எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

இயேசு நமக்குள் வாசம்பண்ணுகிறார்

மேற்கு அமெரிக்காவிலுள்ள உள்ள எனது மாநிலத்தில் பனிப்புயல் வீசியதால், என் விதவை தாயார் புயலிலிருந்து சற்று தப்பிக்கொள்ள, என் குடும்பத்துடன் இருக்க ஒப்புக்கொண்டார். எனினும், பனிப்புயலுக்குப் பிறகு, அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை. அவருடைய வாழ்நாள் முழுவதும் எங்களுடன் வசிக்க, எங்களுடன் குடியேறினாள். அவரது வருகை எங்கள் குடும்பத்தை பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. குடும்பத்தினர்களுக்கான ஞானமுள்ள ஆலோசனை, அறிவுரை மற்றும் முன்னோர்களின் கதைகள் போன்றவற்றை அவர் தினசரி பகிர்ந்துகொண்டார். அவரும் என் கணவரும் ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வையும் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தையும் பகிர்ந்துகொண்டு சிறந்த நண்பர்களானார்கள். இனி ஒரு விருந்தினராக இல்லை, அவர் நிரந்தரமான மற்றும் முக்கிய குடும்பத்தினராக இருந்தார். தேவன் அவரை நித்திய வீட்டிற்கு அழைத்த பிறகும் அவா் கொண்டுவந்த மாற்றங்கள் எங்கள் இதயங்களில் இருக்கும்.

இந்த அனுபவம், இயேசுவைப் பற்றி யோவான், “நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான் 1:14) என்று வர்ணிப்பதை நினைவூட்டுகிறது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விளக்கமாகும், ஏனெனில் அசல் கிரேக்கத்தில் வாசம் பண்ணினார் என்ற வார்த்தை “ஒரு கூடாரம் அமைத்தல்” என்று பொருள்படும். மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறது, அவர் “நம்மிடையே தமது வசிப்பிடத்தை ஏற்படுத்தினார்” என்று.

விசுவாசத்தினால் நாமும் இயேசுவை நம்மோடு வசிப்பவராக நம் இதயத்தில் ஏற்கிறோம். பவுல் எழுதியுள்ளாா், “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி” (எபேசியர் 3:16–17).

ஒரு சாதாரண விருந்தினராக அல்ல, இயேசு அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அதிகாரமளிக்கும் நிரந்தர குடியிருப்பாளர். நாம் நம் இதயத்தின் கதவுகளை அகலத் திறந்து அவரை வரவேற்போம்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

அக்கறை காட்டவதின் மூலம் பகிர்தல்

ஒரு இளம் ஊழியர், யாரேனும் ஒருவரை ஆசீர்வதிக்க ஒவ்வொரு நாளும் தேவன் தன்னை பயன்படுத்தவேண்டும் என்று காலையிலே ஜெபிப்பாராம். அவர் எதிர்பார்க்கும் அந்த ஆச்சரியமான தருணங்கள் அவ்வப்போது அவருக்கு சம்பவிக்கும். ஒரு நாள் அவர் வேலைசெய்யும் அலுவலகத்தில் இருந்த சக ஊழியரிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவரிடம் இயேசுவைக் குறித்த விசாரித்தார். இவரும் அவரிடம் வெகு சாதாரணமாக அவருடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தார். விவாதங்களோ, கோபங்களோ அவர்களுடைய பேச்சில் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலினால், அன்பான மற்றும் எளிமையான ஒரு சத்தியத்தைப் பகிரும் தருணமாய் அது இருந்தது என்று அந்த ஊழியர் சொன்னார். தேவனைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம்கொண்ட இன்னொரு புதிய சிநேகிதர் அவருக்கு கிடைத்துவிட்டார்.

மற்றவர்களுக்கு இயேசுவைக் குறித்த சொல்லுவதற்கு பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொள்ளுதல் அவசியம். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப்போஸ்தலர் 1:8) என்று கட்டளையிடுகிறார்.

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலாத்தியர் 5:22-23). அந்த இளம் ஊழியர் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததுபோல, பேதுரு, “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15) என்று சொல்லுகிறார்.

கிறிஸ்துவை விசுவாசிப்பதினிமித்தம் பாடுகளை அனுபவிக்க நேரிடும்வேளையிலும், நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறோம் என்பதை நம்முடைய வார்த்தைகள் வெளிப்படுத்தும். பின்பு நம்முடைய கிரியைகள் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தும். 

- பாட்ரிசியா ரேபோன்

தேவனின் பாதுகாப்பான அன்பு

ஒரு கோடை இரவு, எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பறவைகள் திடீரென்று குழப்பமான ஓசை எழுப்பின. பாட்டுப்பறவைகள் மரங்களில் இருந்து அலறல் ஓசைகளை எழுப்பியது. ஏன் என்பதை தாமதமாகதான் உணர்ந்தோம். சூரியன் மறையும் போது, ஒரு பெரிய பருந்து ஒரு மரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்து வந்தது. மரத்திலிருந்து பறவைகள் ஆவேசத்துடன் சிதறி, அபாயத்திலிருந்து பறந்து செல்லும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

வேதாகமம் முழுவதும் நம் வாழ்க்கைக்கு தேவையான எச்சரிக்கைகளை விடுக்கிறது. உதாரணமாக, தவறான போதனைகளுக்கு விரோதமான எச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். நாம் கேட்பதை நாம் சந்தேகிக்கக்கூடும். எவ்வாறாயினும், நம் பரலோகத் தகப்பன் நம்மீது அவருக்குள்ள அன்பின் நிமித்தம், அத்தகைய ஆவிக்குரிய ஆபத்துகளை நமக்குத் தெளிவாக்குவதற்கு வேதத்தின் தெளிவைத் தருகிறார்.

இயேசு, “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” (மத்தேயு 7:15) என்று எச்சரிக்கிறார். மேலும், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்... அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (வச. 16-17; 20) என்றும் எச்சரிக்கிறார்.

“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (நீதிமொழிகள் 22:3) என்று நமக்கு நினைவுபடுத்துகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் தேவனுடைய பாதுகாக்கும் அன்பு மறைந்திருந்து நமக்கு அவ்வப்போது வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது.

தங்களுக்கு மாம்ச ரீதியாக ஏற்படப்போகிற ஆபத்தைக் குறித்து பறவைகள் ஒன்றையொன்று எச்சரித்ததுபோல, ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்து நம்மை எச்சரிக்கும் வேதத்தின் சத்தியங்களுக்கு நாம் செவிகொடுப்போமாக. 

- பாட்ரிசியா ரேபோன்

மன்னித்தல் மறத்தல்

ஜில் பிரைஸ், ஹைப்பர் தைமேசியா என்னும் மனோநிலையுடன் பிறந்தார். அதாவது, தனக்கு நேரிட்ட அனைத்துக் காரியங்களையும் அசாதாரணமாக விரிவாய் நினைவில் வைத்திருக்கும் திறன். அவள் தன் வாழ்நாளில் அனுபவித்த எந்த சம்பவத்தின் சரியான நிகழ்வையும் அவள் மனதிலிருந்து மீண்டும் இயக்கக்கூடும்.  
“மறக்கமுடியாதவைகள்” என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, நடைபெற்ற குற்றங்களை நேர்த்தியாய் நினைவில் வைத்து கண்டறியும் ஹைப்பர் தைமேசியா மனோநிலைகொண்ட ஒரு பெண் போலீஸ் அதிகாரியை முன்னிறுத்தியது. இது ஒருவகையில் நன்மையாகத் தெரிந்தாலும், ஜீல்லுக்கு அப்படி தோன்றவில்லை. அவள் விமர்சிக்கப்பட்ட, இழப்பை அனுபவித்த அல்லது அவளை ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாக்கிய அவள் மறக்கவேண்டும் என்று நினைக்கிற சம்வங்களை அவளால் மறக்க முடியவில்லை. அவள் அந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு கவலைப்படுகிறாள்.  
நம் தேவன் சகலமும் அறிந்தவர் (ஒருவேளை ஒருவகையான தெய்வீக ஹைப்பர் தைமேசியாவாக இருக்கலாம்): அவருடைய புரிதலுக்கு வரம்பு இல்லை என்று வேதம் சொல்கிறது. ஆயினும் ஏசாயா புத்தகத்தில், “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (ஏசாயா 43:25) என்று தேவன் சொல்லுவதை நாம் பார்க்கக்கூடும். எபிரெயர் நிருபத்தில், “நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்... அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை” (எபிரெயர் 10:10,17) என்று சொல்லுகிறார்.  
நம் பாவங்களை தேவனிடம் ஒப்புக்கொடுப்பதின் மூலம், அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து கவலைப்படுவதை நாம் தவிர்க்கலாம். தேவன் செய்வதைப் போலவே நாமும் அவற்றை விட்டுவிடவேண்டும்: “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம்” (ஏசாயா 43:18). தம்முடைய மிகுந்த அன்பின் நிமித்தம், அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களை தேவன் நினைவுகூர விரும்புவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.  

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

அனைவருக்கான தேவனின் இருதயம்

ஒன்பது வயது நிரம்பிய மகேஷ் தனது நெருங்கிய நண்பன் நிலேஷ_டன் அவர்களது வகுப்பு தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு வந்தான். பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தாயார், மகேஷைப் பார்த்தபோது, “போதுமான நாற்காலிகள் இல்லை," என்று சொல்லி அவனை உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. ஏழையாகத் தோற்றமளித்த தனது நண்பருக்கு இடம் கொடுக்க தரையில் உட்கார நிலேஷ் முன்வந்தான். ஆனால் அந்த பெண்மணி அதையும் அனுமதிக்கவில்லை. மனச்சோர்வடைந்த நிலேஷ், கொண்டுவந்த பரிசுப்பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு, மகேஷ_டன் வீடு திரும்பினான். இந்த நிராகரிப்பை அவனுடைய இதயம் ஏற்றுக்கொள்ளவில்லை.  
அந்த சம்பவம் நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிலேஷ் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவர் தனது வகுப்பறையில் ஒரு காலி நாற்காலியை வைத்திருக்கிறார். ஏன் என்று மாணவர்கள் கேட்டால், “யாருக்கும் வகுப்பறையில் எப்பொழுதும் இடமளிக்க வேண்டும்” என்பது தனது நினைவூட்டல் என்று அவர் விளக்குகிறார். 
எல்லா மக்களையும் நேசிக்கும் இயேசுவின் இருதயத்தை அவருடைய வாழ்க்கையில் நாம் காணக்கூடும்: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் (மத்தேயு 11:28). இந்த அழைப்பு “முதலாவது யூதருக்கு” (ரோமர் 1:16) என்னும் இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்திற்கு முரணாகத் தெரியலாம். ஆனால் இயேசுவை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சிப்பு என்னும் பரிசு கொடுக்கப்படுகிறது. “விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள் மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை” (3:22) என்று பவுல் சொல்லுகிறார்.  
அனைவருக்குமான கிறிஸ்துவின் அழைப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29). அவரது இளைப்பாறுதலை நாடும் அனைவருக்காகவும் அவர் திறந்த மனதுடன் காத்திருக்கிறார்.  

விடாமுயற்சி பீட்சா

பன்னிரண்டாம் வயதில், இப்ராஹிம் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வந்தார். இத்தாலிய மொழி எதுவும் தெரியாமல், திணறலுடன் போராடி, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் தன்னுடைய இருபதுகளில், இத்தாலியின் ட்ரெண்டோவில் பீட்சா கடையைத் திறந்த இந்த கடின உழைப்பாளி இளைஞனை அந்த போராட்டங்கள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உலகின் முதல் ஐம்பது பிட்சா வியாபாரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்படுவதற்கு அவரது சிறிய வணிகம் தகுதிபெற்றது.   
இத்தாலிய தெருக்களில் பசியுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க உதவுவது அவரது நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் ஒரு நியோபோலிடன் பாரம்பரியத்தை விரிவுபடுத்த முயற்சித்தார். அதாவது, அங்ஙனம் பசியில் உள்ளவர்களுக்காக மக்கள் கூடுதல் காபியையோ அல்லது பீட்சாவையோ வாங்கிக்கொடுக்கலாம் என்னும் வழக்கம். புலம்பெயர்ந்த அகதிகள், அவர்களின் கடந்தகால பாரட்பட்சங்களில் சிக்கிகொண்டு சோர்ந்துபோய்விடாதபடிக்கு அவர்களை ஊக்கப்படுததுவதே அவரின் நோக்கமாயிருந்தது.  
இத்தகைய விடாமுயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து நன்மை செய்யும்படிக்கு கலாத்தியர்களுக்கு பவுல் போதித்த போதனைகளை நினைவுபடுத்துகிறது. “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலாத்தியர் 6:9). மேலும் பவுல், “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (வச. 10) என்று வலியுறுத்துகிறார்.  
அநீதிகள் மற்றும் மொழி தடைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இப்ராஹிம், நல்லது செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கினார். உணவு, சகிப்புத்தன்மை மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும் பாலமாய் மாறியது. அத்தகைய விடாமுயற்சியால் ஈர்க்கப்பட்டு, நாமும் நல்லதைச் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடலாம். நம்முடைய விடாமுயற்சியுடன் நாம் வேலைசெய்யும்போது, அதின் மூலம் தேவன் மகிமைப்படுகிறார்.  

கிறிஸ்து நம் மெய்யான ஒளி

“ஒளியை நோக்கி செல்வோம்!” ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானவேளையில் நகரத்தில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு வழிதெரியாமல் நாங்கள் திகைத்தபோது. என்னுடைய கணவர் இப்படியாய் சொன்னார். நாங்கள் ஒரு சிநேகிதரைப் பார்க்கச் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு லிஃப்டில் இருந்து வெளியேறியபோது, அந்த வாரயிறுதி நாட்களில் நாங்கள் செல்ல வேண்டிய திசைக்கு அந்த மங்கிய வெளிச்சத்தில் எங்களுக்கு வழிகாண்பிக்க யாரும் அங்கில்லை. எங்கள் குழப்பத்தைப் பார்த்த ஒரு மனிதரை இறுதியாக சந்தித்தோம். “இந்த நடைபாதைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும், ஆனால் வெளியே செல்லுவதற்கான வழி இதுவே” என்று அவர் கூறினார். அவரது வழிகாட்டுதலுடன், நாங்கள் வெளியேறும் கதவுகளைக் கண்டோம். பிரகாசமான சூரிய ஒளியை நாங்கள் வந்தடைந்தோம்.

குழப்பமடைந்த, அவிசுவாசிகளை அவர்களுடைய ஆவிக்குரிய இருளிலிருந்து தம்மைப் பின்பற்றும்படிக்கு இயேசு அழைத்தார். “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12). அவரது ஒளியில், தடுமாற்றங்கள், பாவம் ஆகியவைகள் தென்பட்டாலும், அவற்றை அகற்றும்படிக்கு நாம் அவரிடத்தில் கேட்கும்போது, அத்தகைய இருளை நம்முடைய வாழ்க்கையை விட்டு அவர் அகற்றுவார். வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பத்தைப்போல, கிறிஸ்துவின் ஒளி நமக்கு கடவுளின் பிரசன்னம், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதலைக் கொண்டுவருகிறது.

யோவான் விளக்கியது போல், இயேசுவே “மெய்யான ஒளி" (யோவான் 1:9). “இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை” (வச. 5). வாழ்க்கையில் அலைந்து திரிவதற்குப் பதிலாக, நம்முடைய பாதையில் ஒளிகாட்டும் அவரைச் சார்ந்துகொள்வது சிறந்தது.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இராஜ்ய சிந்தை நிறைந்த தலைமைத்துவம்

ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து, அவரவரின் புத்தகங்களைப் பற்றி பரப்புவதற்கு உதவிய கிறிஸ்தவ குழந்தைகள் புத்தக ஆசிரியர்களின் குழுவில் நான் சேர்ந்தபோது, சிலர் “போட்டியாளர்களுடன் பணியாற்றும் இவர்கள் முட்டாள்கள்” என்றார்கள். ஆனால் எங்கள் குழு இராஜ்ஜிய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்திற்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது, போட்டிக்கு அல்ல. நாங்கள் ஒரே குறிக்கோளைப் பகிர்ந்துகொண்டோம்; நற்செய்தியைப் பரப்புவது. நாங்கள் ஒரே ராஜாவாகிய இயேசுவைச் சேவித்தோம். ஒன்றாக, கிறிஸ்துவுக்கான சாட்சியுடன் அதிகமான மக்களைச் சென்றடைகிறோம்.

தலைமைத்துவ அனுபவமுள்ள எழுபது மூப்பர்களை தேர்ந்தெடுக்கும்படி தேவன் மோசேயிடம் கேட்டபோது, “நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்” (எண்ணாகமம் 11:17) என்றார். பின்னர், யோசுவா இரண்டு மூப்பர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டு, மோசேயிடம் அவர்களை நிறுத்தச் சொன்னார். மோசே அதற்கு, “நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே” என்றான் (வ. 29).

போட்டி அல்லது ஒப்பீடுகளில் நாம் கவனம் செலுத்தும் எந்த நேரத்திலும் அது மற்றவர்களுடன் வேலை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது, பரிசுத்த ஆவியானவர் அந்தச் சோதனையைத் தவிர்க்க நமக்கு பெலன் அளிக்க முடியும். நம்மில் இராஜ்ய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்தை வளர்க்கும்படி நாம் தேவனிடம் கேட்கும்போது, அவர் உலகம் முழுவதும் நற்செய்தியைப் பரப்புகிறார், மேலும் நாம் சேர்ந்து அவருக்குச் சேவை செய்யும்போது நம் சுமைகளையும் குறைக்க முடியும்.

உங்கள் விசுவாசத்தை பகிருங்கள்

1701 ஆம் ஆண்டில், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்ப நற்செய்தி பிரச்சார சங்கத்தை நிறுவியது. அவர்கள் தேர்ந்தெடுத்த இலட்சிய வாா்த்தைகளாக ட்ரான்சியன்ஸ் அடியுவா நோஸ், லத்தீன் மொழியில் “வந்து எங்களுக்கு உதவுங்கள்!” இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை மிகவும் அவசியமான ஒரு உலகத்திற்கு எடுத்துச் செல்வதால், முதல் நூற்றாண்டிலிருந்து நற்செய்தி ஸ்தானாதிபதிகளின் அழைப்பு இதுவே.

“வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்ற சொற்றொடர், அப்போஸ்தலர் 16 இல் விவரிக்கப்பட்டுள்ள “மக்கெதோனியா அழைப்பிலிருந்து” வருகிறது. பவுலும் அவரது குழுவும் ஆசியா மைனரின் மேற்குக் கடற்கரையில் உள்ள துரோவாவுக்கு வந்தார்கள்(இன்றைய துருக்கி, வ.8). அங்கே, பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. (வ.9) அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, பவுலும் அவர் குழுவினரும் உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனார்கள் (வ. 10)அழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.

எல்லோரும் கடல்களைக் கடக்க அழைக்கப்படுவதில்லை, ஆனால் நமது ஜெபங்கள் மற்றும் நிதிகளால் அதை செய்பவர்களை நாம் ஆதரிக்கலாம். நாம் அனைவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் நமது அறையிலோ, தெருவிலோ அல்லது சமூகத்திலோ யாரிடமாவது சொல்ல முடியும். நமது நல்ல தேவன் நாம் கடந்துபோய், எல்லாவற்றிலும் மேலான உதவியாகிய இயேசுவின் நாமத்தில் கிடைக்கும் மன்னிப்பின் வாய்ப்பை மக்களுக்கு வழங்கசெய்ய ஜெபிப்போம்.

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.