
தேவனுக்கென்று இன்னும் கனிகொடுத்தல்
ஒரு பழைய நாட்டுப்புறக் கதையில், ஒரு பெண் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவாள், ஒரு நீளமான குச்சியின் இருமுனைகளிலும் இருவாளிகள் இருக்கும், ஒன்று புதிய உறுதியான வாளி, மற்றொன்று விரிசலுள்ள பழைய வாளி. அவள் வீட்டுக்கு வருகையில், புதிய வாளி நிறைந்திருக்கும், ஆனால் பழைய வாளியோ கிட்டத்தட்ட காலியாக இருக்கும். பழைய வாளி குற்ற உணர்ச்சியோடு அவளிடம் மன்னிப்பு கேட்டது. அதைத் திரும்பிப் பார்த்த அந்த பெண், அவளுடைய வழிப்பாதையை அதற்குச் சுட்டிக்காட்டி, “நீ இருக்கும் திசையில், இந்த வழியெங்கும் பூத்திருக்கும் பூக்களைக் கண்டாயா? நீ அவற்றிற்குத் தினமும் நீர்பாய்ச்சுகிறாய், நதிக்குப் போகும் என் பயணத்தையே நீ அழகாக்கிவிட்டாய்” என்றாள்.
இளமையைப் போற்றி புகழும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். இது இளையது, உறுதியானது, வடுக்களற்ற புதியதும், திறனுள்ளதாயும் இருக்கிறது. எனினும் வேதாகமம்; விரிசலுள்ளதும், தண்ணீர் நிற்காததுமான பழையவற்றிலிருந்தும் வலுவற்றதிலிருந்தும் வெளிப்படும் நீதி நிறைந்த ஒரு அழகைக்குறித்து நமக்குச் சொல்கிறது. முதிர்ந்த பாடல் எழுத்தாளர், "நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்" (சங்கீதம் 92:12) என்றார்.
இப்படியிருக்க, முதுமை என்றால் ஞானம் என்று எப்போதும் அர்த்தமாகாது. ஆனால், இளமை நம் வாழ்க்கைக்குத் தர இயலாத படிப்பினைகளை முதுமை கற்றுத்தரும். காரணம், முதியவர்கள் கொஞ்சம் அதிக காலம் வாழ்ந்துள்ளனர், கொஞ்சம் அதிக அனுபவம் கொண்டுள்ளனர், மேலும் தேவனுக்குள் செழிக்கும்படியான விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் கொஞ்சம் ஆழமாய் வேரூன்றியுள்ளனர். இத்தகைய முதியோர், “முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (வ.14).
நமது வாழ்க்கையில், முதியவர்கள் தொடர்ந்து அற்புதமான கனி தருகின்றனர். அதனைக் கவனிக்கவும், அவர்களுக்காக அக்கறைப்படவும் நேரம் ஒதுக்குவோமாக.

இயேசுவோடு ஒப்புரவாகுதல்
“விமானத்தில் ஏற தயாராகுங்கள்” என்ற அழைப்பு சத்தம் தொனித்தது. ஒரு வாலிபர் குழுவின் தலைவனாகவும், சிறப்புச் செய்தியாளராகவும் ஒரு மிஷனரி பயணத்திலிருந்தேன். நுழைவு சீட்டையும், கடவுச்சீட்டையும் எடுக்க என் பையில் துழாவி, அதிர்ந்தேன்! கடவுச்சீட்டு அதில் இல்லை.
என்னை விட்டுவிட்டு என் குழுவினர் விமானம் ஏறினர். புதிய கடவுச்சீட்டு பெற நான்கு நாட்கள் கடுமையாக முயன்றேன். நூற்றுக்கணக்கான தொலைப்பேசி அழைப்புகள், நாட்டின் தலைநகர் வரை பயனற்ற ஒரு பயணம், அங்கிருந்து மீண்டும் என் ஊருக்கு நீண்ட பயணம், பக்கத்து ஊரில் இரண்டு நாட்கள் தங்கியிருத்தல், பின்பு எங்கள் உள்ளூர் அரசியல்வாதியின் அலுவலக உதவியுடன் எனக்கு புதிய கடவுச்சீட்டு கிடைத்து, என் குழுவினரோடு இணைந்தேன்.
கடவுசீட்டு ஒரு எளிய, சிறிய புத்தகம் தான். ஆனால், என் பயணத்திற்கு இருந்த ஒரே உத்தரவாதி அதுமட்டுமே. புதிய கடவுசீட்டை பெற நான் கடினமாய் செயலாற்றினபோதும், இதனை எனது நித்திய பயண இலக்கோடு ஒப்பிடுகையில் மதிப்பற்றதாகவே தோன்றியது. அது இயேசுவின் மீதிருக்கும் விசுவாசமே, ஆம் நமது பாவங்களிலிருந்து இரட்சிப்படையவும், அவருடனான புதிய வாழ்விற்கும் நமக்குள்ள ஒரே உத்தரவாதி அதுவே.
"இப்பொழுதே இரட்சணிய நாள்" (2 கொரிந்தியர் 6:2) என்று வேதாகமம் சொல்கிறது. கிறிஸ்துவில் வெளிப்பட்ட இரட்சிப்பென்னும் விடியலைத்தான் பவுல் இங்கே விவரிக்கிறார். அவரை விசுவாசிக்கும்போது, நாம் தேவனுடைய அன்பையும், அனைத்து சிருஷ்டிக்குமான அவரது மீட்பையும், சீர்பொருத்தும் கிரியையையும் அனுபவிப்போம். இன்றே, “தேவனோடே ஒப்புரவாகுங்கள்” (5:20) என்பதின் பொருளை மெய்யாகவே அறிந்துகொண்டதை நிச்சயப்படுத்திக்கொள்வோம்.

மனம் தளராதீர்கள்
இளைப்பு. சத்யா, தனது புதிய வேலையில் ஒன்பது மாதத்திற்குப்பின் இதை உணர்ந்தான். இயேசுவின் விசுவாசியாக, தனது பணியைச் செய்யவும் சவால்களை எதிர்கொள்ளவும் தேவனின் நியமங்களையே பின்பற்றும்படி நாடினான். ஆனால், மனிதர்கள் சார்ந்த பிரச்சனைகள் நீடித்தன, நிர்வாகத்திலும் சிறிதளவே முன்னேற்றம் இருந்தது. தான் கையாலாகாதவனாக உணர்ந்தான்.
ஒருவேளை, சத்யாவைப் போல நீங்களும் சோர்ந்திருக்கலாம். உங்களுக்கு நல்லது எதுவெனத் தெரியும், ஆனாலும் அதைச் செய்வதற்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெலனற்றவர்களாக உணரலாம். மனம் தளராதீர்கள். அப்போஸ்தலன் பவுல் நம்மை இந்த வார்த்தைகளால் ஊக்குவிக்கிறார்: "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (கலாத்தியர் 6:9) இங்கே, ஒரு விவசாயியின் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். அநேக விவசாயிகள் அறிந்துள்ளதுபோல, விதைப்பது கடினமான வேலை.
“ஆவிக்கென்று” (வ.8) விதைப்பதும் கடினமான வேலையே. ஆவியானவரின் நடத்துதலைப் பின்பற்றி, அவரை கனப்படுத்தும் வாழ்வை வாழ நாடுகின்ற இயேசுவின் விசுவாசிகள் களைத்து, மனம் தளரக்கூடும். ஆனால், நாம் அவரது வாக்கைப் பற்றிக்கொண்டால், அறுவடையும் வரும். நாம் ”நித்தியஜீவனை” அறுப்போம் (வ.8. பார்க்க: யோவான் 17:3) கிறிஸ்து திரும்பி வருகையில் தேவ ஆசீர்வாதமாக நாம் பெறப்போகும் மகா விளைச்சல்; இந்த வாழ்க்கையிலும் அவரை அறிவதன்மூலம் உண்டாகும் நம்பிக்கையும் சந்தோஷமும் நமக்குண்டு. நாம் ஏற்ற காலத்தில் அறுப்போம், இந்த காலநேரமானது பருவங்களாலோ காலசூழ்நிலைகளாலோ அல்லாமல் பூரணமான தேவனுடைய சித்தத்தின்படியே தீர்மானிக்கப்படுகிறது. அறுவடை வரும்வரை, தேவபெலத்தால் நாம் தொடர்ந்து விதைப்போம்.

இலகுவானதும், கடினமானதும்
மார்க் ஒரு உற்சாகமான இளம் போதகர். ஒரு காலை வேளையில், தனது மகன் ஓவனுடன் பந்து விளையாடுகையில், ஓவன் தடுமாறி விழுந்து மரித்தான். நிலைகுலைந்து போன மார்க், இன்றும் அதற்காக வேதனைப்படுகிறார். ஆனால், அந்த வலியினூடே மிகுந்த மனதுருக்கமுடைய போதகரா க மாறியுள்ளார். மார்க்கின் துயரத்தில் பங்கேற்ற நான், “தேவன் ஒருவனை ஆழமாக காயப்படுத்துமட்டும், அவன் அவரால் அபிரிதமாக ஆசிர்வதிக்கபடுது சந்தேகமே " என்று ஏ.டபல்யு.டோசர் குறிப்பிட்டிருந்த தனது புரிதலுக்கு, மார்க்கின் சோதனையும் ஒரு சான்றோ என்று வியக்கிறேன்.
ஆனால், அது உண்மையில் அவ்வளவு எளிதல்ல. இஸ்ரவேலர்களின் பயணத்தை கவனித்தால், தேவனின் அறிவதர்கரிய வழிமுறைகளில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். புதிதாய் தோன்றிய தேசத்திற்குத் தேவன், “ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி" (யாத்திராகமம் 13:17) எகிப்திலிருந்து எளிதான பாதையில் அழைத்து வந்தார். எனினும் சில வசனங்கள் தள்ளி, தேவன் மோசேயிடம் பார்வோன் தனது இராணுவத்தோடு இவர்களை பின்தொடரும்படிக்கு பாளயமிறங்க சொன்னார் (14:1-4). பார்வோன் இந்த பொறியில் வீழ்ந்தான். இஸ்ரவேலர்கள் மிகவும் பயந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் (வ.10). “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (வ.14) என்று மோசே அவர்களைத் திடப்படுத்தினான்.
தேவன் தமது ஜனங்களை வளர்க்கவும், தமக்கு மகிமையுண்டாக்கவும்; கடினம் மற்றும் எளிதுமான இரண்டு பாதைகளையும் உபயோகிக்கிறார். தேவன், "நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்" (வ.4) என்று வாக்குரைத்தார். இஸ்ரவேலர் அவ்வாறே செய்தனர். நாமும் அவ்வாறே செய்யலாம். எளிதோ, கடிதோ ஒவ்வொரு சோதனையினூடே தேவன் நமது விசுவாசத்தைக் கட்டுவிக்கிறார். வாழ்க்கையின் எளிதான காலத்தில், அவரில் இளைப்பாறுங்கள். வாழ்க்கையின் கடினமான நேரத்தில், அவர் உங்களைச் சுமக்கட்டும்.
