எங்கள் பழைய வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளியிருந்த புதிய வீட்டிற்கு சிலநாளைக்கு முன்புதான் வந்தோம். அதிக தூரமில்லை என்றபோதும், எங்கள் சாமான்களையெல்லாம் வண்டியிலேற்றி பண பரிமாற்றம் முடியும்வரை அங்கேயே காத்திருந்தோம். பழைய வீட்டை விற்று, புதிய வீட்டை வாங்கும் இடைப்பட்ட நேரமுழுதும் எங்கள் குடும்பமும், சாமான்களும் தற்காலிக குடியிருப்பாக அந்த வண்டியிலிருந்தோம். நாங்கள் எங்கள் வீட்டிற்குள் இல்லையென்றாலும், நான் அதிகம் நேசிக்கும் குடும்பம் என்னோடு இருந்ததால் என்னை அப்பிரிவு பாதிக்கவில்லை என்பதை அச்சமயத்தில் தான் புரிந்துகொண்டேன்.

தன் வாழ்வில் அநேக நாட்கள் தாவீது வீட்டைவிட்டு பிரிந்திருந்தார். சவுல் ராஜாவிடமிருந்து தப்பியோடுவதே அவர் வாழ்வின் பெரும்பகுதி. தன் சிங்காசனத்திற்கு தேவனால் நியமிக்கப்பட்ட வாரிசு என்றும், தன் பதவிக்கு தாவீது பெரும் அச்சுறுத்தல் என்றும் சவுல் உணர்ந்ததால், அவரை கொல்லப் பார்த்தான். தாவீது தன் வீட்டை விட்டோடி, அடைக்கலம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் படுத்துறங்கினார். தாவீதின் கூட்டாளிகள் எப்போதும் அவரோடு இருந்தபோதிலும், “கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” (சங்கீதம் 27:4) என்று தாவீது தன்னுடைய வாஞ்சையை தெரிவிக்கிறார்.

“என் வீடு” என்று நாம் எவ்விடத்தில் உணர்ந்தாலும், இயேசுவே நமது நித்திய கூட்டாளி. இக்கால பாடுகளில் அவர் நம்மோடு இருக்கிறார். மேலும், நாம் அவரோடு என்றென்றும் வாழ நமக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துகிறார் (யோவான் 14:3). இப்பூமியின் குடிமக்களாக நாம் நிச்சயமற்றவர்களாக, எத்தகைய மாற்றங்களை அனுபவித்தாலும், நாம் எப்போதும், எங்கேயும், அவருடைய உறவில் நிரந்தரமாக தங்கலாம்.