
அறிவிக்கப்படாத ஐசுவரியம்
செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே, ஒரு சுற்றுப்பாதையில், டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு சிறிய கோள் தெரிந்தது. அங்கு விலையேறப்பெற்ற தங்கம், இரும்பு, நிக்கல் மற்றும் பிளாட்டினம் கிடைக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பூமிவாசிகள் தற்போதைக்கு இந்த வளத்தை அனுபவிக்கவில்லை. அதில் உள்ளப் பாறையை ஆய்வுசெய்ய ஓர் ஆய்வுக்குழுவை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
நமக்கு எட்டாத விலையேறப்பெற்றவைகளை நினைக்கும் போது ஆசையைத் தூண்டுகிறதாகவும் அதே நேரத்தில் சோர்வடையச் செய்கிறதாகவும் இருக்கிறது. ஆனால் நிச்சயமாய் ஒருநாள், விஞ்ஞானிகள் அந்த கிரகத்தில் இருக்கும் பொக்கிஷங்களை கண்டெடுப்பர். நாம் கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கும் பொக்கிஷங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? அதை நோக்கிச் செல்கிறோமா?
முதலாம் நூற்றாண்டின் ரோம திருச்சபைக்கு, பவுல், தேவனோடுள்ள உறவின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பொக்கிஷங்களைக் குறித்து குறிப்பிடுகிறார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” (ரோமர் 11:33). ஜேம்ஸ் டென்னி என்னும் வேத நிபுணர், இந்தப் பொக்கிஷங்களை, “உலகத்தின் பெரிய தேவையை சந்திக்கும் தேவ அன்பாகிய பொக்கிஷம்” எனக் குறிப்பிடுகிறார்.
தங்கத்தைக் காட்டிலும், வெகு தூரத்திலிருக்கும் கோள்களைக் காட்டிலும், இதுவல்லவா தேவையில் இருப்போருக்கு வேண்டும்? பரிசுத்த ஆவியானவருடைய துணையோடு தெய்வீக ஞானம் என்னும் பொக்கிஷத்தை நாம் வேதத்தில் தோண்டியெடுக்க வேண்டும். இந்தப் பொக்கிஷங்களை தோண்டி, தேவனை இன்னும் அறிந்துகொள்வதற்கு தேவன் நமக்கு உதவிசெய்வாராக.

துணிச்சலாய் நிற்பது
இந்திய வரலாற்றில் பெண்களுக்கு அநேக வன்கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பண்டித ரமாபாய் வெட்கப்பட்டு ஒளிந்துகொள்ளாமல், துணிச்சலாய் முன்வந்து, ஆரிய மகளிர் சமாஜத்தை நிறுவினார். பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சமுதாயத் தடைகள் மத்தியிலும் பெண் கல்விக்காகவும், மகளிர் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டார். அவர் ஒருமுறை, “தேவனோடு முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் பயமோ, இழப்போ, வேதனையோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.
தன் ஜனத்தின் மீது நடத்தப்படவிருந்த இனப்படுகொலைக்கு விரோதமாக பேசுவதற்கு பெர்சிய தேசத்தின் அரசியான எஸ்தர் தயங்கினாள். அவள் பேசுவதற்கு தயங்கினால் அவளும் அவளுடைய குடும்பமும் அழிந்துபோகும் என அவளுடைய மாமன் அவளை எச்சரித்தான் (எஸ்தர் 4:13-14). இது துணிச்சலாய் செயல்படவேண்டிய தருணம் என்று எண்ணி, “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்” (வச. 14) என்று அறிவித்தான். அநீதிக்கு விரோதமாய் குரல் கொடுப்பதா? நமக்கு பிரச்சனை கொடுக்கிறவர்களை மன்னிப்பதா? இதுபோன்ற சவாலான தருணங்களில், தேவன் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது (எபி. 13:5-6). நம்மை மிரட்டும் தருணங்களில் நாம் தேவனின் உதவியை நாடுவோமாகில், “பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை” கொடுத்து நம்மை முடிவுபரியந்தம் நடத்த தேவன் போதுமானவராயிருக்கிறார் (2 தீமோத்தேயு 1:7).

தாழ்மையே சத்தியம்
தேவன் தாழ்மையை ஏன் கனப்படுத்துகிறார் என்னும் கேள்விக்கு பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விசுவாசி ஆவிலாவின் தெரசா உடனே பதில் கண்டுபிடித்தார்: ஏனென்றால், தேவன் என்பது உயர்வான உண்மை, அதேபோல் தாழ்மையும் உண்மை... நமக்குள் இருக்கும் நல்லவைகள் எதுவுமே நம்மிடமிருந்து வருவதில்லை. மாறாக, தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப் போல, கிருபையின் தண்ணீரண்டையிலிருந்தும், நம்முடைய படைப்புகளுக்கு உயிர்கொடுக்கும் சூரியனிலிருந்தும் தான் நம் உழைப்பிற்கு பலன் கிடைக்கிறது. தெரசா, “தாழ்மையே ஜெபத்தின் அஸ்திபாரம்; ஜெபத்தில் எந்த அளவிற்கு நம்மை தாழ்த்துகிறோமோ, அந்த அளவிற்கு தேவன் நம்மை உயர்த்துவார்” என்று ஜெபமே அந்தத் மனத்தாழ்மையை நமக்கு கொடுக்கும் என அறிவுறுத்துகிறார்.
தாழ்மையைக் குறித்த தெரசாவின் வார்த்தைகள் யாக்கோபு 4ஆம் அதிகாரத்தின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது. அதில் யாக்கோபு, தேவ கிருபையை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு விரோதமான பெருமையைக் குறித்து எச்சரிக்கிறார் (வச. 1-6). பேராசை, மனச்சோர்வு, தொடர் பிரச்சனைகள் ஆகியவைகளால் சூழப்பட்ட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுபெறுவதற்கு ஒரே வழி, நம்முடைய பெருமையை அகற்றி, மனத்தாழ்மையினால் நம்முடைய இருதயத்தை நிறைப்பதே என்று யாக்கோபு வலியுறுத்துகிறார். இன்னும் தெளிவாய் சொன்னால், “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 10).
கிருபையின் தண்ணீரண்டையில் நாம் நாட்டப்படுவோமாகில், பரத்திலிருந்து வரும் ஞானத்தினால் நாம் போஷிக்கப்படுவது நிச்சயம் (3:17). அவரில் நிலைத்திருந்தால் மாத்திரமே நாம் சத்தியத்தில் பலப்பட முடியும்.

சரியான பாதையைக் கண்டறிதல்
பதினாறு வயது நிரம்பிய பிரேசில் தேசத்தின் ஸ்கேட்போர்ட் விளையாட்டு வீரர் பெலிப் கஸ்டாவோ, “உலகத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கேட்போர்ட் வீரர்களில் ஒருவராக” மாறுவார் என யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அவனுடைய தந்தை, தன்னுடைய மகன் சறுக்குப் பலகை விளையாட்டை முறையாய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கான பணம் இல்லை, ஆகையால் அவர் தன்னுடைய காரை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிக்கு தன்னுடைய மகனை அழைத்துச் சென்றார். கஸ்டாவோ வெற்றிபெறும் வரை யாருக்கும் அவனைப்பற்றித் தெரியாது. அவன் பெற்ற வெற்றி அவனுக்கு ஒரு பிரமாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
கஸ்டாவோவின் தகப்பனுக்கு அவர் மகனுடைய இருதயத்தையும் ஆர்வத்தையும் கண்டுபிடிக்கும் திறன் இருந்தது. கஸ்டாவோ சொல்லும்போது, “நான் தகப்பனாய் மாறும்போது, என் தகப்பன் எனக்கு செய்ததில் 5 சதவிகிதமாவது செய்ய விரும்புகிறேன்” என்று சொன்னான்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆர்வம், ஆற்றல் மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைக் கண்டுபிடித்து, தேவன் அவர்களை எதற்காய் ஏற்படுத்தியிருக்கிறார் எனும் பாதைக்கு நேராய் அவர்களை வழிநடத்தும்படி நீதிமொழிகள் ஆலோசனை கூறுகிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நமக்குத் தெளிவான அல்லது தீர்க்கமான அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவ ஞானத்தோடும் (17–21) நம்முடைய கரிசனையோடும், நம் பிள்ளைகளுக்கு பெரிய பரிசை நம்மால் கொடுக்கமுடியும். அவர்கள் தேவனை நம்புவதற்கான பாதையையும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாய் நடக்கக்கூடிய எதிர்காலத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள நாம் உதவலாம் (3:5-6).
