
நற்செய்தி
1941இல் ஜரோப்பிய கண்டம் முழுவதும் ஹிட்லரின் ஆளுகை விரிவடைந்துகொண்டிருந்த தருணம், நாவலாசிரியர் ஜான் ஸ்டெயின்பெக் (அமெரிக்க எழுத்தாசிரியர்) அந்த யுத்தத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். யுத்தகளத்தில் முன்பாக நின்று யுத்தம் செய்வதற்காக அல்ல மாறாக, ஒரு நாவல் ஒன்றை எழுதும்படிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதின் விளைவாக “சந்திரன் கீழே உள்ளது” என்ற தலைப்பில், அமைதியாய் இளைப்பாறிய தேசம் சத்துருக்களினால் கைப்பற்றப்பட்டதை விவரிக்கும் நாவல் எழுதப்பட்டது. இரகசியமாய் அச்சிடப்பட்டு, கைப்பற்றப்பட்ட தேசங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதின் செய்தி: உங்களின் கூட்டாளிகள் வந்துகொண்டிருக்கிறார்கள், நாவலில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் செய்கைகளை பின்பற்றினால் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதே. “சந்திரன் கீழே உள்ளது” என்ற நாவலின் மூலமாக ஜெர்மானிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு அவர்களின் விடுதலை சமீபமாயிருக்கிறது என்னும் செய்தி தொடர்புகொள்ளப்பட்டது.
அந்த நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களைப் போன்று, முதலாம் நூற்றாண்டில் யூதர்களும் ரோம ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். ஆனால் நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே, தேவன் அவர்களுக்கு உதவிசெய்ய மீட்பரை அனுப்புவதாகவும், அவர் உலகத்திற்கு சமாதானத்தைக் கொண்டுவருவார் என்றும் வாக்குப்பண்ணப்பட்டிருந்தது (ஏசாயா 11). அந்த மீட்பர் வந்தவுடன் மகிழ்ச்சி வந்தது! நாங்களும் உங்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறோம் என்று பவுல் சொல்லுகிறார். “இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார்” (அப். 13:32-33). இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலமாயும் அவருடைய மன்னிப்பின் மூலமாயும் உலகத்தை மறுசீரமைக்கும் பணி துவங்கியது (வச. 38-39; ரோமர் 8:21).
அன்றிலிருந்து இந்த மீட்பின் செய்தி உலகெங்கும் பரவி, சென்ற இடமெல்லாம் இளைப்பாறுதலையும் விடுதலையையும் ஏற்படுத்தியது. இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். பாவத்திலிருந்தும் தீமையிலிருந்துமான நம்முடைய மீட்புப் பணி துவங்கியது. அவரில் நாம் சுதந்திரவாளிகளாக்கப்பட்டோம்.

நீங்கள் தனியாய் இல்லை
“உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!” “உங்களையும் தான்” “நீங்கள் இங்கிருப்பது மகிழ்ச்சி!” இந்த வாழ்த்துக்கள் மென்மையாகவும் வரவேற்கக்கூடியதாகவும் இருந்தது. ஒரு ஊரில் இருந்த ஊழியர்கள் தங்கள் மாலை நேர நிகழ்ச்சிக்கு முன்பு ஆன்லைனில் சந்தித்தார்கள். அவர்களின் தலைவர் அவர்களை வரவேற்றபோது, மற்றவர்கள் வீடியோ காலில் இணைவதை நான் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருப்பவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது என்பதினால், நான் என்னை வேற்று நபராக எண்ணினேன். திடீரென்று ஒரு வீடியோ தோன்றியது, அதில் என்னுடைய போதகரை பார்த்தேன். வேறொரு வீடியோ இணைந்தது. அதில் என் நீண்ட நாள் திருச்சபை நண்பர் இணைந்தார். அவர்களைப் பார்த்தமாத்திரத்தில் நான் தனிமையாய் உணர்வதிலிருந்து விடுபட்டேன். தேவன் எனக்கு ஆதரவை அருளினார் என்று நம்பினேன்.
யெசபேல் மற்றும் ஆகாபினால் எலியாவுக்கு நேரிட்ட பிரச்சனையில், “நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்” என்று சொன்ன எலியாவும் தனிமையாயில்லை (1 இராஜ. 19:10). 40 பகல், 40 இரவுகள் வனாந்திரத்தில் பயணம் மேற்கொண்டு, எலியா ஓரெப் கன்மலையில் தன்னை ஒளித்துக்கொள்ளுகிறான். ஆனால் தேவன், “நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (வச. 15-16) என்று கட்டளையிடுகிறார்.
“ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று கர்த்தர் எலியாவுக்கு உறுதியளித்தார் (வச. 18). தேவனுக்கு ஊழியம் செய்யும்போது நாம் தனித்து இருப்பதில்லை என்பதை எலியா கற்றுக்கொண்டான். தேவன் நமக்கு உதவிசெய்யும்போது, நாம் இணைந்து அவரை சேவிப்போம்.

இயேசுவின் உண்மையான சீஷன்
ஒரு ஓவிய சேகரிப்பாளர் வான் காகின் ஓவியங்களை (பிரபலமான மேற்கத்திய ஓவியர்), ஓவிய நிபுணர் ஒருவரிடம் காண்பித்தபோது, அந்த நிபுணர் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு இது உண்மையான ஓவியம் அல்ல என்று நிராகரித்துவிட்டாராம். எனவே அந்த ஓவிய சேகரிப்பாளர் அதை கொண்டுபோய் ஒரு ஓவியக்கிடங்கில் மறைத்து வைத்துவிட்டாராம். அங்கே அது ஐம்பது ஆண்டுகள் இருந்தது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அந்த ஓவியத்தை மீண்டும் எடுத்து நாற்பது ஆண்டுகளாக மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு முறையும் அது பொய்யான ஓவியம் என்றே நிராகரிக்கப்பட்டது. 2012ல் கணினி நிபுணர் ஓருவர் தீர்க்கமாய் ஆய்வு செய்து, அந்த ஓவியம் வரையப்பட்ட கேன்வாஸ் துணியின் ஒவ்வொரு நூலாக ஆய்வுசெய்தபோது, அந்த கேன்வாஸ் வான் காகின் மற்றொரு ஓவியத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட உண்மையைக் கண்டறிந்தார். இறந்த அந்த ஓவிய சேகரிப்பாளர் தன் வாழ்நாள் முழுதும் வான்காகின் உண்மையான ஓவியத்தையே வைத்திருந்தார்.
நீங்கள் போலியாக எண்ணுகிறீர்களா? ஜனங்கள் உங்களை ஆய்வுசெய்யும்போது, உங்களின் கொஞ்சமான ஜெபவாழ்க்கையையும், கொடுக்கும் மனப்பான்மையையும், சாதாரண ஊழியத்தையும் அறியக்கூடும் என்று அஞ்சுகிறீர்களா? ஜெபிக்கிற கண்களிலிருந்து மறைந்து, உங்கள் அறையில் ஒளிந்துகொள்ள தூண்டப்படுகிறீர்களா?
உங்கள் வாழ்க்கையை மேற்பூச்சான நிறங்களில் அல்லாமல் சற்று ஆழமாய் பாருங்கள். உங்களுடைய பாவ வழிகளிலிருந்து திரும்பி, இயேசுவை விசுவாசித்தால், நீங்களும் அவரும் ஒரே கேன்வாஸ் துணியைப்போல் இருப்பீர்கள். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று இதை இயேசு சித்தரிக்கிறார் (யோவான் 15:5). நீங்களும் இயேசுவும் இணைந்து ஒரு முழுமையை அடைகிறீர்கள்.
இயேசுவில் இளைப்பாறுவது அவருடைய மெய்யான சீஷனாய் உங்களை மாற்றுகிறது. உங்கள் ஓவியத்தை மேம்படுத்துவதற்கு அது ஒன்றே வழி. “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (வச. 5).

தேவனை துதித்து பாடு
சீஷத்துவ கருத்தரங்கின் வார முழுமையும் கோடையின் உஷ்ணம் எங்களை தகனித்தது. ஆனால் கடைசி நாளில் மென்மையான குளிர் காற்று வீசியது. சீதோஷண நிலையில் ஒரு மாற்றத்தை தேவன் கொண்டுவந்து ஆச்சரியத்தை நடப்பித்ததற்காக நூற்றுக்கணக்கானோர் அன்றைய ஆராதனையில் இணைந்து தேவனை மகிழ்ச்சியோடு ஆராதித்தனர். தங்கள் இருதயத்தையும், ஆத்துமாவையும், சரீரத்தையும், சிந்தையையும் முழுவதுமாய் அர்ப்பணித்து, அநேகர் விடுதலையோடு தேவனை ஆராதித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பதாய் நடந்த அந்த சம்பவத்தை நினைவுகூரும்போது, தேவனை ஆராதிப்பதில் ஏற்படும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன்.
தேவனை முழுமனதுடன் ஆராதிப்பதைக் குறித்து தாவீது ராஜா அறிந்திருந்தார். கர்த்தருடைய பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது இவர் ஆடிப்பாடி, ஆர்ப்பரித்து கொண்டாடினார் (1 நாளாகமம் 15:29). அவருடைய மனைவி மீகாள் அதைப் பார்த்து “அவரைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்” (வச. 29). ஆனால் அவளுடைய அந்த அவமதிப்பை பொருட்படுத்தாமல் தாவீது ஒன்றான மெய்தேவனை ஆராதித்தார். ஆடுவது மற்றவர்களின் பார்வைக்கு கனவீனமாய் தெரிந்தாலும், அவரைத் தேர்ந்தெடுத்து ராஜாவாக்கிய தேவனுக்கு முழுமனதோடு நன்றி சொன்னார் (2 சாமுவேல் 6:21-22ஐ காண்க).
“அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது: கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்” (1 நாளாகமம் 16:7-9). நம்முடைய துதியையும் பாடலையும் அவருக்கு செலுத்தி, முழுமையாய் அவரை ஆராதிப்போம்.
