எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Nancy Gavilanesகட்டுரைகள்

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம். 

 

உடனடி பாராட்டு

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். [ அப்போஸ்தலர் 16:25 ]

 

எத்தியோப்பியாவிற்கு ஓர் குறுகிய கால மிஷன் பயணத்தின்போது, எங்கள் குழு ஓர் உள்ளூர் அமைச்சகத்தின் மற்றொரு குழுவுடன் சேர்ந்து, குப்பைக் கிடங்கில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தினைச் சந்திக்கச் சென்றது. அவர்கள் எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் சாட்சிகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் ஜெபங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டோம். அந்த மாலையில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று, உள்ளூர் குழு உறுப்பினர் ஒருவர் தனது கிடாா் இசைக்கருவியினை வாசிக்க, நாங்கள் நிலவின் ஒளியில் நின்று தேவனை ஆராதித்தோம். என்ன ஓர் புனிதமான தருணம்! அவர்களின் இக்கட்டான தருணத்திலும், இயேசுவில் மட்டுமே கிடைக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவர்கள் முழுமையாய் அனுபவித்தனர்.

அப்போஸ்தலர் 16ல், மற்றொரு எதிர்பாராத துதிவேளையைப் பற்றி வாசிக்கிறோம். இது பிலிப்பு பட்டணத்தில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. பவுலும் சீலாவும் இயேசுவைச் சேவித்தபோது கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கசையடி பெற்று, சிறையில் அடைக்கப்பட்டனர். விரக்திக்கு ஆளாகாமல், தங்கள் சிறை அறையில் “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்.” “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று” (வச. 25-26).

மயக்கத்திலிருந்து எழுந்த சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்துகொள்ள விரைந்தான். ஆனால் கைதிகள் தப்பியோடவில்லை என்பதை உணர்ந்தபோது, அவன் கர்த்தருக்கு பயந்து, குடும்பத்தோடு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் (வச. 27-34).

தேவன் நம் துதிகளில் பிரியப்படுகிறார். வாழ்க்கையின் உயர்வான மற்றும் தாழ்வான எல்லா தருணங்களிலும் நாம் தேவனை துதிக்கப் பிரயாசப்படுவோம். 

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

இளம்வாலிப வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது.

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5).

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார்.

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சாக்லேட்டில் சிக்கியது

பென்சில்வேனியாவில் உள்ள மார்ஸ் மிட்டாய் தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளர்கள் ஒரு பெரிய சாக்லேட்டு கலவையில் விழுந்தனர். இது பார்ப்பதற்கு ஒரு நகைச்சுவையாக தெரியலாம். சாக்லேட் விரும்பிகளுக்கு இது சங்கடமாய் தெரியலாம். ஆனால் அதில் விழுந்த நபர்களுக்கு பெரிதளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இடுப்பு அளவு சாக்லேட் கலவையில் சிக்கியிருந்ததால், அவர்களால் வெளியே வர முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் இறுதியில் அவர்களை வெளியே கொண்டுவருவதற்கு, பக்கவாட்டில் ஒரு துளையை ஏற்படுத்த வேண்டியிருந்தது.

எரேமியா தீர்க்கதரிசி சேறு நிரம்பிய தொட்டியின் அடியில் தன்னைக் கண்டபோது, கதை இனிமையாக இருந்தது. எருசலேமில் உள்ள தேவ ஜனத்திற்கு ஒரு தீர்க்கதரிசியாக, அவர்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசரத்தை அவர் அறிவித்தார். ஏனெனில் அது விரைவில் “பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்” (எரேமியா 38:2). எரேமியா மக்களின் “கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்” (வச. 4) என்று குற்றஞ்சுமத்தி, சிதேக்கியா ராஜாவின் அதிகாரிகள் சிலர் எரேமியா “கொல்லப்பட உத்தரவாகவேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். ராஜா ஒப்புக்கொண்டான். அவர்கள் “எரேமியாவைக் கயிறுகளினால் துரவிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்” (வச. 6).

ராஜாவின் அதிகாரிகளில் ஒருவன் அவனுக்கு காரியத்தை வெளிப்படுத்தியபோது, ராஜா தான் செய்த தப்பிதத்தை உணா்ர்ந்து, ஏபெத்மெலெக்கிற்கு உத்திரவிட்டு, எரேமியாவை துரவிலிருந்து வெளியேறச்செய்தான் (வச. 9-10).

எரேமியாவைப் போல நாம் சரியானதைச் செய்யும்போது கூட, சில சமயங்களில் நாம் சேற்றில் சிக்கிக்கொண்டது போல் உணரலாம். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் அவருடைய உதவிக்காகக் காத்திருக்கையில், நம் ஆவிகளை உயர்த்தும்படி தேவனிடத்தில் விண்ணப்பிப்போம். 

 

கிறிஸ்துவில் நம் போராயுதங்கள்

போதகா் பெய்லியின் புதிய நண்பர், அவரது வாழ்க்கையில் சந்தித்த துஷ்பிரயோகங்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கதையை அவருடன் பகிர்ந்து கொண்டார். அந்த இளைஞன் இயேசுவின் விசுவாசியாக இருந்தபோதிலும், சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டவனாயிருந்ததினால், அவனுடைய வயதிற்கு மிஞ்சிய பிரச்சனைகளை அந்த பருவத்தில் அவன் சந்திக்க நேரிட்டது. அவனுடைய அந்த இக்கட்டான வாழ்க்கை தருணத்தில் அந்த போதகர் அவனுக்கு உதவிசெய்தார்.

கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் கண்ணுக்கு தெரியாத தீய சக்திகளுடன் போரிடுகிறோம் (2 கொரிந்தியர் 10:3-6). ஆனால் நமது ஆவிக்குரிய யுத்தங்களை போராடுவதற்கு நமக்கு யுத்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை உலகத்தின் ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவைகள் “அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (வச. 4). அதற்கு என்ன பொருள்? “அரண்கள்” என்பது நன்கு கட்டப்பட்ட, பாதுகாப்பான இடங்கள். நமது தேவன் கொடுத்த ஆயுதங்களில், “நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயதங்களைத் தரித்திருந்து எதிரியை தாக்கவும் அவனிடம் இருந்து பாதுகாக்கிறதிலும்” (6:7) நாம் தெளிவுள்ளவர்களாயிருப்போம். எபேசியர் 6:13-18, வேதம், விசுவாசம், இரட்சிப்பு, ஜெபம் மற்றும் பிற விசுவாசிகளின் ஆதரவு உட்பட நம்மைப் பாதுகாக்க உதவும் காரியங்களின் பட்டியலை விரிவுபடுத்துகிறது. நம்மை விட பெரிய மற்றும் வலிமையான சக்திகளை எதிர்கொள்ளும்போது, இந்த ஆவிக்குரிய ஆயுதங்களை கையகப்படுத்துவது, நிற்பதற்கும் தடுமாறுவதற்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தும். தனியாகச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய சக்திகளுடன் போராடுபவர்களுக்கு உதவ தேவன் ஆலோசகர்களையும், பல நிபுணர்களையும் பயன்படுத்துகிறார். நல்ல செய்தி என்னவென்றால், இயேசுவின் மூலமாக நாம் போராடும் போது, நாம் முடங்கிப்போக அவசியமில்லை. தேவனுடைய சர்வாயுத வர்க்கம் நம்மிடத்தில் இருக்கிறது! 

 

தேவனோடு போராடுதல்

என் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு நீண்டகால நண்பர் எனக்கு ஒரு குறிப்பை அனுப்பினார்: “(ஆலன்) ... தேவனுடன் போராடுபவர். அவர் ஒரு உண்மையான யாக்கோபு. மேலும் நான் இன்று ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு அவர் ஒரு வலுவான காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. ஆலனின் போராட்டங்களை முற்பிதாவான யாக்கோபுடன் ஒப்பிட நான் ஒருபோதும் நினைத்ததில்லை; ஆனால் அது சரியாய் பொருந்துகிறது. தனது வாழ்நாள் முழுவதும், ஆலன் தனியாக, பதில்களுக்காக தேவனுடனும் போராடினார்;. அவர் தேவனை நேசித்தார்; ஆனால் தேவன் அவரை நேசிக்கிறார், மன்னிக்கிறார் மற்றும் அவருடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்னும் சத்தியங்களை விளங்கிக்கொள்ள முடியாமல் சிலவேளைகளில் போராடினார். ஆயினும்கூட, அவரது வாழ்க்கை அதன் ஆசீர்வாதங்களைக் கொண்டிருந்தது. அவர் பலரை நேர்மறையாய் ஊக்கப்படுத்தினார்.

யாக்கோபின் வாழ்க்கையானது போராட்டங்களால் நிறைந்திருந்தது. அவன் தன் சகோதரன் ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற தீர்மானித்தான். அவன் வீட்டை விட்டு ஓடிப்போய், தனது உறவினர் மற்றும் மாமனாருமான லாபானுடன் பல ஆண்டுகளாக போராடினான். பிறகு லாபானை விட்டு தப்பி ஓடினான். அவன் தனிமையில் ஏசாவை சந்திக்க பயந்தான். ஆயினும்கூட, அவனுக்கு பரலோக தரிசனம் கிடைத்தது. “தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்” (ஆதியாகமம் 32:1). இது ஒருவேளை தேவனிடமிருந்து அவர் பெற்ற முந்தைய தரிசனத்தின் நினைவூட்டலாக இருக்கலாம் (28:10-22). இப்போது யாக்கோபு வேறொரு தெய்வீக நபரை சந்திக்கிறார்: இரவு முழுவதும் அவர் ஒரு “மனிதனுடன்” போராடினார். மனித உருவில் இருந்த தேவனுடைய பிரதிநிதியான அந்த தெய்வீக நபர், “தேவனோடும் மனிதரோடும் போராடி” (32:28) மேற்கொண்டான் என்பதினால் யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்று பெயர் மாற்றம் செய்கிறார். இவையெல்லாவற்றிலும் தேவன் யாக்கோபோடு இருந்து அவனை நேசித்தார். நம் அனைவருக்கும் போராட்டங்கள் உள்ளன. ஆனால் நாம் தனியாக இல்லை. ஒவ்வொரு சோதனையிலும் தேவன் நம்முடன் இருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மன்னிக்கப் படுகிறார்கள், நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கின்றனர் (யோவான் 3:16). நாம் அவரைப் உறுதியாய் பற்றிக்கொள்வோம்.