1896ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் ஒரு தொலைக்கோடியான இடத்தில், 36 கிலோ எடையுள்ள சிறுத்தை ஒன்று கார்ல் அகேலி என்ற ஆய்வாளரை துரத்தியது. அவரை எட்டிப்பிடித்த அந்த சிறுத்தை, தன்னுடைய தொண்டையை கவ்வ துடித்ததை அவர் நினைவுகூருகிறார். அது முடியாதபோது, அவருடைய வலது கையை தன்னுடைய கொடூரமான பற்களால் கவ்வியது. இருவரும் மணலில் கட்டிப் புரண்டனர். ஒரு நீளமான, கடும் போராட்டம் நிகழ்ந்தது. அகேலி வலுவிழந்தார். யார் முதலில் பலியாவது என்ற நிலை. பின்னர், தன் முழு பலத்தையும் ஒன்றாய் சேர்த்து, அந்த பெரிய மிருகத்தை வெறுங்கையால் மூச்சுத் திணரச் செய்தார்.

இயேசுவை விசுவாசிக்கும் நம் ஒவ்வொருவரும் கடும் போராட்டத்தை தவறாமல் எதிர்கொள்வோமென்றும், நாம் தோற்றதாக எண்ணி நம் முயற்சிகளை கைவிடும் தருணங்களையும் பவுல் அப்போஸ்தலன் விளக்குகிறார். அதற்கு பதிலாக, “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” (எபேசியர் 6:11,14) நம்மை அறிவுறுத்துகிறார். நம் இயலாமையை எண்ணி பயந்து நடுங்காமல், நாம் நமது பெலத்தை நம்புகிறவர்கள் அல்லவென்றும், தேவனை நம்பி விசுவாசத்தில் அடியெடுத்து வைக்கவும் ஊக்குவிக்கிறார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (வச. 10) என்று எழுதுகிறார். நம் போராட்டங்களின் மத்தியில், ஜெபத்தில் நாம் கூப்பிடும் தூரத்தில்தான் தேவன் உள்ளார் (வச. 18). 

ஆம்! நமக்கு அநேக போராட்டங்கள் உண்டு. நம்முடைய சுய பெலத்தையும், சாமர்த்தியத்தையும் வைத்து அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. நாம் எதிர்கொள்ளும் சகல தீமைகளையும், எதிரிகளையும் காட்டிலும் தேவன் பெரியவர்.