விட்டு விடுவதற்கான பலம்
ஒரு காலத்தில் உலகின் வலிமையான மனிதராக அறியப்பட்ட அமெரிக்க பளுதூக்கும் வீரர் பால் ஆண்டர்சன், 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய கடுமையான காதுவலி மற்றும் 103 டிகிரி காய்ச்சலின் மத்தியிலும் உலக சாதனை படைத்தார். இவருடைய முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. முன்னணி வீரர்களுக்கு பின்தங்கிய நிலையில் இருந்த இவர், தங்கப் பதக்கத்தை வென்று புதிய ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தினார்.
இந்த பருத்த விளையாட்டு வீரர் நம்மில் பலவீனமானவர்கள் செய்யக்கூடிய ஒன்றையே செய்தார். தன்னுடைய பெலத்தை விட்டுவிட்டு, தேவனுடைய புதிய பெலத்திற்காய் ஜெபித்தார். “இது பேரம்பேசுவது அல்ல. எனக்கு உதவி தேவைப்பட்டது” என பின்பாக அவர் தெரிவித்தார். தன்னுடைய கடைசி முயற்சியில், அவர் 413.5 பவுண்டு (187.5 கிலோ) எடையுள்ள பளுவை தன் தலைமட்டும் தூக்கினார். கிறிஸ்துவின் அப்போஸ்தலரான பவுல், “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று எழுதுகிறார். பலவீனத்திலே தேவனுடைய பலம் பூரணமாய் விளங்கும் (வச. 9) என்பதை பவுல் அறிந்து, ஆவிக்குரிய பெலனைக் குறித்து இவ்வாறு பேசுகிறார்.
ஏசாயா தீர்க்கதரிசி, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசாயா 40:29) என்று வலியுறுத்துகிறார். அந்த பலத்தை பெற்றுக்கொள்ளும் வழி எது? இயேசுவுக்குள் அடைக்கலம் புகுதலாகும். யோவான் 15:5இல், “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு சொல்லுகிறார். விளையாட்டு வீரர் ஆண்டர்சன், “உலகத்தின் மிக வலிமையான நபர் கூட கிறிஸ்துவின் வல்லமையில்லாமல் ஒன்றும் செய்யக்கூடாது” என்று அடிக்கடி சொல்வது வழக்கம். அதனால் நம்முடைய மாயையான பலத்தின் மீதான நம்பிக்கையை விட்டு விட்டு, நிலையான தெய்வீகத் துணையை சார்ந்துகொள்வது அவசியம்.

தேவனை நேசித்து சார்ந்து கொள்ளுதல்
சுனில், வேடிக்கையான, புத்திசாலித்தனமான, எல்லோராலும் விரும்பப்படத்தக்கவன். ஆனால் அவன் மனவிரக்தியில் இருந்தது யாருக்கும் தெரியாமற்போயிற்று. அவன் தன்னுடைய 15ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவனுடைய தாயாராகிய பிரதீபா, “நாம் அதிகம் விரும்பும் ஒருவர் இப்படிச் செய்ததை கிரகிப்பது மிகவும் கடினமாயிருக்கிறது. சுனில்... அந்தத் தவறான முடிவிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவில்லை” என்று கூறுகிறார். பிரதீபா, பல நாட்கள் தனிமையில் தன்னுடைய வேதனையை தேவனிடத்தில் ஊற்றியிருக்கிறாள். தன்னுடைய மகனுடைய தற்கொலைக்குப் பின்னர், “ஒரு வித்தியாசமான துயரத்தை நான் அனுபவித்தேன்” என்று சொல்லுகிறாள். ஆனால், அவளும் அவள் குடும்பத்தினரும், அந்த மீளா துயரத்தின் மத்தியிலும், தேவனை சார்ந்து கொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டனர். தற்போது, மனச்சோர்வுக்குள்ளாகும் நபர்களைத் தேடி அவர்களை நேசிக்கவும், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உதவுகின்றனர்.
“நேசித்து சார்ந்து கொள்” என்பதே பிரதீபாவின் இலட்சியமாகும். இதே கருத்தை, பழைய ஏற்பாட்டில், ரூத்தின் சரித்திரம் எடுத்துரைக்கிறது. நகோமி தன்னுடைய கணவனையும் இரண்டு குமாரர்களையும் இழந்து நிற்கதியாய் நின்றாள். அவள் குமாரனில் ஒருவனைத்தான் ரூத் மணந்திருந்தாள் (ரூத் 1:3-5). கசப்பானவளாய் விரக்தியிலிருந்த நகோமி, ரூத்தை அவளுடைய இனத்தாரிடத்திற்கு திரும்பிப் போய் சுகமாயிருக்கும்படி. கேட்டுக்கொண்டாள். தன் கணவனை இழந்த விரக்தியிலிருந்த ரூத்தோ, தன் மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டு, அவளைப் பராமரித்தாள் (வச. 14-17). இருவரும் நகோமியின் சொந்த ஊரான பெத்லெகேமுக்கு வந்தனர். ரூத்துக்கு அது அந்நிய தேசமாயிருந்தது. ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் அன்பாயிருந்து, தேவனை சார்ந்திருந்தனர், தேவன் அவர்களின் தேவையை சந்தித்தார் (2:11-12).
நம்முடைய துயரங்களில், தேவனுடைய அன்பு நமக்கு நிலையானதாக இருக்கிறது. நாம் எப்போதும் தேவனை சார்ந்து கொள்ள அவர் நம்மோடிருக்கிறார். தேவன் மற்றவர்களை தேற்றவும் நம்மை பெலப்படுத்துவார்.
நமக்கு இயேசுவின் உதவி தேவை
என்னுடைய அப்பா யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்று நான் நம்பிய அந்த நாள் வந்தது. அவருடைய வலிமையையும் உறுதியினையும் ஒரு சிறுவனாய் நான் பார்த்திருக்கிறேன். நான் வளரும் தருவாயில் அவர் கீழே விழுந்து அவருடைய இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு தான், அவரும் சாதாரணமானவர் என்பதை உணர்ந்தேன். நான் படுத்த படுக்கையான என் அப்பாவை கழிவறைக்கு அழைத்துச் செல்வது, உடைகள் மாற்றுவதில் உதவி செய்வது, தண்ணீரை அவருக்குக் குடிக்கக் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்தேன். அது என்னுடைய அப்பாவுக்கு மிகுந்த விசனமாயிருந்தது. அவர் தானாகவே முன்வந்து சில காரியங்களை செய்ய முயற்சித்தார். ஆனால் அது முடியாததால், “நீ இல்லாமல் என்னால் ஒன்னும் செய்யமுடியவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். கடைசியில், அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவர் விடுபட்டார். ஆனால் அந்த அனுபவம் எங்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. நமக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதே அந்த பாடம்.
மற்றவர்களின் உதவி எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு இயேசுவும் நமக்கு அவசியம். யோவான் 15ஆம் அதிகாரத்தில் திராட்சைச் செடியை குறித்தும் அதின் மீது படர்ந்திருக்கும் கொடிகளைக் குறித்தும் நாம் வாசிக்க முடியும். அது தேற்றக்கூடிய உதாரணமாய் அமைந்தாலும், நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாய் இருக்கிறது. “எனக்கு உதவி தேவையில்லை” என்ற நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை உடைக்கிறதாயிருக்கிறது. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (வச. 5) என்று இயேசு தெளிவாய்ச் சொல்லுகிறார். ஒரு சீஷனுக்கு அவசியமான ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம் (கலாத்தியர் 5:22) போன்ற கனிகளைக் குறித்து இயேசு இவ்வாறு பேசுகிறார்.
இயேசு நம்மை கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவே அழைக்கிறார். அவரை நாம் முழுமையாய் சார்ந்துகொள்வோமாகில், பிதாவை மகிமைப்படுத்தக் கூடிய வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் (யோவான்15:8).


உக்கிராணத்துவ வாய்ப்பு
விடுமுறை நாட்களில் நானும் எனது கணவரும் எலியட் கடற்கரையோரமாய் நடந்துகொண்டிருக்கையில், அங்கே ஆமை முட்டைகள் கூடையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். அதை வைத்திருந்த நபர், ஒவ்வொரு நாள் இரவும் ஒரு தன்னார்வ குழுவினர்களைக் கூட்டிக்கொண்டு, கடல் ஆமைகள் இடும் முட்டைகளை கவனமாய் சேகரிப்பதாகச் சொன்னார். முட்டையிலிருந்து வெளிவரும் கடல் ஆமைக் குஞ்சுகள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அச்சுறுத்தலினால் உயரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. “என்னதான் நாங்கள் முயற்சி செய்தாலும்,” ஆயிரத்தில் ஒரு ஆமைதான் முதிர்ச்சி பருவத்தை எட்டுகிறது என்றும் அவர் சொன்னார். ஆனால் அதற்காக அவர் சோர்ந்துபோகவில்லை. அந்த ஆமை இனத்தைப் பாதுகாக்கும் அவரது அயராத முயற்சி, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. தற்போது நான் கடல் ஆமையின் படம் போட்ட ஒரு பேட்ஜ் அணிந்திருக்கிறேன். அது தேவனுடைய படைப்புகளை பாதுகாக்கவேண்டிய என்னுடைய பொறுப்பை எனக்கு நினைவூட்டுகிறது.
தேவன் உலகத்தை உண்டாக்கியபோது, அனைத்து உயிரினங்களும் அதில் வாழுவதற்கேதுவான ஒன்றாகவே அதை உண்டாக்கினார் (ஆதி. 1:20-25). தமது சாயலாக மனிதனை உண்டாக்கியபோது, “அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்” (வச. 26) என்று தன் நோக்கத்தை பிரதிபலித்தார். தேவனுடைய பிரம்மாண்டமான படைப்புகளை நிர்வகிக்கக்கூடிய ஓர் உக்கிராணத்துவப் பொறுப்பை தேவன் நமக்கு அருளியிருக்கிறார்.

ஜெபம் பூமியை அசைக்கும்போது
டாக்டர் கேரி கிரீன்பர்க் என்பவர் உலகத்தில் இருக்கும் கடற்கரை மணல்களை மிக பெரிதாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார். மண்ணில் கலந்திருக்கும் துகள்கள், கிளிஞ்சல்கள், பவளத் துகள்கள் ஆகியவற்றில் உள்ள பலவிதமான வண்ணங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தது. நாம் கண்களில் காணும் மணலை விட அநேகக் காரியங்கள் அதில் இருப்பதாக அவர் கண்டறிந்தார். மணலைக் குறித்து கண்டறியும் கனிம பகுப்பாய்வில் (arenology), மண்ணரிப்பு மற்றும் அதின் கரையோர பாதிப்புகள் ஆகியவைகளை கண்டறிவர். சிறிய மணல்துகள் கூட மிக அரிய தகவலைக் கொடுக்க முடியும்.
அதேபோன்று, ஒரு சிறிய ஜெபம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வரப்போகிற தேவனுடைய இராஜ்யத்தில் ஜெபத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி வேதம் வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தல் 8ஆம் அதிகாரத்தில், யோவான், “சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும்” செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கத்தை கையில் பிடித்திருந்த தேவ தூதனைக் காண்கிறார். “பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின” (வச. 3,5).
நெருப்பினாலும் ஜெபத்தினாலும் நிறைக்கப்பட்ட தூபவர்க்கத்தை அந்த தூதன் பூமியிலே கொட்டியபோது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள், கடைசி நாட்களையும் கிறிஸ்துவின் வருகையையும் அறிவிக்கும் எக்காளத்தை ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள் (வச. 6).
சிலவேளைகளில் நம்முடைய ஜெபம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நாம் நம்ப மறுக்கலாம். ஆனால் தேவன் அவற்றை தவறவிடுவதில்லை. அதை அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நோக்கத்திற்கு பயன்படுத்துகிறார். நாம் அற்பமானது என்று எண்ணுகிற சிறிய ஜெபத்தை, அவர் பூமியை அசைக்கும் வலிமையுள்ளதாய்ப் பார்க்கிறார்!