வகை  |  odb

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள். 
ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர்.  
தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8).  
தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள்.  

பிரத்யேகமான கதறல்

ஒரு குழந்தை அழுகிறதென்றால், அது களைப்பாய் இருக்கிறது அல்லது அதற்கு பசிக்கிறது என்று அர்த்தமல்லவா? பிரவுன் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்களின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகைகளில் உள்ள நுட்பமான வேறுபாடுகள் மற்ற பிரச்சினைகளுக்கு முக்கியமான தடயங்களை கொடுக்கக்கூடும். குழந்தையின் மைய நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை அறிய, அவைகளின் அழுகுரலில் இருக்கும் சுருதி, ஓசை ஆகியவைகளை அடிப்படையாய் வைத்து கணினியின் துணையோடு கண்டறியும் மருத்துவ செயல்பாடுகள் அமுலில் உள்ளது.  
தேவன் தம்முடைய ஜனங்களின் வித்தியாசமான கூக்குரலைக் கேட்டு, அவர்களுடைய இருதயத்தின் நிலையைத் தீர்மானிப்பார் என்றும் கிருபையுடன் அவர்களுக்கு இரங்குவார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். யூதேயா, தேவனிடம் ஆலோசனைக் கேட்பதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடியது (ஏசாயா 30:1-7). அவர்கள் தொடர்ந்து தேவனிடத்தில் முரட்டாட்டம் செய்தால், தேவன் அவர்களுக்கு தோல்வியையும் அவமானத்தையும் கொண்டுவருவதாக எச்சரிக்கிறார். இருப்பினும், அவர்களின் “கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்க” (வச. 18) தீர்மானித்தார். அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்பி விசுவாசத்துடன் மன்றாடி கதறினாலொழிய அவர்களுக்கு மீட்பு வராது. கர்த்தருடைய ஜனங்கள் அவரிடத்தில் கதறி அழும்போது, அவர் அவர்களுடைய பாவத்தை மன்னித்து அவர்களின் ஆவிக்குரிய வலிமையை புதுப்பிப்பார் (வச. 8-26).  
இதே விஷயம் இன்று கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பொருந்தும். நம்முடைய மனந்திரும்புதலின் கதறல் சத்தத்தை பரலோகப் பிதா கேட்கும்போது, அவர் நம்மை மன்னித்து, அவர் மீதான நம்முடைய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் புதுப்பிக்கிறார்.  

பயத்திற்கான காரணம்

நான் சிறுவனாய் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் அதிகப்படியாய் நடந்தேறிக்கொண்டிருக்கும். எங்களை துன்புறுத்தும் மூத்த மாணவர்களிடம் நாங்கள் எங்கள் பயத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவர்கள் “நீ பயப்படுகிறாயா? என்னைப் பார்த்தால் உனக்கு பயமாய் இல்லையா? உன்னைக் காப்பாற்ற இங்கு யாருமில்லை!” என்று அச்சுறுத்துவது இன்னும் பயத்தை அதிகரிக்கும்.  
பெரும்பாலான நேரங்களில் ஒரு நன்மையான விளைவுக்காகவே நான் பயப்பட்டேன். ஏற்கனவே இதுபோல அடிவாங்கிய அனுபவம் எனக்கு இருந்ததால், மறுபடியும் அந்த அனுபவம் வேண்டாம் என்று எண்ணினேன். நான் பயத்தால் பீடிக்கப்படும்போது, என்ன செய்யவேண்டும்? யாரை நம்பவேண்டும்? நீங்கள் எட்டு வயது சிறுவனாயிருக்கும்போது, உங்களைக் காட்டிலும் வயதில் மூத்த, பெரிய மற்றும் வலிமையான ஒருவன் உங்களை துன்புறுத்தும்போது நீங்கள் பயத்தால் ஆட்கொள்ளப்படுவது என்பது இயல்பு.  
தாவீது போராட்டத்தை சந்தித்தபோது, அவன் அதை பயத்தோடு அணுகாமல், தைரித்துடன் அணுகினான். அந்த போராட்டங்களை அவன் தனித்து சந்திக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். அவன் எழுதும்போது, “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” (சங்கீதம் 118:6) என்று எழுதுகிறான். ஒரு சிறுவனாய் தாவீதின் இந்த மனவுறுதியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் வளர்ந்து இயேசுவோடு நடக்கும் அனுபவத்தில் தேறிய பின்பு, அவர் எல்லா பயங்களைக் காட்டிலும் பெரியவர் என்பதை புரிந்துகொண்டேன்.  
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நிஜமே. ஆகிலும் நாம் பயப்படத் தேவையில்லை. இந்த உலகத்தை படைத்த சிருஷ்டிகர் நம்மோடிருக்கிறார். அவர் நமக்கு போதுமானவர்.  

செயலில் இரக்கம்

பெஞ்சுகளை உருவாக்குவது ஜேம்ஸ் வாரனின் வேலை அல்ல. இருப்பினும், டென்வரில் பேருந்திற்காக காத்திருந்த ஒரு பெண் மண்ணில் அமர்ந்திருப்பதைக் கவனித்தபோது, பெஞ்சை செய்ய ஆரம்பித்தான். மக்கள் கீழே அமர்ந்திருப்பது கண்ணியமற்றது என்று வாரன் கவலைப்பட்டான். எனவே, இருபத்தெட்டு வயதான அவன், சில பழைய மரங்களைக் கண்டுபிடித்து, ஒரு பெஞ்சைக் கட்டி, பேருந்து நிறுத்தத்தில் வைத்தான். அது விரைவில் பழகிவிட்டது. தனது நகரத்தில் உள்ள ஒன்பதாயிரம் பேருந்து நிறுத்தங்களில் இருக்கைகள் இல்லாததை உணர்ந்த அவன், மற்றொரு பெஞ்சை உருவாக்கினான், பின்னர் அதுபோன்று பல இருக்கைகளை உருவாக்கி, அதில் “கனிவோடு இருங்கள்” என்று பொறித்து வைக்க ஆரம்பித்தான். அவனது இலக்கு? “என்னால் முடிந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கை முறையை சற்று மேம்படுத்த எண்ணினேன்” என்று பதிலளித்தானாம்.

அந்த செயலையே “இரக்கம்” என்றும் சொல்லலாம். இயேசு நடைமுறைப்படுத்தியபடி, இரக்கம் என்பது மிகவும் வலுவான ஒரு உணர்வு, அது மற்றொருவரின் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நம்மை வழிநடத்துகிறது. அவிசுவாசமான ஜனங்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தபோது, “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி” (மாற்கு 6:34) அவர்களுக்கு உபதேசித்தார். அங்கிருந்த வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதினிமித்தம் அவர் அந்த இரக்கத்தை செயல்படுத்தத் துவங்கினார் (மத்தேயு 14:14).

நாமும் “உருக்கமான இரக்கத்தை” தரித்துக்கொள்வோம் (கொலோசெயர் 3:12) என்று பவுல் வலியுறுத்துகிறார். அதன் பயன்கள்? “அது என்னுடைய சக்கரத்தில் காற்றை நிரப்புவதுபோல் என்னை நிரப்புகிறது” என்ற வாரன் சொல்லுகிறார்.

நம்மை சுற்றியிருப்பவர்கள் அனைவருக்கும் தேவைகள் இருக்கிறது. அதை தேவன் நம் கவனத்திற்கு கொண்டுவருகிறார். அந்த தேவைகள் நம்முடைய இரக்கத்தை செயல்படுத்தவும் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தவும் தூண்டுகிறது.

அனைத்து பதில்கள்

டேல் எர்ன்ஹார்ட் ஜூனியர் தனது தந்தை இறந்துவிட்டார் என்பதை புரிந்து கொண்ட மோசமான தருணத்தை விவரிக்கிறார். மோட்டார் பந்தய ஜாம்பவான் டேல் எர்ன்ஹார்ட் சீனியர், டேடோனா-500 என்ற மோட்டார் பந்தயத்தின் முடிவில் ஒரு பயங்கரமான விபத்தில் கொல்லப்பட்டார். டேல் எர்ன்ஹார்ட் ஜூனியரும் அந்த பந்தயத்தில் பங்குபெற்றிருந்தார். “என்னால் மீண்டும் அதை சாதிக்கமுடியாது” என்ற சத்தம் இளைய எர்ன்ஹார்டடிடமிருந்து வந்தது. “இது அதிர்ச்சி மற்றும் துக்கம் மற்றும் பயத்தின் மணி.” ஆனால் அதற்கு பின்னர், “இனி இதை நான் தனித்து மேற்கொள்ளப்போகிறேன்” என்பதே தனிமையான உண்மை.

“அப்பா கூட இருப்பது என்பது ஒரு தேர்வுக்கு மறைமுகமாய் எடுத்துச் செல்லும் பிட் தாளைப் போன்றது” என்று எர்ன்ஹார்ட் ஜூனியர் ஒப்பிடுகிறார். “அப்பா கூட இருப்பது என்பது அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருப்பது போன்று” என்று உருவகப்படுத்துகிறார்.

இயேசுவின் சீஷர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலைப் பெற்றுக்கொள்ள இயேசுவைப் பார்த்தனர். இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன் தினம், சீஷர்களை தான் தனியே விடுவதில்லை என்று இயேசு அவர்களுக்கு வாக்களிக்கிறார். “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவான் 14:16-17) என்று வாக்களிக்கிறார்.

தம்மை நம்பும் அனைவருக்கும் இயேசு, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (வச. 23) என்று சொல்லுகிறார்.

கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறவர்களோடு, “எல்லாவற்றையும்” போதித்து அருளுகிற ஆவியானவர் உடனிருந்து, இயேசு கற்றுக்கொடுத்த யாவையும் அவர்களுக்கு உணர்த்துகிறார் (வச. 26). நம்மிடத்தில் அனைத்து பதில்களும் இல்லை. ஆனால் நம்மிலிருக்கும் ஆவியானவர் அனைத்து பதில்களையும் அறிந்திருக்கிறார்