
பேசு, நம்பு, உணர்வடை!
“இரகசியங்களை சொல்லுதல்” என்னும் தன்னுடைய சிறப்பான படைப்பில், ப்ரெட்ரிக் ப்யூச்னர், “பேசாதே, நம்பாதே, உணராதே என்னும் விதிகளோடு நாம் வாழுகிறோம்; அதை மீறுபவனுக்கு ஐயோ” என்கிறார். அவர், “ஒரு சில காரணங்களால் செயலிழந்து நிற்கிற குடும்பங்களின் எழுதப்படாத விதிகளைக்” குறித்து விவரிக்கிறார். இந்த விதியானது, அவருடைய சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட அவருடைய தகப்பனாரின் தற்கொலையைக் குறித்து பேசவும் வருந்தவும் அவரை அனுமதிக்கவில்லை. அவருடைய வலி மிகுந்த தருணத்திலும் யாரையும் நம்பவிடாமல் அவரைத் தடுத்தது.
அதை தொடர்புபடுத்தி பார்க்கமுடியுமா? நம்மில் பலர் ஒரு சில விஷயங்களில் நம்முடைய பாதிப்பைக் குறித்து மௌனம் சாதிக்கும் தவறான அன்பின் கண்ணோட்டத்தோடு வாழ பழகிக்கொண்டோம். அந்த வகையான அன்பு ஒருவிதமான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. அது ஒருவகையான அடிமைத்தனம்.
நாம் இழந்துவிடுவோமோ என்ற பயத்தினிமித்தம் சிக்கியுள்ள இந்த நிபந்தனைக்குட்பட்ட அன்பிலிருந்து, இயேசுவின் அன்பு எவ்வாறு வித்தியாசமாயுள்ளது என்பதைப் பார்க்க நாம் மறந்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் அன்பின் மூலமாய் நாம் பயத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதையும் (ரோமர் 8:15), நமக்கு வாக்குப்பண்ணப்பட்ட மகிமையான சுதந்திரத்தை புரிந்துகொள்ளவும் (வச.21) முடியும் என்றும் பவுல் கூறுகிறார். உண்மையாய், ஆழமாய் நிபந்தனையில்லாமல் நேசிக்கப்படுவதை நாம் உணர்ந்தால். பயமில்லாத வாழ்க்கையை வாழ வெளிப்படையாய் பேசவும் நம்பவும் உதவியாயிருக்கும்.

ஞானமுள்ள கிறிஸ்தவர்கள்
கொரோனா பெருந்தொற்றின் நாட்களில் உலகம் முழுமையுமுள்ள பள்ளிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சீன தேசத்தில், டிங்டாக் என்னும் ஆன்லைன் செயலி மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. சங்கடப்பட்ட மாணவர்கள், இந்த டிங்டாக் செயலிக்கான நிகழ்நிலை மதிப்பீட்டை குறைவாகக் காட்டினால் அந்த செயலியை பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று எண்ணினர். ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேயொரு நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்து, அந்த செயலியை செயல்படவிடாமல் முடக்கினர்.
மாணவர்களின் இந்த பொறுப்பற்ற செயலை தேவன் அங்கீகரிக்கமாட்டார் என்றாலும், அவர்களின் புத்தி கூர்மையை தேவன் பொருட்படுத்துகிறார். தன் எஜமானிடத்தில் திட்டுவாங்கிய ஓர் உக்கிராணக்காரன் தன் கடைசி நாட்களில் மற்றவர்களுக்கு நன்மைசெய்ய முயன்றதைக் குறித்த ஒரு கதையை இயேசு சொல்லுகிறார். அந்த உக்கிராணக்காரனுடைய செய்கையை இயேசு நியாயப்படுத்தவில்லை. மாறாக, அவனுடைய புத்திகூர்மையான செயலை முக்கியத்துவப்படுத்தி, தன்னைப் பின்பற்றுகிறவர்களும் ஞானமாய் செயல்படவேண்டும் என்று கூறுகிறார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (லூக்கா 16:9).
பணம் என்று வரும்போது, அதை செலவழிக்காமல் பாதுகாக்க நம்மில் பலர் பிரயாசப்படுவர். ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை எப்படி நேர்த்தியாய் பயன்படுத்துவது என்று சிந்திப்பபர்கள். மற்றவர்களுக்குக் கொடுப்பதின் மூலமாய் “உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” என்றும் அதுவே பாதுகாப்பும் மேன்மையுமானது என்று இயேசு சொல்லுகிறார். எந்த ஒரு குழுவிலும் தலைவன் என்பவன் யார்? யார் பணத்தை முன்வந்து செலவழிக்கிறார்களோ அவர்களே. கொடுப்பது நமக்கு நித்திய வீட்டின் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் என்றும், இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
நம்மிடத்தில் பணம் இல்லையென்றாலும், நேரம், திறமைகள் மற்றும் கேட்கும் செவி ஆகியவைகள் நம்மிடம் உண்டு. மற்றவர்களுக்கு எப்படி நேர்த்தியாய் உதவுவது என்பதை நமக்குக் காண்பிக்கும் பொருட்டு தேவனிடத்தில் கேட்போம்.

சேவை செய்ய வாழுங்கள்
பத்து வயது நிரம்பிய செல்சியா ஓர் அழகான ஓவிய பெட்டகத்தை பரிசாகப் பெற்றாள். அவள் சோகமாயிருக்கும்போது ஓவியம் தீட்டுவதின் மூலம் அவள் மகிழ்ச்சியடைந்தாள். ஆகையினால் இந்த ஓவியப் பொருட்களை வாங்க முடியாத மற்ற பிள்ளைகளுக்கு அதை பரிசளிக்க எண்ணினாள். அவளுடைய பிறந்தநாள் வந்தபோது, அவளுடைய நண்பர்களிடம் தனக்கு பரிசுப்பொருட்களை கொடுக்கவேண்டாம், அதற்கு பதிலாக தேவையுள்ள பிள்ளைகளுக்கான ஓவியப் பொருட்களைக் கொண்டு பெட்டகத்தை நிரப்பும்படிக்கு கேட்டுக்கொண்டாள்.
சில நாட்களில், தன் குடும்பத்தினரின் உதவியோடு செல்சியா தொண்டு நிறுவனத்தைத் துவங்கினாள். தேவையிலுள்ள பிள்ளைகளுக்கு உதவும்பொருட்டு அநேகரிடத்தில் அந்த பெட்டகத்தை நிரப்பும்படிக்கு கேட்டுக்கொண்டாள். அவளிடத்திலிருந்து ஓவியப் பொருட்களை பெறும் பிள்ளைகளுக்கு ஓவியம் தீட்டும் அறிவுரைகளையும் அவ்வப்போது கொடுத்தாள். ஓரு செய்தித்தொடர்பாளர் செல்சியாவை பேட்டியெடுத்து ஒளிபரப்பிய பின், உலக நாடுகளிலிருந்தும் அவளுக்கு உதவி வரத் துவங்கியது. செல்சியாவின் தரும காரியங்கள் மற்ற நாடுகளை சென்றடைந்தது. சேவை செய்ய விரும்பினால் தேவன் நம்மைப் பயன்படுத்துவார் என்பதற்கு இந்த சிறு பிள்ளை ஓர் அழகான உதாரணம்.
செல்சியாவின் கரிசனையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மையும் ஓர் உண்மையான உக்கிராணக்காரனின் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. தேவன் தங்களுக்குக் கொடுத்த பொருட்களையும் வரங்களையும் கொண்டு இயேசுவுக்கு உண்மையான உக்கிராணக்காரனாய் “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1பேதுரு 4:8-11) என்று அப்போஸ்தலர் பேதுரு அறிவுறுத்துகிறார்.
அன்பைப் பிரதிபலிக்கும் நம்முடைய சிறிய செயல்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும். அதற்கான ஆதரவாளர்களை தேவன் நம் பின்னே அணிவகுக்கும்படி செய்வார். நாம் தேவனை சார்ந்துகொள்ளும்போது சேவை செய்யும் வாழ்க்கை வாழ்ந்து தேவனுக்கு மகிமையை செலுத்தமுடியும்.

வேதத்தைப் படித்தல்
“தேவனை அறிதல்” என்ற தன்னுடைய உன்னதமான படைப்பில், ஜே. ஐ. பேக்கர், நன்கு அறியப்பட்ட நான்கு கிறிஸ்தவ விசுவாசிகளைக் குறித்து பேசுகிறார். அவர்களை “வேதாகம நீர்நாய்கள்” என்று அழைக்கிறார். இந்த நால்வரும் பெரிய நிபுணர்கள் அல்ல என்றபோதிலும், ஒரு நீர்நாயானது ஒரு மரத்தை எப்படி தன் பற்களினால் கடித்து ஊடுருவுமோ அதேபோன்று தேவனை அறிவதற்காய் இவர்கள் வேதத்தை ஊடுருவியுள்ளனர் என்று கூறுகிறார். வேத ஆய்வின் மூலம் தேவனை அறிவது என்பது நிபுணர்களுக்கு உரியது மட்டுமன்று என்பதை பேக்கர் குறிப்பிடுகிறார். “இறையியல் கருத்துக்களை கற்றுத்தேர்ந்த இறையியல் வல்லுநரைக் காட்டிலும், பரிசுத்த ஆவியில் நிறைந்து சாதாரணமாய் வேதத்தை வாசிக்கும் ஒரு நபரோ அல்லது பிரசங்கத்தை கேட்கிற ஒரு விசுவாசியோ, இரட்சகரோடும் தேவனோடும் நெருங்கிய உறவை ஏற்படுத்த முடியும்.”
வேதத்தை வாசிக்கிற அனைவரும் தாழ்மையான இருதயத்தோடு இரட்சகரை இன்னும் அறிந்து அவரைப்போலவே மாறவேண்டும் என்னும் இலக்குடன் வாசிப்பதில்லை என்பது அவலம். இயேசுவின் நாட்களில் பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள், அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான நபரை புரிந்துகொள்ளாமல் வாசித்தனர். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவான் 5:39-40).
நீங்கள் வேதத்தைப் படிப்பதற்கு தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது வேதத்தைப் படிப்பதையே விட்டுவிட்டீர்களா? வேதத்தை வாசிப்பவர்களைக் காட்டிலும் வேதத்தை ஆராய்ந்து ஊடுருவுகிறவர்கள் மேலானவர்கள். அவர்களின் கண்களையும் மனதையும் திறந்து வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இயேசுவை பார்க்கவும், நேசிக்கவும், அவர்கள் ஜெபத்தோடும் கவனத்தோடும் வேதத்தை ஊடுருவி பாய்கின்றனர்.
