காலத்திற்கேற்ற தீர்வு
சைமனுக்கும் ஜெஃப்ரிக்குமான பகை ஆண்டுகளாய் நீடித்தது. அந்த உறவை சரிசெய்ய சைமன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தடைசெய்யப்பட்டது. ஜெஃப்ரியின் தாயாரின் மரணத்தைக் கேள்விப்பட்ட சைமன், கென்யாவிலுள்ள மேல் நாட்டிற்கு பயணம்செய்து அந்த மரண ஊர்வலத்தில் பங்கெடுத்தான். அதற்கு பின்பு அவர்கள் இருவருக்கும் இடையில் நேரிட்டதைக் குறித்து சைமன், “அந்த மரண ஊர்வலத்திற்கு பின்பு அனைத்து சூழ்நிலையும் எப்படி தலைகீழாய் மாறும் என்பதை நான் சற்றும் ஊகிக்கவில்லை. நாங்கள் இருவரும் மனம் திறந்து பேசினோம். நாங்கள் கட்டிப்பிடித்து, அந்த தருணத்தை அனுபவித்து, ஒன்றாய் ஜெபித்து, மீண்டும் சந்திக்கவும் திட்டமிட்டோம்” என்று கூறினான். சைமனும் ஜெஃப்ரியும் ஏற்கனவே ஒன்று சேர்ந்திருந்தனர் என்றால், பல மனவேதனைகளை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும்.
மத்தேயு 5:21-26ல் தீர்வுகாணப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயேசு உதவிசெய்கிறார். கோபம் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்துகிறார் (வச. 22). மேலும் உறவுரீதியாய் சரிசெய்யப்படாத பிரச்சனைகளை தேவனை ஆராதிப்பதற்கு முன்பு சரிசெய்யப்படவேண்டும் (வச. 23-24). ‘நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து” என்னும் இயேசுவின் ஞானமான போதனை, எவ்வளவு சீக்கிரத்தில் நாம் ஒப்புரவாகிறோமோ அது நமக்கும் மற்றுவர்களுக்கும் நல்லது என்பதை வலியுறுத்துகிறது.
உறவுகள் சவாலானது; அது நம் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, கல்விக்கூடங்களிலோ, அல்லது சகவிசுவாசிகளிடத்திலோ, நம்முடைய கிரியையை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் நம்முடைய சமாதானக் காரணரை (ஏசாயா 9:6) பிரதிபலிக்கிறவர்களாய் நம்முடைய இருதயத்தையும் கரங்களையும் அகல விரித்து, தீர்வுகாணமுடியாத பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பிரயாசப்படுவோம்.

கிறிஸ்மஸ் குழந்தை
ஒரு உயிரணுவிலிருந்து உயிர் தோன்றுவதுபோல, ஒரு விதையிலிருந்த கேதுருக்களை ஓங்கி வளரச்செய்யும் ஒருவர், கருவிலிருந்துகொண்டே நட்சத்திரங்களை தனக்கு அடிபணியச்செய்த ஒருவர், வானத்தை ஒளிக்கற்றைகளால் நிரப்பிய ஒருவரை சற்று கற்பனை செய்துபாருங்கள். தேவனாயிருந்த இயேசு தன்னை வெறுமையாக்குகிறார் (பிலிப்பியர் 2:6-7). என்னே ஆச்சரியமான சிந்தனை!
மேய்ப்பர்கள் மற்றும் தேவதூதர்கள் முன்னிலையில், வானத்து நட்சத்திரங்கள் ஒளிர, சுற்றியிருந்த விலங்கினங்கள் முதல் தாலாட்டைப் பாட, ஒரு விவசாய கிராமத்தில் இயேசுவின் பிறப்பை கற்பனை செய்யுங்கள். அவர் தேவ கிருபையிலும் மனிதர் தயவிலும் விருந்தியடைந்ததையும், கல்விமான்களின் கடினமான கேள்விகளுக்கு பதிலளித்ததையும், யோர்தான் நதியில் தன்னுடைய பிதாவின் ஒப்புதலைப் பெற்றதையும், பசியோடும் ஜெபத்தோடும் வனாந்திரத்திலே சோதிக்கப்பட்டதையும் பாருங்கள்.
அதன் பின்பு அவருடைய உலகத்தை மறுரூபமாக்கும் ஊழியத்தையும், வியாதியஸ்தர்களை குணமாக்கியதையும், குஷ்டரோகிகளை தொட்டதையும், அசுத்தமானவர்களை மன்னித்ததையும் பாருங்கள். அவர் தோட்டத்தில் வியாகுலப்பட்டதையும், அவருடைய உற்ற நண்பர்கள் ஓடிவிட அவர் கைதுசெய்யப்பட்டதையும் பாருங்கள். அவர் துப்பப்பட்டு. இரண்டு மரக்கட்டைகளின் நடுவில் ஆணியடிக்கப்பட்டு. உலகத்தின் பாவத்தை தன் தோள்களில் சுமந்தவராய் தொங்கவிடப்பட்டவரை பாருங்கள். கல் நகர, வெறுமையான கல்லறையின் அந்த சத்தத்தை. கவனியுங்கள், ஏனென்றால், அவர் உயிரோடிக்கிறார்!
அவர் உன்னதங்களில் உயர்த்தப்பட்டதைப் பாருங்கள் (வச. 9). வானத்தையும் பூமியையும் அவருடைய நாமம் நிரப்பியதைப் பாருங்கள் (வச. 10-11).
அண்டசராசரங்களில் நட்சத்திரங்களை உருவாக்கி, அவற்றை சிறு புள்ளியாய் காணச்செய்தவர் அவரே. அதுவே நம் கிறிஸ்மஸ் குழந்தை.

சமாதானக் காரணர்
ஜானின் சளி இறுமல், நிமோனியா காய்ச்சலாக மாறியது. அதினால் அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனையின் ஒருசில தளங்களுக்கு மேலே அவருடைய தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தன் தாயின் உடல்நிலையையும் தன்னுடைய உடல் நிலையையும் குறித்து அவர் அதிக கவலைப்பட்டார். ஒரு கிறிஸ்மல் இரவின்போது, “ஓ புனித இரவே” என்று வானொலியில் ஒலித்த அந்த பாடலைக் கேட்ட ஜான், தேவனுடைய சமாதானத்தினால் ஆட்கொள்ளப்பட்டார். இரட்சகரின் பிறப்பைக் குறித்த அந்த பாடலின் வரிகளை அவர் கேட்டார்: “சோர்வுற்ற ஆத்துமாவுக்கு ஒரு நம்பிக்கையாய் அங்ஙனம் ஒரு புதிய மகிமையான காலை உதயமாகிறது.” அதைக் கேட்ட தருணத்தில், அவரைக் குறித்தும் அவருடைய தாயாரைக் குறித்தும் இருந்த கவலை மறைந்தது.
ஏசாயா தீர்க்கதரிசனத்தின் படி, நமக்கு கொடுக்கப்பட்ட அன்பான இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே சமாதான காரணர் (ஏசாயா 9:6). “மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல்” (மத்தேயு 4:15; ஏசாயா 9:2) வெளிச்சமாகவும் இரட்சிப்பாகவும் உதிக்க, இந்த உலகத்தில் குழந்தையாய் பிறந்த இயேசுவில் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அவரால் நேசிக்கப்படுகிறவர்கள் கடினமான வாழ்க்கைப் பாதையில் பயணித்தாலும், அவர் அவர்களை சேர்த்துக்கொண்டு சமாதானத்தை அருளுகிறார்.
ஜான்; அந்த மருத்துவமனையில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து சிந்தித்து, அவை அனைத்தையும் மேற்கொள்ளும் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டார் (பிலிப்பியர் 4:7). கிறிஸ்மஸ் நாட்களில் தன் குடும்பத்தை விட்டு தள்ளியிருந்த அவருடைய விசுவாசத்தையும் நன்றியுணர்வையும் அந்த அனுபவம் அவருக்கு உறுதிப்படுத்தியது. தேவனுடைய பரிசான சமாதானத்தையும் நம்பிக்கையையும் நாமும் பெற்றுக்கொள்வோமாக.

அவர்களுக்கு எப்படி தெரியும்
வடக்கு தாய்லாந்தில் இருக்கும் “கூடுகை” என்னும் திருச்சபை ஒரு தனிக்குழு சார்பற்ற, சர்வதேச திருச்சபை. சமீபத்திய ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கொரியா, கானா, பாக்கிஸ்தான், சீனா, வங்காள தேசம், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளிலிருந்த கிறிஸ்துவின் விசுவாசிகள் தாழ்மையின் சிந்தையோடு ஒரு ஓட்டலின் மாநாட்டு அறையில் கூடினர். அவர்கள் “கிறிஸ்து மாத்திரமே” என்றும் “நான் கிறிஸ்துவின் பிள்ளை” என்றும் அந்த சூழ்நிலைக்கு கிளர்ச்சி தூண்டுகிறதுபோல் தோன்றிய பாடல்களை பாடினர்.
இயேசுவைப் போல யாராலும் மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. அவர் ஆரம்பத்திலிருந்தே அப்படி செய்கிறார். முதலாம் நூற்றாண்டில் அந்தியோகியாவில் பதினெட்டு இன மக்கள் தனித்தனியே வசித்தனர். விசுவாசிகள் முதலில் அந்தியோகியாவுக்கு வந்தபோது, அங்கிருந்த யூதர்களுக்கு மட்டுமே சுவிசே~த்தைப் பிரசங்கித்தனர் (அப்போஸ்தலர் 11:19). ஆனால் திருச்சபையைக் குறித்த தேவனுடைய திட்டம் அதுவல்ல. உடனடியாக, மற்றவர்களும் அங்கு கடந்து வந்து “கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்,” “அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்” (வச. 20-21). நூற்றாண்டுகளாய் யூதருக்கும் கிரேக்கருக்கும் இடையே நீடித்துக்கொண்டிருந்த பகையை இயேசு குணமாக்குகிறார் என்பதை அப்பட்டணத்திலிருந்தவர்கள் அறிந்துகொண்டனர். இந்த பலதரப்பட்ட இன மக்களைக் கொண்ட இந்த திருச்சபை “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர் (வச. 26).
இனம், சமுதாயம், மற்றும் பொருளாதார எல்லைகளைக் கடந்து நம்மிலிருந்து வேறுபட்ட மக்களை சந்திப்பது நமக்கு சவாலான ஒன்று. ஆனால் இந்த கடினமான பாதை நமக்கு வாய்ப்பாய் கொடுக்கப்பட்டுள்ளது. அது கடினமாயில்லையென்றால், அதை செய்வதற்கு நாம் இயேசுவின் உதவியை தேடியிருக்கமாட்டோம். அதில் சிலர் நாம் அவரை பின்பற்றுகிறோம் என்பதை அறிந்திருக்கின்றனர்.

நிஜமான பிரசன்னம்
கொரோனா வைரஸ் உலகமெங்கிலும் பரவிக்கொண்டிருக்கும்போது, அதின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்களிடையே இடைவெளியை கடைபிடிக்கும்படிக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அநேக நாடுகள் மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ளுதலை கடைபிடிக்கும்படி அறிவுறுத்துகிறது. ஒருபுறம் அலுவலகங்கள் முடிந்தவரை தங்கள் அலுவலர்களை வீடுகளிலிருந்து வேலைசெய்யும்படிக்கு உற்சாகப்படுத்த, மறுபுறம் பலர் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் என்னுடைய சபை ஆராதனைகளிலும் பராமரிப்புக் குழுக்களிலும் ஆன்லைன் மூலமாகவே கலந்துகொள்ள நேர்ந்தது. சரீரப்பிரகாரமாக ஒன்று கூடுவதைத் தவிர்த்து, தற்போது உலகம் ஒன்றுகூடுவதற்கு புதிய முறையை தத்தெடுத்துக்கொண்டுள்ளது.
இணையதளம் நம்மிடையே ஐக்கிய சிந்தையை ஏற்படுத்துவதில்லை. நாமெல்லாரும் தேவனுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாய் ஆவியில் இணைக்கப்பட்டுள்ளோம். கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பவுல் இக்கருத்தை பதிவுசெய்துள்ளார். அந்த சபை அவரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றாலும், அவர்களைக் குறித்தும் அவர்களின் விசுவாசத்தைக் குறித்தும் பவுல் தன் ஆழமான அக்கறையை வெளிப்படுத்தினார். பவுல் அவர்கள் மத்தியில் இருக்கமுடியவில்லை என்றாலும், “ஆவியின்படி உங்களுடனேகூட” இருக்கிறேன் என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் (கொலோசெயர் 2:5).
நம்முடைய பொருளாதார, சுகாதார மற்றும் பல நடைமுறைத் தேவைகளுக்காக நாம் நேசிக்கிறவர்களோடு எல்லாவேளைகளிலும் சரீரப்பிரகாரமாய் இருக்கமுடியாது. தொழில்நுட்பம் அந்த இடைவெளியை பூர்த்திசெய்யும். கிறிஸ்துவின் சரீரத்தின் அவயங்களாய் நாம் நம்மை பார்க்கும்போது, கண்ணிற்கு புலப்படாத ஒரு ஐக்கியத்திற்கு நாம் உட்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:27). அத்தகைய தருணங்களில், நாமும் பவுலைப்போல, ஒவ்வொருவருடைய விசுவாச உறுதியினாலும், ஜெபத்தினாலும் “கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்(ள)” உற்சாகப்படுத்தப்படுகிறோம் (கொலோ. 2:2).