எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

உலகத்திற்கு ஒளி

இங்கிலாந்து தேசத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலுள்ள கிபிள் சிற்றாலயத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு சித்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஆங்கிலேய கலைஞர் வில்லியம் ஹோல்மன் ஹன்ட் வரைந்த “உலகத்தின் ஒளி” என்ற சித்திரத்தில், இயேசு ஒரு கையில் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு வீட்டின் கதவைத் தட்டுவது போல இருக்கும்.

இந்த படத்திலுள்ள ஒரு புதிரான காரியமென்னவெனில், அதிலுள்ள கதவில் எந்தவொரு கைப்பிடியும் இல்லை. அப்படியாயின் இந்தக் கதவைத் திறப்பதற்கு வழியொன்றுமில்லையே என்று கேட்டபோது ஹன்ட், இதன் மூலம் வெளிப்படுத்தல் 3:20ன் கருத்தை வெளிப்படுத்திக் காட்ட விரும்பியதாகக் கூறினார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து…”

அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளும் இந்த சித்திரமும் இயேசுவின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. அவர் மென்மையாக, தன்னுடைய சமாதானத்தைத் தருவதாகக் கூறி நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். நம்முடைய பதில் வரும் வரையில் இயேசு பொறுமையாகக் காத்திருக்கின்றார். அவர் தானாகக் கதவைத் திறப்பதில்லை. நம்முடைய வாழ்வில் கட்டயமாக நுழைவதில்லை. அவர் தமது சித்தத்தை நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவர் எல்லா ஜனத்திற்கும்; அவருடைய நற்கொடையாம் இரட்சிப்பையும், வாழ்விற்கு வழிகாட்ட ஒளியையும் தர காத்திருக்கின்றார்.

யார் அவருக்குக் கதவைத் திறந்தாலும் அவர் வருவேனென வாக்களித்துள்ளார், இதற்கு வேறெந்த நிபந்தனைகளோ முன் ஆயத்தங்களோ தேவையில்லை.

உன்னுடைய ஆன்மாவின் கதவை இயேசு மென்மையாகத் தட்டுகின்ற சத்தத்தைக் கேட்பாயாகில் நீ அவரை உள்ளே வரவேற்கும் மட்டும் அவர் பொறுமையாகக் காத்திருப்பார் என்பது உனக்கு ஆவலையும், ஊக்கத்தையும் தரும்.

ஒரு நண்பனின் ஆறுதல்

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தன் மகளின் இடுப்பிற்குக் கீழே முழுவதும் சகதியாயிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள் அந்தத் தாய். என்ன நடந்ததென்று அவர் விசாரித்தாள். மகள், நடந்ததை விவரித்தாள். ஒரு சிநேகிதி வழுக்கி சகதி நிறைந்த ஒரு குட்டையினுள் விழுந்துவிட்டாள். ஒரு மாணவி ஆசிரியரை அழைக்க ஓடினாள். சகதியினூடே சென்று காயமடைந்த அந்தச் சிநேகிதியின் காலைத் தாங்கிக் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் வரும் வரை தானும் அந்தச் சகதியில் இறங்கி அந்தச் சிநேகிதிக்கு உதவியதாகக் கூறினாள்.

யோபு பேரிழப்பை அனுபவித்தான். தன் பிள்ளைகளை இழந்தான். உடல் முழுவதும் கொடிய பருக்களால் தாக்கப்பட்டான். அவனுடைய துயரம் அவனால் தாங்கக் கூடாதததாயிருந்தது. அவனைத் தேற்ற, ஆறுதல் கூற மூன்று நண்பர்கள் வருகின்றனர் என வேதத்தில் வாசிக்கின்றோம். அவர்கள் யோபுவைப் பார்த்த போது, “சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து, தங்கள் தலைகள் மேல் புழுதியைத் தூற்றிக் கொண்டு வந்து, யோபுவின் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்” (யோபு 2:12-13).

யோபுவினுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் நல்ல புரிந்து கொள்ளலைக் காட்டினர். யாரேனும் அவனருகிலிருந்து அவனோடு புலம்ப வேண்டுமென யோபு விரும்புகிறானென உணர்ந்து கொண்டனர். அந்த மூன்று மனிதரும் பின்னர் பேச ஆரம்பிக்கின்றனர். அவர்கள் பேச ஆரம்பித்த போது எதிர்பார்த்ததற்கு முரணாக, யோபுவிற்குத் தவறான யோசனையைக் கொடுத்து விடுகின்றனர் (16:1-4).

ஒரு துயரப்பட்ட நண்பனைத் தேற்ற நாம் செய்யக் கூடிய சிறந்த காரியமென்னவெனின், துன்ப நேரத்தில் அவர்களோடு அமர்ந்து இருப்பதே.

எதிர்பார்ப்போடு காத்திருத்தல்

ஒவ்வொரு மே தினத்தன்றும் (மே 1) இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டில், அதிகாலை வேளையில் வசந்த காலத்தை வரவேற்க ஒரு கூட்ட மக்கள் திரண்டு விடுவர். காலை 6 மணிக்கு மேக்டலின் கோபுரத்தின் உச்சியிலிருந்து, மேக்டலின் கல்லூரி பாடகர் குழுவினர் பாடுவார்கள். அந்த இரவைக் கடந்து
வெளிவரும் பாடல்களையும், மணியோசையையும் எதிர்பார்த்து ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பர்.

ஆரவாரத்தோடு காத்திருப்பவர்களைப் போன்று நானும் காத்திருக்கின்றேன். நான் என் ஜெபத்திற்கு வரும் பதிலுக்காகவும், தேவனின் வழி நடத்துதலுக்காகவும் காத்திருக்கின்றேன். எந்த நேரம் என் காத்திருத்தல் முடியும் என்று தெரியாதிருந்தும், எதிர்பார்ப்போடு காத்திருக்கக் கற்றுக் கொண்டேன். இருண்ட இரவுகளைப் போன்ற சூழ்நிலைகளை, ஆழ்ந்த கவலையோடு எதிர் நோக்குவதாக சங்கீதக்காரன், சங்கீதம் 130ல் கூறுகிறான். ஜாமக்காரனைப் போல, துன்பங்களின் மத்தியில் தேவன் மீது நம்பிக்கையாயிருப்பதைத் தெரிந்து கொண்டான். ‘‘எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும், அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது” (வச. 6).

தேவன் உண்மையுள்ளவர் என்பதின் மீதுள்ள எதிர்பார்ப்பு, இருளினூடே, துயரங்களின் மத்தியில், அதைத் தாங்கக் கூடிய பெலனைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை சங்கீதக்காரனுக்குக் கொடுக்கிறது. இருளினூடே ஒரு சிறு ஒளிக்கதிரைக் கூட காணாதிருந்தும், வேதாகமம் முழுவதும் காணப்படுகின்ற வாக்குத்தத்தங்களின் அடிப்படையில், இந்த நம்பிக்கை அவருடைய காத்திருத்தலுக்கு பெலனளிக்கிறது.

ஒரு வேளை நீயும், இருளின் நடுவேயிருப்பாயாயின் சோர்ந்து போகாதே, விடியல் வருகிறது. அது இந்த வாழ்விலோ அல்லது பரலோகத்திலோ, தெரியாது. ஆனால் நம்பிக்கையை விட்டுவிடாதே. தேவன் தரும் விடுதலைக்காக விழித்திருந்து காத்திரு. தேவன் உண்மையுள்ளவர்.

விசுவாசம், அன்பு மற்றும் நம்பிக்கை

பத்தாண்டுகள் என்னுடைய அத்தை அவர்களுடைய அப்பாவை (என் தாத்தாவை) தன் வீட்டில் வைத்து பராமரித்தார். அவர் நல்ல நிலையில் இருக்கும்போதே அவருக்கு சமைத்து, சுத்தம் செய்து அவருடைய எல்லா காரியங்களையும் பார்த்துக்கொண்டார். அவருடைய ஆரோக்கியம் குன்றியபோதும், அவருக்கு ஒரு செவிலியராக இருந்து தேவையான பணிவிடைகளைச் செய்தார்.

“உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும்…நினைவுகூர்ந்து தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்” (1 தெச. 1:2,4) என்று தெசலோனிக்கேயர் சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின வார்த்தைகளுக்கு இந்த பெண்ணின் சேவை ஒரு நவீன முன்மாதிரி என்று சொல்லலாம்.

அன்புடனும் விசுவாசத்துடனும் என்னுடைய அத்தை பணியாற்றினார். அனுதினமும் அவர் காண்பித்த கரிசனை, இந்த அரிய பணிக்கு தேவன் தன்னை அழைத்துள்ளார் எனும் நம்பிக்கையில் விளைந்த பிரதிபலன். அவர்களது பிரயாசம், தகப்பன்மேலும் தேவன்மேலும் வைத்திருந்த அன்பினால் பிறந்த கனி.

நம்பிக்கையிலும் அவர்கள் பொறுமையாய் சகித்தார்கள். என் தாத்தா மிகவும் அன்பானவர், அவருடைய நலம் குன்றுவதை பார்க்க இயலாமல், அவரை பராமரித்திட, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து தன் போக்குவரத்தையும் குறைத்துக்கொண்டார். தேவன் அவர்களை அனுதினமும் பெலப்படுத்துவார் என்கின்ற விசுவாசமும், தாத்தாவுக்கு காத்திருக்கும் பரலோக நம்பிக்கையுமே அவர்கள் சகிப்பதற்கு உதவியது.

ஒரு உறவினரை கவனிக்கின்ற, பக்கத்து வீட்டாருக்கு உதவிசெய்கின்ற அல்லது தன்னார்வத்துடன் நேரத்தை கொடுக்கின்ற எந்தவொரு காரியமாக இருந்தாலும் தேவன் உங்களைச் செய்யும்படி சொன்ன காரியத்தில் நீங்கள் திடப்படுங்கள். உங்களுடைய பிரயாசமே விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வல்லமையான சாட்சியாக வெளிப்படும்.

நீர் மேல் நடத்தல்

ஒரு பனிக்காலத்தில், உலகில் ஐந்தாவது பெரிய ஏரியான மிச்சிகன் ஏரியை, அந்த பகுதி மிகவும் ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும், அதன் மேற்பகுதி உறைந்திருப்பதைப் பார்க்கச் சென்றேன். குளிரைத் தாங்கும் உடைகளைப் போர்த்திக் கொண்டு, அந்த ஏரிக் கரையில் நான் வழக்கமாக சூரிய குளியல் எடுக்குமிடத்தில் நின்று, அந்த பிரம்மிக்கத்தக்க காட்சியைக் கண்டேன். அங்கு நீர் அலை வடிவில் உறைந்து, பனிக்கட்டியின் மிக அற்புதமான தோற்றத்தைக் கொண்டிருந்தது.

அந்த ஏரியில் கரையிலிருந்தே நீர் உறைந்திருந்ததால், நான் ‘‘நீர் மேல் நடக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். அந்த பனி என்னுடைய எடையைத் தாங்கக் கூடிய அளவிற்கு தடிமனானது எனத் தெரிந்திருந்தாலும், நான் முதல் சில அடிகளைத் தாங்கும் எனச் சோதித்தபின்னரே எடுத்து வைத்தேன். இந்த பனி என்னைத் தொடர்ந்து தாங்குமா என எனக்குள்ளேயே பயந்தேன். நான் இந்த பரந்த, பழக்கமற்ற பரப்பை கவனமாக ஆராய்ந்தபோது, இயேசுவும் பேதுருவை படகிலிருந்து இறங்கி கலிலேயாக் கடலின்மேல் நடந்து வரச் சொன்னதை நினைவு கூர்ந்தேன்.

சீடர்கள், இயேசு நீர்மேல் நடந்து வந்ததைப் பார்த்தபோது, அவர்களும் பயந்தனர். ஆனால் இயேசு அவர்களிடம், ‘‘திடன் கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” என்றார் (மத். 14:26-27). பேதுரு தன் பயத்தை மேற்கொண்டு, நீரின்மேல் இறங்கினான். ஏனெனில், இயேசு அங்கேயிருக்கிறாரென அவனுக்குத் தெரியும். ஆனால் அங்கு காற்றையும், அலையையும் பார்த்தபோது இவனுடைய தைரியமான அடிகள் தயங்கின. பேதுரு இயேசுவை நோக்கி கதறுகிறான். இயேசு அங்கே அவனருகில் தன்னுடைய கரத்தை நீட்டி அவனைக் காப்பாற்றும்படி அங்கேயே இருந்தார்.

ஒரு வேளை நீயும் இத்தகைய ஒரு சூழ்நிலையிலிருக்கிறாயா? இயேசு உன்னை நீரின் மேல் நடக்கச் சொல்வதைப் போன்று, ஒரு முடியாத காரியத்தைச் செய்யச் சொல்லுகிறாரா? தைரியமாயிரு. உன்னை அழைத்தவர் உன்னோடு இருக்கிறார்.

போதுமானதல்லவோ?

ஆலயத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது என்னுடைய மகள் பின் இருக்கையில் அமர்ந்தபடி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மற்ற குழந்தைகள் அவளிடம் பகிர்ந்தளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தன. நான் அவர்களின் எண்ணத்தை திசை திருப்பும்படி. சிற்றுண்டிகளைச் சேமித்து வைப்பவளிடம், இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் ஒரு கூடை நிறைய ரொட்டிகளையும் மீனையும் தயாரித்ததாகவும், ஏனெனில் ஒரு குழந்தை இயேசுவுக்கு ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீனையும் கொடுத்தது. இயேசு அதைக் கொண்டு 5000 பேருக்கு மேலான ஜனங்களை போஷித்தார் (யோவா. 6:1-13) எனக் கூறினாள்.

இது அச்சிறுவனின் பகிர்ந்தளிக்கும் குணத்தைக் காட்டுகிறது. தேவன் உன்னுடைய மீனையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கிறாரென நினைக்கிறாயா? எனக் கேட்டேன். இல்லை சும்மா என பதிலளித்தாள்.

நான் அவள் அத்தனை பிஸ்கட்டுகளையும் அவளே வைத்துக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாதென முயற்சித்தேன். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அனைவருக்கும் கொடுக்கும்படி போதுமானதாக இல்லை என்றாள்.

பகிர்தல் என்பது கடினமானதுதான். நம் கையில் உள்ளதைப் பற்றிக் கொள்வது எளிதுதான். ஒரு வேளை நாம் கணக்குப் போட்டு, அனைவருக்கும் போதியதாக இல்லை எனக் காரணம் கூறலாம். நம் கணிப்பு என்னவெனின் நாம் இப்பொழுது கொடுத்து விட்டால் பின்னர் நமது தேவைக்கு ஒன்றுமிராது என்பதே.

நாம் அனைவரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள். நாம் உதாரண குணமுள்ளவர்களாயிருக்கும்படி, தேவன் நம்மை எல்லா வகைகளிலும் வளப்படுத்தியுள்ளார் (2 கொரி. 9:10-11) என பவுல் நினைப்பூட்டுகின்றார். பரலோகம் என்பது பற்றாக்குறையை கணக்கிடும் இடம் அல்ல, ஏராளமானவற்றையே கொண்டது. நாம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளலாம். ஏனெனில் நாம் மற்றவர்களிடம் உதாரத்துவமாயிருக்கும்போது தேவன் நம்மை கவனித்துக் கொள்வார் என வாக்களித்துள்ளார்.                                                        

நன்றியறிதலை வளர்த்துக் கொள்ளல்

நீ நன்றியுள்ள ஓர் உணர்வை வளர்த்துக் கொள்ள விரும்புகிறாயோ? பதினேழாம் நூற்றாணடில் வாழ்ந்த பிரிட்டனைக் சேர்ந்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட், தன்னுடைய நன்றியுணர்வு என்ற பாடலின் இலக்கை அடைய உற்சாகப்படுத்துகிறார். “நீர் எனக்கு மிக அதிகமானவைகளைக் கொடுத்திருக்கிறீர் இன்னுமொன்றை, நன்றியுணர்வுள்ள இருதயத்தைத் தாரும்.” என்ற பாடல்கள் மூலம் தன் வாசகர்களிடம் ஊக்குவிக்க விரும்பினார்.

ஹெர்பர்ட், நன்றியோடிருக்க அவருக்குத் தேவையான ஒன்றைக் கண்டு கொண்டார். அது தேவன் அவருக்குத் தந்திருக்கின்ற ஆசிர்வாதங்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வு.

இயேசு கிறிஸ்துவே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்று என்று வேதாகமம் நமக்குத் தெரிவிக்கின்றது. ரோமர் 11:36ல் “சகலமும்; அவராலும் அவர் மூலமாயும அவருக்காகவும் இருக்கிறது” எனச் சொல்லப்பட்டுள்ளது. “சகலமும்” என்பது ஆடம்பர மற்றும் இவ்வுலகில் ஒவ்வொரு நாள் வாழ்விற்கும் தேவையான அனைத்து நன்கொடைகளையும் குறிக்கும். நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நன்மையும் நம் பரலோகத் தந்தையிடமிருந்து வருகிறது (யாக். 1:17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பினால், விருப்பத்தோடு இந்த நன்கொடைகளைத் தருகிறார்.

என்னுடைய வாழ்வில் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் குறித்த விழிப்புணர்வை நான் விரிவாக்கிக்கொள்ளுவதற்கு, நான் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்ற மகிழ்ச்சிக்கு காரணர் என் தேவனே என்பதை ஒப்புக் கொள்ளக் கூடிய இருதயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கற்றுக் கொண்டேன். நான் பெற்றுக் கொண்ட நன்மைகள் என்னுடைய முயற்சியால் பெற்றுக் கொண்டவையல்ல. இன்றைக்கு நான் அனுபவிக்கும் நன்மைகள்: ஒரு மென்மையான காலையில் நான் ஓடுவதும், மாலைப் பொழுதில் என் நண்பர்களோடு செலவிடுவதும், என் சமையல் பொருட்கள் அறையில் நிரப்பப்பட்டுள்ள பொருட்களால், நான் என் மகள்களோடு செய்துகொள்ளும், பிரெஞ்ச் டோஸ்ட், நான் என் ஜன்னல் வழியே வெளியுலகைப் பார்க்கும் போது கிடைக்கின்ற அழகும், புதிதாக தயாரிக்கப்பட்ட சூடான காப்பியின் நறுமணமும், இவையெல்லாம் தேவன் தரும் ஆசீர்வாதங்களே.

இதுவரை தேவன் எனக்குத் தந்துள்ள மிக அதிகமான நன்மைகள் எவை? அவைகளைக் காணும்படி நம் கண்களைத் திறப்போமாகில் ஒரு நன்றியுணர்வுள்ள இருதயத்தை உருவாக்கிக்கொள்வோம்.