என் மகளுடைய ஆரம்ப நாட்களில், அவள் பார்த்த பொருட்களின் பெயர்களையெல்லாம் நான் அவளுக்கு சொல்லிக்கொடுப்பது வழக்கம். அவளுக்கு தெரியாத ஒரு புதிய பொருளைத் தொடச்செய்து, அந்த பொருளின் பெயரையும் அவளுக்குக் கற்றுக்கொடுப்பேன். குழந்தையாயிருந்தபோது முதன்முறையாக அவள் “அம்மா, அப்பா” என்று உச்சரிப்பாள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவள் “டைட்” என்ற ஒரு மிட்டாயின் பெயரையே முதன்முறையாக உச்சரித்தாள். அதை அவள் உச்சரிக்கும்போது அவளுக்கு நான் சமீபத்தில் கற்றுக்கொடுத்திருந்த வெளிச்சம் என்று பொருள்படும் “லைட்” என்ற ஆங்கில வார்த்தையையே தவறி உச்சரித்தாள்.
வெளிச்சம் என்பது, தேவன் வேதத்தில் பேசின முதல் வார்த்தைகளில் ஒன்றாக நமக்காக பதிவாகியுள்ளது. தேவ ஆவியானவர் இருளின்மேல் அசைவாடி ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்த பூமியில், “வெளிச்சம் உண்டாகக்கடவது” (ஆதியாகமம் 1:3) என்று தேவன் தம் சிருஷ்டிப்பிற்கு வெளிச்சத்தை அறிமுகப்படுத்துகிறார். அதை அவர் நல்லது என்றும் சொன்னார். வேதம் அதை முழுமையாய் ஆமோதிக்கிறது: தேவனுடைய வார்த்தை பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான் (சங்கீதம் 119:130). “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றும், தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஜீவ ஒளியைத் தருவதாகவும் இயேசு அறிவிக்கிறார் (யோவான் 8:12).
சிருஷ்டிப்பு பணியில், தேவன் முதலாவது வெளிச்சம் உண்டாகவே பேசினார். அவருடைய வேலையை செய்வதற்கு வெளிச்சம் தேவை என்பதினால் அல்ல; மாறாக, அது நமக்காக படைக்கப்பட்டது. அவரைப் பார்ப்பதற்கும், அவர் கைவண்ணத்தை நம்மை சுற்றியுள்ள சிருஷ்டியில் பார்க்கவும், தீமையிலிருந்து நன்மையை அடையாளப்படுத்துவதற்கும், மேலும் இந்த பரந்த உலகில் இயேசுவை பின்பற்றுவதற்கும் நமக்கு ஒளி அவசியப்படுகிறது.