எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Nancy Gavilanesகட்டுரைகள்

தலைமுறை தலைமுறையாய்

டெக்சாஸைச் சேர்ந்த இரண்டு பாட்டிமார்கள், எண்பத்தொரு வயதில் எண்பது நாட்களில் உலகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணத்தை முடித்ததற்காக சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பானார்கள். இருபத்தி மூன்று வருடங்களாக உலகை சுற்றிய இந்த சிறந்த நண்பர்கள் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்தனர். அவர்கள் அண்டார்டிகாவில் தொடங்கி, அர்ஜென்டினாவில் டேங்கோ, எகிப்தில் ஒட்டகங்களில் சவாரி, வட துருவத்தில் சறுக்கி ஓடும் சவாரி என்று பல அனுபவங்களை மேற்கொண்டனர். ஜாம்பியா, இந்தியா, நேபாளம், பாலி, ஜப்பான், ரோம் உள்ளிட்ட பதினெட்டு நாடுகளுக்குச் சென்று ஆஸ்திரேலியாவில் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டனர். இருவரும் தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரை உலகப் பயணத்தை அனுபவிக்கத் தூண்டுவதாக நம்புவதாகக் கூறினார்கள்.

யாத்திராகமத்தில், வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு வகையான சாகசத்திற்காக தேவனால் சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு ஆக்டோஜெனேரியன்களைப் பற்றி வாசிக்கிறோம். தேவன் மோசேயை பார்வோனிடம் சென்று, தேவனுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கட்டளை கொடுத்தாா். மோசேக்கு துணையாக தேவன் அவனுடைய சகோதரனாகிய ஆரோனை துணைக்கு அனுப்புகிறார். “அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது” (யாத்திராகமம் 7:7).

இந்தக் கோரிக்கை எந்த வயதிலும் பயமுறுத்துவதாக உணரலாம். ஆனால் தேவன் இந்தச் சகோதரர்களை இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். “மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள்” (வச. 10). நானூறு ஆண்டுகளுக்கும் மேலான அடிமைத்தனத்திலிருந்து தேவன் தம் மக்களை விடுவித்ததைக் கண்ட பெருமையை மோசேயும் ஆரோனும் பெற்றனர். எந்த வயதிலும் அவர் நம்மைப் பயன்படுத்த முடியும் என்பதை இந்த மனிதர்கள் நிரூபிக்கின்றனர். நாம் இளைஞராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றுவோம். 

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம். 

 

உடனடி பாராட்டு

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். [ அப்போஸ்தலர் 16:25 ]

 

எத்தியோப்பியாவிற்கு ஓர் குறுகிய கால மிஷன் பயணத்தின்போது, எங்கள் குழு ஓர் உள்ளூர் அமைச்சகத்தின் மற்றொரு குழுவுடன் சேர்ந்து, குப்பைக் கிடங்கில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தினைச் சந்திக்கச் சென்றது. அவர்கள் எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் சாட்சிகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் ஜெபங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டோம். அந்த மாலையில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று, உள்ளூர் குழு உறுப்பினர் ஒருவர் தனது கிடாா் இசைக்கருவியினை வாசிக்க, நாங்கள் நிலவின் ஒளியில் நின்று தேவனை ஆராதித்தோம். என்ன ஓர் புனிதமான தருணம்! அவர்களின் இக்கட்டான தருணத்திலும், இயேசுவில் மட்டுமே கிடைக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவர்கள் முழுமையாய் அனுபவித்தனர்.

அப்போஸ்தலர் 16ல், மற்றொரு எதிர்பாராத துதிவேளையைப் பற்றி வாசிக்கிறோம். இது பிலிப்பு பட்டணத்தில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. பவுலும் சீலாவும் இயேசுவைச் சேவித்தபோது கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கசையடி பெற்று, சிறையில் அடைக்கப்பட்டனர். விரக்திக்கு ஆளாகாமல், தங்கள் சிறை அறையில் “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்.” “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று” (வச. 25-26).

மயக்கத்திலிருந்து எழுந்த சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்துகொள்ள விரைந்தான். ஆனால் கைதிகள் தப்பியோடவில்லை என்பதை உணர்ந்தபோது, அவன் கர்த்தருக்கு பயந்து, குடும்பத்தோடு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் (வச. 27-34).

தேவன் நம் துதிகளில் பிரியப்படுகிறார். வாழ்க்கையின் உயர்வான மற்றும் தாழ்வான எல்லா தருணங்களிலும் நாம் தேவனை துதிக்கப் பிரயாசப்படுவோம். 

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

இளம்வாலிப வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது.

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5).

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார்.

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பரலோகம் பாடுகிறது

அந்த உயர்நிலைப் பள்ளி பாடகர்கள் அர்ஜென்டினா பாடலான “எல் சியோலோ கான்டா அலெக்ரியா” பாடியபோது அவர்களின் குரல்களில் மகிழ்ச்சி பொங்கியது. அதை ரசித்தேன், ஆனால் எனக்கு ஸ்பானிஷ் தெரியாததால் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாடகர் குழு “அல்லேலூயா!” என்று மகிழ்ச்சியுடன் பிரகடனப்படுத்த தொடங்கியதும், எனக்கு பரீட்சயமான அந்த வார்த்தையை விரைவிலேயே என் செவியில் விழுந்தது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மொழிகளில் ஒரே மாதிரியாக ஒலிக்கும் தேவனுக்கான துதிப் பிரகடனமான “அல்லேலூயா” என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டேன். பாடலின் பின்னணியை அறிய ஆவலுடன், நிகழ்ச்சிக்குப்பின் இணையத்திற்குச் சென்றேன், “பரலோகம் சந்தோஷத்தால் பாடுகிறது” என்று மொழிபெயர்க்கப்பட்டதைக் கண்டுபிடித்தேன்.

வெளிப்படுத்துதல் 19 இல் உள்ள ஒரு கொண்டாட்டம் நிறைந்த பத்தியில், அந்தப் பாடலில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைநிலையின் ஒரு துளி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; பரலோகம் முழுவதும் மகிழ்ச்சி! புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்தில் அப்போஸ்தலன் யோவான் எதிர்காலத்தைப் பற்றிய தரிசனத்தில், தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் மகத்தான ஜனத்திரள் மற்றும் தேவதூதர்கள் பரலோகத்தில் கூடியிருந்ததைக் கண்டார். தீமையையும் அநீதியையும் வென்ற தேவனின் வல்லமையையும், முழு பூமியின் மீதும் அவருடைய ஆளுகையையும், அவருடன் என்றென்றும் வாழும் நித்திய வாழ்க்கையையும் அந்த பாடல் குழுவின் குரல்கள் கொண்டாடுகிறது என்று யோவான் எழுதினார். மீண்டும் மீண்டும், பரலோகவாசிகள் அனைவரும் “அல்லேலூயா!” அல்லது “தேவனைத் துதியுங்கள்!” என்று அறிவிக்கிறார்கள் (வ. 1, 3, 4, 6).

ஒரு நாள் “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” (5:9) வரும் மக்கள் தேவனின் மகிமையை அறிவிப்பார்கள். மேலும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு மொழியிலும் நம் குரல்கள் அனைத்தும் ஒன்றாக “அல்லேலூயா!” என்று முழங்கும்.

 

ஒருவருக்கொருவர் உதவுங்கள்

அவ்வளவாகப் பிரபலமாகாத பயிற்சியகத்தை சேர்ந்த கிரிக்கெட் அணியினர் கிரிக்கட் மண்டல போட்டிக்காகக் களம் இறங்கியபோது, அரங்கிலிருந்த ரசிகர்கள் தோல்வியடையக்கூடிய அந்த அணிக்கு ஆரவாரம் செய்து ஊக்குவித்தனர். இந்த அணி முதல் சுற்றில் வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் வென்றனர். இப்போது அவர்களுடன் இசைக்குழு இல்லையென்றாலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கைகள் பிரிவிலிருந்து அவர்களின் பள்ளி கீதம் ஒலிக்கக் கேட்டனர். இப்போது வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் எதிரணியின் இசைக்குழுவினர், போட்டி முடியும் சில நிமிடங்களுக்கு முன்புதான் இவர்களின் பள்ளி பாடலைக் கற்றுக்கொண்டனர். அந்த இசைக்குழுவினர் தங்களுக்குத் தெரிந்த பாடல்களை வெறுமனே வாசித்திருக்கலாம், ஆனால் அவர்கள் மற்றொரு பள்ளி மற்றும் மற்றொரு குழுவிற்கு உதவ அந்த பாடலைக் கற்றுக்கொண்டனர்.

இந்த இசைக்குழுவின் செயல்கள் பிலிப்பியரில் விவரிக்கப்பட்டுள்ள ஒற்றுமையை அடையாளப்படுத்துவதைக் காணலாம். பவுல் பிலிப்பியில் உள்ள ஆரம்பக்கால சபையாருக்கும் இன்று நமக்கும், ஒற்றுமையில் அல்லது “ஏக சிந்தை(யுடன்)” (பிலிப்பியர் 2:2) வாழச் சொன்னார், குறிப்பாக அவர்கள் கிறிஸ்துவில் ஒன்றுபட்ட காரணத்தால். இதைச் செய்ய, சுயநலமான நோக்கத்தை விட்டுவிட்டு, பிறர் நலனை தங்கள் சொந்த நலன்களுக்கு முன்னதாக கருத்தில் கொள்ளும்படி அப்போஸ்தலன் அவர்களை ஊக்குவித்தார். நம்மை விடப் பிறரை முக்கியத்துவப்படுத்துவது இயல்பாகவே வராமல் இருக்கலாம், ஆனால் கிறிஸ்துவை அவ்வாறே நாம் பிரதிபலிக்கலாம். பவுல், “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வ.3) என்று எழுதினார். நம்மீது மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தாழ்மையுடன் “பிறருக்கானவகளையும் நோக்கு(வது)வானாக” (வ.4) சிறந்தது.

நாம் எப்படி மற்றவர்களைத் தாங்கக் கூடும்? அவர்களுக்கு எதிரானதைச் செய்வதோ அல்லது அவர்களுக்குத் தேவையானதை வழங்குவதோ என்பதை அவர்களின் ஆர்வங்களைக் கவனமாகப் பரிசீலிப்பதன் மூலமே நிறைவேற்றமுடியும். 

 

கும்பத்திற்கு மேலானதாக

செல்வா ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் முழுநேர பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது மூத்த சகோதரன் மோகன் மகிழ்ச்சியடைந்தார், ஆனால், சகோதரர்களாக, சிறுவயதில் செல்வாவை அவர் எவ்வாறு புழுதியில் தள்ளி சண்டையில் வெல்வார் என்பதைச் சொல்லி அவரையறியாமலேயே கிண்டல் செய்தார். செல்வா வாழ்க்கையில் வெகுதூரம் முன்னேறிவிட்டார், எனினும் அவர் எப்போதும் மோகனின் சிறிய தம்பியாகவே இருப்பார்.

நீங்கள் மேசியாவாகவே இருந்தாலும் குடும்பத்தால் மதிக்கப்படுவது கடினம். இயேசு நாசரேத்தின் மக்களிடையே வளர்ந்தார், எனவே அவர் விசேஷித்தவர் என்று நம்புவதற்கு அவர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அவரை கண்டு வியந்தனர். “இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?” (மாற்கு 6:2-3). இயேசு, “தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்” (வ. 4) என்று குறிப்பிட்டார். இவர்கள் இயேசுவை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர் தேவனின் குமாரன் என்பதை அவர்களால் நம்பி ஏற்க முடியவில்லை.

ஒருவேளை நீங்கள் ஒரு ஆவிக்குரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். உங்கள் ஆரம்பக்கால நினைவுகளில் சபைக்குச் செல்வதும், பாடல்களைப் பாடுவதும் நிறைந்திருக்கலாம். இயேசு எப்போதும் ஒரு குடும்பத்தாரைப் போலவே உணர்ந்தார். நீங்கள் அவரை விசுவாசித்துப் பின்பற்றினால், இயேசு உங்கள் குடும்பத்தினர். அவர் “(நம்மை) சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” (எபிரெயர் 2:11). தேவனின் குடும்பத்தில் இயேசு நம் மூத்த சகோதரர் (ரோமர் 8:29) இது ஒரு பெரிய பாக்கியம், ஆனால் நம்மிடையேயான நெருக்கம் அவரை சாதாரணமானவராகக் காட்டலாம். ஒருவர் குடும்பத்தினராக இருப்பதால் அவர்கள் விசேஷித்தவர் அல்ல என்று அர்த்தமல்ல.

இயேசு நமது குடும்பத்தினரும், குடும்பத்தினரை விட மேலானவர் என்பதிலும் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இன்று நீங்கள் அவரைப் பின்தொடரும்போது, அவர் மேலும் நெருக்கமானவராகவும், மேலும் விசேஷித்தவராகவும் உங்களுக்கு மாறுவாராக.