விக்டர், ஆபாச படங்களுக்கு அடிமையானான். அவன் நண்பர்கள் பலர் அத்தகைய படங்களை பார்ப்பதுண்டு. இவனும் நேரத்தை போக்க எண்ணி. அதில் சிக்கிக்கொண்டான். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறென்பதை இப்போது உணர்கிறான், அவன் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தான், மேலும் அவன் மனைவியும் அவனைப் பிரிந்தாள். எனவே, இனி அதை பார்ப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதால், அவைகளைப் பார்க்கமாட்டான். ஆனாலும், இது மிகவும் தாமதமோ என்று சந்தேகிக்கிறான். அவன் திருமண வாழ்வு மீட்கப்படுமா? அவன் முற்றிலுமாய் விடுதலைப்பெற்று, மன்னிக்கப்பட முடியுமா?
எல்லோரும் இதைச் செய்கிறார்கள். இதிலென்ன தவறு?.என்று நம் எதிரியாகிய பிசாசு, சோதனைகளை அற்ப விஷயங்களைப்போல கொண்டுவருவான். ஆனால் அவனுடைய திட்டங்களில் நாம் பிடிபட்ட மாத்திரத்தில், அவன் நம்மை விழத்தள்ளுகிறான். ‘இது மிகவும் தாமதம்! நீ வெகு தூரம் சென்றுவிட்டாய்! இப்போது உனக்கு நம்பிக்கை ஏதுமில்லை!’ என்றும் கூறுகிறான்.
நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடும்போது நம்மை வீழ்த்த என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ, பிசாசு அதையெல்லாம் சொல்வான். ஆனால் இயேசுவோ, “அவன் (பிசாசு) ஆதிமுதற் கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (யோவான் 8:44) என்கிறார்.
பிசாசு பொய்யனென்றால், நாம் அவனுக்கு செவிசாய்க்க கூடாது. நம்முடைய பாவம் பெரிய விஷயமல்ல எனும்போதும், நமக்கு இனி நம்பிக்கையே இல்லை எனும்போதும், நாம் செவிகொடுக்க கூடாது. இத்தீமையானவனின் வார்த்தைகளை புறக்கணிக்கவும், மாறாக அவர் சத்தத்திற்கு செவிகொடுக்கவும் இயேசு உதவிசெய்வாராக. “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (வச. 31-32) என்னும் அவருடைய வாக்குறுதியில் நாம் ஆறுதலடைவோம்.