
கிறிஸ்துவை உடுத்திக்கொள்ளுதல்
முதன்முறையாக எனது புதிய கண்ணாடியை அணிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு நான் அவற்றை தூக்கி எறிய விரும்பினேன். அந்த புதிய கண்ணாடியை அணிந்தபோது என் கண்களில் வலி ஏற்பட்டது மற்றும் தலை சுற்றியது. எனக்கு பழக்கமில்லாத அந்த புதிய சட்டங்களால்(பிரேம்) எனது காதுகள் புண்பட்டன. அடுத்த நாள் நான் அதை அணியவேண்டும் என்று நினைத்தபோது கூச்சலிட்டேன். அந்த கண்ணாடியை என்னுடைய சரீரம் ஏற்றுக்கொள்வதற்காக, அதை நான் மீண்டும் மீண்டும் அணியவேண்டியிருந்தது. அதற்கு பல வாரங்கள் எடுத்தது. ஆனால் அதன் பிறகு, நான் அந்த கண்ணாடியை அணிந்திருப்பதை மறந்துவிட்டேன்.
புதிதாக ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு சில மாற்றங்கள் அவசியப்படுகிறது. ஆனால் காலப்போக்கில், அதோடு நாம் பழகிவிடுகிறோம். அதுவும் நமக்கு பொருத்தமாய் மாறிவிடுகிறது. அவற்றிலிருந்து சில புதிய அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது. ரோமர் 13இல், அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் “ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்” (வச. 12) என்றும் சரியான ஜீவியம் வாழும்படிக்கும் அறிவுறுத்துகிறார். அவர்கள் இயேசுவை நம்பியிருந்தவர்கள், ஆனால் அவர்கள் தற்போது நித்திரைகொள்வதில் மனநிறைவடைந்திருக்கிறார்கள்; அவர்கள் தூக்கத்தைவிட்டு எழுந்திருக்கவும், கண்ணியமாக நடந்துகொள்ளவும், எல்லா பாவங்களையும் விட்டுவிடவும் அவர்களை அறிவுறுத்துகிறார் (வச. 11-12). பவுல் அவர்களை இயேசுவை அணிந்துகொண்டு, அவர்களுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் அவரைப் போலவே இருக்குமாறு ஊக்கப்படுத்துகிறார் (வச. 14).
இயேசுவின் அன்பான, கனிவான, இரக்கமுள்ள, கருணை நிறைந்த, உண்மையுள்ள வழிகளை நாம் ஒரே இரவில் பிரதிபலிக்கத் தொடங்குவதில்லை. அவை சங்கடமாகவோ அல்லது கடினமாகவோ தெரிந்தாலும், ஒவ்வொரு நாளும் “ஒளியின் ஆயுதங்களை" தரிந்துகொள்ள தீர்மானிப்பது என்பது ஓர் நீண்ட செயல்முறையாகும். காலப்போக்கில், அவர் நம்மை சிறப்பாக மாற்றுகிறார்.

பட்டணத்தில் மகிழ்ச்சி
2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-ம் அர்ஜென்டினாவும் மோதியபோது, அது “வரலாற்றில் மிகப் பெரிய உலகக் கோப்பைப் போட்டி” என்று பலர் அழைக்கும் ஓர் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. கூடுதல் நேரத்தின் இறுதி நொடிகள் நிறைவடைந்தபோது, கோல் 3-3 என சமநிலையில் இருந்ததனால் கால்பந்து அணிகள் பெனால்டி உதைக்கு அனுப்பப்பட்டன. அர்ஜென்டினா வெற்றி இலக்கை எட்டியதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான அர்ஜென்டினா மக்கள் புவெனஸ் அயர்ஸ் நகரில் கூட்டங்கூடினர். இந்த ஆரவாரமான, மகிழ்ச்சியான காட்சியைக் காட்டும் ட்ரோன் கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. ஓர் பிபிசி செய்தியறிக்கை நகரம் மகிழ்ச்சியில் எவ்விதம் மூழ்கியது என்பதை விவரித்தது.
மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).
நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார்.

ஐந்து நற்காரியங்கள்
தங்களிடம் இருப்பவைகளுக்காக நன்றிசொல்லும் குணம்கொண்டவர்கள் நல்ல தூக்கம், குறைவான நோயின் அறிகுறிகள், மற்றும் அதிக மகிழ்ச்சியை சுதந்தரிக்கின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஈர்க்கக்கூடியவைகள். உளவியலாளர்கள் நமது நல்வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு வாரமும் நாம் நன்றி செலுத்தவேண்டிய ஐந்து காரியங்களை ஒரு “நன்றி செலுத்தும் குறிப்பில்” எழுதும்படிக்கு பரிந்துரைக்கின்றனர்.
வேதம் நீண்ட காலமாக நன்றியுணர்வு நடைமுறையை ஊக்குவித்துள்ளது. உணவு மற்றும் திருமணம் முதல் (1 தீமோத்தேயு 4:3-5) படைப்பின் அழகுகள் (சங்கீதம் 104) வரை, இதுபோன்ற விஷயங்களை வரமாகப் பார்க்கவும், அவற்றை நமக்கு அருளும் தேவனுக்கு நன்றி செலுத்தவும் வேதம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சங்கீதம் 107, நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடிய ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறது: வனாந்திரத்திலிருந்து அவர்களை மீட்டதற்காய் (வச. 4-9), சிறையிருப்பிலிருந்து விடுவித்ததற்காய் (வச. 10-16), நோயிலிருந்து குணப்படுத்தியதற்காய் (வச. 18-22), செங்கடலிலிருந்து பாதுகாத்ததற்காய் (வச. 23-32), மற்றும் வறண்ட நிலத்தில் அவர்களை செழிப்பாய் வாழச்செய்ததற்காய் (வச. 33-42). “கர்த்தரைத் துதியுங்கள்” என்று சங்கீதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இவை அனைத்தும் தேவனுடைய “மாறாத அன்பின்” அடையாளங்கள் (வச. 8, 15, 21, 31).
உங்கள் கைகளில் சிறிய நோட்டு கைவசம் இருக்கிறதா? இப்போது நீங்கள் நன்றி செலுத்த விரும்பும் ஐந்து நல்ல விஷயங்களை ஏன் எழுதக்கூடாது? அவை நீங்கள் இப்போது சாப்பிட்ட உணவாக இருக்கலாம், உங்கள் திருமணமாக இருக்கலாம் அல்லது இஸ்ரேலைப்போல் இன்றுவரை உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய மீட்பு கிரியைகளாய் இருக்கலாம். வெளியே பாடும் பறவைகளுக்கும், உங்கள் சமையலறையிலிருந்து வரும் வாசனைக்கும், உங்கள் நாற்காலியின் வசதிக்கும், அன்புக்குரியவர்களின் முணுமுணுப்புகளுக்கும் நன்றி சொல்லுங்கள். அவைகள் ஒவ்வொன்றும் நமக்கருளப்பட்ட வரங்கள்; தேவனுடைய மாறாத அன்பின் அடையாளங்கள்.

கிறிஸ்துவில் நம்முடைய புதிய சுபாவம்
எங்களுக்கு சொந்தமான பைன்மரமானது, பைன்கூம்புகளையும் ஊசியிலைகளையும் உதிர்க்கத் துவங்கியது. மர மருத்துவர் அதை ஒருமுறை ஆராய்ந்துப் பார்த்துப் பிரச்சனையை விளக்கினார். அவர் “இது ஓர் ஊசியிலை கொண்ட பைன் மரம்” என்று சொன்னார். அவர் வேறு ஏதாகிலும் புதிய விளக்கத்தைக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மீண்டும் “இது ஓர் ஊசியிலை மரம்” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டார். ஊசியிலை பைன் மரங்கள் அவற்றை உதிர்க்கும் விதத்திலேயே உண்டாக்கப்பட்டுள்ளது. அதனை யாராலும் மாற்றியமைக்க முடியாது.
அதிர்ஷ்டவசமாக, நமது ஆவிக்குரிய வாழ்க்கையானது மாற்றவே முடியாத செயல்கள் அல்லது அணுகுமுறைகளால் வரையறுக்கப்படவில்லை. எபேசுவில் புதிய விசுவாசிகளுக்கு இந்த விடுதலையான உண்மையை பவுல் வலியுறுத்தினார். புறஜாதி மக்கள் தங்கள் “புத்தியில் அந்தகாரப்பட்டு” இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவனுக்கு அந்நியராய் இருக்கிறார்கள் என்றும் “சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:18-19).
ஆனால் இயேசுவையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டறிந்த பின்னர், “பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோடுங்கள்” (வச. 22) என்று வலியுறுத்துகிறார். நம்முடைய பழைய வாழ்க்கையானது இச்சையினாலும் காமவிகாரங்களினாலும் எவ்விதம் பாதிக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடுகிறார் (வச. 22-24).
பின்னர் அவர் வாழ்வதற்கான புதிய வழிகளைப் பட்டியலிடுகிறார். பொய் சொல்லாதிருங்கள். கோபத்தை வெறுத்திடுங்கள். சபிப்பதை நிறுத்துங்கள். திருடுவதை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக, “குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்” (வச. 28) என்று வலியுறுத்துகிறார். கிறிஸ்துவில் உருவான நம்முடைய புதிய சுபாவம், நம்முடைய இரட்சகருக்கு விருப்பமான, நமது அழைப்பிற்கு தகுதியான ஓர் வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது.
