ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு
அமினா, ஈராக் அகதி. ஜோசப், பிறப்பால் அமெரிக்கர். இருவரும் அரசியலில் எதிரெதிர் கட்சிகளின் சார்பில் அரசியல் போராட்டத்தில் பங்கேற்றனர். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் அரசியலில் மோதிக்கொண்டால், பெரிய பகை உண்டாகும் என்றறிவோம். ஒரு சிறிய கலவரக்காரக் கூட்டம் ஜோசப்பின் சட்டையை தீயிட முயற்சிக்க, அதைப் பார்த்த அமினா உடனே அவரைப் பாதுகாக்க ஓடினார். பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த ஜோசப், “இனி நாங்கள் மக்களாக பிரிந்திருப்பது இயலாதது, ஏனெனில் இச்செயலில் எங்கள் இருவருக்குமே (இரு கட்சியினருக்கும்) உடன்பாடில்லை"” என்று கூறினார்.
பிறரோடு நமக்கு நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், தவிர்க்க இயலாத உண்மையான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு நம்மை ஒன்றிணைக்கிறது. நாமெல்லோருமே தேவனால் உண்டாக்கப்பட்டு, மனிதம் எனும் ஒரே குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். பாலினம், சமுதாய அந்தஸ்து, இனம் மற்றும் அரசியல் என்று பல வேறுபாடுகள் நமக்குள் நிலவினாலும் தேவன் நம் அனைவரையும் “தம்முடைய சாயலாக” சிருஷ்டித்தார் (1:27). உண்மை எதுவானாலும், தேவன் என்னிலும் உன்னிலும் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதே மறுக்கமுடியாத உண்மை. மேலும் அவருடைய இவ்வுலகை நன்மையால் நிரப்பி, ஆண்டுகொள்ளவும் நாம் பகிரப்பட்ட நோக்கம் பெற்றுள்ளோம் (வச. 28).
நாம் தேவனில் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை மறக்கையில், நமக்கும் மற்றவர்களுக்கும் தீங்குண்டாக்குகிறோம். ஆனால் தேவனின் கிருபையிலும், உண்மையிலும் ஒன்றுபடுகையில், நன்மையான, செழிப்பான உலகை ஸ்தாபிக்கும் அவருடைய சித்தத்தில் பங்கேற்கிறோம்.
கடும் போராட்டம்
1896ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் ஒரு தொலைக்கோடியான இடத்தில், 36 கிலோ எடையுள்ள சிறுத்தை ஒன்று கார்ல் அகேலி என்ற ஆய்வாளரை துரத்தியது. அவரை எட்டிப்பிடித்த அந்த சிறுத்தை, தன்னுடைய தொண்டையை கவ்வ துடித்ததை அவர் நினைவுகூருகிறார். அது முடியாதபோது, அவருடைய வலது கையை தன்னுடைய கொடூரமான பற்களால் கவ்வியது. இருவரும் மணலில் கட்டிப் புரண்டனர். ஒரு நீளமான, கடும் போராட்டம் நிகழ்ந்தது. அகேலி வலுவிழந்தார். யார் முதலில் பலியாவது என்ற நிலை. பின்னர், தன் முழு பலத்தையும் ஒன்றாய் சேர்த்து, அந்த பெரிய மிருகத்தை வெறுங்கையால் மூச்சுத் திணரச் செய்தார்.
இயேசுவை விசுவாசிக்கும் நம் ஒவ்வொருவரும் கடும் போராட்டத்தை தவறாமல் எதிர்கொள்வோமென்றும், நாம் தோற்றதாக எண்ணி நம் முயற்சிகளை கைவிடும் தருணங்களையும் பவுல் அப்போஸ்தலன் விளக்குகிறார். அதற்கு பதிலாக, “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” (எபேசியர் 6:11,14) நம்மை அறிவுறுத்துகிறார். நம் இயலாமையை எண்ணி பயந்து நடுங்காமல், நாம் நமது பெலத்தை நம்புகிறவர்கள் அல்லவென்றும், தேவனை நம்பி விசுவாசத்தில் அடியெடுத்து வைக்கவும் ஊக்குவிக்கிறார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (வச. 10) என்று எழுதுகிறார். நம் போராட்டங்களின் மத்தியில், ஜெபத்தில் நாம் கூப்பிடும் தூரத்தில்தான் தேவன் உள்ளார் (வச. 18).
ஆம்! நமக்கு அநேக போராட்டங்கள் உண்டு. நம்முடைய சுய பெலத்தையும், சாமர்த்தியத்தையும் வைத்து அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. நாம் எதிர்கொள்ளும் சகல தீமைகளையும், எதிரிகளையும் காட்டிலும் தேவன் பெரியவர்.
மெய்யாகவே ஜீவிக்கிறார்
ஈஸ்டர் ஞாயிறு முடிந்து அடுத்தவாரம் என்பதால், எங்கள் ஐந்து வயது மகன் அநேக உயிர்த்தெழுதல் செய்திகளைக் கேட்டிருந்தான். அவன் பொதுவாக அநேக கேள்விகளைக் கேட்பான். அவற்றுள் பெரும்பாலும் எங்களை திக்குமுக்காடச் செய்யும். நான் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்க, அவன் பயணியர் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருந்தான். வெளியே வேடிக்கை பார்த்தவாறே, ஏதோ ஆழமான சிந்தையிலிருந்தான். “அப்பா” என்றழைத்தவன் சற்று நிறுத்தி, கடினமானதைக் கேட்கும் ஆயத்தத்தோடே, “இயேசு நம்மை மறுபடியும் உயிரோடெழுப்புகையில், நாம் உண்மையாகவே உயிரோடிருப்போமா? அல்லது அது நம்முடைய கற்பனைதானா?” என்று கேட்டான்.
இதைப்பற்றி தாராளமாக பேச நமக்கு துணிச்சல் இல்லையென்றாலும், நம்மில் அநேகருக்கு இதே கேள்வியுண்டு. உண்மையாகவே தேவன் நம்மை குணப்படுத்தப் போகிறாரா? உண்மையாகவே அவர் நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்புவாரா? தம்முடைய வாக்குத்தத்தங்களை உண்மையாகவே நிறைவேற்றுவாரா?
“புதிய வானம், புதிய பூமி” (வெளி 21:1), என்று அப்போஸ்தலர் யோவான் நம் எதிர்காலத்தை வர்ணிக்கிறார். அந்த பரிசுத்த நகரத்தில், “தேவன்தாமே நம்மோடேகூட இருந்து நம்முடைய தேவனாயிருப்பார்” (வச. 3). கிறிஸ்து ஜெயித்ததினால், நமக்கு கண்ணீரற்ற எதிர்காலம் வாக்குப்பண்ணப்பட்டுள்ளது. தேவனுக்கும் அவர் ஜனத்திற்கும் எதிராக எந்த தீமையும் ஆளுகை செய்யப்போவதில்லை. இச்சிறந்த எதிர்காலத்தில்தான், “மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” (வச. 4) என்று வாக்குப்பண்ணப்பட்டுள்ளது.
அதாவது, தேவன் நமக்கு வாக்குப்பண்ணும் எதிர்காலத்தில், நாம் மெய்யாகவே ஜீவனோடிருப்போம். இப்போது நாம் வாழும் வாழ்வு வெறும் நிழலே என்று சொல்லுமளவிற்கு நாம் மெய்யான வாழ்வை அனுபவிப்போம்.
இது அனைத்தையும் மாற்றும்
நெடுங்காலமாய், யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய யரோஸ்லாவ் பெலிகன், தன் மிகையான கல்விபட்டங்களுக்கு பேர்பெற்றவரும், “தன் தலைமுறையில் மிகக் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ வரலாற்று நிபுணர்களில்” ஒருவருமாய் திகழ்ந்தார். அவர் முப்பது புத்தகங்களுக்கு மேல் பிரசுரித்துள்ளார். மேலும், தன் மிகப்பெரிய எழுத்து சேவைக்காக வாழ்நாள் விருதான கௌரவமிக்க க்ளுக் பரிசையும் (முடரபந Pசணைந) பெற்றுள்ளார். எனினும், அவருடைய மாணவர்களில் ஒருவர், மரணப்படுக்கையில் தன் ஆசிரியர் கூறிய, “கிறிஸ்து எழுந்ததுண்டானால் வேறு எதுவுமே முக்கியமில்லை, கிறிஸ்து எழாதிருந்தால் எதற்குமே அர்த்தமில்லை” என்ற இவ்வார்த்தைகளே அவர் கூறிய மிகச்சிறந்த வார்த்தைகளாக நினைவுகூருகிறார்.
பவுலின் திட நம்பிக்கையையே பெலிக்கனும் எதிரொலித்தார், “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:14). அப்போஸ்தலன் இவ்வளவு துணிவோடு சொல்லக் காரணம், உயிர்த்தெழுதல் வெறுமனே ஒரு அற்புதம் மட்டுமல்ல; மாறாக, மனித சரித்திரத்தில் தேவ மீட்பின் செயலில் உச்சக்கட்டம் இதுவே என்று அறிந்திருந்தார். உயிர்தெழுதலின் வாக்குத்தத்தம், இயேசு மரித்தோரிடமிருந்து எழுவார் என்று அவர் அளித்த உறுதி மட்டுமல்ல, ஆனால் மரித்து, பாழான வாழ்க்கைகள், சுற்றுப்புறங்கள், உறவுகள் போன்றவைகளும் கிறிஸ்துவின் மூலமாக ஒருநாளில் திரும்ப உயிர்பெறும் என்று அவர் கொடுத்த வாக்குறுதியையும் உறுதிசெய்கிறது. உயிர்த்தெழுதல் மட்டுமில்லையென்றால், நாம் குழுப்பத்தில் சிக்கியிருப்போம் என பவுல் அறிந்திருந்தார். உயிர்த்தெழுதல் இல்லையெனில் மரணம் தான் வெற்றிபெறும்.
ஆனால், நிச்சயமாகவே “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்(தார்)” (வச. 20). ஜெயம்கொண்டவராலே அழிக்கப்பட்டு, மரணமும் தோற்றது. பின்வரப்போகும் அனைத்து உயிர்தெழுதலின் “முதற்பலன்” இயேசுவே. அவர் தீமையையும், மரணத்தையும் மேற்கொண்டுவிட்டதால், நாம் இன்று விடுதலையாக தைரியமாய் வாழலாம். இதுவே அனைத்தையும் மாற்றுகிறது.
நேர்மையான வாழ்க்கை
ஆபேல் முத்தாய் என்னும் கென்யா நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர், ஒருமுறை சர்வதேச அளவிலான திறந்தவெளி ஓட்டப்பந்தயத்தில் ஓடுகையில், வெற்றிக் கோட்டை மிகஅருகில் நெருங்கிவிட்டார். ஆனால், வெற்றிக் கோட்டை தான் கடந்துவிட்டதாக எண்ணி, அதற்கு முன்னமே தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு பின்னாக இரண்டாவது இடத்தில் ஓடிவந்த ஸ்பானிய ஓட்டபந்தய வீரர் இவான் பெர்னான்டஸ் அனயா தனக்கு முன்னாக ஓட்டத்தை நிறுத்திவிட்ட முத்தாயின் தவறைப் புரிந்துகொண்டார். அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி முந்திக்கொண்டு ஓடாமல், முத்தாயை தன்னுடைய தோள்மீது சாய்த்து, அவரை முன்னாக ஓடவிட்டு தங்கப் பதக்கத்தை அவர் பெறும்படி செய்தார். ஏன் வெற்றிவாய்ப்பை தவறவிட்டீர்கள் என்று நிருபர்கள் அனயாவிடம் கேட்டபோது, முத்தாய்தான் ஜெயிக்க வேண்டும்; நானல்ல என்று பதிலளித்தாராம். “என்னுடைய வெற்றிக்கான மதிப்பு என்ன? பதக்கத்தின் மதிப்பு என்னவாகும்? என்னுடைய தாயார் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்றார். ஒரு பத்திரிக்கையில் “அனயா, வெற்றிக்கு பதிலாக நேர்மையை தேர்ந்தெடுத்தார்” என்று பிரசுரிக்கப்பட்டது.
நீதிமொழிகள், நேர்மையாய் வாழத் தீர்மானிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்தமானதை விட உண்மையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்லுகிறது. “செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்” (நீதிமொழிகள் 11:3). நேர்மையாய் வாழ்வது என்பது சரியான வாழ்க்கை பாதை மட்டுமல்ல, மேன்மையான ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்குகிறது. “துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்” (வச.3) என்று நீதிமொழிகள் தொடர்கிறது. நீண்ட வாழ்க்கை ஓட்டத்தில் நேர்மையில்லாமை பலனளிக்காது.
நம்முடைய நேர்மையைத கைவிட்டால், தற்காலிக வெற்றி நிஜத்தில் தோல்வியே. ஆனால் விசுவாசமும், உண்மையும், தேவ வல்லமையில் நம்மை உருவாக்குகையில், நல்ல வாழ்க்கையை நேர்மையாய் வாழும் நற்குணசாலிகளாய் உருவாகுவோம்.
நற்செய்தியின் மகிழ்ச்சி
1964 ஆம் ஆண்டு ஒரு மாலையில், மகா அலாஸ்க்காவின் நிலநடுக்கம், நான்கு நிமிடங்களுக்கு மேலாக நீடித்து, 9.2 அளவு பதிவாகி, அனைத்தையும் அசைத்தும், உதிர்த்தும் போட்டது. நங்கூரம் பாய்ச்சுமிடத்தில் நகரத்தின் பகுதிகள் உள்வாங்கி, பெரும் பள்ளங்களும், இடிபாடுகளும் மட்டும் இருந்தன. அந்த பயங்கரமான இரவின் இருளினூடே, செய்தியாளர் ஜெனி சான்ஸ் தனது மைக்கை பிடித்திக்கொண்டு, தங்கள் வானொலிகளின் அருகிலே தவிப்போடு இருந்த மக்களுக்கு செய்திகளை வழங்கினார்: புதர்களில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு கணவர் தன் மனைவி உயிரோடிருப்பதை கேட்டறிந்தார், சாரணர் படையின் முகாமிற்கு சென்ற தங்கள் மகன்கள் நலமாயிருப்பதை அந்த கலக்கமடைந்த குடும்பத்தினர் கேட்டறிந்தனர், காணாமல் போன தங்கள் பிள்ளை மீண்டும் கிடைத்த செய்தியை அந்த தம்பதியினர் கேட்டனர், வானொலி வரிக்கு வரி நல்ல செய்திகளை இந்த அழிவின் மத்தியிலும் அறிவித்தது.
தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளை கேட்டபோது இஸ்ரவேல் ஜனங்கள் இப்படியாக தான் உணர்ந்திருப்பார்கள், அவர், "சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்" (61:1) என்றார். தரிசாய்ப்போன தங்கள் தலைகீழான வாழ்க்கையையும், இருளடைந்த எதிர்காலத்தையும் அவர்கள் வெறித்துக் கொண்டிருந்தபோது, ஏசாயாவின் தெளிவான குரல் அனைத்தும் இழந்ததுபோல தோன்றிய தருவாயில் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டுவந்தது. தேவன், "இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்… நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து"(வ.1,4) இவைகளை செய்ய நோக்கமாயிருந்தார். பயங்கரத்தின் மத்தியிலே, ஜனங்கள் தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தை கேட்டனர், அது அவருடைய நற்செய்தியே.
இன்று நமக்கு, இயேசுவிலே, தேவனுடைய நற்செய்தியை கேட்கிறோம். இதுதான் சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு பொருள். நம் பயங்களினுடே, வலிகளினுடே, மற்றும் தோல்விகளின் மத்தியில் அவர் நற்செய்தியை வழங்குகிறார்.அதினால், நம் துன்பங்கள் விலகி சந்தோஷத்திற்கு வழிவிடும்.
அன்பின் வல்லமை
80 வயதை கடந்த ஒரு வினோதமான ஜோடி, ஒருவர் ஜெர்மனியிலிருந்து மற்றொருவர் டென்மார்க்கிலிருந்து. இருவரும் தம் தம் துணையை இழப்பதற்கு முன் 60 ஆண்டுகள் திருமண வாழ்வை அனுபவித்தனர். 15 நிமிட பயண தொலைதூரம்தான் இருவருக்கும் இருந்த போதிலும் அவர்களுடைய வீடுகள் வெவ்வேறு நாட்டில் இருந்தன. எனினும், அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க தொடங்கினார்கள், வழக்கமாக உணவு சமைத்து ஒன்றாக தங்கள் நேரத்தை கழித்தனர். துரதிருஷ்டவசமாக ஜெர்மானிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக, அதின் எல்லைகளை கடப்பதற்கு தடை செய்தது. ஆனாலும், தடையின்றி அனுதினமும் மாலை மூன்று மணிக்கு இருவரும் இரு நாட்டின் எல்லை கோட்டின் அருகே அமைதியான எல்லைப் பகுதியில் அவரவர்களுடைய நாட்டுக்குரிய எல்லைகளில், அருகருகே அமர்ந்து இன்பச் சுற்றுலா அனுபவித்து மகிழ்ந்தனர். "நாங்கள் இங்கே இருப்பதற்கு காரணமே அன்புதான் " என்று அந்த மனிதர் விளக்குகிறார். அவர்களுடைய அன்பு நாட்டின் எல்லைகளை விட வலிமையாகவும், பெருந்தொற்றை காட்டிலும் பலமாகவும் இருந்தது.
உன்னதப்பாட்டு அன்பின் வெல்லமுடியாத வலிமையை பற்றி ஆழமாக பதிவிடுகிறது "நேசம் மரணத்தைப்போல் வலிது" (8:6.) என்று சாலொமோன் வலியுறுத்துகிறார். நாம் யாரும் மரணத்திற்கு தப்புவதில்லை; அது தகர்க்க முடியாத வலிமையோடு இறுதி நிலையாக நம்மேல் வருகிறது. ஆயினும், எழுத்தாளர் கூறுகிறார், அன்பும் மரணத்தைப் போலவே ஒவ்வொரு அணுவிலும் சமவலிமை உடையது. இன்னும் என்ன சொல்வோம், அன்பு "அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது." (வ.6). நீங்கள் எப்போதாகிலும் நெருப்பை கொழுந்துவிட்டு எரிய பார்த்ததுண்டா? அன்பும் நெருப்பை போலவே அவிக்க இயலாது. "திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது;" (வ.7)
மனித அன்பும் எப்பொழுதெல்லாம் தன்னலமற்றதாயும், உண்மையுள்ளதாயும் இருக்கிறதோ, அப்போது இத்தகைய குணாதிசயங்களை பிரதிபலிக்கும். எனினும், தேவனுடைய அன்பு மாத்திரமே இத்தகைய ஆற்றலும், இத்தகைய அளவில்லா அழங்களும், இத்தகைய உறுதியான வல்லமையும் கொண்டிருக்கிறது. நமக்கு வியப்பூட்டும் செய்தி யாதெனில் தேவன் நம் ஒவ்வொருவரையும் இத்தகைய அணைக்க முடியாத அன்பினாலே நேசிக்கிறார்.
இறப்பும் தாழ்மையும்
பண்டைய அறிஞர்கள் ஜெரோம் மற்றும் டெர்டுலியன், பண்டைய ரோமாபுரியின் கதைகளை குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றனர், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றிக்கு பின்னர் ஜெயம் பெற்ற அந்த தளபதி ஒளிருகின்ற ஒரு ரதத்தின் மேலேறி தலைநகரின் நடைபாதைகளில் விடியற்காலம் தொடங்கி பொழுதுசாயும் வரை உலா வருவாராம். ஜனங்களும் ஆரவாரம் செய்வார்கள். அந்த தளபதி பெருமிதம் பொங்க, தன் வாழ்நாள் சாதனையான இந்த கௌரவதால் மகிழ்ச்சி அடைவார். எனினும், புராணத்தின்படி அந்த தளபதிக்கு பின்னால் ஒரு பணியாள் நாள்முழுதும் நின்றுகொண்டு அவரது காதில், "மெமென்டோ மோரி" (லத்தீனில் "நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்" என்று அர்த்தம்) என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே இருப்பானாம். அனைத்து பாராட்டுகள் மத்தியில், தளபதிக்கு தான் சாவுக்குரியவன் என்ற நினைப்பு அவன் தாழ்மையாய் இருக்க மிக அவசியப்பட்டது.
யாக்கோபு பெருமை நிறைந்த விருப்பங்களினாலும், தன்னிறைவால் புடைத்துபோன கர்வத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு எழுதினார். அவர்களுடைய ஆணவத்தை எதிர்த்து," தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று" (யாக்கோபு 4:6) என்று உருவகுத்தும் வார்த்தைகளை பேசினார். "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்" (வ.10) என்பதே அவர்களுக்கு தேவைப்பட்டது. மேலும் அவர்கள் எவ்வாறு தாழ்மையடைய முடியும்? அந்த ரோம தளபதிகளை போல அவர்களும், தாங்கள் ஒரு நாள் மரிப்பார்கள் என்பதை நினைவுகூர வேண்டும். "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." (வ.14) என்று யாக்கோபு வலியுறுத்தினார். அவர்களுடைய பெலவீனங்களை ஒப்புக்கொள்வதே புகையைப்போல காணாமல் போகும் அவர்கள் முயற்சிகளில் வாழ்வதற்கு மாறாக தேவனுடைய சித்தத்தின் கீழ் திடமாக வாழ அவர்களை விடுவித்தது (வ.15)
நம்முடைய நாட்கள் குறுகியது என்பதை நாம் மறக்கும்போது, அது பெருமைக்கு வழிவகுக்கும். ஆனால் நாம் சாவுக்குரியவர்கள் என்பதை புரிந்து தாழ்மைப்படும்போது, நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு மூச்சும் தேவ கிருபையாக பார்ப்போம். மெமென்டோ மோரி ("நீ மரிப்பாய் என்பதை நினைவில்கொள்").
ஒரு மதியீனமான முதலீடு
ஐடா ஸ்கட்டர், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிராமத்தில் மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்கு ஒரு சிறிய இடத்தை வாங்கினார். அவர்களுடைய இந்த முயற்சி மதியீனமானது என்று பலர் கருதினர். இளமையான, திருமணமாகாத ஐடா ஸ்கட்டர், அமெரிக்காவிலிருந்த தன்னுடைய சொந்த வீட்டின் சுகத்தை விட்டுவிட்டு, தற்போது கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்று அறியப்படுகிற நிறுவனத்தை ஸ்தாபிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் வீணாய் கருதப்பட்ட, அவர்களின் நேரம், மூலதனம், மற்றும் முயற்சிகள், இன்று மருத்துவ சிகிச்சையின் முன்னோடியாகவும், இந்திய சுகாதார அமைப்பிற்கு ஓர் கலங்கரை விளக்காகவும் திகழ்கிறது.
தேவன் எரேமியாவிடம் முற்றிலும் மதியீனமான ஒரு முதலீட்டைச் செய்யும்படிக்கு கட்டளையிடுகிறார்: “பென்யமீன் நாட்டு ஆனத்தோத் ஊரில் உள்ள நிலத்தை வாங்கிக்கொள்ளும்” (எரேமியா 32:8). அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது (வச. 2). எரேமியா நிலத்தை வாங்கினாலும் அது கூடிய சீக்கிரத்திலேயே பாபிலோனுக்குச் சொந்தமாகிவிடும். எல்லாம் இழக்கப் போகிற நேரத்தில் எந்த முட்டாளாவது முதலீடு செய்வானா?
தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிற ஒரு நபர், எதிர்காலத்தைக் குறித்து எவருக்கும் இல்லாத ஒரு பார்வையோடு இருப்பார். “ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்” (வச. 15). தேவன் அழிவை விட அதிகமான நன்மையைக் காண்கிறார். தேவன் மீட்பு, சுகம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவதாக வாக்குப் பண்ணுகிறார். தேவனுடைய ஊழியத்திலோ அல்லது தனிப்பட்ட உறவுகளிலோ நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் வீணாய் போவதில்லை. மற்றவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய நடத்துதலின் பேரில் நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் இவ்வுலகத்திலேயே அர்த்தமுள்ளதாய் மாறும்.