தன் மகள், அவளுடைய புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது தன் தலைமுடியை இழந்ததால் அதை மறைக்க தொப்பி அணிந்திருப்பதையும், வெளியே தன்னோடு பேரங்காடிக்கு வந்திருக்கும்போதும் அதை கழற்ற அவள் சங்கடப்பட்டதையும் ப்ரீத்தி கவனித்தாள். தன் மகளுக்கு உதவ தீர்மானித்த ப்ரீத்தி, தன் நீண்ட, செழுமையான கூந்தலை மழித்து தன் மகளைப்போலவே தானும் மாறி, அவளின் வலியை அனுபவிக்க தெரிந்துகொண்டாள்.

ப்ரீத்தி தன் மகளுக்கு காட்டிய அன்பு, தேவன் தம் பிள்ளைகளுக்கு காட்டும் அன்பை பிரதிபலிக்கிறது. ஏனெனில் அவருடைய பிள்ளைகளாகிய நாம், “மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்கள்” (எபிரெயர் 2:14) என்பதினால், இயேசு நம்மைப்போல மனிதனாகி, நம்மை மரணத்தின் வல்லமையிலிருந்து மீட்கும்பொருட்டு, “மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (வச. 14). நம்மை தேவனோடு ஒப்புரவாக்க, அவர் “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது” (வச. 17).

ப்ரீத்தி, தன் மகளின் தாழ்வு மனப்பான்மையை மேற்கொள்ளுவதற்கு அவளுக்கு உதவ விரும்பினாள். எனவே அவளும் தன் மகளைப் “போலவே” மாறினாள். ஆனால் அதைக்காட்டிலும் பெரிய பிரச்சனையான மரணத்தின் பிடியிலிருந்து நம்மை மீட்க இயேசு நமக்கு உதவினார். அவர் நம்மைப்போலவே மாறி, நம் பாவத்தின் விளைவை தன் மீது ஏற்றுக்கொண்டு, நாம் மரிக்க வேண்டிய இடத்தில் அவர் மரித்து, மரணத்தை நமக்காக மேற்கொண்டார்.

நம்மைப் போல் மனிதனாக இயேசு கொண்டிருந்த விருப்பம், தேவனுடனான நம்முடைய உறவை உறுதிபடுத்தியது. அதுமட்டுமின்றி நம்முடைய கடினமான நேரங்களில் அவரை நம்பச்செய்தது. சோதனைகளையும், கஷ்டங்களையும் நாம் எதிர்கொள்கையில், பெலத்திற்கும், ஆதரவிற்கும் அவரை அண்டிக்கொள்ளலாம். ஏனெனில், அவர் “உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (வச. 18). ஒரு அன்பான தகப்பனைப் போல நம்மைப் புரிந்துகொண்டு, நம் மீது அக்கறை கொள்கிறார்.