹாக்கி குழுவினரின் வெற்றியைக் குறித்து இயக்கப்பட்டுள்ளது. அதின் ஒரு காட்சியில் அக்குழுவின் பயிற்சியாளராகிய ஷாருக்கான், அக்குழுவில் நட்பு மற்றும் குழுவாய் செயல்படுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார். துவக்கத்தில் அக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் தங்கள் பெயரையும் தங்களுடைய மாநிலத்தையும் அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்றி, அவர்கள் அனைவரும் இந்தியா என்னும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவார். இந்த மனநிலை உலக அரங்கில் அவர்களை ஒரு வெற்றிக் குழுவாய் மாற்றும்.
தேவனும் தன்னுடைய ஜனங்கள் குழுவாய் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார். பவுல் அப்போஸ்தலர், “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று தெசலோனிக்கேயர்களுக்கு அறிவுறுத்துகிறார். நம் வாழ்க்கைக்கு ஓர் ஆதரவைக் கொடுக்கும் பொருட்டே தேவன் நம்மை தேவ ஜனத்தின் குழுவில் இணைத்துள்ளார். நாம் ஒருவரையொருவர் ஆதரித்து, கிறிஸ்துவின் பாதையில் நம் ஜீவியத்தை நகர்த்தவேண்டும். அது சில வேளைகளில், கடினமான பாதையில் பயணிக்கும் நபர்களின் வேதனையை செவிகொடுத்து கேட்பதாக இருக்கலாம்; மற்றவர்களின் தேவையை சந்திப்பதாக இருக்கலாம், மற்றவர்களை உற்சாகப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நாம் வெற்றியைக் கொண்டாடி, ஒருவருக்காக ஒருவர் வேண்டுதல் பண்ணி, ஒருவரையொருவர் விசுவாசத்தில் வளர உதவவேண்டும். எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் “எப்பொழுதும் நன்மை செய்ய” நாடவேண்டும் (வச.15).
தேவனைத் தொடர்ந்து விசுவாசிக்க, விசுவாசிகளாகிய நாம் எந்த நட்புறவை நடைமுறைப்படுத்துகிறோம்!

பள்ளத்தாக்கில் நம்மோடு
ஹான்னா வில்பர்போர்ஸ் (பிரபல அமெரிக்க அரசியல்வாதி ஒருவரின் உறவினர்) மரண படுக்கையில் இருந்தபோது, அவர் எழுதிய கடிதத்தில், அவருடைய சக விசுவாசி ஒருவரின் மரணத்தைக்குறித்து சொல்லுகிறார்: “மகிமைக்கு சென்ற இந்த நபருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்; அவர் இதுவரை காணாமல் நேசித்த இயேசுவோடு இருக்கிறார். என் இருதயம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறது.” அதன் பின், “நான் நலமாயிருந்தாலும் அல்லது மோசமான நிலையில் இருந்தாலும், இயேசு எப்போதுமே நல்லவராகவே இருக்கிறார்” என்று தன்னுடைய நிலையை விவரித்தார்.
அவர்களுடைய வார்த்தை சங்கீதம் 23ல் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடத்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்” என்னும் தாவீதின் வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது (வச.4). தாவீது அதுபோன்ற மரணத்தின் பள்ளத்தாக்கில் நின்றுகொண்டு தன் இருதயத்தின் ஆழத்தில் இருந்து அந்த வார்த்தைகளைக் கூறுகிறார்;. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” (வச.1) என்று தன் சங்கீதத்தைத் துவக்கும் தாவீது, “தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்” (வச.4) என்று பின்பாக அவரிடத்தில் நேரடியாய் பேசுகிறார்.
பூமியையும் உலகத்தையும் உண்டாக்கிய (சங்.90:2) சர்வ வல்லமையுள்ள தேவன், நம்முடைய கடினமான சூழ்நிலைகளில் இரக்கமுள்ளவராய் நம்மோடு நடந்து வருகிறார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். நம்முடைய சூழ்நிலை சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ, எப்படி இருப்பினும், நாம் நம்முடைய மேய்ப்பரும் இரட்சகரும் சிநேகிதருமாகிய தேவனிடத்தில் திரும்புவது நன்மையான ஆசீர்வாதம். அது மரணத்தையும் ஜெயித்து, “கர்த்தருடைய வீட்டில் நீடித்த நாட்களாய்” (23:6) நம்மை நிலைக்கப்பண்ணும்.

நாம் எங்கே ஆராதித்தாலும்
கடுமையான வலியும், என்னை பலவீனப்படுத்துகிற தலைவலியும் உள்ளுர் சபை ஆராதனையில் மீண்டும் பங்கு பெற விடாமல் என்னைத் தடுத்தது. ஆராதனைக்குப் போக முடியவில்லையே என்ற வேதனையுடன் இணையதளத்தில் பிரசங்கத்தைக் கேட்டேன். துவக்கத்தில் அதை ஒரு குறையாகவே எண்ணினேன். காணொலியில் வந்த ஒளியும் ஒலியும் என் கவனத்தை சிதைத்தது. அதன்பின்பு அந்த காணொலியில் பரீட்சயமான ஒரு பாடல் பாடப்பட்டது. அதை சேர்ந்து பாடும்போது என் கண்களில் கண்ணீர் வடிந்தது: “ஓ தேவனே என் இருதயத்தின் பார்வையாயிரும், நீரே எனக்கு பெலனாயிரும், இரவும் பகலும் என் எண்ணங்களில் நீர் இரும், எழுந்தாலும் படுத்தாலும் உம் பிரசன்னமே என் ஒளி.” தேவனுடைய நிலையான பிரசன்னம் என்னும் பரிசை உணர்ந்து, என் அறையில் அமர்ந்து கொண்டு அவரை நான் ஆராதித்தேன்.
கூடி ஆராதிக்கும் திருச்சபை ஆராதனையை வேதம் முக்கியத்துவப்படுத்தினாலும் (எபிரெயர் 10:25), திருச்சபையின் சுவர்களுக்குள் தேவனை அடைக்க முடியாது. சமாரிய ஸ்திரீயுடன் கிணற்றண்டையில் அமர்ந்து இயேசு பேசியபோது, அவர் மேசியாவின் வரம்பை மீறுகிறார் (யோவான் 4:9) என்று எண்ணப்பட்டது. கண்டன செய்தியை அறிவிப்பதற்கு பதிலாக, கிணற்றண்டை நிற்பவளிடம் பேசி அவளை நேசித்தார் (வச.10). தேவனுடைய பிள்ளைகளைக் குறித்த கர்த்தருடைய அறிவை அவர் வெளிப்படுத்தினார் (வச.17-18). தன் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தி, குறிப்பிட்ட இடத்திலிருந்து அல்லாமல், கர்த்தருடைய பிள்ளைகளின் இருதயத்திலிருந்தே உண்மையான ஆராதனையை பரிசுத்த ஆவியானவர் தூண்டுகிறார் என்று இயேசு அறிவிக்கிறார் (வச. 23-24).
தேவன் யார் என்பதையும், அவரின் மகத்துவங்களையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் நாம் நினைக்கும்போது அவருடைய தொடர்ச்சியான தெய்வீக பிரசன்னத்தை நாம் உணர முடியும். மற்றவர்களோடு சேர்ந்தோ, அல்லது தனி அறையிலோ, எங்கு ஆராதித்தாலும் இந்த தேவப் பிரசன்னத்தை நாம் உணர முடியும்.

குறைகிறது
என் தொண்டையில் இருமல் உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வு குளிர்காய்ச்சலாய் மாறியது. அது என் மூச்சுக் குழாயில் வேதனையை ஏற்படுத்தியது. அத்துடன் கக்குவான் இருமல் தொற்றிக்கொண்டது. அது பின்பாக நிமோனியா காய்ச்சலாக மாறியது.
எட்டு வாரங்கள் தொடர்ந்த அந்த இருமல் என் சரீரத்தை ஒடுக்கியது. எனக்கு வயதாகிவிட்டது என்பதை நான் நம்பவில்லை. ஆனால் எனக்கு வயதாகிறது என்பதை நம்பவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தேன். இந்த சரீர பெலத்திற்கு எங்களுடைய சபை பராமரிப்புக் குழுவை சேர்ந்த ஒருவர் “குறைதல்” என்று வேடிக்கையான ஒரு பெயரை வைத்திருந்தார். ஆனால் நம் ஆயுசு குறைவுபட்டுக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று அல்ல.
2 கொரிந்தியர் 4இல் பவுலும் இந்த குறைவுப்படுதலைக் குறித்து எழுதுகிறார். அவரும் அவருடைய உடன் ஊழியர்களும் கடந்துபோன உபத்திரவத்தை இந்த அதிகாரம் பதிவிட்டுள்ளது. தன்னுடைய புறம்பான மனுஷனானது அழிந்து கொண்டிருக்கிறது என்று தன்னுடைய ஊழியத்தின் பாதையில் தான் பட்ட பாடுகளைக் குறித்து கூறுகிறார். அவருடைய வயது, உபத்திரவம், கடினமான பாதைகள் போன்றவைகளால் அவருடைய சரீரம் தோற்றுபோனாலும், “உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” என்கிற உறுதியான நம்பிக்கையை பவுல் பிடித்திருக்கிறார். (வச.16). இதை இலேசான உபத்திரவம் என்று குறிப்பிடும் பவுல், அதனை “இனி வரும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது” என்று ஒப்பிடுகிறார் (வச.17).
இந்த இரவில் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதும், என் நெஞ்சில் இந்த சரீர குறைவுப்படுதலை நான் உணருகிறேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையோ, அல்லது தேவனை சார்ந்து வாழுகிற எவருடைய வாழ்க்கையும் முடிவடைவதில்லை என்பதே உண்மை.
