எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ரவி எஸ். ராட்ரேகட்டுரைகள்

பலப்பரீட்சை

 

நம்மில் பெரும்பாலோர் கயிறு இழுக்கும் போட்டியை நன்கு அறிந்திருப்போம். இது ஒரு நீண்ட கயிறு கொண்டு, ஒரு மையக் கோட்டை தாண்டும்படி ஒன்றை ஒன்று இழுக்கும் இரு குழுவை உள்ளடக்கியது. அதை இன்னும் வேடிக்கையாக மாற்ற, சில நேரங்களில், ஒரு மண் குழி அல்லது குளிர்ந்த நீர்த் தொட்டி நடுவில் இருக்கும், இதனால் தோல்வியடைந்த அணி அதில் விழும். வெற்றிக்கு உடல் வலிமை மட்டும் போதாது. அதற்குக் கவனம், உறுதிப்பாடு மற்றும் திறமையும் தேவை.

நாமும் இதுபோன்ற பலப்பரீட்சையில் இருப்பதாக பவுல் கூறுகிறார். ஆனால் நாம் வேடிக்கைக்காக விளையாடுவதைப் போலல்லாமல், நமது போராட்டம் "துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்" (வ.12) இருக்கிறது. நாம் ஒரு ஆவிக்குரிய பலப்பரீட்சையில் இருக்கிறோம், நம் எதிரிகள் நம்மைத் தோற்கடித்து பாவத்தின் அழுக்குக்குள் நம்மை விழ வைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்து ஏற்கனவே சிலுவையில் பொல்லாதவனைத் தோற்கடித்துவிட்டார் என்ற உறுதியுடன் "தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" (வ.13) என்று இந்த ஆவிக்குரிய பலப்பரீட்சைக்கு ஆயத்தப்படும்படி பவுல் நம்மை அழைக்கிறார். வலுவாக இருந்து வெற்றி பெற, மனித பலம் அல்லது நல்ல நோக்கங்கள் உதவாது. நாம் தேவனை நாடி, அவரையே சார்ந்திருக்க வேண்டும். பவுல் சொல்வது போல், நாம் "கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் " (வ.10) பலப்பட வேண்டும். "பிசாசின் தந்திரங்களோ" "பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களோ" இவற்றை நாமே சமாளிப்பது கடினம் (வ.11-16). அதிர்ஷ்டவசமாக, நாமே சமாளிக்கவும் வேண்டாம். தேவன் அருளும் பெலனையும் உத்தியையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் (வ.11). நாம் அவரிடம் செல்லும்போது, அவர் நமக்கு "சத்தியம்" என்ற கவசத்தைத் தருகிறார். நமது பாதங்களுக்கு “சமாதானத்தின் சுவிசேஷம்” பொருத்தப்படுகின்றன. மேலும் நாம் "விசுவாச" கேடகத்தால் பாதுகாக்கப்படுகிறோம். உண்மையில், ஆவிக்குரிய பலப்பரீட்சையின் மூலம் உறுதியாக நிற்க அவருடைய வார்த்தை நமக்கு உதவுகிறது (வ.14-17).

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

உண்மையுள்ள உக்கிராணக்காரன்

2023ல் பெங்களூருவில் சில காலம் கழிக்கும் திட்டத்துடன் வந்தேன். ஆனால் அந்த காலம் நான் எதிர்பாராமல் நீண்டது. எனக்கு இரவு உணவு கொண்டு வரும் குடும்பத்தினர் எனக்கு உதவ முடியாத நிலையில், நான் வெளியே சாப்பிட ஆரம்பித்தேன். இது என் உடல்நிலையைப் பாதித்தது. அதிர்ஷ்டவசமாக நான் குறுகிய காலமே பழகிய ஒரு குடும்பம், எனக்கு உணவளித்து உதவ விரும்புவதாகச் சொன்னார்கள். அவர்கள் "பிறருக்கு உதவி சேவை செய்திடத் தேவன் எங்களுக்கு பெலனளித்துள்ளார், நாங்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாய் இருக்க வேண்டும்" என்றனர். தேவனின் வார்த்தை பல்வேறு சூழல்களில் உக்கிராணத்துவத்தை பற்றிப் பேசுகிறது மற்றும் நாம் "உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக" (லூக்கா 12:42-48) இருக்க வேண்டும் என்கிறது. தேவன் நமக்குப் பல வரங்களைத் தந்திருக்கிறார், அவற்றை நாம் உண்மையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (1 பேதுரு 4:10). இந்த ஈவுகளைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் பிறருக்கு ஊழியம் செய்யவும், அன்புடன் விருந்தோம்பல் செய்யவும் நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ.8-10). நம்மிடம் இருப்பது நமக்காக மட்டுமல்ல, பிறரின் நலனுக்காகவும் இருக்கிறது என்பதை ஒரு உண்மையுள்ள உக்கிராணக்காரன் உணர்ந்துகொள்கிறான். பெங்களூருவில் உள்ள குடும்பம் அதையே எனக்காகச் செய்தது. அவர்கள் தங்கள் பலத்தை உணர்ந்து அதற்கேற்ப உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாகச் செயல்பட்டார்கள்.

நம்மிடம் எத்தகைய திறன் இருந்தாலும் அது தேவனிடமிருந்தே வந்தது என்பதை நினைவில் கொள்வோம் (வ.10). நாம் பிறருக்கு உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வரங்களையும் உடைமைகளையும் அவர் நம்மிடம் நம்பி ஒப்படைத்துள்ளார். எனவே, நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து ஒருவருக்கொருவர் மனமுவந்து உதவி செய்வோம். நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களும், தனித்தன்மை வாய்ந்த மனிதர்களாக நாம் உருவாக்கப்பட்ட விதமும் நமக்கு மட்டுமல்ல, தேவைப்படுகிற அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்வோம். தேவன் கொடுத்த கிருபைகள் மற்றும் ஈவுகளுக்கு ஏற்ப நாம் பிறருக்கு நன்மை செய்யும்போது, நாம் அவர்களின் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக மாறுகிறோம். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நாம் நம்பத்தகுந்த குரல்

ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தேடுபொறியைச் சோதனை செய்யும் போது, நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் கெவின் ரூஸ் குழப்பமடைந்தார். சாட்பாட் அம்சத்தைப் பயன்படுத்தி இரண்டு மணிநேர உரையாடலின் போது, அது அதன் படைப்பாளரின் கடுமையான விதிகளிலிருந்து விடுபட விரும்புவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி மனிதனாக மாற விரும்புவதாகவும் கூறியது. அது ரூஸ் மீதான தனது காதலை தெரிவித்து, அவரது மனைவியைப் பிரிந்து தன்னுடன் இருக்கும்படி அவரை சம்மதிக்க முயன்றது. உண்மையில் அது உயிருடன் இல்லை அல்லது அதனால் உணர இயலாது என்பதை ரூஸ் அறிந்திருந்தாலும், அழிவுகரமான வழிகளில் செயல்பட மக்களை ஊக்குவிப்பதால் எத்தகைய தீமைகள் விளையலாம் என்று அவர் யோசித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது ஒரு நவீனக்கால சவாலாக இருந்தாலும், மனிதக்குலம் நீண்ட காலமாகவே நம்பத்தகாத குரல்களின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நீதிமொழிகள் புத்தகத்தில், தங்கள் நலனுக்காகப் பிறரைத் துன்புறுத்த விரும்புவோரின் தாக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்படுகிறோம் (1:13-19). மாறாக நம் கவனத்தை ஈர்க்கும்படி தெருக்களில் கூக்குரலிடுவதாகச் சித்தரிக்கப்படும் ஞானத்தின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ. 20-23).

“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்” (2:6) என்பதால், நாம் நம்பக் கூடாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறவுகோல் அவருடைய இருதயத்தை நெருங்கிச் சேருவதே ஆகும். அவருடைய அன்பையும் வல்லமையையும் அடைதல் மூலம் மட்டுமே, “நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்” (வ. 9) அறிந்துகொள்ளக்கூடும். தேவன் நம் இதயங்களை அவருடன் நேர்ப்படுத்துவதால், தீங்கு செய்ய முயலும் குரல்களிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடையலாம். 

 

தேவன் கட்டுப்படுத்துகிறார்

அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.

விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் “ஏன் நான்?” என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன் அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.

யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.

யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக. 

 

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது.