வகை  |  odb

கழுதையின்மேல் ஒரு ராஜா

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாம் வழக்கமாக குருத்தோலை ஞாயிறு என்றழைக்கும் நாள். சந்தேகமேயில்லை, இயேசு எருசலேமுக்கு வருவது இது முதல்முறை அல்ல. ஒரு பக்தியுள்ள யூதனாக எல்லா வருடமும் மூன்று பெரிய பண்டிகைகளுக்கு தவறாமல் அங்கே சென்றிருப்பார் (லூக்கா 2:41–42; யோவான் 2:13; 5:1). கடந்த மூன்று வருடங்களாக கிறிஸ்து எருசலேமில் போதித்து, ஊழியமும் செய்தார். ஆனால் இந்த ஞாயிறு அப்பட்டணத்தில் அவர் வருகை முற்றிலும் வித்தியாசமாயிருந்தது.

ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் பட்டணத்திற்குள் வந்துகொண்டிருக்கும் வேளையில், கழுதையின்மேல் ஏறி எருசலேமுக்கு வந்த இயேசுவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் (மத்தேயு 21:9–11). கடந்த மூன்று வருடங்களாக வேண்டுமென்றே தன்னை தாழ்த்திக்கொண்டவர், இப்போது ஆயிரக்கணக்கானவர்கள் முன்பில் பிரதான இடத்தை ஏன் எடுத்துக்கொண்டார்? தான் மரிக்கப்போகும் வெறும் ஐந்து நாட்களுக்கு முன்பு, அவரை ராஜா என்று அறிவித்த ஜனங்களின் கூற்றை ஏன் அங்கீகரித்துக்கொண்டார்?

ஐநூறு ஆண்டுகள் வயதான தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகவே இச்சம்பவம் நடந்ததாக மத்தேயு கூறுகிறார் (மத்தேயு 21:4–5). அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ராஜா எருசலேமுக்குள் “நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்” (சகரியா 9:9; மேலும் ஆதியாகமம் 49:10–11) என்பதே அத்தீர்க்கதரிசனம்.
வெற்றிகொண்ட ராஜா ஒரு நகரத்தினுள் பிரவேசிக்க இது முற்றிலும் வித்தியாசமான வழி. வெற்றிபெறும் அரசர்கள் பொதுவாக பராக்கிரமமான குதிரைகளில் தான் பவனி வருவார்கள். அனால் இயேசு யுத்த குதிரையில் ஏறி வரவில்லை. இதுவே இயேசு எப்படிப்பட்ட ராஜா என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் தாழ்மையாகவும், சாந்தமாகவும் வந்தார். இயேசு யுத்தத்திற்கு வரவில்லை; மாறாக, சமாதானத்திற்கு வந்தார். நமக்கும் தேவனுக்குமிடையே சமாதானம் உண்டாக்க வந்தார் (அப்போஸ்தலர் 10:36; கொலோசெயர் 1:20).

அரட்டைப் பேருந்து

2019ல் ஆக்ஸ்போர்ட் பேருந்து நிறுவனம், “அரட்டைப் பேருந்து” என்றொரு திட்டத்தை துவங்கினர். உடனே அது பிரபலமானது. இப்பேருந்தில், குறிப்பிட்ட நபர்கள் விருப்பமுள்ள பிரயாணிகளோடு பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். 30 சதவிகித பிரிட்டன் மக்கள், ஒரு வாரத்தில் ஒரு நாளிலாகிலும் அர்த்தமில்லா அரட்டை அடிக்காமலிருப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கணக்கெடுப்பிற்கேற்ப இவ்வழிமுறை அமுலாக்கப்பட்டது.

நம்மில் அநேகர், ஏற்ற சமயத்தில் பேசுவதற்கு துணை இல்லா தனிமையை அனுபவித்திருப்போம். என் வாழ்வின் மிக முக்கியமான உரையாடல்களின் மதிப்பை குறிப்பிடுகையில், கிருபை பொருந்திய உரையாடல்களே எனக்கு ஞாபகம் வருகின்றன. அத்தருணங்கள் எனக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் அளித்து, ஆழமான உறவுகள் வளர உதவின.

கொலோசெய திருச்சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தின் முடிவில், தம் வாசகர்களை இயேசுவின் விசுவாசிகளுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை முறைகளை சொல்லி ஊக்கப்படுத்துகிறார். அதில் நாம் சந்திக்கும் அனைவரிடமும் நம்முடைய பேச்சின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் முறைகளைக் குறிப்பிடுகிறார். “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்” (4:6) என எழுதுகிறார். தங்கள் உரையாடல்களில் வெறும் வார்த்தைகள் மட்டும் இடம்பெறாமல், அவ்வார்த்தைகள் கிருபை பொருந்தினவைகளாய் இருக்கவேண்டுமெனவும், அதுதான் பிறருக்கு உண்மையான ஊக்கத்தை அளிக்கும் எனவும் நினைப்பூட்டுகிறார்.

அடுத்தமுறை உங்கள் நண்பரிடமோ, சக பணியாளரிடமோ, அல்லது பேருந்திலோ, காத்திருக்கும் அறையிலோ நீங்கள் சந்திக்கும் அறிமுகமில்லாதவரிடம் ஆழமாக உரையாட வாய்ப்பு கிடைத்தால், உங்கள் இருவருக்கும் ஆசீர்வாதம் உண்டாகும்படி பேசுங்கள்.

நிரந்தர முகவரி

எங்கள் பழைய வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்த புதிய வீட்டிற்கு சிலநாளைக்கு முன்புதான் வந்தோம். அதிக தூரமில்லை என்றபோதும், எங்கள் சாமான்களையெல்லாம் வண்டியிலேற்றி பண பரிமாற்றம் முடியும்வரை அங்கேயே காத்திருந்தோம். பழைய வீட்டை விற்று, புதிய வீட்டை வாங்கும் இடைப்பட்ட நேரமுழுதும் எங்கள் குடும்பமும், சாமான்களும் தற்காலிக குடியிருப்பாக அந்த வண்டியிலிருந்தோம். நாங்கள் எங்கள் வீட்டிற்குள் இல்லையென்றாலும், நான் அதிகம் நேசிக்கும் குடும்பம் என்னோடு இருந்ததால் என்னை அப்பிரிவு பாதிக்கவில்லை என்பதை அச்சமயத்தில் தான் புரிந்துகொண்டேன்.

தன் வாழ்வில் அநேக நாட்கள் தாவீது வீட்டைவிட்டு பிரிந்திருந்தார். சவுல் ராஜாவிடமிருந்து தப்பியோடுவதே அவர் வாழ்வின் பெரும்பகுதி. தன் சிங்காசனத்திற்கு தேவனால் நியமிக்கப்பட்ட வாரிசு என்றும், தன் பதவிக்கு தாவீது பெரும் அச்சுறுத்தல் என்றும் சவுல் உணர்ந்ததால், அவரை கொல்லப் பார்த்தான். தாவீது தன் வீட்டை விட்டோடி, அடைக்கலம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் படுத்துறங்கினார். தாவீதின் கூட்டாளிகள் எப்போதும் அவரோடு இருந்தபோதிலும், “கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்" (சங்கீதம் 27:4) என்று தாவீது தன்னுடைய வாஞ்சையை தெரிவிக்கிறார்.

“என் வீடு” என்று நாம் எவ்விடத்தில் உணர்ந்தாலும், இயேசுவே நமது நித்திய கூட்டாளி. இக்கால பாடுகளில் அவர் நம்மோடு இருக்கிறார். மேலும், நாம் அவரோடு என்றென்றும் வாழ நமக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 14:3). இப்பூமியின் குடிமக்களாக நாம் நிச்சயமற்றவர்களாக, எத்தகைய மாற்றங்களை அனுபவித்தாலும், நாம் எப்போதும், எங்கேயும், அவருடைய உறவில் நிரந்தரமாக தங்கலாம்.

மெய்யான உபசரிப்பு

“சாப்பிட்டீங்களா?” இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள விருந்தினர்களை உபசரிக்க முதலில் கேட்கப்படும் கேள்வி இது. விருந்தினர்களிடம் அன்பையும், கரிசனையையும் காட்டும் தமிழர்களின் வழக்கம் இது. இதற்கு நீங்கள் என்ன பதில் கூறினாலும், அந்த வீட்டினர் உங்களுக்கு சாப்பிட ஏதாவது சமைத்து விடுவார்கள். குறைந்தபட்சம், குடிக்க தண்ணீராவது தருவார்கள். உண்மையான அன்பு என்பது வெறும் வார்த்தையில் வாழ்த்து சொல்வது மட்டுமல்ல; மாறாக, உபசரிப்பில் காண்பிக்கப்படவேண்டும் என தமிழர்கள் நம்புகின்றனர்.

தயவு காட்டுவதைக் குறித்து ரெபேக்காள் நன்கு அறிந்திருந்தாள். பட்டணத்தின் வெளியேயிருந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதும், கனமான அந்த குடத்தை வீட்டிற்கு கொண்டுசெல்வதுமே அவளின் அன்றாட வாடிக்கை. ஆபிரகாமின் வேலைக்காரன், தன் பிரயாணத்தால் மிகவும் தாகமுற்று, அவளிடத்திலிருந்த தண்ணீரை கொஞ்சம் கேட்க, அவள் சற்றும் தயங்காமல் அதைக் கொடுத்து உதவுகிறாள் (ஆதியாகமம் 24:17–18).

அத்தோடு ரெபேக்காள் நிறுத்தவில்லை. தன் விருந்தாளியின் ஒட்டகங்கள் தாகமாய் இருப்பதைப் பார்த்து, உடனே அவைகளுக்கும் தண்ணீர் வார்க்க திரும்பிச் செல்கிறாள் (வச. 19–20). அந்த கனமான குடத்தைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் நடந்து, உதவி செய்ய அவள் தயங்கவில்லை.

அநேகருக்கு வாழ்க்கையே கடினமாயிருப்பதால், செயலில் காட்டப்படும் சிறிதளவு அன்பு கூட அவர்களை ஊக்கப்படுத்தி, புத்துயிரூட்டும். வல்லமையான பிரசங்கத்தை செய்வதும் திருச்சபையை நாட்டுவதும் மட்டும் தெய்வீக அன்பின் அடையாளமன்று; மாறாக, தேவையில் உள்ளோருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுப்பதும் தெய்வீக அன்பின் அடையாளமே.

வாகன நிறுத்துமிடத்தில் சண்டை

சங்கடத்தைத் தவிர்த்து, வாகனம் நிறுத்துமிடத்தில் அந்த காட்சி நகைச்சுவையாக இருந்திருக்கும். இரு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் ஒன்றையொன்று வழிமறித்துக் கொண்டிருப்பதை குறித்து சத்தமாக வாதிட்டனர், கடுமையான வார்த்தைகளும் வெளிப்பட்டன.
இங்கே வேடிக்கையென்னவென்றால், இந்த சண்டை ஒரு சபையின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்தது. அந்த இருவரும் இப்போதுதான் அன்பு, பொறுமை, மன்னித்தல் குறித்த பிரசங்கத்தைக் கேட்டிருக்கக்கூடும். ஆனால் கோபத்தில் அனைத்தும் மறக்கப்பட்டன.

இதைப் பார்த்தமாத்திரத்தில் நான் சற்று சலிப்படைந்தேன். ஆனால் நானும் உத்தமன் இல்லை என்பதை உடனே உணர்ந்துகொண்டேன். பலமுறை நான் வேதத்தை வாசித்தப் பின்பும், சில நிமிடங்களிலேயே பாவமான சிந்தனைகளில் வீழ்ந்தேன்? “கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” (யாக்கோபு 1:23–24) அப்படிப்பட்ட நபரைப்போல் நான் எத்தனை முறை நடந்துகொண்டேன்?
யாக்கோபு தன் வாசகர்களை, திருவசனத்தை கேட்டு தியானிக்க மட்டுமல்லாமல் அதின்படி செய்ய அழைக்கிறார் (வச. 22). வசனத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்துவதே முழுமையான விசுவாசம் எனக் குறிப்பிடுகிறார்.

வேதவசனம் வெளிப்படுத்துவதை செயல்படுத்த வாழ்வின் சூழல் தடைபண்ணலாம். ஆனால், நாம் நம் தகப்பனிடம் கேட்டுக்கொள்கையில், அவருடைய வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியவும், அவருக்கு பிரியமாய் நாம் நடக்கவும், நமக்கு நிச்சயம் உதவுவார்.