வகை  |  odb

ஞானம் அல்லது மதியீனம்?

எனக்கு பத்து வயதாக இருந்தபோது, எங்கள் இளைஞர் குழுவில் இருந்த ஒரு நண்பனிடமிருந்து ஒரு கேசட் டேப்பை வீட்டிற்கு கொண்டு வந்தேன். அதில் கிறிஸ்தவ இசைக்குழுவின் பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்து குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட என்னுடைய அப்பா, அப்பாடல்களை விரும்பவில்லை. ஆராதனை பாடல்கள் மட்டுமே வீட்டில் ஒலிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். இது ஒரு கிறிஸ்தவ இசைக்குழு தான் என்பதை நான் அவருக்கு விளக்கினேன். ஆனால் அது அவருடைய மனதை மாற்றவில்லை. சிறிது நேரம் கழித்து, இப்பாடல்கள் என்னை தேவனிடத்தில் நெருங்கச் செய்கிறதா அல்லது விலகச் செய்கிறதா என்று ஒருவாரம் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த ஆலோசனையில் ஒரு நியாயம் இருந்தது. 

வாழ்க்கையில் சரி தவறு என்று பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் பல வேளைகளில் நாம் சில தீர்மானங்களை எடுக்க போராட வேண்டியுள்ளது (ரோமர் 14:1-19). என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், வேதத்தின் ஞானத்தை நாம் சார்ந்துகொள்ளலாம். எபேசிய திருச்சபை விசுவாசிகளை, “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து” இருங்கள் என்று பவுல் ஊக்குவித்தார் (எபேசியர் 5:15). ஒரு சிறந்த பெற்றோரைப்போன்று அவர்கள் கூடவே இருந்து ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கமுடியாது என்பது பவுலுக்கு நன்றாய் தெரியும். நாட்கள் பொல்லாதவைகளானதால் அவர்கள் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுவார்கள் என்றால், அவர்களைக் குறித்த கர்த்தருடைய சித்தம் இன்னதென்று அவர்களால் விளங்கிக்கொள்ள முடியும் என்று பவுல் கூறுகிறார் (வச. 16-17). நாம் சர்ச்சைக்குரிய விஷயங்களுடன் போராடும்போது தேவன் நம்மை வழிநடத்துவதால் விவேகத்தையும் நல்ல தீர்மானங்களையும் பின்பற்றுவதற்கான அழைப்பே ஞானமுள்ள வாழ்க்கை.

பிறனை நேசித்தல்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தனது பர்மிங்காம் சிறையிலிருந்து எழுதிய கடிதத்தின் வார்த்தைகள், கொரோனா தொற்றுநோயின் நாட்களின் சுயதனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சமங்களில் உண்மையாயிருந்தது. அதில் அவர், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கையில், ஒரு நகரத்தில் என்ன நடக்கிறது என்பதை மட்டும் பொருட்படுத்திவிட்டு, மற்ற நகரங்களில் நடப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடமுடியாது. “நாம் விதியின் ஆடை பின்னலில், பிணைக்கப்பட்டுள்ளோம்” என்ற அவர் சொல்லுகிறார். ஒருவருக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் பாதிப்பானது, அனைவருக்கும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 

அதேபோல், கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க, உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் நாடுகள் முழு அடைப்பை அமுல்படுத்தி, நமது இணைப்பை வெளிப்படுத்தியது. ஒரு நகரத்தை பாதித்தது விரைவில் மற்றொரு நகரத்தையும் பாதிக்கலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மற்றவர்களுக்கு எவ்வாறு அக்கறை காட்ட வேண்டும் என்று தேவன் தம் மக்களுக்கு போதித்தார். மோசே மூலம், இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டவும், அவர்கள் ஒற்றுமையாய் வாழவும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். “உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்” (லேவியராகமம் 19:16) என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூறுவாயாக” (வச. 18) என்றும் போதித்தார். மற்றவர்களுடைய வாழ்க்கையை தங்கள் வாழ்க்கை போலவே மதிப்பிட்டு பார்க்காவிட்டால், சமுதாயம் உடைய துவங்கும் என்பதை தேவன் நன்கு அறிந்திருந்தார். 

தேவனுடைய போதனைகளை நாமும் ஏற்றுக்கொள்ளலாம். நம்முடைய அன்றாட செயல்களில் நாம் ஈடுபடும்போது, மற்றவர்ளோடு நாம் எந்த அளவிற்கு தொடர்பில் இருக்கிறோம் என்பதை அறிந்து, அவர்களை நேசிக்கவும் உதவிசெய்யவும் தேவனை நாடுவோம். 

திங்கட்கிழமைக்காக நன்றி

திங்கட்கிழமை என்றாலே நான் பயப்படுவேன். நான் முன்பு வேலை செய்த இடத்திற்கு செல்ல ரயிலிலிருந்து இறங்கும்போது, என் அலுவலகக் கட்டிடத்தை அடைவதற்கு முன் வேண்டுமென்றே தாமதப்படுத்துவேன். குறித்த நேரத்திற்கு வேலையை முடிக்காவிட்டால் எரிச்சலடையும் முதலாளிகளை சந்திப்பது எனக்கு சவாலாய் தோன்றியது. 

நம்மில் சிலருக்கு, ஒரு புதிய வாரத்தை துவக்குவது மிகவும் கடினமாக இருக்கும். நம் வேலை ஸ்தலத்தில் நாம் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது கனப்படுத்தப்படாதவர்களாகவோ இருக்கலாம். சாலெமோன் ராஜா எழுதும்போது, பிரயாசத்தின் பலனை விவரிக்கிறார்: “மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது” (பிரசங்கி 2:22-23). 

ஞானமுள்ள ராஜா, வேலையின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது அதை பலனுள்ள வகையில் மாற்றுவதற்கான ஆலோசனையை நமக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அதை பார்க்கும் கண்ணோட்டத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். நம்முடைய வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தேவனின் உதவியோடு அதில் “திருப்தியடைய” அவர் நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 24). கிறிஸ்துவின் சுபாவங்களை நம்மில் பிரதிபலிக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்குவிக்கும்போது, அந்த திருப்தியை நாம் அடையலாம். அல்லது நம்மால் உதவிபெற்ற ஒருவருடைய வார்த்தைகளை நாம் கேட்கும்போது திருப்தியடையலாம். அல்லது, கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவன் கொடுத்த ஞானத்தை பிரயோகிக்கும்போது நாம் திருப்தியடையலாம். நம்முடைய வேலைகள் கடினமானதாய் இருந்தாலும், தேவன் நம்மோடு இருக்கிறார். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் சிக்கலான தருணங்களில் நமக்கு ஒளிகொடுக்கும். அவருடைய துணையோடு, திங்கட்கிழமைகளை நாம் சமாளிப்போம். 

ஹின்னோமிலிருந்து நம்பிக்கை

1979 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேப்ரியல் பார்கே இரண்டு சிறிய வெள்ளி சுருள்களைக் கண்டுபிடித்தார். அந்த உலோகச் சுருளை நுணுக்கமாக அவிழ்க்க பல ஆண்டுகள் ஆனது. அதில் ஒவ்வொரு சுருள்களிலும், எண்ணாகமம் 6:24-26லிருந்து ஆசீர்வாதம் எபிரெய மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.” அச்சுருள்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதுவே கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான வேதாகம ஆதாரங்களில் ஒன்று. 

அவைகள் கண்டெடுக்கப்பட்ட இடமும் சுவாரஸ்யமானது. ஹின்னோம் பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குகையில் பார்கே அதை தோண்டிக் கண்டுபிடித்தார். அதே இடத்தில்தான், தங்கள் பிள்ளைகளை நரபலியிட்டால் தேவன் உங்களை அழித்துவிடுவார் என்று எரேமியா தீர்க்கதரிசி மக்களை எச்சரித்தார் (எரேமியா 19:4-6). அதுபோன்ற அக்கிரமங்கள் நடந்தேறிய பள்ளத்தாக்கு அது என்பதினால், இயேசு அதை “கெஹென்னா” ("ஹின்னோம் பள்ளத்தாக்கு" என்ற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம்) என்ற வார்த்தையை நரகத்தைக் குறிக்க பயன்படுத்தினார் (மத்தேயு 23:33).

இந்த இடத்தில், எரேமியா தனது தேசத்தின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பை அறிவிக்கும் தருணத்தில், யாரோ ஒருவர் தனது எதிர்கால ஆசீர்வாதத்தை வெள்ளி சுருள்களில் பொறித்திருக்கிறார். இது அவர்களின் வாழ்நாட்களுக்குள் நடக்காது. ஆனால் பாபிலோனிய சிறையிருப்பைக் கடந்து, தேவன் அவர்கள் பக்கமாய் தம்முடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடுவார். 

நமக்கு போதிக்கப்படுகிற பாடம் தெளிவாக உள்ளது. நமக்கு சம்பவிக்கப்போகிறவைகளுக்கு நாம் பாத்திரவான்களாய் இருந்தாலும், நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோம். தேவனுடைய இருதயம் அவருடைய ஜனங்களுக்காய் எப்போதும் ஏங்குகிறது.