அக்கறை காட்டவதின் மூலம் பகிர்தல்
ஒரு இளம் ஊழியர், யாரேனும் ஒருவரை ஆசீர்வதிக்க ஒவ்வொரு நாளும் தேவன் தன்னை பயன்படுத்தவேண்டும் என்று காலையிலே ஜெபிப்பாராம். அவர் எதிர்பார்க்கும் அந்த ஆச்சரியமான தருணங்கள் அவ்வப்போது அவருக்கு சம்பவிக்கும். ஒரு நாள் அவர் வேலைசெய்யும் அலுவலகத்தில் இருந்த சக ஊழியரிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவரிடம் இயேசுவைக் குறித்த விசாரித்தார். இவரும் அவரிடம் வெகு சாதாரணமாக அவருடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தார். விவாதங்களோ, கோபங்களோ அவர்களுடைய பேச்சில் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலினால், அன்பான மற்றும் எளிமையான ஒரு சத்தியத்தைப் பகிரும் தருணமாய் அது இருந்தது என்று அந்த ஊழியர் சொன்னார். தேவனைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம்கொண்ட இன்னொரு புதிய சிநேகிதர் அவருக்கு கிடைத்துவிட்டார்.
மற்றவர்களுக்கு இயேசுவைக் குறித்த சொல்லுவதற்கு பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொள்ளுதல் அவசியம். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப்போஸ்தலர் 1:8) என்று கட்டளையிடுகிறார்.
“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலாத்தியர் 5:22-23). அந்த இளம் ஊழியர் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததுபோல, பேதுரு, “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15) என்று சொல்லுகிறார்.
கிறிஸ்துவை விசுவாசிப்பதினிமித்தம் பாடுகளை அனுபவிக்க நேரிடும்வேளையிலும், நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறோம் என்பதை நம்முடைய வார்த்தைகள் வெளிப்படுத்தும். பின்பு நம்முடைய கிரியைகள் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தும்.
- பாட்ரிசியா ரேபோன்
தேவனின் பாதுகாப்பான அன்பு
ஒரு கோடை இரவு, எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பறவைகள் திடீரென்று குழப்பமான ஓசை எழுப்பின. பாட்டுப்பறவைகள் மரங்களில் இருந்து அலறல் ஓசைகளை எழுப்பியது. ஏன் என்பதை தாமதமாகதான் உணர்ந்தோம். சூரியன் மறையும் போது, ஒரு பெரிய பருந்து ஒரு மரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்து வந்தது. மரத்திலிருந்து பறவைகள் ஆவேசத்துடன் சிதறி, அபாயத்திலிருந்து பறந்து செல்லும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பியது.
வேதாகமம் முழுவதும் நம் வாழ்க்கைக்கு தேவையான எச்சரிக்கைகளை விடுக்கிறது. உதாரணமாக, தவறான போதனைகளுக்கு விரோதமான எச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். நாம் கேட்பதை நாம் சந்தேகிக்கக்கூடும். எவ்வாறாயினும், நம் பரலோகத் தகப்பன் நம்மீது அவருக்குள்ள அன்பின் நிமித்தம், அத்தகைய ஆவிக்குரிய ஆபத்துகளை நமக்குத் தெளிவாக்குவதற்கு வேதத்தின் தெளிவைத் தருகிறார்.
இயேசு, “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” (மத்தேயு 7:15) என்று எச்சரிக்கிறார். மேலும், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்... அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (வச. 16-17; 20) என்றும் எச்சரிக்கிறார்.
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (நீதிமொழிகள் 22:3) என்று நமக்கு நினைவுபடுத்துகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் தேவனுடைய பாதுகாக்கும் அன்பு மறைந்திருந்து நமக்கு அவ்வப்போது வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது.
தங்களுக்கு மாம்ச ரீதியாக ஏற்படப்போகிற ஆபத்தைக் குறித்து பறவைகள் ஒன்றையொன்று எச்சரித்ததுபோல, ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்து நம்மை எச்சரிக்கும் வேதத்தின் சத்தியங்களுக்கு நாம் செவிகொடுப்போமாக.
- பாட்ரிசியா ரேபோன்
மன்னித்தல் மறத்தல்
ஜில் பிரைஸ், ஹைப்பர் தைமேசியா என்னும் மனோநிலையுடன் பிறந்தார். அதாவது, தனக்கு நேரிட்ட அனைத்துக் காரியங்களையும் அசாதாரணமாக விரிவாய் நினைவில் வைத்திருக்கும் திறன். அவள் தன் வாழ்நாளில் அனுபவித்த எந்த சம்பவத்தின் சரியான நிகழ்வையும் அவள் மனதிலிருந்து மீண்டும் இயக்கக்கூடும்.
“மறக்கமுடியாதவைகள்” என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, நடைபெற்ற குற்றங்களை நேர்த்தியாய் நினைவில் வைத்து கண்டறியும் ஹைப்பர் தைமேசியா மனோநிலைகொண்ட ஒரு பெண் போலீஸ் அதிகாரியை முன்னிறுத்தியது. இது ஒருவகையில் நன்மையாகத் தெரிந்தாலும், ஜீல்லுக்கு அப்படி தோன்றவில்லை. அவள் விமர்சிக்கப்பட்ட, இழப்பை அனுபவித்த அல்லது அவளை ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாக்கிய அவள் மறக்கவேண்டும் என்று நினைக்கிற சம்வங்களை அவளால் மறக்க முடியவில்லை. அவள் அந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு கவலைப்படுகிறாள்.
நம் தேவன் சகலமும் அறிந்தவர் (ஒருவேளை ஒருவகையான தெய்வீக ஹைப்பர் தைமேசியாவாக இருக்கலாம்): அவருடைய புரிதலுக்கு வரம்பு இல்லை என்று வேதம் சொல்கிறது. ஆயினும் ஏசாயா புத்தகத்தில், “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (ஏசாயா 43:25) என்று தேவன் சொல்லுவதை நாம் பார்க்கக்கூடும். எபிரெயர் நிருபத்தில், “நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்... அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை” (எபிரெயர் 10:10,17) என்று சொல்லுகிறார்.
நம் பாவங்களை தேவனிடம் ஒப்புக்கொடுப்பதின் மூலம், அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து கவலைப்படுவதை நாம் தவிர்க்கலாம். தேவன் செய்வதைப் போலவே நாமும் அவற்றை விட்டுவிடவேண்டும்: “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம்” (ஏசாயா 43:18). தம்முடைய மிகுந்த அன்பின் நிமித்தம், அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களை தேவன் நினைவுகூர விரும்புவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்
அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை.
அனைவருக்கான தேவனின் இருதயம்
ஒன்பது வயது நிரம்பிய மகேஷ் தனது நெருங்கிய நண்பன் நிலேஷ_டன் அவர்களது வகுப்பு தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு வந்தான். பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தாயார், மகேஷைப் பார்த்தபோது, “போதுமான நாற்காலிகள் இல்லை," என்று சொல்லி அவனை உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. ஏழையாகத் தோற்றமளித்த தனது நண்பருக்கு இடம் கொடுக்க தரையில் உட்கார நிலேஷ் முன்வந்தான். ஆனால் அந்த பெண்மணி அதையும் அனுமதிக்கவில்லை. மனச்சோர்வடைந்த நிலேஷ், கொண்டுவந்த பரிசுப்பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு, மகேஷ_டன் வீடு திரும்பினான். இந்த நிராகரிப்பை அவனுடைய இதயம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த சம்பவம் நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிலேஷ் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவர் தனது வகுப்பறையில் ஒரு காலி நாற்காலியை வைத்திருக்கிறார். ஏன் என்று மாணவர்கள் கேட்டால், “யாருக்கும் வகுப்பறையில் எப்பொழுதும் இடமளிக்க வேண்டும்” என்பது தனது நினைவூட்டல் என்று அவர் விளக்குகிறார்.
எல்லா மக்களையும் நேசிக்கும் இயேசுவின் இருதயத்தை அவருடைய வாழ்க்கையில் நாம் காணக்கூடும்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் (மத்தேயு 11:28). இந்த அழைப்பு “முதலாவது யூதருக்கு” (ரோமர் 1:16) என்னும் இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்திற்கு முரணாகத் தெரியலாம். ஆனால் இயேசுவை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பு என்னும் பரிசு கொடுக்கப்படுகிறது. “விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை” (3:22) என்று பவுல் சொல்லுகிறார்.
அனைவருக்குமான கிறிஸ்துவின் அழைப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29). அவரது இளைப்பாறுதலை நாடும் அனைவருக்காகவும் அவர் திறந்த மனதுடன் காத்திருக்கிறார்.
விடாமுயற்சி பீட்சா
பன்னிரண்டாம் வயதில், இப்ராஹிம் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வந்தார். இத்தாலிய மொழி எதுவும் தெரியாமல், திணறலுடன் போராடி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய இருபதுகளில், இத்தாலியின் ட்ரெண்டோவில் பீட்சா கடையைத் திறந்த இந்த கடின உழைப்பாளி இளைஞனை அந்த போராட்டங்கள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உலகின் முதல் ஐம்பது பிட்சா வியாபாரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்படுவதற்கு அவரது சிறிய வணிகம் தகுதிபெற்றது.
இத்தாலிய தெருக்களில் பசியுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க உதவுவது அவரது நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் ஒரு நியோபோலிடன் பாரம்பரியத்தை விரிவுபடுத்த முயற்சித்தார். அதாவது, அங்ஙனம் பசியில் உள்ளவர்களுக்காக மக்கள் கூடுதல் காபியையோ அல்லது பீட்சாவையோ வாங்கிக்கொடுக்கலாம் என்னும் வழக்கம். புலம்பெயர்ந்த அகதிகள், அவர்களின் கடந்தகால பாரட்பட்சங்களில் சிக்கிகொண்டு சோர்ந்துபோய்விடாதபடிக்கு அவர்களை ஊக்கப்படுததுவதே அவரின் நோக்கமாயிருந்தது.
இத்தகைய விடாமுயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து நன்மை செய்யும்படிக்கு கலாத்தியர்களுக்கு பவுல் போதித்த போதனைகளை நினைவுபடுத்துகிறது. “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலாத்தியர் 6:9). மேலும் பவுல், “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (வச. 10) என்று வலியுறுத்துகிறார்.
அநீதிகள் மற்றும் மொழி தடைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இப்ராஹிம், நல்லது செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். உணவு, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும் பாலமாய் மாறியது. அத்தகைய விடாமுயற்சியால் ஈர்க்கப்பட்டு, நாமும் நல்லதைச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடலாம். நம்முடைய விடாமுயற்சியுடன் நாம் வேலைசெய்யும்போது, அதின் மூலம் தேவன் மகிமைப்படுகிறார்.
கிறிஸ்து நம் மெய்யான ஒளி
“ஒளியை நோக்கி செல்வோம்!” ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானவேளையில் நகரத்தில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு வழிதெரியாமல் நாங்கள் திகைத்தபோது. என்னுடைய கணவர் இப்படியாய் சொன்னார். நாங்கள் ஒரு சிநேகிதரைப் பார்க்கச் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு லிஃப்டில் இருந்து வெளியேறியபோது, அந்த வாரயிறுதி நாட்களில் நாங்கள் செல்ல வேண்டிய திசைக்கு அந்த மங்கிய வெளிச்சத்தில் எங்களுக்கு வழிகாண்பிக்க யாரும் அங்கில்லை. எங்கள் குழப்பத்தைப் பார்த்த ஒரு மனிதரை இறுதியாக சந்தித்தோம். “இந்த நடைபாதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும், ஆனால் வெளியே செல்லுவதற்கான வழி இதுவே” என்று அவர் கூறினார். அவரது வழிகாட்டுதலுடன், நாங்கள் வெளியேறும் கதவுகளைக் கண்டோம். பிரகாசமான சூரிய ஒளியை நாங்கள் வந்தடைந்தோம்.
குழப்பமடைந்த, அவிசுவாசிகளை அவர்களுடைய ஆவிக்குரிய இருளிலிருந்து தம்மைப் பின்பற்றும்படிக்கு இயேசு அழைத்தார். “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12). அவரது ஒளியில், தடுமாற்றங்கள், பாவம் ஆகியவைகள் தென்பட்டாலும், அவற்றை அகற்றும்படிக்கு நாம் அவரிடத்தில் கேட்கும்போது, அத்தகைய இருளை நம்முடைய வாழ்க்கையை விட்டு அவர் அகற்றுவார். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பத்தைப்போல, கிறிஸ்துவின் ஒளி நமக்கு கடவுளின் பிரசன்னம், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலைக் கொண்டுவருகிறது.
யோவான் விளக்கியது போல், இயேசுவே “மெய்யான ஒளி" (யோவான் 1:9). “இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை” (வச. 5). வாழ்க்கையில் அலைந்து திரிவதற்குப் பதிலாக, நம்முடைய பாதையில் ஒளிகாட்டும் அவரைச் சார்ந்துகொள்வது சிறந்தது.
நம்பிக்கைக்கு இணங்குதல்
ஒரு குளிர்காலக் காலையில் கண்மூடித்தனமான காட்சியை நான் எதிர்கொள்ள நேரிட்டது. ஒரு மேகத்தினாலான சுவர். “உறைந்த மேகம்” என்று வானிலை முன்னறிவிப்பாளர் அதை அழைத்தார். எங்கள் இருப்பிடத்திற்கு அரிதாக, இந்த மேகச் சுவர் இன்னும் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. நீல வானம் மற்றும் சூரிய ஒளியும் இன்னும் ஒருமணி நேரத்திற்குள் வந்துவிடும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டது. “இது சாத்தியமேயில்லை” என்று என் கணவரிடம் சொன்னேன். “எங்களால் ஒரு அடி முன்னால் பார்க்க முடியவில்லை.” ஆனால், ஒரு மணி நேரத்திற்குள், அந்த மேச்சுவர் மறைந்தது. வானம் ஒரு சூரிய ஒளியோடு கூடிய ஒரு தெளிவான நீல நிறமாக மாறியது.
ஒரு ஜன்னலில் நின்று, நான் வாழ்க்கையில் இதுபோன்ற மேகச்சுவரை மட்டுமே பார்க்க முடிகிறதே என்று என் நம்பிக்கையின் அளவை யோசித்தேன். “நான் கண்ணால் காண்கின்றவைகளை வைத்தே தேவனை நம்பிகிறேனா?” என்று என் கணவரிடம் கேட்டேன்.
எசேக்கியா ராஜா மரித்த பின்பு, சில கறைபடிந்த ராஜாக்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஏசாயாவும் இதே கேள்வியையே கேட்கிறார். யாரை நாம் நம்புவது? தேவன் ஏசாயாவுக்கு தரிசனத்தைக் கொடுத்து, எதிர்காலத்தில் நடக்கப்போகிறவைகளுக்காக தற்போது தேவனை நம்பலாம் என்று அவருடைய மனதை தேற்றுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி, “உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3) என்று சொல்லுகிறார். அத்துடன் “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்” (வச. 4) என்றும் வலியுறுத்துகிறார்.
நம்முடைய சிந்தை தேவனை மாத்திரம் நம்பும்போது, வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும்போது கூட நம்மால் அவரை விசுவாசிக்கக்கூடும். அதை தற்போது நம்மால் தெளிவாய் பார்க்கமுடியாது. ஆனால் அவரை நாம் விசுவாசிக்கும்போது, நமக்கான உதவி நம்மை நோக்கி வருகிறது என்பதை உறுதியாய் விசுவாசிக்கக்கூடும்.
செயலில் இரக்கம்
பெஞ்சுகளை உருவாக்குவது ஜேம்ஸ் வாரனின் வேலை அல்ல. இருப்பினும், டென்வரில் பேருந்திற்காக காத்திருந்த ஒரு பெண் மண்ணில் அமர்ந்திருப்பதைக் கவனித்தபோது, பெஞ்சை செய்ய ஆரம்பித்தான். மக்கள் கீழே அமர்ந்திருப்பது கண்ணியமற்றது என்று வாரன் கவலைப்பட்டான். எனவே, இருபத்தெட்டு வயதான அவன், சில பழைய மரங்களைக் கண்டுபிடித்து, ஒரு பெஞ்சைக் கட்டி, பேருந்து நிறுத்தத்தில் வைத்தான். அது விரைவில் பழகிவிட்டது. தனது நகரத்தில் உள்ள ஒன்பதாயிரம் பேருந்து நிறுத்தங்களில் இருக்கைகள் இல்லாததை உணர்ந்த அவன், மற்றொரு பெஞ்சை உருவாக்கினான், பின்னர் அதுபோன்று பல இருக்கைகளை உருவாக்கி, அதில் “கனிவோடு இருங்கள்” என்று பொறித்து வைக்க ஆரம்பித்தான். அவனது இலக்கு? “என்னால் முடிந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கை முறையை சற்று மேம்படுத்த எண்ணினேன்” என்று பதிலளித்தானாம்.
அந்த செயலையே “இரக்கம்” என்றும் சொல்லலாம். இயேசு நடைமுறைப்படுத்தியபடி, இரக்கம் என்பது மிகவும் வலுவான ஒரு உணர்வு, அது மற்றொருவரின் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நம்மை வழிநடத்துகிறது. அவிசுவாசமான ஜனங்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தபோது, “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி” (மாற்கு 6:34) அவர்களுக்கு உபதேசித்தார். அங்கிருந்த வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கியதினிமித்தம் அவர் அந்த இரக்கத்தை செயல்படுத்தத் துவங்கினார் (மத்தேயு 14:14).
நாமும் “உருக்கமான இரக்கத்தை” தரித்துக்கொள்வோம் (கொலோசெயர் 3:12) என்று பவுல் வலியுறுத்துகிறார். அதன் பயன்கள்? “அது என்னுடைய சக்கரத்தில் காற்றை நிரப்புவதுபோல் என்னை நிரப்புகிறது” என்ற வாரன் சொல்லுகிறார்.
நம்மை சுற்றியிருப்பவர்கள் அனைவருக்கும் தேவைகள் இருக்கிறது. அதை தேவன் நம் கவனத்திற்கு கொண்டுவருகிறார். அந்த தேவைகள் நம்முடைய இரக்கத்தை செயல்படுத்தவும் கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்தவும் தூண்டுகிறது.