நம்முடைய பாரத்தைச் சுமந்தார்
தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கான பயன்பாட்டு கட்டணங்கள் சில சமயங்களில் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக அதிகமாக இருக்கும். ஆனால் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த கியரன் ஹீலிக்கு வந்த தண்ணீர் கட்டணம் இதயத்துடிப்பே நின்றுவிடும்படி இருந்தது. அவர் 1,000 கோடி டாலர் செலுத்த வேண்டும் என்று அவருக்கு வந்த செய்தி கூறியது! அந்த அளவிற்கு தண்ணீரை முந்திய மாதத்தில் பயன்படுத்தவில்லை என்பதை ஹீலி அறிந்ததால், கட்டணத்தைத் தவணை முறையில் கட்டலாமா என்று விளையாட்டாகக் கேட்டார்.
1,000 கோடி டாலர் கடன் என்பது தாங்க முடியாத பாரம். ஆனால் நம் பாவங்களினால் நாம் சுமக்கவேண்டிய உண்மையான, அளவுக்கதிகமான பாரங்களோடு ஒப்பிடும்போது அது மிகவும் சாதாரணமானது. நமது பாவத்தின் பாரங்களையும், அவற்றின் பின் விளைவுகளையும் நாமே சுமக்க முயற்சிக்கும்போது, அது நமக்கு சோர்வை ஏற்படுத்தி, நம்மை குற்ற உணர்வாலும், அவமானத்தாலும் நிறைக்கிறது. நம்மால் அந்த பாரத்தை சுமக்க முடியாது என்பதே உண்மை.
நாமே அந்த பாரங்களை சுமக்க வேண்டியதில்லை. பேதுரு விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தியதுபோல, கடவுளின் குமாரனாகிய குற்றமில்லாத இயேசு மட்டுமே நமது பாவங்களின் பாரங்களையும் அதன் பின் விளைவுகளையும் சுமக்க முடியும் (1 பேதுரு 2:24). இயேசு சிலுவையில் மரித்தபோது, நமது தவறுகளை தன்மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு மன்னிப்பை அருளினார். அவர் நமது பாரங்களை சுமந்ததினால், நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளைப் பெறவேண்டியதில்லை.
“முன்னோர்களால் பாரம்பரியமாய் அனுசரித்து வந்த வீணான நடத்தையில்” (1:18), பயத்தோடும், குற்ற உணர்வோடும் வாழ்வதைத் தவிர்த்து, அன்பும், சுதந்திரமும் கொண்ட புது வாழ்வை நாம் வாழ முடியும் (வச. 22-23).
உதவிக்கோர் அழைப்பு
2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின் தூக்கி (LIFT) விபத்தில் ஐந்து பேர் மரணமடைந்தனர், ஐம்பத்தொன்று பேர் காயமடைந்தனர். நியூயார்க் பட்டணத்தில் ஒரு பிரச்சாரத்தைக் குறித்து விளம்பரம் பண்ணப்பட்டது. ஏதோவொரு மோசமான விளைவு ஏற்படும் போது, மக்கள் எவ்வாறு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஏதோவொரு தவறு ஏற்படும் போது மக்கள் தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் போதுதான் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மிகச் சிறந்த செயல் என்னவெனில் “தெரிவி, அமைதியாகக் காத்திரு” என்பதே அதிகாரிகளின் ஆலோசனை. மக்களை காயத்திலிருந்தும், அவர்களின் இக்கட்டிலிருந்தும் உடனடியாக விடுவிக்க, நியூயார்க் நகர கட்டட அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்படுவர்.
அப்போஸ்தலர் புத்தகத்தில் பேதுரு, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதைப் பற்றி பிரசங்கம் செய்கின்றார். இப்புத்தகத்தை எழுதிய லூக்கா சில முக்கியமான நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். அதில் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் தங்களுக்குத் தெரியாத பாஷைகளில் பேசுவதைக் குறிப்பிடுகின்றார் (அப். 2:1-2) பேதுரு எழுந்து தன்னுடைய யூத சகோதர, சகோதரிகளுக்கு அதனை விளக்குகின்றார். அவர்கள் காண்பது முந்நாளில் உரைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறல் என்பதை விளக்குகின்றார் (யோவேல் 2:28-32) பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதையும், இரட்சிப்பின் நாளையும் சுட்டிக் காண்பிக்கின்றார். பாவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் தங்களை விடுவிக்குமாறு இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம் ஊற்றப்பட்டதை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். அப்பொழுது பேதுரு கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் இந்த இரட்சிப்பு கொடுக்கப்படும் என விளக்குகின்றார் (அப். 2:21) இவ்வாறு நாம் தேவனண்டை கிட்டிச் சேர்வது நாம் சட்டங்களைக் கைக்கொண்டதால் கிடைத்ததல்ல, இயேசுவை ஆண்டவர், மேசியா என ஏற்றுக் கொண்டதாலேயே கிடைத்தது.
நாம் பாவத்தில் சிக்குண்டிருந்தால் நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. நாம் விடுதலை பெற ஒரே நம்பிக்கையென்னவெனில், இயேசுவே நமது தேவனும் மேசியாவுமானவர் என ஏற்றுக் கொள்வதேயாகும்.
முற்றத்தில் ஓர் தணிவு
மிக வெப்பமான ஒரு நாளில் 8 வயது சிறுவன் கார்மன் மக்டேனியல் தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரருக்கு தாகம் தீர்க்க எதையாகிலும் செய்யவேண்டும் என்று நினைத்தான். குளிர்சாதன பெட்டி ஒன்றில் வைத்த தண்ணீர் பாட்டில்களையும், குளிர் பானத்தையும் வீட்டு வாசற்படியில் வைத்தான். அதனை கண்ட அஞ்சல்காரரின் முகமலர்ச்சியை பாதுகாப்பு கேமரா படம்பிடித்தது. “அடேங்கப்பா! தண்ணீரும், குளிர்பானமும். நன்றி ஆண்டவரே; நன்றி!” என்று அவன் குதூகலித்தான்.
“தான் வீட்டில் இல்லாதுபோனாலும் அஞ்சல்காரருக்கு குளிர்பானத்தை கொடுப்பது தன் கடமை என்று டேனியேல் நினைக்கிறான்” என்றாள் அச்சிறுவனின் தாய்.
இக்கதை நம் உள்ளத்தை உருக்குவதோடு, அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது போல், “நம்முடைய தேவைகளை எல்லாம் சந்திக்கும் ஒருவர் உண்டு” என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. தன் எதிர்காலத்தை குறித்த நிச்சயமில்லாதவராக பவுல் சிறையில் வாடினாலும், பிலிப்பு பட்டணத்து கிறிஸ்தவர்கள் அனுப்பின பொருளுதவிக்காக சந்தோஷமடைந்தார். பிலிப்பி ஒரு செழிப்பான சபை அல்ல. ஆனாலும் அவர்கள் உதாரகுணம் கொண்டவராய் தங்களுடைய குறைவிலே பவுலுக்கு கொடுத்தார்கள் (2 கொரி. 8:1-14). பிலிப்பு சபையினர் பவுலினுடைய தேவையை சந்தித்ததுபோலவே, தேவனும் அவர்களுடைய தேவைகளை “கிறிஸ்து இயேசுவுக்குள், அவருடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே… சந்திப்பார், (பிலி. 4:19).”
பெரும்பாலும் பரலோக உதவியை தேவன் பிறர் மூலமாகவே அனுப்புகிறார். அதாவது, நம்முடைய தேவைகளை தேவன் மற்றவர்களைக் கொண்டு சந்திக்கிறார். நம்முடைய தேவைகளுக்காக நாம் தேவனை சார்ந்திருக்கும்போது, பவுலைப் போல், நாமும் உண்மையான மனநிறைவின் இரகசியத்தைக் கற்றுக்கொள்வோம் (வச. 11-13).
ஆவியானவரின் வல்லமையினால்
உன் வழியில் ஒரு மலை குறுக்கிட்டால் நீ என்ன செய்வாய்? தஷ்ரத் மான்ஜியின் கதை அனைவருக்கும் உற்சாகத்தைத் தருவதாய் இருக்கிறது. அவனுடைய மனைவியை அவசர மருத்துவ சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அவனால் கொண்டு செல்ல முடியாததால், அவள் மரித்தாள். ஆனால், மான்ஜி முடியாது என்று கருதிய ஒன்றைச் செய்து முடித்தான். அந்த கிராமத்திலுள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு, மருத்துவ சிகிச்சை பெற செல்ல வசதியாக, 22 ஆண்டுகளாக மலையின் ஊடே ஒரு பாதையைச் செதுக்கினான். அவன் மரிப்பதற்கு முன்னர், இந்திய அரசாங்கம் அவனுடைய சாதனையைப் பாராட்டியது.
எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டுவது என்பது, சிறையிருப்பிலிருந்து திரும்பிய இஸ்ரவேலரின் தலைவர்களில் ஒருவனாகிய செருபாபேலின் பார்வையில் முடியாததாகத் தோன்றியது. ஜனங்கள் ஊக்கமிழந்திருந்தனர், அவர்கள் எதிரிகளிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தனர், அவர்களுக்கு போதிய வளங்கள் இல்லை, ஒரு பெரிய இராணுவப் படை பலமுமில்லை. ஆனால், தேவன் சகரியாவை செருபாபேலிடம் அனுப்பி, அவனுடைய பணியில் ஆவியானவர் செயல்பட்டு. ஒரு சேனையின் பெலத்தையும்விட, தனி மனிதர்களின் பெலத்தையும்விட அல்லது மனித வளங்களையும் விட மேலான வல்லமையையும் விளங்கச் செய்வார் (சகரி. 4:6) என நினைப்பூட்டுகின்றார். இந்த தெய்வீக உதவியின் உத்தரவாதத்தின் மேல் நம்பிக்கையுள்ளவனாய் செருபாபேல் தேவாலயத்தை கட்டும் பணியிலும் அவனுடைய ஜனத்தை மீட்பதிலும், எத்தனை மலைபோன்ற துன்பம் வந்தாலும் தேவன் அவற்றை சமபூமியாக்குவார் என்று தேவன் பேரில் நம்பிக்கை வைத்தான் (வச. 7).
நமக்கு முன்பாக மலைபோன்ற தடைகள் வந்தால் என்ன செய்வோம்? நமக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு, ஒன்று நம்முடைய சொந்த பெலத்தைக் சார்ந்திருப்பது மற்றொன்று தேவ ஆவியானவரை நம்புதல். நாம் தேவ ஆவியானவரின் வல்லமையின் மீது நம்பிக்கை வைப்போமாகில் அவர் ஒருவேளை மலைகளை நொறுக்கி சம பூமியாக்குவார், அல்லது நமக்கு பெலனையும் சகிப்புத் தன்மையையும் கொடுத்து மலைமீது ஏறி கடக்கச் செய்வார்.
ஒரு புதிய பெயர்
மாற்கு லேபர்டன் எழுதியுள்ள “பெயர் குறிப்பிடுவதின் மூலம் நடத்துதல்” என்ற இதழில் ஒரு பெயரின் சக்தியைப் பற்றி எழுதியுள்ளார். “இசைத்திறமை வாய்ந்த அவரது நண்பர் ஒருவர், ஒருநாள் என்னை ‘இசைத்திறமை’ என்று என்னை பெயரிட்டு அழைத்தபொழுது, அது என்னில் ஏற்படுத்தியதாக்கத்தை இன்னும் உணருகிறேன். இசைத்திறமை என்று ஒருவர் கூட என்னை அழைத்தது கிடையாது. நான் எந்த ஒரு இசைக்கருவியையும் இசைத்தது கிடையாது. நான் ஒரு தனிப்பாடகரும் அல்ல ஆயினும் நான் அறியப்பட்டவனாகவும், நேசிக்கப்பட்டவனாகவும் உணர்ந்தேன். அந்த நண்பர் என்னை உற்று கவனித்து, என்னிடத்திலுள்ள இசைத் தன்மையை உறுதிப்படுத்தி, எனக்குள் ஆழமாக இருந்த உண்மையை அறிந்து பாராட்டினார்” என்று கூறினார்.
இயேசு சிமியோனின் பெயரை மாற்றி புதுப்பெயரை இட்டபொழுது, அவனும் இப்படித்தான் ஒருவேளை உணர்ந்திருப்பான். இயேசுதான் மேசியா என்று அந்திரேயா உறுதியாக அறிந்து கொண்டவுடனேயே, அவன் அவனது சகோதரன் சிமியோனைக் கண்டு அவனை இயேசுவிடம் அழைத்து வந்தான் (யோவா. 1:41-42). இயேசு அவனது ஆத்துமாவிற்குள் உற்று நோக்கி சிமியோனின் உள்ளத்தில் ஆழமான சத்தியம் புதைந்து கிடப்பதை உறுதிப்படுத்தி பாராட்டினார். ஆம், இயேசு சிமியோனில் காணப்பட்ட தோல்விகளையும், திடீரென உணர்ச்சிவசப்படும் தன்மையையும் அறிந்திருந்தார். அதற்கு மேலாக சபைக்குத் தலைவனாகக் கூடிய உள்ளான ஆற்றல் அவனுக்குள் இருப்பதை இயேசு கண்டார். உடனே அராமிக் மொழியில் பேதுரு அதாவது கல் என்று அர்த்தமுடைய கேபா என்று அவனுக்குப் பெயரிட்டார் (யோவா. 1:42; மத். 16:18).
அது போலத்தான் நமக்கும், தேவன் நமது பெருமை, கோபம், பிறர் மீது உண்மையான அன்பற்ற தன்மை இவைகளைப் பார்க்கிறார். அதோடுகூட கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதையும் அறிந்திருக்கிறார். அவர் நம்மை நீதிமான்களாக்கப்பட்டவர்களென்று, ஒப்புரவாக்கப்பட்டவர்களென்றும் (ரோம. 5:9-10) மன்னிக்கப்பட்டவர்களென்றும், பரிசுத்தரென்றும், பிரியர்களென்றும் (கொலோ. 2:13; 3:12) அழைக்கப்பட்டவர்களென்றும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்றும் உண்மையுள்ளவர்களென்றும் (வெளி. 17:14) அழைக்கிறார். தேவன் உங்களை பார்க்கும் முறையை நினைவு கூர்ந்து, அக்குண லட்சணங்களே நீங்கள் யார் என்பதை விளக்கட்டும்.
தொடர்ந்து முன்னேறிச் செல்
‘வியப்பூட்டும் பந்தயம்’ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிஜத்தில் நடக்கும் காரியங்களைத் தொகுத்து வழங்கும் அந்நிகழ்ச்சியில், பத்து ஜோடிகளை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு ஒரு பந்தயத்தை எதிர்கொள்ளும் அவர்கள், ரயில், பேருந்து, டாக்ஸி, பைக் போன்றவற்றில் பயணித்தும், நடந்தும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு முன்னேறிச் செல்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் செல்ல வேண்டிய அடுத்த இடத்திற்கான வழிமுறைகளைப் பெற்று சவால்களை எதிர்கொண்டு பந்தயத்தில் தொடர்ந்து செல்கின்றனர். இறுதி இடத்தை முதலாவது சென்றடைவதே இந்தப் பந்தயத்தின் இலக்கு. முதலாவதாக சென்றடையும் ஜோடிக்கு 10 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்படும்.
கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு பந்தயத்தோடு ஒப்பிடும் அப்போஸ்தலனாகிய பவுல், தான் இன்னும் இலக்கை அடையவில்லை என்று கூறுகிறார். “சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்று கூறியுள்ளார் (பிலி. 3:13-14). அவர் தன்னுடைய கடந்த கால தோல்விகளை எண்ணிப்பார்த்து அவை தன்னைக் குற்ற உணர்வினால் துவண்டு போக அனுமதிக்கவும் இல்லை, தன்னுடைய நிகழ்கால வெற்றிகள் தன்னை மெத்தனமாக இருக்கவும் அனுமதிக்கவில்லை. தான் இன்னும் அதிகமதிகமாய் இயேசுவைப் போல மாறும் இலக்கை நோக்கி அவர் தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டிருந்தார்.
நாமும் இப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய கடந்த காலத் தோல்விகளையோ வெற்றிகளையோ பொருட்படுத்தாது இயேசுவைப் போல மாற வேண்டும் என்கிற இறுதி இலக்கை நோக்கி, தொடர்ந்து முன்னேறிச் செல்வோமாக. நாம் உலகப்பிரகாரமான பரிசுப்பொருளுக்காக ஓடவில்லை. மாறாக, நித்தியத்திற்கும் அவரில் மகிழ்ந்திருக்கும் நிகரற்ற பரிசைப் பெறவே ஓடுகிறோம்.
இணைந்து பணியாற்றுதல்
என் மனைவி அற்புதமான கறிக் குழம்பு செய்வாள். சிறிது கறியோடு, தேவைக்கேற்ற நறுக்கிய உருளைக்கிழங்கு, சீனிக் கிழங்கு, செலரி (Celery) கீரை, காளான், காரட் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மிக மிதமான சூட்டில் அதிக நேரம் வேகவிட வேண்டும். பிறகு அது நன்கு வெந்ததற்கு அடையாளமாக வீடெங்கும் மணம் வீசும். அதை சுவைக்கும்பொழுது, அதன் சுவை மகிழ்ச்சியளிக்கும். அப்பொருட்கள் எல்லாம் தனித் தனியாக கொண்டுவர முடியாத சுவையை, அவை யாவும் இணைந்து கொடுக்கின்றன . மிக மிதமான சூட்டில் அதிக நேரம் எடுத்து விளைவித்தாலும், அது என்னுடைய நன்மைக்கே.
“சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது,” என்கிற சொற்றொடரை பாடுகளின் அடிப்படையில் கூறின பொழுது, ‘ஒருங்கிணைந்த செயல்பாடு’ என்று நாம் இன்று
உபயோகிக்கும் வார்த்தையின் மூல வார்த்தையை பவுல் உபயோகித்துள்ளார். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோ. 8:28) என எழுதியுள்ளார். தேவன் துயரங்களை, துன்பங்களை விளைவிப்பவர் அல்ல, மாறாக அச்சூழ்நிலைகளை தன்னுடைய தெய்வீக திட்டங்களோடு இணைத்து நன்மை விளைவிக்கவே விரும்புகிறார் என்பதை ரோமர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என பவுல் விரும்பினார். “நன்மைக்கேதுவானது’ என்று பவுல் குறிப்பிட்டது நிலையற்ற ஆசீர்வாதங்களாகிய சுகம், செழிப்பு, புகழ் அல்லது வெற்றியை அல்ல, மாறாக “தன்னுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” உரிய நன்மையை (வச. 29).
நம்முடைய பரம பிதா எல்லா துன்பங்களையும், துயரங்களையும், தீமைகளையும் ஒன்று சேர்த்து அவருடைய நாம மகிமைக்காகவும், நம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காகவும் நன்மை விளைவிக்கும்படி செய்வதால், நாம் பொறுமையோடும், நம்பிக்கையோடும் காத்திருப்போமாக. ஏனெனில் அவர் நம்மை இயேசுவைப் போல மாற்ற விரும்புகிறார்.
அழகான ஒற்றுமை
மூன்று பெரிய மாமிசம் உண்ணும் கொடிய விலங்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி விளையாடுவதைக் காண்பது அரிதான ஒன்று. ஆனால் சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஜார்ஜியாவில் (Georgia) உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் இது தான் தினமும் நடக்கிறது. கொடுமைப்படுத்தப்பட்டு சரியான கவனிப்பின்றி இருந்த ஒரு சிங்கம், ஒரு வங்காள புலி (Bengal Tiger) மற்றும் கருங்கரடி ஆகியவை நோவாவின் பேழை விலங்குகள் சரணாலயத்தால் 2001ஆம் ஆண்டு மீட்கப்பட்டது. “நாங்கள் அவைகளை பிரித்திருக்கலாம், ஆனால் அவை ஒரு குடும்பம் போல காணப்பட்டதால் அவைகளை பிரிக்காமல் ஒன்றாக வைத்திருக்க முடிவு செய்தோம்” என்று அச்சரணாலயத்தின் துணை இயக்குனர் கூறினார். தாங்கள் கொடுமை படுத்தபட்ட நாட்களில் அம்மூன்று விலங்குகளும் ஒருவரில் ஒருவர் ஆறுதலடைந்ததால், அவர்களுக்குள்ள வேறுபாடுகளைக் கடந்து, அவை சமாதானத்தோடு ஒற்றுமையாக வாழ்கின்றன.
ஒற்றுமை என்பது அழகான ஒன்று. ஆனால் ஏபேசு பட்டணத்து விசுவாசிகளுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டுள்ள ஒற்றுமை விசேஷமானது. கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவையவங்களாக அழைக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப வாழும் படியாக எபேசு விசுவாசிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார் (எபே. 4:4-5). மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் பொறுமையிலே அவர்கள் வளரும் பொழுது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே அவர்கள் ஒற்றுமையாய் வாழ்வார்கள். இந்த சுபாவங்கள், நம் அனைவருக்கும் பொதுவான இயேசு கிறிஸ்துவின் “அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி” வாழ வழி செய்கிறது. வேறுபாடுகள் இருப்பினும், நம்முடைய இரட்சகரின் மரணத்தின் மூலம் நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு, நம் வாழ்வில் நிறைவேறிக் கொண்டிருக்கும் கிரியைகள் மூலம் ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாக்கப்பட்டு தேவனின் குடும்பத்தில் அவையவங்களாக இணைக்கப்பட்டிருக்கிறோம்.
எச்சரிப்பு!
நுகர்வோர் பயன்படுத்தும் உற்பத்திப் பொருட்களில் கீழ்க்கண்ட எச்சரிப்புகள் காணப்படுகின்றன:
“மடக்குமுன் குழந்தையை தூக்கிவிடுங்கள்.” (குழந்தைகளின் தள்ளுவண்டி)
“ஆக்ஸிஜன் கொடுக்காது.” (தூசிக்காக நாசியில் அணியும் முகமூடி)
“வாகனம் ஓட்டும்பொழுது உங்களது கைபேசியை ஒருக்காலும் உபயோகப்படுத்தாதீர்கள்.” (கையினால் பயன்படுத்தத் தேவையற்றதும் வாகனம் ஓட்டிக்கொண்டு பேசக்கூடிய Drive ‘n’ Talk செல்போன்)
“பயன்படுத்தும்பொழுது இப்பொருள் நகரும்.” (ஸ்கூட்டர்)
“ஒரு முட்டாளிடமிருந்து முட்டாள்தனத்தை எதிர்பாருங்கள்” என்ற முதுமொழி நாபால் அணிந்திருந்தால், அது அவனைக்குறித்த சரியான எச்சரிப்பைக் கொடுக்கும் குறிப்புச் சீட்டாக இருந்திருக்கும் (1 சாமுவேல் 25ஐப் பார்க்க). அவன் தாவீதிடம் பேசினபொழுது காரணமற்ற கோபத்துடன் பேசினான். சவுலிடமிருந்து தாவீது தப்பி ஓடினபொழுது, நாபால் என்ற ஐசுவரியவானின் ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தான். நாபால் அவனது ஆடுகளுக்கு மயிர் கத்தரித்து விருந்து வைக்கிறான், என்று தாவீது கேள்விப்பட்ட பொழுது, அவனது ஆட்களில் 10 பேரை நாபாலிடம் அனுப்பி அவனும் அவனுடைய ஆட்களும், நாபாலினுடைய ஆட்டுமந்தைகளை வனாந்திரத்தில் பாதுகாத்து கொண்டதிற்குப் பதிலாக, அவனுக்கும் அவனது ஆட்களுக்கும் உணவு தந்து உதவுமாறு மரியாதையுடன் கேட்டு அனுப்பினான் (வச. 4-8).
தாவீதின் விண்ணப்பத்திற்கு, நாபால் மிகவும் கோபத்துடன் மறுமொழி கொடுத்தான். “தாவீது என்பவன் யார்?... நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்கு கொடுப்பேனோ?” (வச. 10, 11) என்றான். அன்றைய நாட்களில் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும்பொழுது, மற்றவர்களை விருந்திற்கு அழைக்க வேண்டும் என்ற பழக்கத்தின்படி அவன் தாவீதை அழைத்து உபசரிக்கவில்லை. மேலும் தாவீதை மரியாதை இல்லாமல் பேசி, இழிவு படுத்தினான். முக்கியமாக தாவீது அவனது ஆட்டு மந்தைகளைக் காத்துக்கொண்ட பணிக்கான கூலியைக் கூட நாபால் அவனுக்குத் தரவில்லை.
உண்மையாகக் கூறப்போனால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிறிய அளவில் நாபாலின் குணம் இருக்கிறது. சில நேரங்களில் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறோம். இதற்கான ஒரே மருந்து, நாம் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிடுவதே ஆகும். அவர் நம்மை மன்னிக்க முன்வந்து, நமக்கு ஞானம் தந்து போதித்து வழிநடத்துவார்.