19 ஆம் நூற்றாண்டில், தனிநபர்குடியிருப்பு கட்டும் இந்தியாவின் பெரிய கனவுத்திட்டம் துவங்கியது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டின் ராஜபரம்பரை வீடாக அந்தத் திட்டம் நிறைவுபெற்றது. குஜராத்தைச் சேர்ந்த வடோதராவிலுள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைதான் அந்த வீடு. இந்த அரண்மனைதான் இந்தியாவிலேயே பெரிய தனிநபர் குடியிருப்பாகும். 500 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் மேலான இடம், 170 அறைகள், பராமரிக்கப்பட்ட மொசைக்கற்கள், அலங்கார தொங்குவிளக்குகள், எலிவேட்டர்கள் என லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக நம்பப்பட்டது. 

இந்த கட்டிடம் ஒரு “கனவுத்திட்டம்” தான், ஆயினும் மத்தேயு 16 இல் இயேசு தமது சீடர்களிடம் கூறிய கட்டிடத்தைக் குறித்த நோக்கோடு ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை. பேதுரு, இயேசுவை “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (வ.16) என்று உறுதிப்படுத்திய பின்னர்; “நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” (வ.18) என்று இயேசு அறிவித்தார். வேதாகம வல்லுநர்கள் அந்தக் “கல்லை” குறித்து பல கருத்துடையவர்களாய் இருந்தாலும், இயேசுவின் நோக்கம் ஒன்றுதான். பூமியின் கடைமுனைமட்டும், அவர் தமது சபையைக் கட்டுவார் (மத்தேயு 28:19–20), உலகெங்கிலும் உள்ள அனைத்து நாட்டவரும், இனத்தவரும் இதில் அடங்குவர் (வெளிப்படுத்தின விசேஷம் 5:9).

இந்த கட்டுமான பணிக்கான விலை? சிலுவையில் இயேசு பலியாகிச் சிந்திய இரத்தமே (அப்போஸ்தலர் 20:28). அவருடைய கட்டிடத்தின் உறுப்பினர்களாக (எபேசியர் 2:21) இம்மாபெரும் விலைக்கிரயத்தால் வாங்கப்பட்ட நாம் அவருடைய அன்பின் தியாகத்தால் பூரித்து இந்த மாபெரும் திட்டத்தில் அவரோடு இணைவோம்.