பரலோகத்திலிருந்து உதவி
ககடற்பயணிகள், தங்களுடைய சோகமான நிலைமையைத் தெரிவிக்க தேவையான SOS என்ற மோர்ஸ் குறியீட்டு அடையாளம், 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு ‘ஸ்டீம் ஷிப் கென்டக்கி’ என்ற கப்பல் மூழ்கிய போது, அக்கப்பலிலிருந்த நாற்பத்தாறு பயணிகளையும் காப்பாற்ற இந்த குறியீட்டு அடையாளம் பயன்பட்டதிலிருந்து, அது பிரபல்யமடைந்தது.
SOS என்பது ஒரு சமீபகால கண்டுபிடிப்பு. ஆனால், அவசரகால உதவிக்காகக் கூப்பிடல் என்பது மனித குலம் உருவானது முதல் இருந்து வருகிறது. இத்தகைய கூப்பிடுதலை நாம் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் சரித்திரத்தில் அநேக இடங்களில் பார்க்கின்றோம். யோசுவா தன்னுடைய சொந்த இஸ்ரவேல் ஜனங்களின் எதிர்ப்பைச் சந்தித்தபோதும் (யோசு. 9:18) சவாலான வனாந்தர பிரயாணத்திலும் (3:15-17) . இஸ்ரவேலர் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக, தேவன் அவர்களுக்கு வாக்களித்த தேசத்தை கொஞ்சங், கொஞ்சமாகக் கைப்பற்றி சுதந்தரித்துக் கொண்ட போதும் காண்கின்றோம். இத்ததைய போராட்டங்களின் போது “கர்த்தர் யோசுவாவோடே கூட இருந்தார்” (6:27).
யோசுவா 10ல் காண்கிறபடி, இஸ்ரவேல் ஜனங்களோடு சமாதானமாயிருந்த கிபியோனியருக்குத் துணையாக இஸ்ரவேலர், அவர்களை எதிர்த்த ஐந்து ராஜாக்களுக்கும் எதிராக யுத்தம் பண்ணப் புறப்பட்டனர். யோசுவா, தங்களை எதிர்த்து வருகின்ற பெலசாலிகளான ஐந்து ராஜாக்களையும் மேற்கொள்ள தேவனுடைய உதவியைக் கேட்கின்றான் (வச. 12). கர்த்தர் வானத்திலிருந்து கல்மழையைத் கட்டளையிட்டார். இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களை முற்றிலும் அழிக்குமட்டும் கர்த்தர் சூரியனை நடுவானில் ஒரு பகல் முழுவதும் தரித்து நிற்கச் செய்தார் (யோசு. 10:14). இப்படி, “மெய்யாகவே கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்”.
ஒரு வேளை நீயும் இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலிலிருக்கலாம். நீ கர்த்தருக்கு ஒரு SOS (எஸ்.ஓ.எஸ்) அனுப்பு. யோசுவா பெற்றுக் கொண்ட உதவியை விட வேறுவிதமாக உனக்கு உதவி வரும். அது ஒருவேளை நீ எதிர்பாராத ஒரு வேலையின் வழியாகயிருக்கலாம், அல்லது உன் தேவையைப்புரிந்து கொண்ட ஒரு மருத்துவராக இருக்கலாம், அல்லது கவலையின் மத்தியில் ஏற்பட்ட சமாதானமாயிருக்கலாம். இத்தகைய வழிகளில் அவர் நீ உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டு பதிலளித்து உனக்காக யுத்தம் செய்கிறார். எனவே ஊக்கத்தோடிரு.
விழிப்புடன் கவனித்தல்
என்னுடைய மகன் பள்ளிக்குச் செல்வதற்கு கதவைத் தாண்டி ஓடும்போது, நான் அவனை பற்களைத் துலக்கினாயா எனக் கேட்டேன். மீண்டும் இக்கேள்வியைக் கேட்டதோடு உண்மை பேசுவதின் முக்கியத்துவத்தையும் அவனுக்கு நினைப்பூட்டினேன். என்னுடைய அறிவுரையைக் குறித்துச் சற்றும் பாதிப்படையாமல், கிண்டலாக குளியல் அறையில் ஒரு பாதுகாப்பு கேமரா பொருத்துவதே உங்களுக்குத் தேவை என்றான். அப்படியென்றால் நானே நேரடியாக அவன் பல்துலக்கியதை உறுதிப்பண்ணிக் கொள்ள முடியும், அவனும் பொய் சொல்ல தூண்டப்படமாட்டான்.
ஒரு பாதுகாப்பு கேமரா, நாம் சட்டங்ககளைக் கைக்கொள்ள நம்மை நினைவுபடுத்தலாம், ஆனால், நம்மை யாரும் கவனிக்கமுடியாத இடங்களும், நம்மையாரும் பார்க்கக்கூடாத வழிகளும் உள்ளன. ஒருவேளை நம்முடைய புத்திசாலித்தனத்தால் இந்த பாதுகாப்பு கேமராவை தவிர்த்துவிடலாம். ஆனால், நாம் தேவனுடைய பார்வையைவிட்டு விலகிவிட்டோமென்று நினைத்தால், நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.
“எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ?” என்று கர்த்தர் கேட்கின்றார் (எரே. 23:24). அவருடைய இந்தக் கேள்வியில் ஓர் ஊக்கப்படுத்துதலும், ஓர் எச்சரிப்பும் இருக்கின்றது.
எச்சரிப்பு என்னவெனில், நாம் ஓடி ஒளிந்து கொள்ளவோ, அவரை ஏமாற்றவோ முடியாது. நாம் செய்யும் எல்லா காரியங்களும் அவர் பார்வையில் தெளிவாக இருக்கின்றது.
அவர் தரும் ஊக்கம் என்னவெனில், இப்புவியிலோ அல்லது வானத்திலோ எங்கிருந்தாலும் நம்முடைய பரலோகத் தந்தையின் விழிப்போடுள்ள பாதுகாப்பிற்குள் இருக்கின்றோம் என்பதே. நாம் தனிமையில் இருப்பதாக எண்ணினாலும் தேவன் நம்மோடிருக்கின்றார். இன்று நாம் எங்கு சென்று கொண்டிருந்தாலும் இந்த உண்மை நம்மை அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அவர் தரும் ஆறுதலைப்பெற்றுக்கொள்ள அழைக்கின்றது. அவர் நம்மை விழிப்புடன் கவனிக்கின்றார்.
மறைந்திருக்கும் அழகு
டொபாகோ தீவின் கடற்கரையிலிருந்து சற்று உள்ளே, கரிபியன் கடலுக்குள் சென்று ஆழ்கடலை பார்வையிட செல்லும்போது சுவாசிப்பதற்கு தேவையான உடையை அணிந்துகொள்வது அவசியம் என்று கூறி, என்னுடைய குழந்தைகளை சம்மதிக்கச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் உள்ளே சென்று திரும்பிய போது மிகவும் மகிழ்ச்சியோடு, “அங்கே ஆயிரக்கணக்கான வகைகளில் மீன்கள் இருக்கின்றன. அது மிகவும் அழகாயிருக்கின்றது. இத்தனை வண்ணமயமான மீன்களை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை” என்றனர்.
அந்தக் கடலின் மேற்பரப்பைப் பார்க்கும் போது, அது எங்கள் வீட்டினருகிலுள்ள நல்ல நீர் ஏரிபோலவேயிருந்ததால், அதன் அடியில் மறைந்திருக்கும் அந்த அழகை எங்கள் குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை.
சாமுவேல் தீர்க்கதரிசி பெத்லகேமிற்கு ஈசாயின் குமாரரில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணச் சென்றார். மூத்த குமாரன் எலியாபை சாமுவேல் பார்த்த போது அவனுடைய தோற்றத்தை வைத்து, சரியான நபரைக் கண்டு கொண்டதாக எண்ணினான். ஆனால், தேவன் எலியாபைப் புறக்கணித்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி, “நீ இவனுடைய முகத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். …மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார்” (1 சாமு. 16:7) என்றார்.
எனவே சாமுவேல் இன்னமும் வேறே பிள்ளைகள் இருக்கின்றனரா? எனக் கேட்டார். ஈசாயின் இளைய மகன் அப்பொழுது அங்கேயில்லை. அவர்களுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். எனவே ஆட்களை அனுப்பி அந்த மகன் தாவீதை அழைப்பித்தான். தேவன் சாமுவேலிடம் அவனை அபிஷேகம்பண்ணும்படி சொன்னார்.
நாமும் அடிக்கடி மக்களை வெளித்தோற்றமாகவே பார்க்கின்றோம். அவர்களின் உள்ளத்தினுள், மறைந்துள்ள அழகைக்காண நேரம் எடுப்பதில்லை. தேவன் மதிப்பிடுவதைப் போன்று நாம் மதிப்பிடுவதில்லை. ஆனால், நாமும் புறத்தோற்றத்திற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண நேரம் செலவிட்டால் மிகப்பெரிய பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
உலகத்திற்கு ஒளி
இங்கிலாந்து தேசத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலுள்ள கிபிள் சிற்றாலயத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு சித்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஆங்கிலேய கலைஞர் வில்லியம் ஹோல்மன் ஹன்ட் வரைந்த “உலகத்தின் ஒளி” என்ற சித்திரத்தில், இயேசு ஒரு கையில் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு வீட்டின் கதவைத் தட்டுவது போல இருக்கும்.
இந்த படத்திலுள்ள ஒரு புதிரான காரியமென்னவெனில், அதிலுள்ள கதவில் எந்தவொரு கைப்பிடியும் இல்லை. அப்படியாயின் இந்தக் கதவைத் திறப்பதற்கு வழியொன்றுமில்லையே என்று கேட்டபோது ஹன்ட், இதன் மூலம் வெளிப்படுத்தல் 3:20ன் கருத்தை வெளிப்படுத்திக் காட்ட விரும்பியதாகக் கூறினார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து…”
அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளும் இந்த சித்திரமும் இயேசுவின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. அவர் மென்மையாக, தன்னுடைய சமாதானத்தைத் தருவதாகக் கூறி நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். நம்முடைய பதில் வரும் வரையில் இயேசு பொறுமையாகக் காத்திருக்கின்றார். அவர் தானாகக் கதவைத் திறப்பதில்லை. நம்முடைய வாழ்வில் கட்டயமாக நுழைவதில்லை. அவர் தமது சித்தத்தை நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவர் எல்லா ஜனத்திற்கும்; அவருடைய நற்கொடையாம் இரட்சிப்பையும், வாழ்விற்கு வழிகாட்ட ஒளியையும் தர காத்திருக்கின்றார்.
யார் அவருக்குக் கதவைத் திறந்தாலும் அவர் வருவேனென வாக்களித்துள்ளார், இதற்கு வேறெந்த நிபந்தனைகளோ முன் ஆயத்தங்களோ தேவையில்லை.
உன்னுடைய ஆன்மாவின் கதவை இயேசு மென்மையாகத் தட்டுகின்ற சத்தத்தைக் கேட்பாயாகில் நீ அவரை உள்ளே வரவேற்கும் மட்டும் அவர் பொறுமையாகக் காத்திருப்பார் என்பது உனக்கு ஆவலையும், ஊக்கத்தையும் தரும்.
ஒரு நண்பனின் ஆறுதல்
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தன் மகளின் இடுப்பிற்குக் கீழே முழுவதும் சகதியாயிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள் அந்தத் தாய். என்ன நடந்ததென்று அவர் விசாரித்தாள். மகள், நடந்ததை விவரித்தாள். ஒரு சிநேகிதி வழுக்கி சகதி நிறைந்த ஒரு குட்டையினுள் விழுந்துவிட்டாள். ஒரு மாணவி ஆசிரியரை அழைக்க ஓடினாள். சகதியினூடே சென்று காயமடைந்த அந்தச் சிநேகிதியின் காலைத் தாங்கிக் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் வரும் வரை தானும் அந்தச் சகதியில் இறங்கி அந்தச் சிநேகிதிக்கு உதவியதாகக் கூறினாள்.
யோபு பேரிழப்பை அனுபவித்தான். தன் பிள்ளைகளை இழந்தான். உடல் முழுவதும் கொடிய பருக்களால் தாக்கப்பட்டான். அவனுடைய துயரம் அவனால் தாங்கக் கூடாதததாயிருந்தது. அவனைத் தேற்ற, ஆறுதல் கூற மூன்று நண்பர்கள் வருகின்றனர் என வேதத்தில் வாசிக்கின்றோம். அவர்கள் யோபுவைப் பார்த்த போது, “சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து, தங்கள் தலைகள் மேல் புழுதியைத் தூற்றிக் கொண்டு வந்து, யோபுவின் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்” (யோபு 2:12-13).
யோபுவினுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் நல்ல புரிந்து கொள்ளலைக் காட்டினர். யாரேனும் அவனருகிலிருந்து அவனோடு புலம்ப வேண்டுமென யோபு விரும்புகிறானென உணர்ந்து கொண்டனர். அந்த மூன்று மனிதரும் பின்னர் பேச ஆரம்பிக்கின்றனர். அவர்கள் பேச ஆரம்பித்த போது எதிர்பார்த்ததற்கு முரணாக, யோபுவிற்குத் தவறான யோசனையைக் கொடுத்து விடுகின்றனர் (16:1-4).
ஒரு துயரப்பட்ட நண்பனைத் தேற்ற நாம் செய்யக் கூடிய சிறந்த காரியமென்னவெனின், துன்ப நேரத்தில் அவர்களோடு அமர்ந்து இருப்பதே.
எதிர்பார்ப்போடு காத்திருத்தல்
ஒவ்வொரு மே தினத்தன்றும் (மே 1) இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டில், அதிகாலை வேளையில் வசந்த காலத்தை வரவேற்க ஒரு கூட்ட மக்கள் திரண்டு விடுவர். காலை 6 மணிக்கு மேக்டலின் கோபுரத்தின் உச்சியிலிருந்து, மேக்டலின் கல்லூரி பாடகர் குழுவினர் பாடுவார்கள். அந்த இரவைக் கடந்து
வெளிவரும் பாடல்களையும், மணியோசையையும் எதிர்பார்த்து ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பர்.
ஆரவாரத்தோடு காத்திருப்பவர்களைப் போன்று நானும் காத்திருக்கின்றேன். நான் என் ஜெபத்திற்கு வரும் பதிலுக்காகவும், தேவனின் வழி நடத்துதலுக்காகவும் காத்திருக்கின்றேன். எந்த நேரம் என் காத்திருத்தல் முடியும் என்று தெரியாதிருந்தும், எதிர்பார்ப்போடு காத்திருக்கக் கற்றுக் கொண்டேன். இருண்ட இரவுகளைப் போன்ற சூழ்நிலைகளை, ஆழ்ந்த கவலையோடு எதிர் நோக்குவதாக சங்கீதக்காரன், சங்கீதம் 130ல் கூறுகிறான். ஜாமக்காரனைப் போல, துன்பங்களின் மத்தியில் தேவன் மீது நம்பிக்கையாயிருப்பதைத் தெரிந்து கொண்டான். ‘‘எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும், அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது” (வச. 6).
தேவன் உண்மையுள்ளவர் என்பதின் மீதுள்ள எதிர்பார்ப்பு, இருளினூடே, துயரங்களின் மத்தியில், அதைத் தாங்கக் கூடிய பெலனைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை சங்கீதக்காரனுக்குக் கொடுக்கிறது. இருளினூடே ஒரு சிறு ஒளிக்கதிரைக் கூட காணாதிருந்தும், வேதாகமம் முழுவதும் காணப்படுகின்ற வாக்குத்தத்தங்களின் அடிப்படையில், இந்த நம்பிக்கை அவருடைய காத்திருத்தலுக்கு பெலனளிக்கிறது.
ஒரு வேளை நீயும், இருளின் நடுவேயிருப்பாயாயின் சோர்ந்து போகாதே, விடியல் வருகிறது. அது இந்த வாழ்விலோ அல்லது பரலோகத்திலோ, தெரியாது. ஆனால் நம்பிக்கையை விட்டுவிடாதே. தேவன் தரும் விடுதலைக்காக விழித்திருந்து காத்திரு. தேவன் உண்மையுள்ளவர்.
விசுவாசம், அன்பு மற்றும் நம்பிக்கை
பத்தாண்டுகள் என்னுடைய அத்தை அவர்களுடைய அப்பாவை (என் தாத்தாவை) தன் வீட்டில் வைத்து பராமரித்தார். அவர் நல்ல நிலையில் இருக்கும்போதே அவருக்கு சமைத்து, சுத்தம் செய்து அவருடைய எல்லா காரியங்களையும் பார்த்துக்கொண்டார். அவருடைய ஆரோக்கியம் குன்றியபோதும், அவருக்கு ஒரு செவிலியராக இருந்து தேவையான பணிவிடைகளைச் செய்தார்.
“உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும்…நினைவுகூர்ந்து தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்” (1 தெச. 1:2,4) என்று தெசலோனிக்கேயர் சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின வார்த்தைகளுக்கு இந்த பெண்ணின் சேவை ஒரு நவீன முன்மாதிரி என்று சொல்லலாம்.
அன்புடனும் விசுவாசத்துடனும் என்னுடைய அத்தை பணியாற்றினார். அனுதினமும் அவர் காண்பித்த கரிசனை, இந்த அரிய பணிக்கு தேவன் தன்னை அழைத்துள்ளார் எனும் நம்பிக்கையில் விளைந்த பிரதிபலன். அவர்களது பிரயாசம், தகப்பன்மேலும் தேவன்மேலும் வைத்திருந்த அன்பினால் பிறந்த கனி.
நம்பிக்கையிலும் அவர்கள் பொறுமையாய் சகித்தார்கள். என் தாத்தா மிகவும் அன்பானவர், அவருடைய நலம் குன்றுவதை பார்க்க இயலாமல், அவரை பராமரித்திட, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து தன் போக்குவரத்தையும் குறைத்துக்கொண்டார். தேவன் அவர்களை அனுதினமும் பெலப்படுத்துவார் என்கின்ற விசுவாசமும், தாத்தாவுக்கு காத்திருக்கும் பரலோக நம்பிக்கையுமே அவர்கள் சகிப்பதற்கு உதவியது.
ஒரு உறவினரை கவனிக்கின்ற, பக்கத்து வீட்டாருக்கு உதவிசெய்கின்ற அல்லது தன்னார்வத்துடன் நேரத்தை கொடுக்கின்ற எந்தவொரு காரியமாக இருந்தாலும் தேவன் உங்களைச் செய்யும்படி சொன்ன காரியத்தில் நீங்கள் திடப்படுங்கள். உங்களுடைய பிரயாசமே விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வல்லமையான சாட்சியாக வெளிப்படும்.
நீர் மேல் நடத்தல்
ஒரு பனிக்காலத்தில், உலகில் ஐந்தாவது பெரிய ஏரியான மிச்சிகன் ஏரியை, அந்த பகுதி மிகவும் ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும், அதன் மேற்பகுதி உறைந்திருப்பதைப் பார்க்கச் சென்றேன். குளிரைத் தாங்கும் உடைகளைப் போர்த்திக் கொண்டு, அந்த ஏரிக் கரையில் நான் வழக்கமாக சூரிய குளியல் எடுக்குமிடத்தில் நின்று, அந்த பிரம்மிக்கத்தக்க காட்சியைக் கண்டேன். அங்கு நீர் அலை வடிவில் உறைந்து, பனிக்கட்டியின் மிக அற்புதமான தோற்றத்தைக் கொண்டிருந்தது.
அந்த ஏரியில் கரையிலிருந்தே நீர் உறைந்திருந்ததால், நான் ‘‘நீர் மேல் நடக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். அந்த பனி என்னுடைய எடையைத் தாங்கக் கூடிய அளவிற்கு தடிமனானது எனத் தெரிந்திருந்தாலும், நான் முதல் சில அடிகளைத் தாங்கும் எனச் சோதித்தபின்னரே எடுத்து வைத்தேன். இந்த பனி என்னைத் தொடர்ந்து தாங்குமா என எனக்குள்ளேயே பயந்தேன். நான் இந்த பரந்த, பழக்கமற்ற பரப்பை கவனமாக ஆராய்ந்தபோது, இயேசுவும் பேதுருவை படகிலிருந்து இறங்கி கலிலேயாக் கடலின்மேல் நடந்து வரச் சொன்னதை நினைவு கூர்ந்தேன்.
சீடர்கள், இயேசு நீர்மேல் நடந்து வந்ததைப் பார்த்தபோது, அவர்களும் பயந்தனர். ஆனால் இயேசு அவர்களிடம், ‘‘திடன் கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” என்றார் (மத். 14:26-27). பேதுரு தன் பயத்தை மேற்கொண்டு, நீரின்மேல் இறங்கினான். ஏனெனில், இயேசு அங்கேயிருக்கிறாரென அவனுக்குத் தெரியும். ஆனால் அங்கு காற்றையும், அலையையும் பார்த்தபோது இவனுடைய தைரியமான அடிகள் தயங்கின. பேதுரு இயேசுவை நோக்கி கதறுகிறான். இயேசு அங்கே அவனருகில் தன்னுடைய கரத்தை நீட்டி அவனைக் காப்பாற்றும்படி அங்கேயே இருந்தார்.
ஒரு வேளை நீயும் இத்தகைய ஒரு சூழ்நிலையிலிருக்கிறாயா? இயேசு உன்னை நீரின் மேல் நடக்கச் சொல்வதைப் போன்று, ஒரு முடியாத காரியத்தைச் செய்யச் சொல்லுகிறாரா? தைரியமாயிரு. உன்னை அழைத்தவர் உன்னோடு இருக்கிறார்.
போதுமானதல்லவோ?
ஆலயத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது என்னுடைய மகள் பின் இருக்கையில் அமர்ந்தபடி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மற்ற குழந்தைகள் அவளிடம் பகிர்ந்தளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தன. நான் அவர்களின் எண்ணத்தை திசை திருப்பும்படி. சிற்றுண்டிகளைச் சேமித்து வைப்பவளிடம், இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் ஒரு கூடை நிறைய ரொட்டிகளையும் மீனையும் தயாரித்ததாகவும், ஏனெனில் ஒரு குழந்தை இயேசுவுக்கு ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீனையும் கொடுத்தது. இயேசு அதைக் கொண்டு 5000 பேருக்கு மேலான ஜனங்களை போஷித்தார் (யோவா. 6:1-13) எனக் கூறினாள்.
இது அச்சிறுவனின் பகிர்ந்தளிக்கும் குணத்தைக் காட்டுகிறது. தேவன் உன்னுடைய மீனையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கிறாரென நினைக்கிறாயா? எனக் கேட்டேன். இல்லை சும்மா என பதிலளித்தாள்.
நான் அவள் அத்தனை பிஸ்கட்டுகளையும் அவளே வைத்துக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாதென முயற்சித்தேன். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அனைவருக்கும் கொடுக்கும்படி போதுமானதாக இல்லை என்றாள்.
பகிர்தல் என்பது கடினமானதுதான். நம் கையில் உள்ளதைப் பற்றிக் கொள்வது எளிதுதான். ஒரு வேளை நாம் கணக்குப் போட்டு, அனைவருக்கும் போதியதாக இல்லை எனக் காரணம் கூறலாம். நம் கணிப்பு என்னவெனின் நாம் இப்பொழுது கொடுத்து விட்டால் பின்னர் நமது தேவைக்கு ஒன்றுமிராது என்பதே.
நாம் அனைவரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள். நாம் உதாரண குணமுள்ளவர்களாயிருக்கும்படி, தேவன் நம்மை எல்லா வகைகளிலும் வளப்படுத்தியுள்ளார் (2 கொரி. 9:10-11) என பவுல் நினைப்பூட்டுகின்றார். பரலோகம் என்பது பற்றாக்குறையை கணக்கிடும் இடம் அல்ல, ஏராளமானவற்றையே கொண்டது. நாம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளலாம். ஏனெனில் நாம் மற்றவர்களிடம் உதாரத்துவமாயிருக்கும்போது தேவன் நம்மை கவனித்துக் கொள்வார் என வாக்களித்துள்ளார்.