
முடிவில்...
அநேக ஆவிக்குரிய கூட்டங்களுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தனிமையான இடத்தில் ஜெபித்தும், என் ஜீவியத்தை சுயபரிசோதனை செய்வதும் ஆழமாய் எனக்குதவியது. நிகழ்ச்சியின்போது, பங்கேற்பாளர்களிடம் சிலசமயம் ஒரு சுயபரிசோதனை ஆய்வு நடத்துவதுண்டு. அதாவது, “நீங்கள் மரித்துவிட்டீர்கள், உங்கள் கண்ணீர் அஞ்சலி விளம்பரம் பத்திரிக்கையில் பிரசுரமாகிவிட்டது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்விளம்பரம் எவ்வாறிருக்க விரும்புவீர்கள்?” என்று கேட்பதுண்டு. அதின் பலனாக சிலர் தங்கள் வாழ்வை சிறப்பாய் முடிக்கும்பொருட்டு, வாழ்வின் முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டதுமுண்டு.
2 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் அப்போஸ்தலன் பவுல் இறுதியாக எழுதிய வார்த்தைகளை பதிவுசெய்துள்ளது. பவுல் அறுபதைத்தான் கடந்திருந்தார், இதற்கு முன்னமே மரணத்தை சந்தித்திருந்தார். இருப்பினும், இப்போது தாம் மரணத்தை நெருங்குவதை அவர் உணருகிறார் (2 தீமோத்தேயு 4:6). இனி மிஷனரி பயணம் கிடையாது, திருச்சபைகளுக்கு நிருபம் எழுதப்போவதும் கிடையாது. அவர் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (வச.7) என்கிறார். அவர் குறைவுள்ளவராயிருப்பினும் (1 தீமோத்தேயு 1:15-16), எந்தளவிற்கு தேவனுக்கும், சுவிசேஷத்திற்கும் தான் உண்மையாய் வாழ்ந்துள்ளார் என்பதை நினைவுகூருகிறார். பின்னர், சீக்கிரமே அவர் இரத்தசாட்சியாய் மரித்ததாக பாரம்பரியம் கூறுகிறது.
நம் இறுதி நாட்களைக் குறித்து சிந்திப்பது, நம்முடைய தற்போதைய வாழ்விற்கு தெளிவை உண்டாக்கும் ஒரு வழி. பவுலின் வார்த்தைகள் பின்பற்றுவதற்கு ஏற்ற நல்ல ஒரு மாதிரி. நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். ஓட்டத்தை முடியுங்கள். விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நம் ஜீவியத் தேவைக்காகவும், ஆவிக்குரிய போராட்டங்களை மேற்கொள்ளவும், ஓட்டத்தை நேர்த்தியாய் முடிக்கவும், கர்த்தரை சார்ந்துகொண்டு அவருடைய வழிகளில் உறுதியாய் நின்றிருக்கிறோமா என்பதே கடைசியில் பொருட்படுத்தப்படும்.

ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு
அமினா, ஈராக் அகதி. ஜோசப், பிறப்பால் அமெரிக்கர். இருவரும் அரசியலில் எதிரெதிர் கட்சிகளின் சார்பில் அரசியல் போராட்டத்தில் பங்கேற்றனர். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் அரசியலில் மோதிக்கொண்டால், பெரிய பகை உண்டாகும் என்றறிவோம். ஒரு சிறிய கலவரக்காரக் கூட்டம் ஜோசப்பின் சட்டையை தீயிட முயற்சிக்க, அதைப் பார்த்த அமினா உடனே அவரைப் பாதுகாக்க ஓடினார். பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த ஜோசப், “இனி நாங்கள் மக்களாக பிரிந்திருப்பது இயலாதது, ஏனெனில் இச்செயலில் எங்கள் இருவருக்குமே (இரு கட்சியினருக்கும்) உடன்பாடில்லை"” என்று கூறினார்.
பிறரோடு நமக்கு நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், தவிர்க்க இயலாத உண்மையான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு நம்மை ஒன்றிணைக்கிறது. நாமெல்லோருமே தேவனால் உண்டாக்கப்பட்டு, மனிதம் எனும் ஒரே குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். பாலினம், சமுதாய அந்தஸ்து, இனம் மற்றும் அரசியல் என்று பல வேறுபாடுகள் நமக்குள் நிலவினாலும் தேவன் நம் அனைவரையும் “தம்முடைய சாயலாக” சிருஷ்டித்தார் (1:27). உண்மை எதுவானாலும், தேவன் என்னிலும் உன்னிலும் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதே மறுக்கமுடியாத உண்மை. மேலும் அவருடைய இவ்வுலகை நன்மையால் நிரப்பி, ஆண்டுகொள்ளவும் நாம் பகிரப்பட்ட நோக்கம் பெற்றுள்ளோம் (வச. 28).
நாம் தேவனில் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை மறக்கையில், நமக்கும் மற்றவர்களுக்கும் தீங்குண்டாக்குகிறோம். ஆனால் தேவனின் கிருபையிலும், உண்மையிலும் ஒன்றுபடுகையில், நன்மையான, செழிப்பான உலகை ஸ்தாபிக்கும் அவருடைய சித்தத்தில் பங்கேற்கிறோம்.

மரத்தை விற்கும் பழங்கள்
ஒரு தோட்ட முதலாளி பேரி மரங்களை விற்க முற்பட்டார். அதற்கு பல முறைகளைக் கையாண்டார். அவற்றின் செடிகளை வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கவேண்டுமா? பேரி மரங்ளின் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியை படங்களை காட்சிப்படுத்த வேண்டுமா? அவர் 'பேரி' மரங்களை விற்பனை செய்வதை கடைசியாகத்தான் உணர்ந்தார். இவை அதிருசியான, மணமுள்ள, ஆரஞ்சு நிற, மென்மையான தோல் கொண்ட பேரி பழங்களை தருபவை. இவைகளை விற்பதற்கு உகந்த ஒரு வழி: பழுத்த பழத்தை எடுத்து, அதை வெட்டி, அதின் சாறு ஒழுக-ஒழுக, ஒரு துண்டை அரிந்து வாடிக்கையாளருக்கு கொடுப்பதே. அந்த பழத்தை அவர்கள் ருசித்தவுடன், அந்த மரத்தை அவர்கள் வாங்குவார்கள்.
அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் (கலாத்தியர் 5:22-23). எனும் ஆவிக்குரிய கனியினால், தேவன் தன் விசுவாசிகளில் வெளிப்படுகிறார்: கிறிஸ்துவை நம்புகிறவர்கள் இக்கனியைப் பிரதிபலிக்கையில், அக்கனியை மற்றவர்களும் விரும்புவார்கள். அதின் ஆதாரத்தையும் அறிய முற்படுவர்.
நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் உள்ளார்ந்த தாக்கமே இக்கனியின் வெளிப்பாடு. பிறருக்கு நம் தேவனை பிரதிபலிக்க உதவுவதே இக்கனிதான். பச்சை இலைகளுக்கு மத்தியில் இந்த பேரிக் கனிகள் பிரகாசமாய் தெரிவதுபோல, “இங்கே உணவு இருக்கிறது! இங்கே ஜீவனிருக்கிறது! உங்களுடைய பெலவீனத்திலிருந்தும் சோர்விலிருந்தும் விடைபெறுவதற்கு இங்கு வாருங்கள், வந்து தேவனை சந்தியுங்கள்” என்று, ஆவியின் கனி பசியோடிருக்கும் உலகை அழைக்கிறது.

சைமன் வீட்டில் புத்துணர்வு
சைமன் வீட்டிற்கு போனதை என்னால் மறக்கமுடியாது. கென்யாவிலுள்ள நியாஹூருருவின் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் நீலவானின் கீழிருந்த அவனுடைய எளிமையான வீட்டிற்குச் சென்றோம். அழுக்கான தரையும், விளக்கு வெளிச்சமும் அவன் ஏழ்மையை பிரதிபலித்தன. என்ன சாப்பாடு என்பதையும் என்னால் நினைவுகூர முடியவில்லை. ஆனால், எங்களை விருந்தாளிகளாய் வரவேற்ற சைமனின் முகத்திலிருந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கமுடியாது. அவனுடைய சுயநலமில்லா, மனதைத் தொட்டு, புத்துணர்வாக்கும் அந்த விருந்தோம்பல், இயேசுவையே எங்களுக்கு ஞாபகப்படுத்தியது.
1 கொரிந்தியர் 16:15-18ல், பவுல் அப்போஸ்தலன் பரிசுத்தவான்களைப் பராமரிக்கும் ஸ்தேவானுடைய குடும்பத்தைக் குறித்துக் கூறுகிறார் (வச.15). அவர்கள் “பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்று” (வச.15) குறிப்பிடுகிறார். அவர்கள் பொருள் உதவிகளை அவருக்கு செய்திருந்தாலும் (வச.17), “அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்” (வச.18) என்றதின் தாக்கத்தை பவுல் விவரிக்கிறார்..
மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுகிற வாய்ப்புகள் கிட்டும்போது ஆகாரம், தங்குமிடம் ஆகியவற்றிற்கு சூழலுக்கேற்ப முக்கியத்துவம் தருகிறோம். நல்லது. என்றாலும், அவை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது. மறக்கமுடியாத விருந்தோம்பல் மிகவும் முக்கியமான ஒன்று என்றாலும், ஒருவரை முழுவதுமாய் போஷிக்க மற்றும் உற்சாகப்படுத்த உணவோ, பொருட்களோ போதுமானதல்ல. மெய்யான உற்சாகம் என்பது இருதயத்திலிருந்து வழிந்தோடும் தெய்வீகத்திற்குரியது. அது மற்றவர்களுடைய இருதயத்தை சென்றடைகிறது. சாப்பிட்டு பல காலங்கள் கடந்த பின்பும் அது ஆத்துமாவை போஷித்துக்கொண்டேயிருக்கிறது.
