
தேவனின் பேரன்பு
என் தோழி, வாலிப பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பரிசுத்தத்தைக் குறித்து பேசுமாறு என்னை கேட்க, நான் மறுத்துவிட்டேன். என் வாலிப பிராயத்தில் என் வீட்டை விட்டு வெளியேறிய நான், பல ஆண்டுகளாக என் ஒழுங்கீனத்தால் காயப்பட்டிருந்தேன். திருமணத்தின் பின், முதல் குழந்தை கருச்சிதைவுற்ற வேளையில், தேவன் என் கடந்தகால பாவங்களுக்காக என்னை தண்டிக்கிறார் என எண்ணினேன். இறுதியாக முப்பதாம் வயதில், என் வாழ்வை கிறிஸ்துவிடம் அர்பணித்தபோது, என் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பினேன். இருப்பினும், குற்றமனசாட்சியும் அவமானமும் என்னைத் தொடர்ந்தது. தேவனின் மகா அன்பின் ஈவை நானே முழுமையாக பெற்றுக்கொள்ளாதபோது, அவரின் கிருபையைக் குறித்து பிறரோடு நான் எப்படி பேசுவது? ஆண்டுகள் நகர, என்னை என் குற்றமனசாட்சியில் கட்டிவைத்திருந்த என்னுடைய பழைய பாவங்களைக் குறித்த பொய்களை தேவன் மாற்றினார். கிருபையாக மன்னிப்பைப் பெற்றுக்கொண்டேன்.
நம்முடைய பாடுகளினாலும், கடந்தகால பாவங்களின் விளைவுகளினாலும் நாம் புலம்புவதை தேவன் அறிவார். எனினும், தம் ஜனங்கள் விரக்தியிலிருந்து மீண்டு, பாவங்களிலிருந்து திரும்பி, அவரின் மகா கிருபை, இரக்கம், மற்றும் உண்மைத்துவத்தில் (புலம்பல் 3:19-23) நம்பிக்கை வைக்க பெலன் தருகிறார். தேவனே நம் பங்கும், நம் நம்பிக்கையும், இரட்சிப்புமாய் உள்ளார் என்று (வச. 24-26) வேதம் சொல்கிறது. அவர் நல்லவர் என்பதை நாம் நம்பப் பழகுவோம்.
உருக்கமான நம் தகப்பன் தன் வாக்குறுதிகளை நம்ப நமக்கு உதவுகிறார். அவருடைய பெரிதான அன்பை நாம் ருசிக்கையில், அவருடைய கிருபையின் நற்செய்தியை நாம் பறைசாற்றலாம்.

சேவைக்கென ஒன்றாகக் கட்டப்பட்டோம்
கிராமங்களில், களஞ்சியம் கட்டுதல் என்பது ஒரு கூட்டுமுயற்சி. விவசாயி தனியாகவோ அல்லது குடும்பமாக இணைந்தோ அதைக் கட்ட பல மாதங்கள் ஆகும். ஆனால் கிராம மக்கள் ஒன்றாய் கூடும்போது, வேலை விரைவாக முடியும். முன்னரே மரச்சாமான்களை ஆயத்தப்படுத்தி, கருவிகளை தயார் செய்துகொள்வார்கள். குறிப்பிட்ட ஒரு நாளில், மொத்த கிராம மக்களும் காலமே இணைந்து வந்து, வேலைகளை பிரித்துக்கொண்டு, ஒரு களஞ்சியத்தைக் கட்டியெழுப்ப முழுவீச்சில் செயல்படுவர். சிலசமயம் ஒரே நாளில் வேலை முடிந்துவிடும்.
திருச்சபையைக் குறித்தும், அதில் நம்முடைய பங்களிப்பைக் குறித்தும் தேவனுடைய பார்வையை விளக்க இது ஒரு நல்ல உதாரணம். “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 12:27) என வேதம் கூறுகிறது. குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை செயல்படுத்துவதற்கு, தேவன் நம் எல்லாரையும் தனித்தனியே தெரிந்துகொண்டு, நம்முடைய விசேஷமான திறமைகளில் நம்மை ஈடுபடச் செய்து, ஒன்றாய் இசைந்திருக்கும் சரீரத்தின் (எபேசியர் 4:16) பாகங்களாக வடிவமைக்கிறார். சமுதாயத்தில், நாம் “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க” (கலாத்தியர் 6:2) ஊக்குவிக்கப்படுகிறோம்.
இருப்பினும் நாம் பெரும்பாலும் தனித்தே செயல்படுகிறோம். நமக்கு தேவையானவைகளை நாமே வைத்துக்கொள்கிறோம், சூழ்நிலைகளை நாமே கையாளப் பார்க்கிறோம். அல்லது பாரத்தோடு இருக்கும் மற்றவரின் தேவையை சந்தித்து தோள் கொடுக்கத் தவறுகிறோம். ஆனால் நாம் மற்றவர்களோடு இணைந்திருப்பதையே தேவன் விரும்புகிறார். நாம் பிறர் உதவியை கேட்கும்போதும், பிறர் தேவைக்காக ஜெபிக்கும்போதும் அற்புதமான காரியங்கள் நடக்குமென தேவன் அறிந்துள்ளார்.
நாம் ஒருவரையொருவர் சார்ந்துகொள்ளும்போதே நமக்கென தேவன் வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை அனுபவிக்க முடியும். மேலும் ஒரே நாளில் களஞ்சியத்தைக் கட்டுவதுபோல, நம்முடைய வாழ்க்கையைக் குறித்த அவருடைய ஆச்சரியமான திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

சாட்சி குறியீடுகள்
“அது தெரிகிறதா?” என என்னைக் கேட்டவாறே, என் தாத்தாவின் பழைய கடிகாரத்தை பழுதுபார்த்தவர் அதிலிருந்த சிறிய, நுட்பமான ஒரு குறியீட்டை ஒளிரும் வெளிச்சத்தில் காட்டினார். “சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பழுதுபார்த்த ஒருவர் இதைக் குறித்திருக்கலாம், இதை “சாட்சிக் குறி” என்பர். இக்கடிகாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நான் அறிவதற்கு இது உதவுகிறது” என்றார்.
பழங்காலங்களில் பழுது கையேடுகள், தொழில்நுட்ப குறிகள் இல்லாததால், இதுபோன்ற நகரும் பாகங்களில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய, நுட்பமான “சாட்சி குறிகள்” அதை எதிர்காலத்தில் பழுதுபார்ப்பவர்களுக்கு உதவியது. அது நேரத்தை மிச்சமாக்கும் செயல் மட்டுமல்ல. எதிர்காலத்தில் அதை பழுதுபார்ப்பவர்களுக்கு செய்யப்படும் ஒரு தயவான உதவி.
மற்றவர்களுக்கு உதவிசெய்வதின் மூலம் இந்த உடைக்கப்பட்ட உலகத்தில் நம்முடைய “சாட்சிக் குறியை” விட்டுச் செல்லுமாறு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது. ரோம திருச்சபைக்கு பவுல் அப்போஸ்தலர், “நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்” (ரோமர் 15:2) என்று எழுதுகிறார். இதுவே நமக்கு பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவனின் (வச. 6) நல்ல உதாரணம். இது பரலோகத்திலும் பூலோகத்திலும் ஒரு நல்ல குடிமகனாய் வாழ்வதைக் குறிக்கிறது.
நம் “சாட்சி குறிகள்” அற்பமாய் தோன்றலாம், ஆனால் யாரோ ஒருவரின் வாழ்வில் முக்கிய திருப்பத்தை அது உண்டாக்கும். ஊக்குவிக்கும் வார்த்தைகள், தேவையின்போது செய்யப்படும் பண உதவி, கரிசணையோடு பிறர் குறைகளைக் கேட்பது போன்ற இரக்கச் செயல்கள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். தேவனுக்கென ஒரு குறியீட்டை நீங்கள் யாரோ ஒருவருடைய வாழ்வில் இன்று உண்டாக்க தேவன் உங்களுக்கு உதவுவாராக.

தேவனின் தூதரகம்
லூத்மில்லா என்னும் 82வயது நிரம்பிய விதவை தாயார், செக் குடியரசு நாட்டிலுள்ள தன் வீட்டை, “பரலோக இராஜ்யத்தின் தூதரகம்” என்றும், “என் வீடு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் விரிவாக்கம்” என்றும் கூறுகிறார். தேவையோடு இருக்கிற மக்களையும், சிநேகிதர்களையும் அவர் தன் வீட்டிற்கு வரவேற்று, இரக்கத்தோடும், ஜெபஆவியோடும் அவர்களுக்கான ஆகாரத்தையும், தங்குமிடத்தையும் கொடுக்கிறார். தன் வீட்டிற்கு வருபவர்களுக்காக அவர் கரிசணையோடு செய்யும் உபகாரங்களுக்கு, அவர் பரிசுத்த ஆவியானவரின் உந்துதலை சார்ந்து, அவர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கும் முறைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
ஒரு ஓய்வுநாளில் இயேசுகிறிஸ்து, பரிசேயன் ஒருவன் வீட்டில் விருந்துண்ண போகிறார். அதற்கு முரணாய் தன் வீட்டையும், இருதயத்தையும் திறந்து கொடுத்து இயேசுவுக்கு லூத்மில்லா ஊழியம் செய்கிறார். இயேசு, அந்த வேதபாரகனைப் பார்த்து, “நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” திருப்பி செலுத்துகிறவர்களை அழைக்க வேண்டாம் என்கிறார் (லூக்கா 14:13). அந்த பரிசேயன், தன்னுடைய பெருமையை வெளிக்காண்பிப்பதற்காய் இயேசுவை அழைத்திருக்கிறான் (வச.12) என்பதை இயேசுவின் பதிலிலிருந்து நாம் அறியலாம். ஆனால், “தேவனுடைய அன்பையும், ஞானத்தையும் பிரதிபலிக்கும் கருவியாய்” லூத்மில்லா, பல ஆண்டுகளாய் மக்களை தன் வீட்டிற்கு வரவேற்று உபசரிக்கிறார்.
மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்வது, “தேவனுடைய இராஜ்யத்தின் தூதுவராய்” இருக்க ஒரு வழி. மற்றவர்களுக்கு தங்க வசதி செய்துகொடுக்க முடியாவிட்டாலும், அவர்களின் தேவையை முன்னிறுத்தி நமக்கேற்ற வழிகளில் அவர்களுக்கு உதவலாம். இன்று நம் உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்தை எவ்வாறு விரிவடையச் செய்யலாம்?
தேவன் கறைகளைக் கழுவுகிறார்
நாம் குடிக்கும் பானங்கள் சிந்தி கறைபடியும் நம்முடைய துணியானது அதுவாகவே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும்? பிபிசி செய்தியின்படி, சீன ஆய்வளார்கள் துணியின் மீது பூசப்படும் ஒருவிதமான பூச்சை கண்டுபிடித்தனர், “புறஊதா விளக்குகளில் காண்பிக்கும்போது, பருத்தி உடைகள், கறைகளையும், துர்நாற்றத்தையும் தானே சுத்திகரித்துக் கொள்ளுமாம்.” தானே சுத்திகரித்துக் கொள்ளும் துணிகளின் பாதிப்புகள் உங்களுக்குத் தெரிகிறதா?
தானே சுத்திகரித்துக் கொள்ளும் மேற்பூச்சு, கறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், கறைபடிந்த உள்ளத்தை தேவனால் மட்டுமே சுத்திகரிக்க முடியும். பண்டைய யூதேயா ஜனங்கள் கறை படிந்தவர்களாய், விக்கிரக ஆராதனைக்கு தங்களை உட்படுத்தி, தேவனுக்கு புறமுதுகைக் காட்டினதினால் தேவன் அவர்கள் மீது கோபங்கொள்ளுகிறார் (ஏசாயா 1:2-4). அத்துடன் அவர்கள் தங்களை சுத்திகரித்துக் கொள்வதற்கு பலிகளை செலுத்தி, தூபங்காட்டி, பல்வேறு ஜெபங்களை ஏறெடுத்து, சபைக்கூடி வருதலையும் ஆசரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றனர் (வச.12-13). அதற்கு தீர்வு, அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி, தங்கள் உள்ளத்தில் இருக்கும் பாவகறைகளை பரிசுத்தமும் அன்புமான தேவனிடத்தில் கொண்டு வரவேண்டும். அவருடைய கிருபை அவைகளை சுத்திகரிக்கும். அவைகள் “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” (வச.18).
நாம் பாவம் செய்யும்போது, அதுதானாகவே தன்னை சுத்திகரித்துக்கொள்ளாது. மனந்திரும்புதலின் இருதயத்தோடும், தாழ்மையோடும் நம்முடைய பாவத்தை நாம் அறிக்கையிட்டு அவற்றை சுத்திகரிக்கும் தேவனுடைய பரிசுத்த ஒளியிடத்தில் சமர்பிக்க வேண்டும். அவைகளிலிருந்து விடுபட்டு தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும். நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கும் வல்லமை கொண்ட ஒரே தேவன், நமக்கு மன்னிப்பை அருளி, அவரோடு ஒப்புவரவாகும்படி செய்வார்.