எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ரவி எஸ். ராட்ரேகட்டுரைகள்

பலப்பரீட்சை

 

நம்மில் பெரும்பாலோர் கயிறு இழுக்கும் போட்டியை நன்கு அறிந்திருப்போம். இது ஒரு நீண்ட கயிறு கொண்டு, ஒரு மையக் கோட்டை தாண்டும்படி ஒன்றை ஒன்று இழுக்கும் இரு குழுவை உள்ளடக்கியது. அதை இன்னும் வேடிக்கையாக மாற்ற, சில நேரங்களில், ஒரு மண் குழி அல்லது குளிர்ந்த நீர்த் தொட்டி நடுவில் இருக்கும், இதனால் தோல்வியடைந்த அணி அதில் விழும். வெற்றிக்கு உடல் வலிமை மட்டும் போதாது. அதற்குக் கவனம், உறுதிப்பாடு மற்றும் திறமையும் தேவை.

நாமும் இதுபோன்ற பலப்பரீட்சையில் இருப்பதாக பவுல் கூறுகிறார். ஆனால் நாம் வேடிக்கைக்காக விளையாடுவதைப் போலல்லாமல், நமது போராட்டம் "துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்" (வ.12) இருக்கிறது. நாம் ஒரு ஆவிக்குரிய பலப்பரீட்சையில் இருக்கிறோம், நம் எதிரிகள் நம்மைத் தோற்கடித்து பாவத்தின் அழுக்குக்குள் நம்மை விழ வைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்து ஏற்கனவே சிலுவையில் பொல்லாதவனைத் தோற்கடித்துவிட்டார் என்ற உறுதியுடன் "தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" (வ.13) என்று இந்த ஆவிக்குரிய பலப்பரீட்சைக்கு ஆயத்தப்படும்படி பவுல் நம்மை அழைக்கிறார். வலுவாக இருந்து வெற்றி பெற, மனித பலம் அல்லது நல்ல நோக்கங்கள் உதவாது. நாம் தேவனை நாடி, அவரையே சார்ந்திருக்க வேண்டும். பவுல் சொல்வது போல், நாம் "கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் " (வ.10) பலப்பட வேண்டும். "பிசாசின் தந்திரங்களோ" "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களோ" இவற்றை நாமே சமாளிப்பது கடினம் (வ.11-16). அதிர்ஷ்டவசமாக, நாமே சமாளிக்கவும் வேண்டாம். தேவன் அருளும் பெலனையும் உத்தியையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் (வ.11). நாம் அவரிடம் செல்லும்போது, அவர் நமக்கு "சத்தியம்" என்ற கவசத்தைத் தருகிறார். நமது பாதங்களுக்கு “சமாதானத்தின் சுவிசேஷம்” பொருத்தப்படுகின்றன. மேலும் நாம் "விசுவாச" கேடகத்தால் பாதுகாக்கப்படுகிறோம். உண்மையில், ஆவிக்குரிய பலப்பரீட்சையின் மூலம் உறுதியாக நிற்க அவருடைய வார்த்தை நமக்கு உதவுகிறது (வ.14-17).

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

உண்மையுள்ள உக்கிராணக்காரன்

2023ல் பெங்களூருவில் சில காலம் கழிக்கும் திட்டத்துடன் வந்தேன். ஆனால் அந்த காலம் நான் எதிர்பாராமல் நீண்டது. எனக்கு இரவு உணவு கொண்டு வரும் குடும்பத்தினர் எனக்கு உதவ முடியாத நிலையில், நான் வெளியே சாப்பிட ஆரம்பித்தேன். இது என் உடல்நிலையைப் பாதித்தது. அதிர்ஷ்டவசமாக நான் குறுகிய காலமே பழகிய ஒரு குடும்பம், எனக்கு உணவளித்து உதவ விரும்புவதாகச் சொன்னார்கள். அவர்கள் "பிறருக்கு உதவி சேவை செய்திடத் தேவன் எங்களுக்கு பெலனளித்துள்ளார், நாங்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாய் இருக்க வேண்டும்" என்றனர். தேவனின் வார்த்தை பல்வேறு சூழல்களில் உக்கிராணத்துவத்தை பற்றிப் பேசுகிறது மற்றும் நாம் "உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக" (லூக்கா 12:42-48) இருக்க வேண்டும் என்கிறது. தேவன் நமக்குப் பல வரங்களைத் தந்திருக்கிறார், அவற்றை நாம் உண்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (1 பேதுரு 4:10). இந்த ஈவுகளைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் பிறருக்கு ஊழியம் செய்யவும், அன்புடன் விருந்தோம்பல் செய்யவும் நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ.8-10). நம்மிடம் இருப்பது நமக்காக மட்டுமல்ல, பிறரின் நலனுக்காகவும் இருக்கிறது என்பதை ஒரு உண்மையுள்ள உக்கிராணக்காரன் உணர்ந்துகொள்கிறான். பெங்களூருவில் உள்ள குடும்பம் அதையே எனக்காகச் செய்தது. அவர்கள் தங்கள் பலத்தை உணர்ந்து அதற்கேற்ப உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாகச் செயல்பட்டார்கள்.

நம்மிடம் எத்தகைய திறன் இருந்தாலும் அது தேவனிடமிருந்தே வந்தது என்பதை நினைவில் கொள்வோம் (வ.10). நாம் பிறருக்கு உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வரங்களையும் உடைமைகளையும் அவர் நம்மிடம் நம்பி ஒப்படைத்துள்ளார். எனவே, நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து ஒருவருக்கொருவர் மனமுவந்து உதவி செய்வோம். நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களும், தனித்தன்மை வாய்ந்த மனிதர்களாக நாம் உருவாக்கப்பட்ட விதமும் நமக்கு மட்டுமல்ல, தேவைப்படுகிற அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்வோம். தேவன் கொடுத்த கிருபைகள் மற்றும் ஈவுகளுக்கு ஏற்ப நாம் பிறருக்கு நன்மை செய்யும்போது, நாம் அவர்களின் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக மாறுகிறோம். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தலைமுறை தலைமுறையாய்

டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு பாட்டிமார்கள், எண்பத்தொரு வயதில் எண்பது நாட்களில் உலகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணத்தை முடித்ததற்காக சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பானார்கள். இருபத்தி மூன்று வருடங்களாக உலகை சுற்றிய இந்த சிறந்த நண்பர்கள் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்தனர். அவர்கள் அண்டார்டிகாவில் தொடங்கி, அர்ஜென்டினாவில் டேங்கோ, எகிப்தில் ஒட்டகங்களில் சவாரி, வட துருவத்தில் சறுக்கி ஓடும் சவாரி என்று பல அனுபவங்களை மேற்கொண்டனர். ஜாம்பியா, இந்தியா, நேபாளம், பாலி, ஜப்பான், ரோம் உள்ளிட்ட பதினெட்டு நாடுகளுக்குச் சென்று ஆஸ்திரேலியாவில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டனர். இருவரும் தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரை உலகப் பயணத்தை அனுபவிக்கத் தூண்டுவதாக நம்புவதாகக் கூறினார்கள்.

யாத்திராகமத்தில், வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு வகையான சாகசத்திற்காக தேவனால் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு ஆக்டோஜெனேரியன்களைப் பற்றி வாசிக்கிறோம். தேவன் மோசேயை பார்வோனிடம் சென்று, தேவனுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கட்டளை கொடுத்தாா். மோசேக்கு துணையாக தேவன் அவனுடைய சகோதரனாகிய ஆரோனை துணைக்கு அனுப்புகிறார். “அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது” (யாத்திராகமம் 7:7).

இந்தக் கோரிக்கை எந்த வயதிலும் பயமுறுத்துவதாக உணரலாம். ஆனால் தேவன் இந்தச் சகோதரர்களை இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். “மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள்” (வச. 10). நானூறு ஆண்டுகளுக்கும் மேலான அடிமைத்தனத்திலிருந்து தேவன் தம் மக்களை விடுவித்ததைக் கண்ட பெருமையை மோசேயும் ஆரோனும் பெற்றனர். எந்த வயதிலும் அவர் நம்மைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த மனிதர்கள் நிரூபிக்கின்றனர். நாம் இளைஞராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றுவோம். 

 

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.