வகை  |  odb

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம். 

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் பலத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது. 

 

முதலாவது ஆராதனை

வயது வந்தோருக்கான நட்பைப் பற்றி ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைத் தொடங்க நான் ஒருபோதும் திட்டமிடவில்லை. அவ்வாறு செய்ய நான் அழைக்கப்பட்டபோது, எனக்குள் பல கேள்விகள் இருந்தன. தொண்டு நிறுவனம் எவ்வாறு நிதியளிக்கப்படும், அதை உருவாக்க எனக்கு யார் உதவ வேண்டும்? இந்த விஷயங்களில் எனக்கு வணிகப்புத்தகத்தைக் காட்டிலும் வேதாகமத்திலிருந்தே அதிக உதவிகள் கிடைத்தது. 

எதையாவது கட்டியெழுப்ப தேவனால் அழைக்கப்பட்ட எவருக்கும் எஸ்றா புத்தகம் இன்றியமையாத வாசிப்பாகும். இப்புத்தகம் யூதர்கள் சிறையிருப்பிற்கு பின்பு தங்கள் எருசலேம் நகரத்தை மீண்டும் எவ்வாறு கட்டியெழுப்பினார்கள் என்பதையும் அதை கட்டுவதற்கு தேவையான பொருளாதார தேவைகளை தேவன் எவ்வாறு சந்தித்தார் என்பதையும் விவரிக்கிறது (எஸ்ரா 1:4-11; 6:8-10). மேலும் தன்னார்வலர்களும் ஒப்பந்தக்காரர்களும் எவ்வாறு வேலையைச் செய்தார்கள் (1:5; 3:7) என்பதையும் விவரிக்கிறது. இது ஆயத்தமாகும் நேரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. யூதர்கள் சிறையிருப்பிலிருந்து மீண்டு திரும்பி, இரண்டு ஆண்டுகளாய் தங்கள் கட்டுமானப்பணியை துவக்கவில்லை (3:8). எதிர்ப்பு எவ்வாறு வரக்கூடும் என்பதை இது காட்டுகிறது (அதி. 4). ஆனால் கதையில் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. எந்தவொரு கட்டிடமும் தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பு, யூதர்கள் பலிபீடத்தை கட்டியெழுப்பினர் (3:1-6). “கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை” என்றாலும் ஜனங்கள் தேவனை ஆராதித்தனர் (வச. 6). முதலாவது ஆராதனை நடைபெற்றது. 

புதிதாக ஏதாவது தொடங்க தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினாலும், ஒரு வேதப்பாட படிப்பைத் தொடங்கினாலும், ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தொடங்கினாலும் அல்லது ஏதேனும் ஒரு புதிய வேலையைத் தொடங்கினாலும் எஸ்றாவின் கொள்கையானது முக்கியத்துவம் வாய்ந்தது. தேவன் கொடுத்த திட்டம் கூட நம் கவனத்தை அவரிடமிருந்து விலக்கிவிடலாம். எனவே முதலில் தேவன் மீது கவனம் செலுத்துவோம். நாம் வேலை செய்வதற்கு முன், அவரை ஆராதனை செய்வோம். 

 

மூடப்படாத பாவங்கள்

ஒரு திருடன் தொலைபேசி பழுதுபார்க்கும் கடையை உடைத்து, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கண்ணாடியை உடைத்து, தொலைபேசிகள் மற்றும் பலவற்றை திருட ஆரம்பித்தான். அட்டைப் பெட்டியால் தலையை மூடிக்கொண்டு கண்காணிப்பு கேமராவில் இருந்து தனது அடையாளத்தை மறைக்க முயன்றான். ஆனால் திருட்டின் போது, பெட்டி சிறிது நேரம் சாய்ந்து, அவனது முகத்தை வெளிப்படுத்திக் காண்பித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, கடையின் உரிமையாளர் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து, காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கொள்ளையனை அருகிலுள்ள இன்னொரு கடைக்கு வெளியே கைது செய்தனர். மறைந்திருக்கும் ஒவ்வொரு பாவமும் ஒரு நாள் வெளிப்படும் என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.

நம் பாவங்களை மறைக்க முயற்சிப்பது மனித இயல்பு. ஆனால் பிரசங்கியில், நாம் தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாசிக்கிறோம். ஏனென்றால் மறைவான ஒவ்வொன்றும் அவருடைய நீதியான பார்வைக்கும் நியாயமான தீர்ப்புக்கும் முன் கொண்டுவரப்படும் (12:14). பிரசங்கி, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (வச. 13) என்று சொல்லுகிறார். பத்துக் கட்டளைகள் கண்டித்த மறைவான விஷயங்கள் கூட (லேவியராகமம் 4:13) அவருடைய மதிப்பீட்டிலிருந்து தப்ப முடியாது. நன்மையோ தீமையோ, ஒவ்வொரு செயலையும் அவர் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு வருவார். ஆனால், அவருடைய கிருபையின் காரணமாக, இயேசுவினால் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பையும், நமக்கான அவருடைய தியாகத்தையும் நாம் காணலாம் (எபேசியர் 2:4-5).

அவருடைய கட்டளைகளை நாம் உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும்போது, அது அவரைப் பற்றிய பயபக்திக்கும், பொருந்தக்கூடிய வாழ்க்கை முறைக்கும் வழிவகுக்கும். நம்முடைய பாவங்களை அவரிடம் கொண்டுபோய், அவருடைய அன்பான, மன்னிக்கும் இதயத்தை புதிதாக அனுபவிப்போம்.

 

பரலோக மிகுதி

எட்டு வாழைப்பழங்கள் இருக்கும் என்று நினைத்தேன். அதற்குப் பதிலாக, எனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மளிகைப் பைகளைத் திறந்தபோது, இருபது வாழைப்பழங்களைக் கண்டுபிடித்தேன்! நான் இங்கிலாந்துக்குச் சென்றதன் அர்த்தம், மளிகைப் பொருட்களை பவுண்டுகளில் ஆர்டர் செய்வதிலிருந்து கிலோகிராமில் அவற்றைக் கோருவதற்கும் மாறினேன் என்பதை நான் விரைவாக உணர்ந்தேன். மூன்று பவுண்டுகளுக்குப் பதிலாக, மூன்று கிலோகிராம் (கிட்டத்தட்ட ஏழு பவுண்டுகள்!) வாழைப்பழங்களை ஆர்டர் செய்திருந்தேன்.

தாராளமாய் பழங்கள் இருந்ததினால் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்பொருட்டு நான் வாழைப்பழ ரொட்டியை அதிகமாய் செய்தேன். அதற்காக நான் பழத்தை பிசைந்தபோது, எனது வாழ்க்கையின் மற்ற பகுதிகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அங்கு நான் எதிர்பாராத மிகுதியை அனுபவித்தேன்.  மேலும் ஒவ்வொரு பாதையிலும் தேவனை நான் சாட்சியிட்டேன். 

பவுல் தனது வாழ்க்கையில் தேவனுடைய மிகுதியைப் பற்றி பிரதிபலிக்கும் இதேபோன்ற அனுபவத்தை பெற்றதாக தோன்றுகிறது. தீமோத்தேயுவுக்கு எழுதிய தனது முதல் கடிதத்தில், பவுல் இயேசுவுக்கு முன்பாக தனது வாழ்க்கையை விவரிக்கிறார். தான் “தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன்” என்றும் தன்னை “பிரதான பாவி” என்றும் விவரிக்கிறார் (1 தீமோத்தேயு 1:13,16). பவுலின் உடைந்த நிலையில், தேவன் கிருபையையும், விசுவாசத்தையும், அன்பையும் தாராளமாக ஊற்றினார் (வச. 14). அவருடைய வாழ்வில் உள்ள அனைத்து மிகுதிகளையும் விவரித்த பிறகு, பவுல் அப்போஸ்தலரால் தேவனுக்கு துதி செலுத்தாமல் இருக்க முடியவில்லை. தேவனுக்கே “கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக” என்று அறிவிக்கிறார் (வச. 17).

பவுலைப் போலவே, பாவத்திலிருந்து மீட்பதற்கான இயேசுவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டபோது, நாம் அனைவரும் ஏராளமான கிருபையைப் பெற்றோம் (வச. 15). விளைந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பற்றி சிந்திக்க நாம் இடைநிறுத்தும்போது, அபரிவிதமாய் நம்மை ஆசீர்வதிக்கும் நமது தேவனுக்கு நன்றியுள்ள துதியில் பவுலுடன் இணைவதைக் காண்போம்.