எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ரூத் ஓ ரீலி ஸ்மித்கட்டுரைகள்

ஒரு குமிழிக்குள் வாழுதல்

நம்மில் அநேகர், குழந்தைகளாக இருந்த போது, சோப்பு “குமிழிகளை” வைத்து விளையாடியிருப்போம். இந்த சிறியதும், பெரியதுமான ஒளிபுகக் கூடிய, பளபளக்கும் கோளங்கள் காற்றில் மிதந்து வருவதைக் காண்பது கண்களுக்கு நல்ல விருந்தாயிருக்கும். நம்மை வசீகரம் செய்யும் இந்தக் “குமிழிகள்” அழகாக இருப்பதோடு, வாழ்வு, நிலையற்றது, குறுகியது என்பதை நமக்கு நினைவு படுத்துகின்றன.

சில வேளைகளில் நாம் ஒரு “குமிழிக்குள்” வாழ்வதைப் போன்று உணருகின்றோம். நம் வாழ்வின் போராட்டங்களின் நிச்சயமற்ற நிலைமையையும் அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதையும் நாம் அறியோம். நாம் அவ்வாறு உணரும் போது, இயேசுவுக்குள் நமக்கு உறுதியான முடிவு உண்டு என்பதை மறந்து விடாதிருப்பது முக்கியம். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு, உறுதியாக அவருடைய ராஜியத்தில், ஓர் இடம்  உண்டு (யோவா.14:3). தேவனிடமிருந்தே   இந்த நம்பிக்கை நமக்கு வருகின்றது, அவரே இயேசுவை நம்முடைய வாழ்வின் மூலைக்கல் ஆக்கினார், அவர் நம்மை, தேவனுடைய ஆவியினால் நிரப்பி,  தேவன் நம்மைப் படைத்ததின் நோக்கத்தை நிறைவேற்றும் படி, தேவனுக்குப் பிரியமான ஜனங்களாக- “ஜீவனுள்ள கற்களாக” தெரிந்து கொண்டார்(1 பேதுரு 2:5-6).

கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைப் பின் பற்றுபவர்களுக்கு உறுதியான எதிர்காலம் உண்டு (வ.6). ஏனெனில், “(நம்மை) அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய  புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு,  (நாம்) தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியகூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச்          சொந்தமான ஜனமாயும்” இருக்கிறோம் (வ.9). இயேசுவின் கண்களில் நாம் “குமிழிக்குள்” இருப்பவர்களாக காணப்படவில்லை. நாம் விலையேறப் பெற்றவர்களாக அன்புகூரப் படுகின்றோம் (வ.4).

அடுத்த காரியத்தை உடனே செய்

சமீபத்தில், எப்பொழுது பிறருக்கு உதவும் படி உணர்ந்தாய்? அத்தகைய சந்தர்ப்பத்தில் செயல்படாமல் இருந்து விட்டாயா? கிளார் டி கிராஃப் தரும் 10 வினாடி சட்டத்தில், நம்முடைய வாழ்வில் கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும், ஆவியில் அவரோடு நெருங்கி வாழவும், அவருடைய அன்பினால் கீழ்படிதலுள்ள வாழ்வுக்கு நம்மை அழைக்கும் தேவனுடைய வழிகள் என குறிப்பிடுகின்றார். மேலும், இந்த 10 வினாடி சட்டம் கூறுவது, ”நீ இதைச் செய்யும் படி இயேசு விரும்புகின்றார் என்பதை திட்டமாக உணரும் போது, அதை உடனே செய், உன்னுடைய மனது மாறுவதற்கு முன்பு செய்து விடு” என்பதாகும்.

 “ நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள்” என்று இயேசு கூறுகின்றார் (யோவா. 14:15) நான் இயேசுவை நேசிக்கிறேன், ஆனால், இது அவருடைய சித்தம், இதனை நான் பின்பற்ற வேண்டும் என்பதனை நான் எப்படி உறுதியாகக் கூற முடியும்? என்று நாம் நினைக்கலாம். வேதாகமத்தில் நாம் காணும் ஞானத்தை நாம் புரிந்து கொண்டு அதன் படி நடக்கத் தேவையான ஞானத்தை இயேசு தருகின்றார். அவர், “நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (வச. 16) பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் பண்ணி, நமக்குள்ளே இருப்பதால், நாம் இயேசுவுக்கு கீழ்ப்படிய கற்றுக் கொள்கின்றோம், அவருடைய “கற்பனைகளையும் கைக் கொள்வோம்” (வச. 15) பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, பிதா கூறிய எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (வச. 26).

பிதாவை கனப்படுத்தும் பெரிய காரியங்களையும், சிறிய காரியங்களையும் விசுவாசத்தோடு தைரியமாக செய்யும் படி பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்கப்படுத்துவார், இதன் மூலம் நாம் பிதாவிடமும், மற்றவர்களிடமும் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவோம். (வச. 21).

தேவன் தலையிடுகிறார்

1960 களில் இங்கிலாந்து அரசின் பராமரிப்பில் வளர்ந்தாள் பார்பரா. அவளுக்கு பதினாறு வயதானபோது, அவளும் அவளுடைய பச்சிளங்குழந்தை சைமனும் தங்குவதற்கு வீடின்றி தவித்தார்கள். ஏனென்றால், பதினாறு வயதாகிவிட்டால் அரசாங்க பராமரிப்பு தானாகவே நின்றுவிடும். எனவே தனக்கு உதவும்படி இங்கிலாந்தின் மகா ராணிக்கு பார்பரா ஒரு கடிதம் எழுதினாள்; ராணியிடமிருந்து பதிலும் வந்தது. தன்னுடைய வீடு ஒன்றை பார்பரா தங்கும்படி கொடுத்து, மனதுருக்கத்துடன் ராணி நடந்துகொண்டார்.

பார்பராவுக்கு எது தேவைப்பட்டதோ அதற்கான வசதிவாய்ப்புகள் இங்கிலாந்தின் மகாராணியிடம் இருந்தன. மனதுருக்கத்துடன் அவர் செய்த உதவியானது தேவனுடைய மனதுருக்கத்தை சிறிதளவில் பிரதிபலிக்கிறது. பரலோக ராஜாவுக்கு நம் தேவைகள் எல்லாமே தெரியும். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தும்படி அவர் செயல்படுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படுவதற்கு முதலில் நாம் அவரிடம் வரவேண்டுமென விரும்புகிறார். அவரோடு நாம் உறவுவைக்கவேண்டும், அந்த உறவின் விளைவாக நம் தேவைகளையும் கவலைகளையும் அவரிடம் சொல்லவேண்டும்.

இஸ்ரவேலருக்கு விடுதலை தேவைப்பட்டது. அதை அவர்கள் அவரிடம் சொன்னார்கள். எகிப்தின் அடிமைத்தனத்தில் உபத்திரவப்பட்ட அவர்கள், உதவிவேண்டி கதறினார்கள். அவர்களுடைய கதறலை தேவன் கேட்டார், தாம் அவர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார்: “தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்” (யாத். 2:25). தம் மக்களை விடுவிக்கும்படிக்கு மோசேக்கு அவர் கட்டளையிட்டார்; தாம் அவர்களை மீண்டுமொருமுறை “பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச்” சேர்ப்பதாகச் சொன்னார் (யாத். 3:8).

நாம் தம்மிடம் வரவேண்டும் என்று நம்முடைய ராஜா விரும்புகிறார்! நாம் விரும்புவதை எல்லாம் அவர் தராமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய தேவைகளை எல்லாம் அவர் சந்திக்கிறார். அவருடைய ஆளுகையை, அவருடைய நடத்துதலைச் சார்ந்திருப்போம்.

நம்முடைய பலவீனங்களில்

அனி ஷீஃப் மில்லர் என்கிற பெண்மணி தன்னுடைய 90வது வயதில் 1999ம் ஆண்டு மரித்தார். ஆனால், 1942ம் ஆண்டிலேயே அவர் மரித்திருக்க வேண்டியவர். அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, இரத்தத்தொற்று உண்டானது. அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்தன. அப்போது அதே மருத்துவமனையிலிருந்த நோயாளி ஒருவர், தனக்கு தெரிந்த விஞ்ஞானி ஒருவர் அற்புதமான ஒரு மருந்தைக் கண்டுபிடித்து வருவதாகக் கூறினார், அந்த மருந்தில் கொஞ்சத்தை அனிக்கு வாங்கித் தரும்படி அரசாங்கத்தை அனியின் மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த மருந்தைக் கொடுத்ததும், ஒரே நாளில் அவருக்கு ஜுரம் நீங்கி, உடல் நிலை சாதாரணமானது! பெனிசிலின் மருந்து அனியின் உயிரைக் காப்பாற்றியது.

விழுதலுக்கு பிறகு, மனிதர்கள் அனைவருமே நாசகரமான ஓர் ஆவிக்குரிய நிலையை அனுபவித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் பாவம். ரோமர் 5:12. இயேசு மரித்ததும், உயிர்த்தெழுந்ததும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுமே நாம் அதிலிருந்து மீளுவதைச் சாத்தியமாக்கியுள்ளன.ரோமர் 8:1-2. பூமியில் நாம் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழவும், நித்திய வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தில்வாழ்ந்து மகிழவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்கிறார். வசனங்கள் 3-10. “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” வசனம் 11.

உங்களுடைய பாவ இயல்பானது உங்களிடமிருந்து வாழ்க்கையை உறிஞ்சி எடுத்துவிடும் போலத் தோன்றும்போது, இரட்சிப்பின் ஆதாரமாகிய இயேசுவை நோக்கிப்பார்த்து, அவருடைய ஆவியின் வல்லமையால் பெலப்படுங்கள். வசனங்கள் 11-17. “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்;” கூடவே “தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்.” வசனங்கள் 26-27.

தேவன் தரும் பணி ஓய்வுத் திட்டம்

பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.

மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).

உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?

தள்ளிவிட்டு, முன்னேறு

வானொலி செய்திபரப்புனராகப் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர் எனக்குக் கொடுத்த ஓர் அறிவுரை என் நினைவிற்கு வந்தது. அவருடைய வாழ்வின் ஆரம்ப நாட்களில், விமர்சனங்களையும், பாராட்டுகளையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, தேவன் அவை இரண்டையுமே தள்ளிவிட்டுவிட ஊக்குவிப்பதாக உணர்ந்தார். அவன் எவற்றை தன் இருதயத்தினுள் வைத்திருக்கின்றானோ அது அவனைப் பாதிக்கும் எனவே விமர்சனங்களிலிருந்து கற்றுக் கொண்டும், பாராட்டுகளை ஏற்றுக்கொண்டும், இரண்டையும் இருதயத்தினுள் வைத்துக் கொள்ளாமல் தள்ளிவிட்டு தேவனுடைய கிருபையாலும் வல்லமையாலும் தாழ்மையாக முன்னேறு.

விமர்சனமும், பாராட்டும் நம்முடைய உயர்வுகளைத் தூண்டிவிடும். நாம் அவற்றைத் தடுக்காவிடின் வெறுப்பிற்கும் தனக்கு மிஞ்சிய கர்வத்திற்கும் வழிவகுக்கும். ஊக்கப்படுத்துதலையும் ஞானமுள்ள ஆலோசனைகளைத் தருவதையும் பற்றி நீதிமொழிகளில் காண்கின்றோம். 'நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்; ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்து கொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் (15:30-32).

நாம் ஏதோ ஓரிடத்தில் கடிந்துகொள்ளப்படும் போது, நாம் அதனை நம்மைச் சரிபடுத்திக்கொள்ள பயன்படுத்த வேண்டும். நீதிமொழிகள் இதனையே 'ஜீவனுக்கேதுவான கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்" (வச. 31) எனக் கூறுகின்றது. ஒரு வேளை நாம் பாராட்டப்படும் போது வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டால் நாம் புத்துணர்ச்சியைப் பெற்று நன்றியால் நிரப்பப்படுவோம். நாம் தேவனோடு தாழ்மையாய் நடந்தால், விமர்சனங்களிலிருந்தும் பாராட்டுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள அவர் உதவுவார். இரண்டையும் தள்ளிவிட்ட தேவனோடுள்ள உறவில் வளரவும் தேவன் உதவுவார் (வச. 33).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.