வகை  |  odb

நன்றி, ஆனால் வேண்டாம்!

இந்தியாவில் மனநலம் குன்றிய பிள்ளைகளுக்காய் நடத்தப்படும் கிறிஸ்தவ பள்ளியொன்றிற்கு மாநகராட்சி வாரியத்திலிருந்து பெரும் நன்கொடை அளிக்கப்பட்டது. அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அறிந்த பின்னரே, அந்த தொகையை அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் பின்நாளில் மாநகராட்சி வாரியம், அந்த தொகைக்கான பிரதிநிதித்துவம் கோரியது. உடனே, அந்த பள்ளியின் இயக்குனர் அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டார். பள்ளியின் கொள்கையை விட்டுக்கொடுக்க அவருக்கு மனதில்லை. “தேவனுடைய சேவையை, தேவனுடைய வழியில் செய்வது மிகவும் அவசியம்” என்று அவர் கூறுகிறார். 

நமக்கு வரும் உதவியை நிராகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் இதுவும் ஒன்று. வேதாகமத்தில் வேறொன்றைப் பார்க்க முடியும். சிறையிருப்பிலிருந்து, யூதர்கள் மீண்டு திரும்பியதும், அவர்களுடைய ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு கோரேசு ராஜாஅனுமதியளித்தான் (எஸ்றா 3). “உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப் போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்” (4:2) என்று மற்றவர்கள் சொல்லும்போது இஸ்ரவேலின் தலைவர்கள் அதை நிராகரித்தனர். அவர்கள் ஒருவேளை அந்த உதவியை ஏற்றுக்கொண்டிருந்தால், ஆலயத்தை மீண்டும் கட்டும் முயற்சியில் தோல்வியடைந்திருப்பர். ஏனென்றால், அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்பதினால், அவர்களின் விக்கிரக ஆராதனை உள்ளே புகுந்திருக்கக்கூடும். இஸ்ரவேலர்கள் சரியான தீர்மானத்தை எடுத்தனர். ஆகையால் எதிர்ப்பாளர்கள் ஆலயக்கட்டுமானப் பணியை தங்களால் முடிந்த அளவிற்கு தடை செய்தனர். 

பரிசுத்த ஆவியின் துணையோடும், விசுவாசிகளின் ஞானமான ஆலோசனையோடும் நாம் பகுத்தறிந்து செயல்பட பழகலாம். ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய சிநேகிதமான வாய்ப்புகளைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் தேவனுடைய பணியை தேவனுடைய வழியில் செய்யும்போது எந்த நன்மையும் குறைவுபடாது. 

எந்த சூத்திரமும் தேவையில்லை

தன்னுடைய இளம்பிராயத்தில் மேக்னாவுக்கு பிரியமான ஞாயிறு சிறுவர்பள்ளி ஆசிரியை ஒருமுறை சுவிசேஷம் அறிவித்தலைக் குறித்த பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். அதில் சில வசனங்களை மனப்பாடம் செய்யும்படியாகவும், சிலயுக்திகளைக் கையாளும்படியும் சொல்லியிருந்தார். மேக்னாவும், அவளுடைய சிநேகிதியும் அந்த யுக்திகளைக் கையாண்டு மற்றொரு சிநேகிதிக்கு பயத்துடன் சுவிசேஷத்தை பகிர்ந்துகொண்டனர். ஆனால் அந்த சுவிசேஷ பகிர்வு மனமாற்றத்தில் முடிவடைந்ததாய் தெரியவில்லை. இந்த யுக்திகளை நினைவுபடுத்தி சுவிசேஷம் சொல்வது ஆக்கபூர்வமானதாய் தெரியவில்லை. 

ஆனால் காலங்கள் சென்று தற்போது மேக்னாவும், அவளது கணவனும் தேவனை நேசிப்பதற்கும் சுவிசேஷத்தைப் பகிர்வதற்கும் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் செயல்படுகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு தேவனைக் குறித்தும், வேதத்தைக் குறித்தும், இயேசுவுடனான தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் போதிப்பது அவசியம் என்று அறிந்திருந்தார்கள். ஆனால் அதை அன்றாட வாழ்க்கையின் மூலமும், தேவனுடைய அன்பையும், வேதத்தையும் நடைமுறைப்படுத்துவதின் மூலமும் போதித்தனர். “நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 5:14) என்றால் என்ன என்பதையும் மற்றவர்களை தயவான வார்த்தையின் மூலம் அணுகுவது எப்படி என்பதையும் வாழ்ந்து காண்பித்து நிரூபித்தனர். “நாம் கடைபிடிக்காவிடில் ஜீவனுக்கேதுவான வார்த்தைகளை போதிக்க முடியாது” என்று மேக்னா கூறுகிறார். தங்களுடைய வாழ்க்கையில் தயவையும், இரக்கத்தையும் காண்பித்து மற்றவர்களை தங்களுடைய நம்பிக்கைக்குள்ளாக ஈர்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துகின்றனர்.

மற்றவர்களை இயேசுவிடம் நடத்துவதற்கு நமக்கு பிரத்யேகமான யுக்திகள் தேவையில்லை. நம்மை நெருக்கி ஏவி, நம் மூலமாய் பிரகாசிக்கும் தேவ அன்பே முக்கியம். நாம் வாழ்ந்து, அவருடைய அன்பை பிரதிபலிக்கும்போது, அவரை அறிகிற அறிவிற்குள்ளாய் தேவன் மற்றவர்களை நம் மூலம் கொண்டுவரச் செய்வார். 

நீதியும் கிறிஸ்துவும்

ரோம் தேசத்தின் முதல் பேரரசர் அகுஸ்து ராயன் (கி.மு.63- கி.பி. 14). இவர் சட்ட ஒழுங்கின் ஆட்சியாளராய் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள எண்ணியவர். அடிமைத்தனம், இராணுவ அடக்குமறை, இலஞ்சம் போன்றவற்றின் மீது தன் ஆட்சியை ஸ்தாபித்தாலும், ஓரளவுக்கு நீதி வழங்கும் முறையை சீரமைத்து, தன் குடிமக்களுக்கு லஸ்டீசியா என்னும் நீதிதெய்வத்தை அறிமுகப்படுத்தினான். தற்போது நீதிமன்றங்களில் நீதிதேவதை என்று குறிப்பிடப்படுவது இதுதான். மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, பூமியின் எல்லைகள் பரியந்தம் மகிமைப்படப் போகிற உலக இரட்சகரின் பிறப்பு சம்பவம் (மீகா 5:2-4) நிகழுவதற்கு மரியாளும், யோசேப்பும் பெத்லகேமுக்கு வர காரணமாயிருந்த ஜனத்தொகை கணக்கெடுப்பை கட்டளையிட்டவர் இவரே.

ஆனால் இந்த ராஜா, மெய்யான நீதியை நிலை நாட்டுவதற்காய் வாழ்ந்து தன்னுடைய ஜீவனையும் கொடுப்பார் என்பதை அகுஸ்துராயனும், உலகமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பதாய் மீகா தீர்க்கதரிசியின் நாட்களில், தேவனுடைய ஜனம் பொய், கலகம், மற்றும் “துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்கள்” (6:10-12) ஆகியவைகளினால் வழி விலகியிருந்தனர். தேவனுக்கு பிரியமான தேசம் அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர்களின் கிரியைகளின் தன்மையை அவர்களுக்கு உணர்த்தி, அவருடன் தாழ்மையாய் நடக்கவேண்டும் என்று தேவன் ஏங்கினார் (வச.8). 

காயப்பட்ட, மறக்கப்பட்ட, மற்றும் ஆதரவற்ற மக்கள் எதிர்பார்த்திருந்த நியாயத்தை அவர்களுக்கு இந்த பணிவிடையாளனான ராஜா காண்பித்தார். தேவனுக்கும் மனிதனுக்குமிடையிலும், மனிதனுக்கும் சக மனிதனுக்குமிடையிலும், உள்ள சரியான உறவை பார்ப்பதற்கு மீகாவின் தீர்க்கதரிசனம், இயேசு கிறிஸ்துவில் நிறைவேற வேண்டியிருந்தது. அது அகுஸ்து ராயனுடைய சட்ட ஓழுங்கு ஆதிக்கத்தினால் சாத்தியமல்ல, மாறாக, இரக்கம், தயவு, மற்றும் பணிவிடையாளனான ராஜாவாம் இயேசுவின் ஆவியினால் உண்டாகும் விடுதலையில் மட்டுமே அது சாத்தியமாகிறது. 

மருக்கள் மற்றும் அனைத்தும்

“இங்கிலாந்தின் பாதுகாவலர்” என்றழைக்கப்பட்ட ஆலிவர் க்ரோம்வெல், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு படைத்தளபதி. அந்நாட்களில், இதுபோன்ற முக்கிய நபர்கள் தங்கள் உருவப்படங்களை வரைந்துக்கொள்வது வழக்கம். அதுபோல க்ரோம்வெல்லின் உருவப்படத்தை வரைந்த ஓவியர், அவரின் முகப்பொலிவை குறைக்கும் குறைகளை தவிர்த்துவிட்டு, அவரை அழகாய் வரைந்தார். அவரைப் பிரியப்படுத்தும் ஓவியரின் அச்செயலை அவர் விரும்பவில்லை.  அவர் அந்த ஓவியரைப் பார்த்து, “என் முகத்தில் இருக்கும் மருக்கள் மற்றும் அனைத்தோடும் என் முகத்தை வரையுங்கள், இல்லையேல் உங்களுக்கு நான் கூலி தரமாட்டேன்” என்று எச்சரித்தாராம். 

அந்த ஓவியரும் அதின்படியே வரைந்தாராம். எனவே வரைந்து முடிக்கப்பட்ட கிராம்வெல்லின் உருவப்படத்தில் சில முகப்பருக்கள் அப்பட்டமாக இருக்கும். ஆனால் இன்று சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களில், முகப்பருக்கள் நீக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் பின்னரே பிரசுரிக்கப்படுகிறது.

 “மருக்கள் மற்றும் எல்லாம்” என்ற பதம், இன்று மக்கள் தங்களை, தங்கள் தப்பிதங்கள், குறைகள், சிந்தனை என்று அனைத்தையும் உள்ளது-உள்ளது போலவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. அது சிலவேளைகளில் மிகவும் கடினம். ஆனால் நாம் நம் உள்ளான மனிதனை கூர்ந்து கவனிக்கும்போது நம் குணாதிசயங்களில் இருக்கும் சில தவறான காரியங்களைக் கண்டுபிடிக்கக்கூடும். 

தேவன் நம்முடைய ‘மருக்களை’ மன்னிக்கிறவராயிருக்கிறார். கொலோசெயர் 3ஆம் அதிகாரத்தில் மற்றவர்களை மன்னிப்பதற்கு நாம் போதிக்கப்படுகிறோம். நேசிக்கமுடியாத, கடினமான மக்களிடத்தில் கூட பொறுமையாகவும், தயவாகவும், இரக்கத்துடனும் செயல்படும்படிக்கு அப்போஸ்தலன் பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். தேவன் நம்மை மன்னிப்பது போல நாமும் மற்றவர்களை மன்னிக்கும்படியான இருதயம் உடையவரகளாய் இருக்க நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச.12-13). கிறிஸ்துவின் உதாரணத்தை முன்வைத்து, தேவன் நம்மை நேசித்தது போல மற்றவர்களை அவர்களின் ‘மருக்கள் மற்றும் எல்லாவற்றோடும்’ நேசிக்க நாம் போதிக்கப்படுகிறோம்.