எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ரூத் ஓ ரீலி ஸ்மித்கட்டுரைகள்

ஒரு குமிழிக்குள் வாழுதல்

நம்மில் அநேகர், குழந்தைகளாக இருந்த போது, சோப்பு “குமிழிகளை” வைத்து விளையாடியிருப்போம். இந்த சிறியதும், பெரியதுமான ஒளிபுகக் கூடிய, பளபளக்கும் கோளங்கள் காற்றில் மிதந்து வருவதைக் காண்பது கண்களுக்கு நல்ல விருந்தாயிருக்கும். நம்மை வசீகரம் செய்யும் இந்தக் “குமிழிகள்” அழகாக இருப்பதோடு, வாழ்வு, நிலையற்றது, குறுகியது என்பதை நமக்கு நினைவு படுத்துகின்றன.

சில வேளைகளில் நாம் ஒரு “குமிழிக்குள்” வாழ்வதைப் போன்று உணருகின்றோம். நம் வாழ்வின் போராட்டங்களின் நிச்சயமற்ற நிலைமையையும் அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதையும் நாம் அறியோம். நாம் அவ்வாறு உணரும் போது, இயேசுவுக்குள் நமக்கு உறுதியான முடிவு உண்டு என்பதை மறந்து விடாதிருப்பது முக்கியம். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு, உறுதியாக அவருடைய ராஜியத்தில், ஓர் இடம்  உண்டு (யோவா.14:3). தேவனிடமிருந்தே   இந்த நம்பிக்கை நமக்கு வருகின்றது, அவரே இயேசுவை நம்முடைய வாழ்வின் மூலைக்கல் ஆக்கினார், அவர் நம்மை, தேவனுடைய ஆவியினால் நிரப்பி,  தேவன் நம்மைப் படைத்ததின் நோக்கத்தை நிறைவேற்றும் படி, தேவனுக்குப் பிரியமான ஜனங்களாக- “ஜீவனுள்ள கற்களாக” தெரிந்து கொண்டார்(1 பேதுரு 2:5-6).

கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைப் பின் பற்றுபவர்களுக்கு உறுதியான எதிர்காலம் உண்டு (வ.6). ஏனெனில், “(நம்மை) அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய  புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு,  (நாம்) தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியகூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச்          சொந்தமான ஜனமாயும்” இருக்கிறோம் (வ.9). இயேசுவின் கண்களில் நாம் “குமிழிக்குள்” இருப்பவர்களாக காணப்படவில்லை. நாம் விலையேறப் பெற்றவர்களாக அன்புகூரப் படுகின்றோம் (வ.4).

அடுத்த காரியத்தை உடனே செய்

சமீபத்தில், எப்பொழுது பிறருக்கு உதவும் படி உணர்ந்தாய்? அத்தகைய சந்தர்ப்பத்தில் செயல்படாமல் இருந்து விட்டாயா? கிளார் டி கிராஃப் தரும் 10 வினாடி சட்டத்தில், நம்முடைய வாழ்வில் கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும், ஆவியில் அவரோடு நெருங்கி வாழவும், அவருடைய அன்பினால் கீழ்படிதலுள்ள வாழ்வுக்கு நம்மை அழைக்கும் தேவனுடைய வழிகள் என குறிப்பிடுகின்றார். மேலும், இந்த 10 வினாடி சட்டம் கூறுவது, ”நீ இதைச் செய்யும் படி இயேசு விரும்புகின்றார் என்பதை திட்டமாக உணரும் போது, அதை உடனே செய், உன்னுடைய மனது மாறுவதற்கு முன்பு செய்து விடு” என்பதாகும்.

 “ நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள்” என்று இயேசு கூறுகின்றார் (யோவா. 14:15) நான் இயேசுவை நேசிக்கிறேன், ஆனால், இது அவருடைய சித்தம், இதனை நான் பின்பற்ற வேண்டும் என்பதனை நான் எப்படி உறுதியாகக் கூற முடியும்? என்று நாம் நினைக்கலாம். வேதாகமத்தில் நாம் காணும் ஞானத்தை நாம் புரிந்து கொண்டு அதன் படி நடக்கத் தேவையான ஞானத்தை இயேசு தருகின்றார். அவர், “நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (வச. 16) பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் பண்ணி, நமக்குள்ளே இருப்பதால், நாம் இயேசுவுக்கு கீழ்ப்படிய கற்றுக் கொள்கின்றோம், அவருடைய “கற்பனைகளையும் கைக் கொள்வோம்” (வச. 15) பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, பிதா கூறிய எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (வச. 26).

பிதாவை கனப்படுத்தும் பெரிய காரியங்களையும், சிறிய காரியங்களையும் விசுவாசத்தோடு தைரியமாக செய்யும் படி பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்கப்படுத்துவார், இதன் மூலம் நாம் பிதாவிடமும், மற்றவர்களிடமும் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவோம். (வச. 21).

தேவன் தலையிடுகிறார்

1960 களில் இங்கிலாந்து அரசின் பராமரிப்பில் வளர்ந்தாள் பார்பரா. அவளுக்கு பதினாறு வயதானபோது, அவளும் அவளுடைய பச்சிளங்குழந்தை சைமனும் தங்குவதற்கு வீடின்றி தவித்தார்கள். ஏனென்றால், பதினாறு வயதாகிவிட்டால் அரசாங்க பராமரிப்பு தானாகவே நின்றுவிடும். எனவே தனக்கு உதவும்படி இங்கிலாந்தின் மகா ராணிக்கு பார்பரா ஒரு கடிதம் எழுதினாள்; ராணியிடமிருந்து பதிலும் வந்தது. தன்னுடைய வீடு ஒன்றை பார்பரா தங்கும்படி கொடுத்து, மனதுருக்கத்துடன் ராணி நடந்துகொண்டார்.

பார்பராவுக்கு எது தேவைப்பட்டதோ அதற்கான வசதிவாய்ப்புகள் இங்கிலாந்தின் மகாராணியிடம் இருந்தன. மனதுருக்கத்துடன் அவர் செய்த உதவியானது தேவனுடைய மனதுருக்கத்தை சிறிதளவில் பிரதிபலிக்கிறது. பரலோக ராஜாவுக்கு நம் தேவைகள் எல்லாமே தெரியும். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தும்படி அவர் செயல்படுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படுவதற்கு முதலில் நாம் அவரிடம் வரவேண்டுமென விரும்புகிறார். அவரோடு நாம் உறவுவைக்கவேண்டும், அந்த உறவின் விளைவாக நம் தேவைகளையும் கவலைகளையும் அவரிடம் சொல்லவேண்டும்.

இஸ்ரவேலருக்கு விடுதலை தேவைப்பட்டது. அதை அவர்கள் அவரிடம் சொன்னார்கள். எகிப்தின் அடிமைத்தனத்தில் உபத்திரவப்பட்ட அவர்கள், உதவிவேண்டி கதறினார்கள். அவர்களுடைய கதறலை தேவன் கேட்டார், தாம் அவர்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார்: “தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்” (யாத். 2:25). தம் மக்களை விடுவிக்கும்படிக்கு மோசேக்கு அவர் கட்டளையிட்டார்; தாம் அவர்களை மீண்டுமொருமுறை “பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச்” சேர்ப்பதாகச் சொன்னார் (யாத். 3:8).

நாம் தம்மிடம் வரவேண்டும் என்று நம்முடைய ராஜா விரும்புகிறார்! நாம் விரும்புவதை எல்லாம் அவர் தராமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய தேவைகளை எல்லாம் அவர் சந்திக்கிறார். அவருடைய ஆளுகையை, அவருடைய நடத்துதலைச் சார்ந்திருப்போம்.

நம்முடைய பலவீனங்களில்

அனி ஷீஃப் மில்லர் என்கிற பெண்மணி தன்னுடைய 90வது வயதில் 1999ம் ஆண்டு மரித்தார். ஆனால், 1942ம் ஆண்டிலேயே அவர் மரித்திருக்க வேண்டியவர். அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, இரத்தத்தொற்று உண்டானது. அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்தன. அப்போது அதே மருத்துவமனையிலிருந்த நோயாளி ஒருவர், தனக்கு தெரிந்த விஞ்ஞானி ஒருவர் அற்புதமான ஒரு மருந்தைக் கண்டுபிடித்து வருவதாகக் கூறினார், அந்த மருந்தில் கொஞ்சத்தை அனிக்கு வாங்கித் தரும்படி அரசாங்கத்தை அனியின் மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த மருந்தைக் கொடுத்ததும், ஒரே நாளில் அவருக்கு ஜுரம் நீங்கி, உடல் நிலை சாதாரணமானது! பெனிசிலின் மருந்து அனியின் உயிரைக் காப்பாற்றியது.

விழுதலுக்கு பிறகு, மனிதர்கள் அனைவருமே நாசகரமான ஓர் ஆவிக்குரிய நிலையை அனுபவித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் பாவம். ரோமர் 5:12. இயேசு மரித்ததும், உயிர்த்தெழுந்ததும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுமே நாம் அதிலிருந்து மீளுவதைச் சாத்தியமாக்கியுள்ளன.ரோமர் 8:1-2. பூமியில் நாம் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழவும், நித்திய வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தில்வாழ்ந்து மகிழவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்கிறார். வசனங்கள் 3-10. “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” வசனம் 11.

உங்களுடைய பாவ இயல்பானது உங்களிடமிருந்து வாழ்க்கையை உறிஞ்சி எடுத்துவிடும் போலத் தோன்றும்போது, இரட்சிப்பின் ஆதாரமாகிய இயேசுவை நோக்கிப்பார்த்து, அவருடைய ஆவியின் வல்லமையால் பெலப்படுங்கள். வசனங்கள் 11-17. “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்;” கூடவே “தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்.” வசனங்கள் 26-27.

தேவன் தரும் பணி ஓய்வுத் திட்டம்

பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.

மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).

உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?

தள்ளிவிட்டு, முன்னேறு

வானொலி செய்திபரப்புனராகப் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர் எனக்குக் கொடுத்த ஓர் அறிவுரை என் நினைவிற்கு வந்தது. அவருடைய வாழ்வின் ஆரம்ப நாட்களில், விமர்சனங்களையும், பாராட்டுகளையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, தேவன் அவை இரண்டையுமே தள்ளிவிட்டுவிட ஊக்குவிப்பதாக உணர்ந்தார். அவன் எவற்றை தன் இருதயத்தினுள் வைத்திருக்கின்றானோ அது அவனைப் பாதிக்கும் எனவே விமர்சனங்களிலிருந்து கற்றுக் கொண்டும், பாராட்டுகளை ஏற்றுக்கொண்டும், இரண்டையும் இருதயத்தினுள் வைத்துக் கொள்ளாமல் தள்ளிவிட்டு தேவனுடைய கிருபையாலும் வல்லமையாலும் தாழ்மையாக முன்னேறு.

விமர்சனமும், பாராட்டும் நம்முடைய உயர்வுகளைத் தூண்டிவிடும். நாம் அவற்றைத் தடுக்காவிடின் வெறுப்பிற்கும் தனக்கு மிஞ்சிய கர்வத்திற்கும் வழிவகுக்கும். ஊக்கப்படுத்துதலையும் ஞானமுள்ள ஆலோசனைகளைத் தருவதையும் பற்றி நீதிமொழிகளில் காண்கின்றோம். 'நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்; ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்து கொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் (15:30-32).

நாம் ஏதோ ஓரிடத்தில் கடிந்துகொள்ளப்படும் போது, நாம் அதனை நம்மைச் சரிபடுத்திக்கொள்ள பயன்படுத்த வேண்டும். நீதிமொழிகள் இதனையே 'ஜீவனுக்கேதுவான கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்" (வச. 31) எனக் கூறுகின்றது. ஒரு வேளை நாம் பாராட்டப்படும் போது வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டால் நாம் புத்துணர்ச்சியைப் பெற்று நன்றியால் நிரப்பப்படுவோம். நாம் தேவனோடு தாழ்மையாய் நடந்தால், விமர்சனங்களிலிருந்தும் பாராட்டுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள அவர் உதவுவார். இரண்டையும் தள்ளிவிட்ட தேவனோடுள்ள உறவில் வளரவும் தேவன் உதவுவார் (வச. 33).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.