பெஹலே ஆப்
கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.
ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).
தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.
சட்டப்பூர்வமான விடுதலை
இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் அல்லது பந்துவா மஸ்தூரி 1976 இல் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது. மக்கள் தங்களுடைய உழைப்பை அடகு வைத்து, திருப்பிச் செலுத்த முடியாத கடனைப் பெறும்போது கொத்தடிமை சுழற்சி தொடங்குகிறது. அவர்களுக்குக் கடன் வழங்குபவர்கள் தங்களுக்கு வேலை செய்து கடனைச் செலுத்தக் கோருகிறார்கள், ஆனால் அவர்களுக்குச் சொற்ப ஊதியமே தருகின்றனர். இதன் விளைவாக, தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனளிப்பவரின் சொத்தாகவே வாழ்ந்து, சில சமயங்களில் தலைமுறைகளுக்கு நீட்டிக்கப்படும் கடன்களை அடைக்க முயல்கின்றனர். சட்டப்படி, அவர்கள் சுதந்திரமாக இருக்கவும், மறுவாழ்வு பெறத் தகுதியுடையவர்களாகவும் இருந்தாலும், பல தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கானோர் அடிமைத்தனத்தில் தவிக்கின்றனர்.
கிணற்றருகே இருந்த சமாரிய ஸ்தீரியும் சமூக நெறிகளுக்கு அடிமையாக இருந்தாள். அவளுடைய வாழ்க்கை முறையின் காரணமாக அவள் ஜனங்களால் ஒதுக்கப்பட்டதால் அவள் தனியாக வந்தாள். இதைச் சிக்கலாக்கும் வகையில், யூதக் கண்ணோட்டத்தில், அவள் ஒரு சமாரிய பெண்; புறக்கணிக்கப்பட்டவள் (வ.20). ஆனால் இயேசுவுடனான உரையாடல் அவளை அங்கீகரிக்கப்பட்டவளாகவும், திடப்பட்டவளாகவும் உணரச் செய்தது. இயேசு அவளை இரட்சிக்க வந்திருந்தபோதும், அதை அவள் அறியவில்லை. குடிக்க அவளிடம் தண்ணீர் கேட்டபோது, அவரது அசாதாரணமான பார்வை மற்றும் செயலால் அவள் திகைத்தாள். ஆனால் அவர்தான் எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்பதை அவள் உணர்ந்தபோது, அவள் மகிழ்ச்சியுடன் தன் கிராம மக்களை இயேசுவிடம் கொண்டு வந்தாள்.
இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் (யோவான் 3:16). இயேசு நமக்காகச் சிலுவையில் மரித்தபோது நம்முடைய பாவங்களின் கடன் அடைக்கப்பட்டது. அவர் நமது சுயாதீனத்தை விலைக்கு வாங்கி, நம்மை என்றென்றும் விடுதலையாக்கினார். மூடநம்பிக்கை, பாரம்பரியம் அல்லது சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் போன்ற பாரங்களை நாம் சுமக்க வேண்டாம் . அவர் வழங்குவதை ஏற்றுக்கொள்ளும்போது நாம் விடுதலை பெறுகிறோம்.