நமக்கு பதிலாக - நாள் 2

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு,... பாவம் அறியாத அவரை நமக்காக பாவம் ஆக்கினார்...
2 கொரிந்தியர் 5: 21
இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய நவீன…
கண்கள் திறக்கப்பட்டன - நாள் 1

...நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
அப்போஸ்தலர் 26:17-18
புதிய ஏற்பாட்டில் இந்த வசனங்கள் தான் இயேசு கிறிஸ்துவின் சீடரின் உட்கருத்தை…

தினந்தோறும் சாருதல்
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். மத்தேயு 6:11
ஒரு காலைப்பொழுதில் எனது குழந்தைகள் காலமே எழுந்து, காலை உணவை தாங்களே சமைப்பதென்று தீர்மானித்தனர். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்த வாரத்தின் சோர்வால் நானும் எனது மனைவியும், அந்த சனிக்கிழமையன்று காலை 7:௦௦ மணி மட்டுமாவது தூங்க முயன்றோம். திடீரென நொறுங்கும் சத்தம் பேரோசையோடு என்னை எழுப்ப படுக்கையிலிருந்து பாய்ந்து, கீழ் படிகளில் விரைந்தேன். அங்கே உடைந்த தட்டும், தரையெங்கும் சிந்திய உணவும், அதைப் பெருக்கி சுத்தம்செய்யப் போராடிக்கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் ரோஷனையும் கண்டேன். என் பிள்ளைகள் பசியோடிருந்தனர், ஆனால் எங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து சுயமாகச் செயல்பட எண்ணினர், அதின் பலனாக உணவு வீணானது.
மனுஷர் வழக்கத்தில் பிள்ளைகள் நம்மைச் சார்ந்திருப்பதை விடுத்து, தாங்களாக சுயமாய் செயல்படவே எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் தேவனுடனான உறவிலோ, சுயமாய் செயல்படுவதை விடுத்து அவரை சார்ந்துகொள்வதே வளர்ச்சியாகும். ஜெபத்தில்தான் நாம் அவ்வாறு சார்ந்துகொள்ளப் பழகுகிறோம். "'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்." (மத்தேயு 6:11) என்று ஜெபிக்க இயேசு தமது சீடர்களுக்கும், அவரை விசுவாசிக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கையில் சார்ந்துகொள்ளும் ஒரு ஜெபத்தையே கற்றுக்கொடுத்தார். ஆகாரம் என்பது வாழ்வாதாரம், விடுதலை மற்றும் வழிகாட்டுதலுக்கு உருவகமாக உள்ளது (வ.11–13). இவை அனைத்திற்கும் இதைப் பார்க்கிலும் அதிகமானவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்துள்ளோம்.
தாமே உருவான இயேசுவின் விசுவாசிகள் என எவருமில்லை, மேலும் நாம் அவருடைய கிருபையை மிஞ்சினவர்களும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும், நம் நாளை துவக்குகையில், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (வ.9) என்று ஜெபித்து நமது சார்புத்தன்மையை வெளிப்படுத்துவோம்.

ஒரு அன்பான உழைப்பு
டாக்டர் ரெபேக்கா லீ க்ரம்ப்ளர் என்பவரே முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஆவார். எனினும் வாழ்நாள் முழுதும் ((1831–95) அவர் நிராகரிப்பட்டதையும், பொருட்படுத்தப்படாததையும், உதாசீனமாக்கப்பட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் தன்னுடைய குறிக்கோளான மருத்துவத் தொழிலில் அர்ப்பணிப்போடிருந்தார். சிலர் நிறத்தையும், இனத்தையும் கொண்டு இவரை மட்டுப்படுத்தினாலும் "கடமை என்னை எங்கே, எப்போது அழைத்தாலும்; அதைச் செய்யும் புதிதான துணிவையும் ஆயத்தத்தையும் உடையவளாகவே" தாம் இருப்பதாக அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சிகிச்சையளித்ததும் ; விடுதலையான அடிமைகளுக்கு மருத்துவ பராமரிப்பை வழங்கினதும் தேவனுக்கே செய்த ஊழியமாக அவர் நம்பினார். கவலைப்படும் வண்ணமாக, கிட்டத்தட்ட அடுத்த நூற்றாண்டு வரை அவர் தன்னுடைய சாதனைகளுக்காகக் கௌரவிக்கப்படவில்லை. நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டு, குறைவாய் மதிப்பிடப்பட்டு, பாராட்டப்படாமல் இருக்கலாம். எனினும், வேதம் நமக்கு நினைப்பூட்டும் காரியம் யாதெனில், தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்தால்; உலகத்தாரால் அங்கீகாரம் பெறுவதையும், பாராட்டப்படுவதையும் நோக்காமல், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்ய” (கொலோசெயர் 3:24) அழைக்கப்படுகிறோம். நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதை நோக்கினால், கடினமான காரியங்களையும்கூட அவருடைய பெலத்திலும் வழிகாட்டுதலிலும், விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியோடு செய்து முடிப்போம். அப்பொழுது நாம் உலகத்தாரால் அங்கீகரிக்கப்படுவதைக் குறித்து கரிசனையற்றவர்களாக, கர்த்தராலே மட்டும் உண்டாகும் பலனைப்பெற (வ.23) வாஞ்சையுள்ளவர்களாவோம்.

கிறிஸ்துமஸ் ஒளி
எனது பார்வைக்கு அந்த கிறிஸ்துமஸ் மரம் பற்றியெரிவது போலிருந்தது. இது செயற்கை விளக்குகளின் அலங்காரத்தால் உண்டாகும் வெளிச்சம் அல்ல மாறாக நிஜமான நெருப்பு. எனது ஜெர்மானிய நண்பரின் பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு நாங்கள் குடும்பமாக அழைக்கப்பட்டோம், "பழைய ஜெர்மானிய முறை" எனும் அந்த கொண்டாட்ட முறையில் கிறிஸ்துமஸ் மரத்தைப் பாரம்பரிய இனிப்பு வகைகளாலும், எரியும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரித்திருந்தனர் (பாதுகாப்பு காரணமாக ஒரு இரவு மட்டுமே அந்த புதிதாய் வெட்டப்பட்ட மரத்தை எரியும்படி செய்தனர்).
பற்றியெரிவதைப் போலக் காட்சியளித்த அம்மரத்தை நான் காண்கையில், எரியும் செடியில் தேவன் மோசேயை சந்தித்ததை நினைத்தேன். வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசே, அங்கே பற்றியெரிந்தும், கருகாமலிருக்கும் முட்செடியின் காட்சியினால் வியந்தான். அதை ஆராயச் சற்றே அருகில் சென்றபோது, தேவன் அழைத்தார். முட்செடியிலிருந்து வெளிவந்த செய்தி நியாயத்தீர்ப்புக்கானது அல்ல மாறாக இஸ்ரவேலர்களின் மீட்புக்கானது. எகிப்தில் அடிமைகளாய் இருந்த தன் ஜனத்தின் உபத்திரவத்தைப் பார்த்து, அவர்களிடும் கூக்குரலைக் கேட்டு, அவர்களை மீட்கத் தேவன் இறங்கினார் (யாத்திராகமம் 3:8).
இஸ்ரவேலர்களை எகிப்தியரிடமிருந்து தேவன் மீட்டிருக்க, இந்த ஒட்டுமொத்த மனிதக்குலத்திற்குமே மீட்பு தேவையாயிருந்தது. வெறும் சரீர ரீதியான உபத்திரவங்களிலிருந்து மட்டுமல்ல மாறாகத் தீமையும் மரணமும் இந்த உலகத்தில் ஏற்படுத்தின பாதிப்புகளிலிருந்து மீட்பு தேவை. இதற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து தேவன் பதிலளித்தார், தம்முடைய குமாரனாகிய இயேசு எனும் ஒளியை அனுப்பினார் (யோவான் 1:9–10). உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்ல, அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் ((3:17).
