வகை  |  odb

நான் நானாகவே

அந்த வாலிப பெண்ணால் தூங்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளியான அவள், மறுநாள் தன் சபையின் மூலமாக தன் உயர்கல்விக்கான உதவித்தொகையைப் பெறவிருந்தாள். 'ஆனால், இதற்கு நான் தகுதியற்றவள்' என்று சார்லோட் எளியோட் எண்ணினாள். தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் அம்சங்களைக் குறித்துச் சந்தேகப்பட்டவள், தன்னுடைய தகுதியில் திருப்தியடையாமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். மறுநாளும் மன அமைதியின்றி, இறுதியாகத் தனது மேஜைக்கு நகர்ந்து பேனாவையெடுத்து, காகிதத்தில் "நான் பாவிதான்" என்ற அரும்பெரும் பாடலின் வரிகளை எழுதினாள்.

"நான் பாவிதான், ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர். என் மீட்பரே, வந்தேன்"

1835 இல் எழுதப்பட்ட இந்த பாடலின் வரிகள், இயேசு எவ்வாறு தன்னுடைய சீஷர்களை தெரிந்துகொண்டு தமக்கு ஊழியம் செய்ய வைத்தார் என்பதை விவரிக்கின்றன. அவர்கள் ஆயத்தமாய் இருந்ததாலல்ல. அவர்கள் அப்படி இருக்கவுமில்லை. அவர்கள் இருந்தவண்ணமாகவே அவர்களுக்கு அவர் அதிகாரம் அளித்ததால்தான். தகுதியற்றவர்களாலான கூட்டம், பன்னிரெண்டு பேரிருந்த குழுவில்; வரி வசூலிப்பவன், அதிகப்பிரசங்கி, கட்டுக்கடங்காத இரு சகோதரர்கள் (பார்க்கவும். மாற்கு 10:35–37), மேலும் அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து (மத்தேயு 10:4) உள்ளிட்டோர் இருந்தனர். ஆயினும், அவர் அவர்களுக்கு "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்க, குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ண, மரித்தோரை எழுப்ப, பிசாசுகளைத் துரத்த;" (வ. 8) அதிகாரம் கொடுத்தார். மேலும் இவற்றைச்  செய்கையில் பணம் பெற வேண்டாமென்றும்;  பயணசுமைகள், மாற்று வஸ்திரங்கள் மற்றும் பாதரட்சைகள், வழித்தடிகள் ஆகியவற்றை தவிர்க்கவும் சொன்னார் (வ. 9–10).

"நான் உங்களை அனுப்புகிறேன்" (வ.16) என்றவரே போதுமானவராயிருந்தார். இன்றைக்கும் அவருக்குச் செவிகொடுப்போருக்கு, அவர் போதுமானவர்.

நம் அனைத்து காரியங்களிலும்

1954 இல், மார்ட்டின் லூத்தர் "வியாபாரிகளுக்கிடையே பொதுவான ஒரு விதிமுறை உண்டு, 'மற்றவர்களைக் குறித்து எனக்கு எந்த கரிசனையும் கிடையாது. எனது லாபமும் எனது பேராசையும் நிறைவேறினபின்புதான் மற்ற எல்லாமே'. இது அவர்களுடைய பிரதானமான சட்டமாயுள்ளது" என்றார். இதற்கு இருநூறாண்டுகள் கழிந்து, நியூ ஜெர்சி மாகாணத்தின் மவுண்ட் ஹாலி பகுதியைச் சேர்ந்த ஜான் வுல்மேன் என்பவர் இயேசுவின் மீதிருந்த பற்றுதலை தனது தையற்கடை தொழிலில் வெளிக்காட்டினார். அடிமைகளின் விடுதலைக்கு ஆதரவளிக்கும் விதத்தில், கட்டாய வேலைவாங்குதலில் ஈடுபட்ட நிறுவனங்களின் பஞ்சு மற்றும் சாயப் பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். சுத்த மனசாட்சியோடு அவர் தனக்கடுத்தவரையும் நேசித்து, தனது காரியங்களில் உத்தமத்தையும் உண்மையையும் காத்து வாழ்ந்தார்.

அப்போஸ்தலன் பவுலும், "கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே" (2 கொரிந்தியர் 1:12) வாழ பிரயாசப்பட்டார். கொரிந்து பட்டணத்தில் ஒருவன், இயேசுவின் அப்போஸ்தலன் என்கிற தன்னுடைய அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டபோது, அவர்கள் மத்தியில் தான் நடந்துகொண்ட விதத்தைத் தற்காத்தார். தன்னுடைய வார்த்தைகளும் எழுத்துக்களும், நுட்பமான பரிசோதனையைக்கூட எதிர்கொள்ளக்கூடியவை என்றெழுதினார் (வ.13). தன்னையல்ல, தன்னுடைய செயல்திறனுக்குத் தேவனின் கிருபையையும் வல்லமையையும் தான் சார்ந்துகொண்டிருப்பதை வெளிக்காட்டினார் (வ.12). சுருங்கச் சொன்னால், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே பவுலின் அனைத்து காரியங்களிலும் பரவியிருந்தது.

கிறிஸ்துவின் தூதுவர்களான நாமும் தொழில், குடும்பம் என்று நமது அனைத்து காரியங்களிலும் நற்செய்தியை ஒலிக்கச்செய்வதில் கவனமாயிருப்போம். தேவனின் கிருபையாலும் வல்லமையாலும் அவருடைய அன்பைப் பிறருக்கு நாம் வெளிக்காட்டுகையில், நாம் தேவனைக் கனப்படுத்துகிறோம்; பிறரையும் நேசிக்கிறோம்.

இதயங்கள் ஒன்றாய் துடித்தல்

ஆதிகாலம் தொடங்கியே, கதைசொல்லும் பழக்கம் மனிதர்களிடம் இருக்கிறது. எழுத்துக்கள் புழக்கத்தில் இல்லாத காலம் தொட்டே அறிவை புகட்ட, கதைகள் வழிவகுத்தது. "'ஒருகாலத்தில்" என்று ஆரம்பிக்கும் கதையின் வரிகளைப் படிக்கும்போதும் அல்லது கேட்கும்போதும் நமக்கு உண்டாகும் மகிழ்ச்சியையும், ஈடுபாட்டையும் அனைவரும் அறிவோம். கதையின் வலிமையானது, மகிழ்ச்சி என்ற எல்லையையும் கடந்து நீள்கிறது. நாம் ஒன்றாய் கதைகேட்கும்போது, நமது இதயங்கள் ஒன்றுபடுவதை உணரலாம். ஒரு நாளைக்கே அடிக்கடி மாறும் சராசரி மனிதனின் இதயத்துடிப்பு, எப்போதாகிலும் தான் மற்றொருவருடன் ஒரேமாதிரி ஒன்றாய் துடிக்கும். ஆனால் நாம் ஒரேசமயம் ஒன்றாய் கதைகேட்கும்போது, நமது இதயத்துடிப்புகளும் கூட ஒன்றுபடுவதை சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனர்.

தேவனும் தனது கதையை, "ஆதியிலே" (ஆதியாகமம் 1:1) என்று ஆரம்பிக்கிறார். ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் சுவாசத்தைப் பெற்றுக்கொண்ட நொடியிலிருந்து (வ. 27), நமது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி அவரது பிள்ளைகளென்ற முறையில் நமதனைவரின் வாழ்வையும் வடிவமைக்க, தேவன் இந்த கதையை விவரிக்கத் துவங்குகிறார். இதுவரை எழுதப்பட்டவைகளிலே மிகவும் உன்னதமானதும் சற்றும் கற்பனையில்லாததுமான படைப்பாகிய வேதத்தின்மூலம், தேவன் தமக்குச் சொந்த ஜனங்களாக  இயேசுவின் விசுவாசிகளாகிய நம்மை தமது நோக்கங்களுக்காகப் பிரித்தெடுத்து நமது இதயங்களை ஒன்றிணைத்துள்ளார் (1 பேதுரு 2:9).

அதின் விளைவாக நமது படைப்பாளியின் ஆக்கப்பூர்வமான கிரியைகளில் மகிழ்ந்து நமது இதயங்கள் ஒரேசீராகத் துடிப்பதாக. மேலும், "ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்து (சொல்லி)" (சங்கீதம் 96:3), அவர்களையும் அதிலே பங்கடைய செய்வோமாக.

நீங்கள் பயப்படுகையில்

எனது வழக்கமான உடற்பரிசோதனை நாள் வந்தது, சமீபத்தில் எனக்கு எந்த நலக்குறைவு இல்லாதபோதிலும் எனக்கு பயமாகவே இருந்தது. பலநாட்களுக்கு முன் எதிர்பாராத நோயால் நான் பாதிக்கப்பட்ட நினைவுகள் என்னை திகிலூட்டின. என்னோடு தேவன் இருப்பதையும், நான் அவரை நம்பினால் போதுமென்றும் நான் அறிந்திருந்தேன். ஆயினும் பயந்தேன்.

என்னுடைய பயத்தாலும், விசுவாச குறைவாலும் எனக்கு ஏமாற்றமாயிருந்தது. தேவன் என்னோடு எப்போதும் இருப்பாரென்றால், எனக்கு ஏன் இவ்வளவு மனக்கவலை? பின்னொரு நாளின் காலையில் தேவன் என்னை கிதியோனின் கதைக்குநேரே நடத்துவதை உணர்ந்தேன்.

"பராக்கிரமசாலியே" (நியாயாதிபதிகள் 6:12) என்றழைக்கப்பட்ட கிதியோன், மீதியானர்களை எதிர்க்க வேண்டிய தனது பணியை குறித்து மிகவும் பயந்தார். தேவன் வெற்றியையும் தமது பிரசன்னத்தையும் அவனுக்கு வாக்களித்தபோதிலும், அதை கிதியோன் மீண்டும் மீண்டுமாக உறுதிப்படுத்துகிறான் (வ. 16−23, 36−40).

ஆயினும், கிதியோனின் பயத்திற்காக அவனை தேவன் கண்டிக்கவில்லை. அவனை புரிந்து கொண்டார். யுத்தத்தின் இரவில், கிதியோனுக்கு வெற்றியை மீண்டும் வாக்களிக்கிறார், மட்டுமன்றி அவனது பயங்களை அமைதிப்படுத்தும் வழியையும் உண்டாக்குகிறார் (7:10−11).

தேவன் எனது பயத்தையும் புரிந்துகொண்டார். அவரை நம்ப அவரின் உத்தரவாதம் என்னை ஊக்குவித்தது. என்ன நடந்தாலும், அவர் என்னோடிருப்பதை புரிந்துகொண்டதால் அவருடைய சமாதானத்தை அனுபவித்தேன். முடிவிலே, எனது மருத்துவ பரிசோதனையும் நன்றாகவே முடிந்தது.

நமது பயங்களைப் புரிந்துகொண்டு, தமது வார்த்தையினால் ஆவியினாலும் உத்தரவாதமளிக்கும் தேவன் நமக்குண்டு (சங்கீதம் 23:4; யோவான் 14:16−17). கிதியோனை போல நாமும் அவரை நன்றியோடு தொழுதுகொள்வோம் (நியாயாதிபதிகள் 7:15).