என்னுடைய மகள் ஹேலி என்னைப் பார்க்க வந்தாள். கல்லும் என்னும் அவளுடைய மகன் அணிந்திருந்த ஆடை சற்று வித்தியாசமாய் இருந்தது. “ஸ்க்ராட்ச் மி நாட்” என்றழைக்கப்படும் நீண்ட கையுறைகளை மட்டும் கொண்ட ஒரு வித்தியாசமான ஆடை. என்னுடைய பேரன் எக்ஸிமா என்னும் தோல் வியாதியினால் கஷ்டப்பட்டான். அதினால் அவனுடைய தோல் அடிக்கடி அரிப்பு எடுக்கக்கூடிய வகையில் கரடுமுரடாய் மாறும். இந்த ஸ்க்ராட்ச் மி நாட் ஆடை அவனை சொரிந்து காயம் ஏற்படுத்துவதிலிருந்து தடுக்கிறது என்று ஹேலி விளக்கமளித்தாள். 

ஏழு மாதங்கள் கழித்து ஹேலியின் தோல் அரிப்பெடுத்தது. அவளால் சொறியாமல் இருக்கமுடியவில்லை. இப்போதுதான் தெரிகிறது தன் மகன் எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்று ஹேலி சொன்னாள். நானும் இந்த ஸ்க்ராட்ச் மி நாட் ஆடையை அணிய வேண்டும் என்று அவள் சொன்னாள். 

ஹேலியின் இந்த அனுபவம், 2 கொரிந்தியர் 1:3-5ல் “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது” என்ற பவுலின் வார்த்தைகளை நினைவுபடுத்தியது. 

சிலவேளைகளில் தேவன் நம்மை வியாதி, இழப்பு, மற்றும் போராட்டம் போன்ற பாதைகளினூடாய் அனுமதிப்பார். நம்முடைய உபத்திரவங்களின் மூலமாய், நமக்காக மகா உபத்திரவத்தின் பாதையில் கடந்துபோன இயேசுவின் பாடுகளை தேவன் நமக்கு கற்பிக்கிறார். ஆறுதலுக்காகவும் பெலத்திற்காகவும் நாம் அவரைச் சாரும்போது, உபத்திரவத்திலுள்ளவர்களை நாமும் ஆறுதல்படுத்தவும் பலப்படுத்தவும் முடியும். நம்மை தேவன் நடத்திவந்த பாதையை மனதில் வைத்து மற்றவர்களை ஆறுதல்படுத்துவோம்.