வகை  |  odb

மற்ற ஏழுபேர்

ஜனவரி 2020இல் லாஸ் ஏஞ்சலஸில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்பது பேர் பலியாயினர். “பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரயண்ட்டும், அவருடைய மகள் ஜியானாவும் (கிகி) மற்றும் ஏழுபேர் இந்த விபத்தில் பலியாயினர்” என்று அநேக செய்திகள் இவ்வாறே வெளிவந்தன.

பிரபலமான நபர்கள் இதுபோன்ற கொடூரமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கையில், அவர்களுக்கு தனி முக்கியத்துவம் அளிப்பது இயல்பானதும், புரிந்துகொள்ளக்கூடியதும் தான். கோபே மற்றும் அவரின் பதின்பருவ மகள் கிகி ஆகியோரின் மரணம் நம்மை துயரில் ஆழ்த்துகிறது.   அதேநேரத்தில் விபத்தில் மரித்த மற்ற ஏழுபேர்களின் மரணங்கள் (பேடன், சாரா, கிறிஸ்டினா, அலிசா, ஜாண், கெரி மற்றும் ஆரா) எந்த விதத்திலும் தாழ்ந்ததில்லை. 

ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நாம் சிலவேளைகளில் உணரவேண்டும். பிரபலமானவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் சமுதாயம் முக்கியத்துவம்  அளிக்கிறது. ஆனால், உங்கள் அண்டை வீட்டாரை காட்டிலும், வீதிகளில் விளையாடும் பிள்ளைகளைக் காட்டிலும், கடினமான சூழ்நிலையில் உள்ளவர்களை காட்டிலும் அல்லது உங்களைக் காட்டிலும் இந்த புகழும், பிரபலமும் ஒருவரையும் முக்கியமானவர்களாய் மாற்றாது. 

எழையோ பணக்காரனோ (நீதிமொழிகள் 22:2), பூமியிலுள்ள எல்லா மனிதர்களும் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27). யாரும் தேவனுடைய பார்வையில் அதிக மேன்மையானவர்கள் இல்லை (ரோமர் 2:11). அனைவருக்கும் இரட்சகர் அவசியம் (3:23). 

திருச்சபையிலோ (யாக்கோபு 2:1-4) அல்லது சமுதாயத்திலோ, நாமும் பாரபட்சமில்லாமல் செயல்படும்போது நாம் நம்முடைய தேவனை மகிமைப்படுத்துகிறோம்.    

தேவனின் நல்ல பசை

சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மிகவும் வலிமையான, அதேநேரம் பிரித்தெடுக்கக்கூடிய புதிய வகை பசையை கண்டுபிடித்தனர். வறட்சியான இடங்களில் ஒட்டிக்கொண்டு, ஈரமான இடங்களில் எளிமையாய் விலகிக் கொள்ளும் நத்தையின் திரவமே அவர்கள் வடிவமைப்பிற்கு உந்துதல். நத்தையின் இந்த மாறும் தன்மை ஈரப்பதமான இடங்களிலும் எளிதாக நகரவும், பாதுகாப்பாய் இருக்கவும், நகர்வது ஆபத்தாய் தோன்றும் அபாயமான இடங்களில் உறுதியாய் தன்னை நிறுத்திக் கொள்ளவும் ஏதுவாயிருக்கிறது. 

இயற்கையில் இருக்கும் இந்த ஒட்டும் பசை மாதிரி, விஞ்ஞானி ஜோன்ஸ் கெப்லர் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க உறுதுணையாயிருந்தது. அவர் தேவனுடைய சிருஷ்டிப்புகளை நினைவு கூறுவதாகச் சொல்லுகிறார். வேதம், தேவன் வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவையும் சிருஷ்டித்ததாக சொல்லுகிறது: பூமியின் தாவரங்கள் (ஆதியாகமம் 1:12); சமுத்திரத்திலுள்ள நீர்வாழ் ஜந்துக்கள் மற்றும் ஆகாயத்துப் பறவைகள் (வச. 21); பூமியில் ஊரும் பிராணிகள் (வச.25); தேவசாயலில் உண்டாக்கப்பட்ட மனிதன் (வச.27) என்று தேவனுடைய சிருஷ்டிப்பு பட்டியல் நீளுகிறது. ஒரு தாவரத்தை அல்லது உயிரினங்களின் விசேஷமான சுபாவத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்பட நேர்ந்தால், தேவன் அதை வடிவமைத்த விதத்தைக் கண்டு நாம் தேவனுடைய படைப்பின் அடுச்சுவடுகளை பின்பற்றுகிறோம் என்று அர்த்தம்.

சிருஷ்டிப்பின் ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தேவன் தன்னுடைய கரத்தின் கிரியையை பரிசீலனை செய்து அதை “நல்லது” என்று காண்கிறார். தேவனுடைய படைப்புகளைக் குறித்து நாம் கற்றுக்கொள்ளும் போதும், கண்டுபிடிக்கும் போதும், அதின் வியக்கத்தக்க சுபாவங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அதை பராமரிக்கவும் அதின் மேன்மையை பறை சாற்றவும் செய்யலாம். 

எளிமையாய் சொல்லுங்கள்

அந்த மின்னஞ்சல் சுருக்கமாயும், அவசரமாயும் இருந்தது. “எனக்கு இரட்சிப்பு வேண்டும். நான் இயேசுவை அறிய விரும்புகிறேன்.” என்ன வியத்தகு வேண்டுகோள்! இயேசுவை ஏற்றுக்கொள்ள தயங்கும் நம் சிநேகிதர்கள் மற்றும் உறவினர்களைப் போன்று இந்த நபரை நாம் மனமாற்றம் செய்வதில் சிரமமில்லை. என்னுடைய அறிவிற்குட்பட்ட சில முக்கியமான காரியங்கள், வேதப்பகுதிகள், நம்பத்தக்க தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த மனிதனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே என்னுடைய வேலை. அதிலிருந்து, விசுவாசத்தினால் அவனை தேவன் வழி நடத்துவார். 

எத்தியோப்பியாவின் மந்திரி ஊருக்குத் திரும்பும் பாலைவன வழியில், ஏசாயா ஆகமத்தை சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கையில், அவரைச் சந்தித்த பிலிப்பு அதேபோன்று எளிமையான சுவிசேஷத்தை பகிர்ந்தார். “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” (அப்.8:30) என்று பிலிப்பு கேட்க. “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” (வச. 31) என்று அவன் பதிலளிக்கிறான். அந்த அழைப்பாக ஏற்ற பிலிப்பு, “இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்” (வச.35).

ஜனங்கள் எதிர்பார்க்கிற இடத்திலிருந்து, எளிமையாக சுவிசேஷத்தை பிலிப்பை போல் பிரசங்கிப்பது, கிறிஸ்துவை பகிர பயனுள்ள முறை. அவர்கள் இருவரும் போன வழியில் தண்ணீரை கண்டு, “இதோ, தண்ணீர் இருக்கிறதே” (வச.36) என்று காண்பித்து தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்க, பிலிப்பு சம்மதித்தான். பின்னர் மந்திரி, “சந்தோஷத்தோடே தன் வழியே போனான்” (வச.39). அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் பின்பு, தன்னுடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகவும், திருச்சபை ஒன்றில் சேர்ந்ததாகவும், தன்னுடைய மறுபிறப்பை நம்புவதாகவும் எனக்கு மீண்டும் எழுதிய பதிலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என்ன ஒரு அழகான துவக்கம்! தேவன் அவரை மேன்மேலும் உயர்த்தட்டும்.

தொலைந்த காரியங்கள்

தன் தேசத்தை பாழாக்கும் ஆடம்பரச் செலவுகளையும், ஊழல்களையும் கண்டு சோர்வடைந்த கொரியாவின் அரசர் யோங்ஜோ (1694-1776), காரியங்களை மாற்றத் தீர்மானித்தார். ஆனால், கூழுக்கு ஆசைப்பட்டு மீசையெடுத்த கதைப்போல பாரம்பரியமான தங்கநூல் தையல் கலையை தடைசெய்தார். இதனால், சீக்கிரமே இந்த நுணுக்கமான கலை அறிவு தேசத்தில் அழிந்துபோனது. 

2011ஆம் ஆண்டு, சிம் யியோன்-ஓக் எனும் பேராசிரியர் அந்த பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவர தீர்மானித்தார். தங்க இழைகளுக்கு பதிலாக கைகளால் கத்திரிக்கப்பட்ட மல்பெரி பேப்பர்களைக் கொண்டு அந்த பழமையான பாரம்பரிய வழக்கத்திற்கு புத்துயிர் கொடுத்தார். 

யாத்திராகமத்தில், ஆடம்பரமான முறையில் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டினார்கள், ஆரோனின் ஆசாரிய வஸ்திரத்தில் தங்க இழைகள் கோர்க்கப்பட்டன. திறமையான கைவேலைக் கலைஞர்கள், “அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.” (யாத்திராகமம் 39:3). அந்த நேர்த்தியான கைவினைத் திறனுக்கு என்ன ஆனது? வஸ்திரம் கிழிந்துவிட்டதா? அவைகள் சூரையாடப்பட்டதா? எல்லாம் வீணாய் போனதா? இல்லவே இல்லை. அவர்கள் அதை நேர்த்தியாய் செய்தனர் ஏனெனில் தேவன் அவர்களுக்கு தெளிவான ஆலோசனைகளை கொடுத்திருந்தார்.

நாம் ஒவ்வொருவரும் செய்ய தேவன் ஏதோவொன்றை நமக்கும் கொடுத்திருக்கிறார். அது நாம் மற்றவர்களுக்கு செய்யும் ஒரு சிறிய அன்பின் உதவியாக இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் சேவைசெய்வதின் மூலம் ஏதாகிலும் ஒன்றை அவருக்கு நாம் தரலாம். கடைசியில் நம்முடைய முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று நாம் கவலைப்படத் தேவையில்லை (1கொரிந்தியர் 15:58). நாம் பரமதகப்பனுக்காய் செய்யும் ஒவ்வொரு காரியமும் நித்தியத்திற்கு பலனளிக்கக் கூடியதாயிருக்கிறது. 

ஆட எழுவோம்

இந்த காணொளி அதிகம் பகிரப்பட்டது. ஒரு அழகான மூத்தபெண்மணி சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கிறார், ஒரு காலத்தில் பாலே நடனத்தில் புகழ்பெற்றவராய் திகழ்ந்த இந்த மார்த்தா, தற்போதோ மூளையை பாதிக்கும் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டார். அவரிம் ஸ்வான் லேக் (swan lake) எனும் இசையை இசைக்கையில் மட்டும், ஆச்சரியமானது நடக்கும். அந்த இசை வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கயில், அவருடைய பலவீனமான கரங்கள் மெல்ல உயர ஆரம்பிக்கிறது. முதல் எக்காள இசை துவங்கும்போது, தன் சக்கரநாற்காலியிலிருந்து, அவர் செய்கை காட்டத் துவங்குகிறார். அவருடைய மனமும், உடலும் செயலிழந்துக் கொண்டிருந்தாலும், அவருடைய திறமை இன்னும் அப்படியே இருக்கிறது. 

அந்த காணொளியைப் பார்த்த மாத்திரத்தில் 1கொரிந்தியர் 15ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பவுலின் உயிர்த்தெழுதல் போதனைக்கு நேராய் என் சிந்தை திரும்புகிறது. ஒரு விதை எவ்வாறு பூமியிலிருந்து துளிர்விட்டு எழும்புகிறதோ, அதேபோன்று விசுவாசிக்கிறவர்களின் சரீரம் இந்த பூமியில் அழிவுள்ளதாய், கனவீனமுள்ளதாய், பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும்;. ஆனால் அழிவில்லாததாய், மகிமையுள்ளதாய், பலமுள்ளதாய் எழுந்திருக்கும் என்று கூறுகிறார் (வச.42-44)). ஒரு விதைக்கும், தாவரத்திற்கும் இடையே ஒரு உடல் சார்ந்த இணைப்பு இருப்பது போல, நம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், நம்முடைய ஆளத்துவமும், தாலந்துகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அப்படியே செழிப்பாய் இருக்கும். 

ஸ்வான் லேக் என்னும் அந்த இசை மீட்டப்படும்போது, தான் ஒரு காலத்தில் எப்படியிருந்தோம் என்று தன்னுடைய முன்னிலைமையை நினைத்து மார்த்தா சோர்வடைந்தாள். ஆனால், ஒரு மனிதர் அவளருகே வந்து, அவளுடைய கரங்களை பற்றினார். நமக்கும் அப்படியே சம்பவிக்கும். எக்காளங்கள் தொனிக்க (வச. 52), ஒரு கரம் நம்மை பற்றிப்பிடிக்கும். இதுவரை இல்லாத வகையில் நேர்த்தியான ஒரு நடனத்தை நாமும் அப்போது ஆடுவோம்.