எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

பெரிய ஒளி

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும், 2018ஆம் ஆண்டு, ஒரு மதிய சாகசத்தை விரும்பி, ஒரு குறுகிய குகைக்குள் இறங்கினர். தீடீரென்று உயர்ந்த நீர்மட்டம் அவர்களை இன்னும் குகைக்குள் ஆழ்த்தியது. மீட்புப்பணியாளர்கள், இரண்டரை வாரங்கள் கழித்தே அவர்களை மீட்டனர். மீட்புப்பணியாளர் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி, அவர்களை தேட முயற்சித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரு பாறையின் மீது அமர்ந்து, ஆறு ஒளிரும் விளக்குகளை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். அவர்கள் மணிக்கணக்காக இருளில் இருந்துகொண்டு, அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு ஒளி வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, இருளும் அந்தகாரமும் சூழ்ந்த உலகத்தை விவரிக்கிறார். அதில் ஒன்று வன்முறையிலும் பேராசையிலும் முறியடிக்கப்பட, மற்றொன்று கிளர்ச்சியினாலும் வேதனையினாலும் சிதைந்தது (ஏசாயா 8:22). அழிவைத் தவிர வேறொன்றுமில்லை. நம்பிக்கையின் விளக்கு முழுவதுமாய் அணைவதற்கு முன் மங்கி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த மங்கிய மனச்சோர்வு முடிவல்ல என்று ஏசாயா வலியுறுத்துகிறார். தேவனுடைய இரக்கத்தினால், “முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை” (9:1). தேவன் தன்னுடைய ஜனத்தை இருளில் அழிவதற்கு அனுமதிப்பதில்லை. தீர்க்கதரிசி ஜனங்களுக்கு நம்பிக்கையை அறிவிக்கிறார். பின்பு, பாவம் தோற்றுவித்த இருளின் ஆதிக்கத்தை முழுவதுமாய் விரட்டுவதற்கு, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கிறார். 

இயேசு வந்தார். நாம் இப்போது ஏசாயாவின் வார்த்தைகளை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வாசிக்கிறோம்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (வச. 2) என்று ஏசாயா சொல்லுகிறார். 

இருள் எந்த அளவிற்கு அந்தகாரமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை; நம்முடைய சூழ்நிலை எவ்வளவு சோர்வை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமில்லை; நாம் இருளில் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இங்கு இயேசு இருக்கிறார். ஒரு பெரிய ஒளி நம்மை நோக்கி பிரகாசிக்கிறது.

வல்லமையுள்ளதும் நேசிக்கக்கூடியதும்

ஈக்வேடார் எரிமலை 2020ஆம் ஆண்டில் வெடித்து சிதறியது. அதிலிருந்து வெளிவந்த கருமையான தீப்பிளம்புகள் 12,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பிற்று என்று செய்தி ஊடகங்கள் அறிவிக்கிறது. அந்த பிளம்பு நான்கு மாகாணங்களில் (ஏறத்தாழ 198,000 ஏக்கர்) பாய்ந்து சாம்பல் நிறத்தில் காணப்பட்டது. வானம் மங்கலாகவும், இருள் சூழ்ந்தும் காணப்பட்டது. காற்று சற்று தடிமனாய் வீசியதால் சுவாசிக்க கடினமாய் தோன்றியது. பெலிசியானோ இங்கா என்ற விவசாயி, “எல் கமர்சியோ” என்ற பத்திரிக்கையில் அளித்த பேட்டியொன்றில், “இந்த தூசுகளெல்லாம் எங்கிருந்து வந்தன என்று எங்களுக்குத் தெரியாது... ஆனால் வானம் இருட்டுவதை கண்டு நாங்கள் அஞ்சினோம்” என்று கூறியுள்ளார். 

இஸ்ரவேலர்கள், “சேர்ந்துவந்து, (சீனாய்) மலையின் அடிவாரத்தில்” நின்று, “அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும்” சூழ்ந்ததைக் கண்டு அஞ்சினர் (உபாகமம் 4:11). அதிரக்கூடிய தேவனுடைய சத்தத்தைக் கேட்டு மக்கள் அஞ்சினர். அது பயமுறுத்தக்கூடியதாயிருந்தது. ஜீவனுள்ள தேவனை சாட்சியிடும் ஆச்சரியமான ஒரு அனுபவமாய் அது இருந்தது.

பின்பு “கர்த்தர்… பேசினார்,” அவர்கள், “வார்த்தைகளின் சத்தத்தை” கேட்டார்கள், ஆனால் “ஒரு ரூபத்தையும் காணவில்லை” (வச. 12). அவர்களின் எலும்புகளை அதிரப்பண்ணிய வார்த்தை அவர்களுக்கு ஜீவனையும் நம்பிக்கையையும் கொடுத்தது. தேவன் இஸ்ரவேலர்களுக்கு பத்துக் கற்பனைகளைக் கொடுத்து, அவர்களோடு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார். கருமேகத்திலிருந்து ஒலித்த அந்த சத்தம் அவர்களை அதிரப்பண்ணியது. ஆனால் அவர்களை கவர்ந்திழுத்து நேசித்தது (யாத்திரரகமம் 34:6-7). தேவன் வல்லமையுள்ளவர், உலகத்திற்கு அப்பாற்பட்டவர், அதிரக்கூடியவர். ஆனாலும் அவர் நம்மை அன்போடு நெருங்குகிறார். வல்லமையுள்ள அன்பான தேவனே நம்முடைய அத்தியாவசிய தேவை. 

சோதித்தல்

முதன்முறையாக என்னுடைய மகன்களை 14,000 அடி உயரமுள்ள மலையேற்றத்திற்கு கூட்டிச்செல்லும்போது அவர்கள் சற்று பதட்டமாய் காணப்பட்டனர். அவர்களால் அதைச் செய்ய முடியுமா? அவர்கள் அந்த சவாலுக்கு ஒத்துக்கொண்டார்களா? என்னுடைய இளைய மகன், வழியில் நின்று அதிக நேரம் ஓய்வெடுத்தான். “அப்பா, இனி மேல் என்னால் போகமுடியாது” என்று திரும்ப திரும்பச் சொன்னான். ஆனால் இந்த பயணம் அவர்களுக்கு நன்மையானது என்று நம்பினேன், அவர்கள் என்னை நம்பவேண்டும் என்றும் விரும்பினேன். தன்னால் இனி போகவே முடியாது என்று கூறிய என்னுடைய மகன், சிகரத்தின் உச்சிக்கு ஒரு மைல் தொலைவில் எங்களை முந்திக்கொண்டு ஆர்வமாய் ஓடினான். அவனுடைய பயத்தின் மத்தியிலும் அவன் என்னை நம்பினதைக் குறித்து அவன் சந்தோஷப்பட்டான்.

மலையேற்றத்தின்போது ஈசாக்கு தன் தகப்பன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் வியப்படைவதுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தன் மகனின் மீது கத்தியை ஓங்கிய ஆபிரகாம் தன் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் அசந்துவிட்டேன் (ஆதியாகமம் 22:10). அவனுடைய குழப்பமான, பதைபதைக்கும் நிலையிலும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தான். அதிர்ஷ்டவசமாய் ஒரு தேவ தூதன் அவனைத் தடுத்துவிட்டான். “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே” (வச.12) என்றும் சொன்னான். ஈசாக்கு மரிப்பது தேவ சித்தமல்ல. 

இந்த சம்பவத்தையும் நம் வாழ்க்கையையும் கவனத்துடன் ஒப்பிடும்போது, துவக்க வரிகளை நினைவுகூருவது அவசியம்: “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்” (வச. 1). இந்த சோதனையின் மூலம் ஆபிரகாம் எந்த அளவிற்கு தேவனை விசுவாசித்தான் என்பதை அறிந்துகொண்டான். தேவனுடைய அன்பான இருதயத்தையும் அவருடைய தேவையை சந்திக்கும் குணத்தையும் புரிந்துகொண்டான். 

நம்முடைய குழப்பமான, இருளான, சோதிக்கப்படும் தருணங்களில் நம்மைக் குறித்தும் தேவனைக் குறித்தும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம். மேலும் அந்த சோதனைகளின் மூலம் தேவன் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை வைக்க முடியும். 

உண்மை, பொய், கண்காணிப்பு

2018 பேஸ்பால் காலத்தில், களத்தில் இல்லாத விளையாட்டு வீரர்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனுக்கு, பயிற்சியாளர் ஒரு பந்தைக் கொடுக்க விரும்பினார். ஆனால் பயிற்சியாளர் அந்தப் பந்தை சிறுவனை நோக்கி எறியும்போது வேறொரு நபர் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் காணொளி புகழ்பெற்றதாகி விட்டது. செய்தி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அந்த மனிதனின் முரட்டுத்தனத்தை விமர்சித்தது. தவிர, அங்கு இருந்த பார்வையாளர்களுக்கு முழு நிகழ்வும் தெரியாது. இதற்கு முன்பு, ஒரு தவறாய் அடிக்கப்பட்ட பந்தை பிடிப்பதற்கு அந்த மனிதர் இளைஞனுக்கு உதவி செய்திருந்தார் மற்றும் அடுத்தடுத்து அவர்கள் வழியிலே வரும் பந்துகளைப் பகிர்ந்துக்கொண்டு பிடிக்க அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர். துரதிஷ்டவசமாக உண்மையான நிகழ்வு வெளிவர இருபத்து நான்கு மணி நேரம் ஆனது. அதற்குள்ளாக கலவரக் கும்பல் அந்த குற்றமற்ற மனிதரை அடித்து, காயப்படுத்திவிட்டனர்.

அநேக நேரங்களில், நாம் துணுக்குளை மட்டும் வைத்துக்கொண்டு முழு உண்மைகளும் தெரிந்துவிட்டதாக நினைக்கிறோம். நம்முடைய நவீன அரைகுறை கலாச்சாரத்தில், முழு நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளாமல், வியத்தகு காணொலிகளையும், கோபமூட்டும் துணுக்குகளையும் வைத்துக்கொண்டு, மக்களைக் கண்டனம் செய்வது எளிது. இருந்தாலும் “அபாண்டமான சொல்லைப் பரப்ப வேண்டாம்” (யாத். 23:1) என்று வேதாகமம் எச்சரிக்கிறது. குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன், உண்மையைத் தெரிந்துக்கொள்ள, முடிந்த அனைத்தையும் நாம் செய்து, பொய்யில் பங்கேற்காமல் இருக்க உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு விழிப்புணர்வு ஆவி மேற்கொள்ளும்போதும், உணர்வுகள் தூண்டப்படும்போதும், தீர்ப்பலைகள் பெருகும்போதும், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தவறுசெய்யும் கூட்டத்தைப் பின்தொடர்வதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் (வச. 2).

இயேசுவில் விசுவாசிகளாயிருக்கும் நாம், அபாண்டமான சொல்லைப் பரப்பாமலிருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஞானத்தை வெளிப்படுத்தவும், நம்முடைய வார்த்தைகள் உண்மை என்பதை உறுதிப்படுத்த அவர் நமக்குத் தேவையானதை கொடுப்பாராக.

நல்ல போராட்டம்

அமெரிக்காவின் அரசியல்வாதி ஜான் லூவிஸ் 2020ஆம் ஆண்டு மரித்தபோது நிறைய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர். 1965இல், மார்டின் லூத்தர் கிங் ஜூனியரோடு சேர்ந்து கருப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கோரி, போராட்டம் நடத்தியுள்ளார். அந்த அணிவகுப்பின்போது லூவிஸின் கபாலத்தில் அடிபட்டு, அந்த தழும்பை அவர் வாழ்நாள் முழுவதும் சுமக்கவேண்டியிருந்தது. “நீ நியாயமில்லாத ஒன்றைப் பார்க்கும்போது, அங்கு நீ பேசுவதற்கு அல்லது ஏதாவது செய்வதற்கான பொறுப்பு உனக்கு உள்ளது” என்று லூவிஸ் கூறுகிறார். “நல்லப்  போராட்டத்திற்கு குரல் கொடுப்பதற்கு என்றுமே பயப்படாதேயுங்கள்” என்றும் கூறுகிறார்.

உண்மையாய் நின்று, சரியென்று தோன்றுகிற “நல்ல போராட்டத்தை” போராடுவதைக் குறித்து லூவிஸ் துவக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். பிரபலமாகாத சில விஷயங்களை அவர் பேசவேண்டியிருந்தது. ஆமோஸ் தீர்க்கதரிசியும் இதை நன்கு அறிந்திருந்தார். இஸ்ரவேலின் பாவத்தையும் அநியாயத்தையும் பார்த்த அவரால் சும்மாயிருக்க முடியவில்லை. ஆமோஸ் இஸ்ரவேலின் ஆளும்வர்க்கம் எவ்வாறு “தரித்திரரை மிதித்து, அவன் கையிலே லஞ்சம் வாங்கி, “பொளிந்த கற்களால் வீடுகளை” கட்டி, “இன்பமான திராட்சைத் தோட்டங்களை” நாட்டினார்கள் என்று அறிவிக்கிறார் (ஆமோஸ் 5:11-12). தன்னுடைய பாதுகாப்பையும் சுகத்தையும் கருதி ஒதுங்கி நிற்காமல், ஆமோஸ் அவர்களின் தீமையை சுட்டிக்காட்டுகிறார். தேவையான ஒரு நல்ல போராட்டத்தை தீர்க்கதரிசி மேற்கொள்ளுகிறார். 

ஆனால் இந்த போராட்டம் எல்லோருக்குமான நீதியை முன்வைத்து செய்யப்படுகிற நல்லப் போராட்டம். “நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது” (வச. 24) என்று ஆமோஸ் சூளுரைக்கிறார். நல்ல போராட்டத்தில் நாம் ஈடுபடும்போது (நீதியுள்ள, முரட்டுத்தனமில்லாத, நீதியை வலியுறுத்தும் போராட்டம்), நன்மையும் சௌக்கியமுமே நம்முடைய இலக்காயிருக்கும். 

உறுதியான மறுப்பு

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. ஜெர்மானிய  நாசிப்படைகள், ப்ரான்ஸ் ஜகார்ஸ்டேட்டரை இழுத்துக் கொண்டுவந்து அடிப்படை இராணுவப் பயிற்சி கொடுத்தனர். பயிற்சியின்போது அடால்ஃப் ஹிட்லருக்கு உண்மையாயிருக்கும்படிக்கான உறுதிமொழி எடுக்க விரும்பாமல் தவிர்த்தான். எனவே அவனை அவனுடைய பண்ணைக்குத் திருப்பி அனுப்பினர். ஆனால் சிலநாட்களில் யுத்தத்திற்கு வரும்படி அவனுக்கு அழைப்பு வந்தது. ஜெர்மானிய நாசியினரின் கொள்கையையும் யூத இனப்படுகொலையையும் ஏற்கமறுத்த ஜகார்ஸ்டேட்டர், தேவனுக்கு உண்மையாயிருக்க தீர்மானித்து, நாசி படையோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட மறுத்தான். அவனுடைய மனைவி மற்றும் மூன்று மகள்களும் நிர்க்கதியாய் விடப்பட்டு, ஜகார்ஸ்டேட்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

மரணத்தின் பிடியில் நிறுத்தப்பட்டு ஆண்டாண்டுகாலமாய் கிறிஸ்துவை மறுதலிக்கும்படிக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பல உண்மைக் கிறிஸ்தவர்கள் அதை செய்யாமல் உறுதியாய் நின்றனர். அதில் ஒன்றுதான் தானியேலின் சம்பவம். “எந்த மனுஷனாகிலும்... ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும்” சேவித்தால் அவனை சிங்கக் கெபியில் போடவேண்டும் என்றும் கட்டளை அதிகாரப்பூர்வமாய் வெளியிடப்பட்டபோதும், தானியேல் கர்த்தருக்கு உண்மையாயிருந்தான். “தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வச. 10). தீர்க்கதரிசி தேவனிடத்தில் முழங்காற்படியிட்டு, என்ன வந்தாலும் சரியென்று தேவனை மட்டும் சார்ந்துகொண்டான். 

சிலவேளைகளில் நம்முடைய தேர்ந்தெடுப்பு தெளிவாயிருக்கும். நம்மைச் சுற்றிலுமிருக்கிற மக்கள் இதைச் செய்யுங்கள் என்று நம்மை தூண்டினாலும், நம்முடைய பேரும் புகழும், சுகவாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும், நாம் தேவனுக்கு கீழ்ப்படிவதிலிருந்து பின்வாங்காமல் இருப்போம். அது விலையுயர்ந்த ஆசீர்வாதங்களாயிருந்தாலும் நம்முடைய மறுப்பைத் தெரியப்படுத்துவோம்.

சமாதானமான வாழ்க்கை

ஆஸ்திரேலியாவின் பெர்த் என்ற இடத்தில் “சமாதான இல்லம்” என்று ஒரு இடமுண்டு. போதை பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கான இடம் அது. இந்த சமாதான இல்லத்தில் தேவனுடைய சமாதானத்தை அறிவிக்கும் அன்புள்ள பணியாளர்களை அவர்கள் சந்திக்க நேரிடும். போதை, மதுபானம், சூதாட்டம் மற்றும் பல கெட்ட பழக்கங்களினால் சிதைந்துபோன வாழ்க்கை அங்கே தேவனுடைய அன்பினால் சீரமைக்கப்படுகிறது.

இங்கு நடைபெறும் மனமாற்றத்திற்கு பெரிய காரணம், சிலுவையின் செய்தியே. சமாதான இல்லத்தை நாடும் உடைக்கப்பட்ட மக்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்புவதால், தங்களுடைய ஜீவியத்திலும் உயிர்தெழும் அனுபவத்தை பெறுகிறார்கள். நாமும் கிறிஸ்துவில் சமாதானத்தையும் சுகத்தையும் அடைகிறோம்.

சமாதானம் என்பது பிரச்சனையே இல்லாத வாழ்க்கையல்ல மாறாக, பிரச்சனைகளின் மத்தியில் தேவனுடைய நிறைவை அனுபவிப்பது. நம் எல்லோருக்கும் இந்த சமாதானம் தேவை. அது கிறிஸ்துவினாலும் அவருடைய ஆவியானவராலும் மட்டுமே சாத்தியம். ஆகையினால்தான் பவுல் கலாத்திய சபையை ஆவியின் மறுரூபத்திற்கு நேராய் வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவி நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்யும்போது, அன்பு, சந்தோஷம், நீடியபொறுமை போன்ற ஆவியின் கனிகள் நம்மில் உருவாகத் துவங்கும் (கலாத்தியர் 5:22-23). அவராலேயே நிலையான சமாதானத்தை நமக்குத் தரமுடியும்.

ஆவியானவர் நமக்கு தேவ சமாதானத்தை கொடுக்கும்போது, நம்முடைய எல்லா தேவைகளுக்காகவும் நாம் பரமபிதாவை நாடுவதற்கு பழகுகிறோம். அப்பொழுது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்,” “(நம்முடைய) இருதயங்களையும் (நம்முடைய) சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).

கிறிஸ்துவின் ஆவியில் நம்முடைய உள்ளம் மெய்சமாதானத்தை அனுபவிக்கிறது. 

தெய்வீக மீட்பு

நேரிடப்போகிற ஒரு பெரிய ஆபத்தைக் குறித்த செய்தியை தொலைபேசி வாயிலாக கேள்விப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் தன்னுடைய வாகனத்தை இருட்டான இரயில் பாதையில் வேகமாய் செலுத்தி, அந்த இரயில் பாதையில் கார்  சிக்கியிருந்த இருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார். வெகுவேகமாய் வந்த இரயிலானது அந்த காரை உடைத்து நொறுக்கியது அருகிலிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. “50லிருந்து 80 மைல் வேகத்தில்” அந்த இரயில் வந்தது என்று அந்த அதிகாரி அறிவித்தார். அந்த இரயில் காரை உடைத்து நொறுக்குவுதற்கு சற்று முன், சற்றும் யோசிக்காமல் அந்த காவல் அதிகாரி, காரில் சுயநினைவிழந்திருந்த நபரை வெளியே இழுத்து கனப்பொழுதில் அவரின் உயிரைக் காப்பாற்றினார்.    

நம்பிக்கையிழக்கும் வாழ்க்கைத் தருணத்திலெல்லாம் தேவன் நம்மை விடுவிக்கிறவர் என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கி, ஒடுக்கப்பட்டு தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலர்கள், தாங்கள் விடுவிக்கப்படுவது சாத்தியமேயில்லை என்று நினைத்தனர். யாத்திராகமத்தில் தேவன் அவர்களுக்கான நம்பிக்கையின் வார்த்தையைக் கொடுக்கிறார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து,” “அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன்,” “அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (3:7). தேவன் பார்ப்பது மட்டுமின்றி, கிரியையும் செய்கிறார். “அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க... இறங்கினேன்” (வச. 8) என்று கூறுகிறார். அதற்கேற்ப, தேவன் இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். இதுதான் தெய்வீக மீட்பு.

தேவன் இஸ்ரவேலை மீட்கும் இந்த சம்பவம், இக்கட்டில் சிக்கித் தவிக்கும் நமக்கு தேவனுடைய இருதயத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறது. தேவன் வந்து விடுவித்தாலொழிய வாய்ப்பே இல்லை என்று அழிவின் பாதையில் பயணிக்கும் நம்மில் பலருக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நம்முடைய சூழ்நிலைகள் சாத்தியமில்லாமல் தெரியலாம். அதிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவரான தேவனை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து, நம் இருதயத்தை அவரிடமாய் திருப்புவோம்.

சரியான தீர்ப்பு

பதினான்கு வயது சிறுவனைக் கொலைசெய்த குற்றத்திற்காக 1983ஆம் ஆண்டு மூன்று வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர். “சிறுவனின் தடகள சட்டைக்காய் அவன் சுடப்பட்டான்” என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று வாலிபர்களும் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்படுவதற்குள் அவர்கள் 36 ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்கு பின்பாக செலவிடவேண்டியிருந்தது. ஆம், அந்த கொலையை செய்தது வேறொரு நபர். அந்த மூவரையும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து அவர்களை விடுவிக்குமுன், அந்த நீதிபதி அவர்களிடம் மன்னிப்புகேட்டார்.

எவ்வளவுதான் நாம் முயற்சிசெய்தாலும் (நம்முடைய அதிகாரிகள் எவ்வளவு நன்மைகளை செய்திருந்தாலும்) மனிதனுடைய நீதி பெரும்பாலும் குறைவுள்ளதாகவே இருக்கிறது. நாம் எப்போதும் எல்லா விவரங்களையும்  தெரிந்தவர்கள் அல்ல. சிலநேரங்களில் நேர்மையற்றவர்கள், நிஜத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கின்றனர். சிலநேரங்களில் நாமே தவறு செய்கிறோம். தவறுகளை சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால், இந்த சிக்கலான மனிதர்களை போலல்லாமல், தேவன் சரியான நீதியை வழங்குகிறார். “அவர் கிரியை உத்தமமானது” என்றும் “அவர் வழிகளெல்லாம் நியாயம்” என்றும் மோசே கூறுகிறார் (உப. 32:4). தேவன் உள்ளதை உள்ளதென்று பார்க்கிறார். சிலவேளைகளில் நாம் தவறிழைத்தாலும் கடைசியில் தேவன் அவைகளை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார். அது எப்போது என்பது துல்லியமாய்  தெரியவில்லை என்றாலும், நாம் நம்பிக்கையோடு சேவிக்கிற தேவன், “நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” (வச. 4).

எது சரி, எது தவறு என்று தீர்மானிக்கமுடியாத ஒரு குழப்பமான பாதையில் நாம் நடக்கலாம். நமக்கு அல்லது நம்மை சார்ந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை காலத்திற்கும் சரிசெய்யமுடியாதோ என்று ஒருவேளை நாம் பயப்படலாம். ஆனால் இம்மையிலோ அல்லது மறுமையிலோ, நமக்கான நீதியை நிச்சயமாய் நிலைநாட்டும் நம்முடைய நீதியின் தேவனை முழுமையாய் நம்ப முற்படுவோம்.