சவால்களை மேற்கொள்ளல்
நாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.
தேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).
அவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.
இத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.
சாட்சி கையொப்பம் தேவையில்லை
எந்த மனிதனாவது தான் ஒரு கார் அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற விரும்பும் போது, அவன் பெற்ற கடனைத் திருப்பிச் செலத்தியதாக நீண்ட சரித்திரம் இல்லையெனில், கடன் கொடுப்பவர் இந்தப் பணப்பரிவர்த்தனையிலுள்ள ஆபத்தைக் கையாள தயக்கம் காட்டுகின்றனர். இத்தகைய ஒரு செயலின் பதிவு இல்லையெனில், அந்த மனிதன் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகத் தரும் வாக்குமூலம் போதாதென வங்கியாளர்கள் கருதுகின்றனர். எனவே கடன் வாங்குபவர் அத்தகைய நற்சாட்சி பெற்ற யாரையேனும் தேடி கண்டுபிடித்து அவர்களின் பெயரை இந்தக் கடனுக்குச் சாட்சியாக சேர்த்துக் கொள்வார். இவ்வாறு சாட்சி கையொப்பமிடுபவர், இந்தக் கடன் திருப்பிக் கொடுக்கப்படும் என வங்கிகளுக்கு உறுதி வாக்குக் கொடுக்கின்றனர்.
இவ்வாறு யாரேனும் நமக்கு பொருளாதார ரீதியாகவோ, திருமணத்திலோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வாக்களித்திருந்தால் நாம் அவற்றை நிறைவேற்றும்படி எதிர்பார்ப்போம். தேவனும் தாம் வாக்களித்ததை நிறைவேற்ற உண்மையுள்ளவர் எனத் தெரிந்து கொள்வோம். ஆபிரகாமிடம் தேவன் அவனை ஆசீர்வதித்து “அவனுடைய சந்ததியை பெருகப் பண்ணுவேன் (எபி. 6:14, ஆதி. 22:17) என வாக்களித்தபோது, ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை நம்பினான், நாம் காணும் அகிலம் அனைத்தையும் படைத்த தேவனை விட மேலானவர் ஒருவரும் இல்லை. அவர் ஒருவரே தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர்.
ஆபிரகாம் தன்னுடைய மகனைப் பெறும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது (எபி. 6:15). (அவன் தன்னுடைய சந்ததியார் எவ்வளவாகப் பெருகுவார்கள் என்பதைக் காணவில்லை) ஆனால், தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராய் இருந்தார். தேவன் எப்பொழுதும் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார் (13-5) நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார் (யோவா. 10:29) அவர் நம்மை ஆறுதல் படுத்துகின்றார் (2 கொரி. 1:3-4) அவர் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று அவருடைய வார்த்தைகளை நம்புவோம்.
விமர்சனம் செய்வோரை அமைதிப்படுத்துதல்
வருடாந்திர சமுதாய நிகழ்வுகளை நடத்தும் ஒரு குழுவில் இணைந்து நான் வேலை செய்தேன். அந்த நிகழ்வுகள் வெற்றியாக முடியவேண்டும் என்பதற்காக பதினொரு மாதங்களாக அநேகக் காரியங்களைத் திட்டமிட்டோம். நாங்கள் நாளையும், இடத்தையும் தேர்ந்தெடுத்தோம். நுழைவுக் கட்டணத்தை நிர்ணயித்தோம். உணவு பரிமாறுவதிலிருந்து ஒலிபெருக்கி வல்லுனர்வரையும் அனைத்தையும் தேர்ந்தெடுத்தோம். அந்நாள் நெருங்குகையில் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், அவர்களை வழிநடத்தவும் முயன்றோம். நிகழ்வுக்குப் பின்னர் கருத்துக்களைச் சேகரித்தோம். சிலர் பாராட்டினர். சிலவற்றைக் கேட்பதற்கே கடினமாயிருந்தது. அதில் பங்குபெற்றவர்களில் உற்சாகத்தையும் கண்டோம், குறைகளையும் கேட்டறிந்தோம். எதிர்மறையான கருத்துக்களைக் கேட்கும்போது ஊக்கமிழந்து இந்த வேலையையே விட்டுவிடலாமா என்று கூட எண்ணினோம்.
நெகேமியா ஒரு குழுவை ஏற்படுத்தி எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டியபோது அவரையும் விமர்சனம் செய்தனர். அவரையும் அவரோடு பணி செய்தவர்களையும் பரியாசம் செய்தனர். “ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” (நெகே. 4:3) எனப் பரியாசம் செய்தனர். அதற்கு நெகேமியாவின் பதில், என்னைப் பரியாசம் செய்பவர்களைக் கையாளுவதற்கு எனக்குதவியது. பரியாச வார்த்தைகளைக் கேட்டுச் சோர்வடையவோ அல்லது அவர்களுடைய வார்த்தைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவோ முயற்சிக்காமல், நெகேமியா தேவனுடைய உதவியைக் கேட்கின்றான். பரியாச வார்த்தைகளுக்கு நேரடியாக பதிலுரைப்பதை விட்டுவிட்டு, தேவனிடம் தன் ஜனங்கள் அவமதிக்கப்படுவதைக் கேட்டு அவர்களைப் பாதுகாக்குமாறு வேண்டுகின்றார் (வச. 4) அவமதிப்புக்குள்ளான தன் ஜனங்களை தேவனுடைய பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு, அவனும் அவனோடிருந்தவர்களும் தொடர்ந்து “முழுமனதோடு” அலங்க வேலையில் ஈடுபட்டனர் (வச. 6).
நம்முடைய வேலையை விமர்சிக்கும் வார்த்தைகளால் நாம் குழப்பமடையத் தேவையில்லை என்பதை நெகேமியாவிடமிருந்து கற்றுக் கொள்கின்றோம். நாம் நிந்திக்கப்படும்பொழுது அல்லது கேலி செய்யப்படும்போது, காயப்பட்டதாலோ அல்லது கோபத்தாலோ அவர்களுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக ஜெபத்தோடு தேவனிடம் சோர்ந்துபோகாதிருக்க பெலன் தருமாறு கேட்போமாகில் முழுமனதோடு நம் வேலையைத் தொடரமுடியும்.
என்னை யாரும் விரும்பவில்லை
நான் குழந்தையாயிருந்தபோது, தனிமையையும், யாவராலும் புறக்கணிக்கப்பட்டவளாகவும் உணர்ந்து என்னைக் குறித்து நானே வருந்திக் கொள்ளும்போது, என் தாயார் என்னை மகிழ்விப்பதற்காக ஓர் எளிய பிரசித்திப் பெற்ற பாடலைப் பாடுவதுண்டு. ‘‘என்னை யாரும் விரும்புவதில்லை, எல்லாரும் என்னை வெறுக்கின்றனர், நான் புழுக்களைத் தான் தின்னப் போகிறேன்” என்பது அப்பாடல். என்னுடைய தளர்ந்த முகத்தில் புன்சிரிப்பு வந்ததும், என் தாயார் எனக்குள்ள உண்மையான உறவினர்களையும், நான் அதற்கு எத்தனை நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்கள்.
தாவீது ராஜாவும் தன்னைப் பற்றிக் கரிசனைக் கொள்ள யாருமில்லை என கூறுவதை நான் வாசித்த போது, என் காதினுள் அந்த எளிய பாடல் ஒலித்தது. தாவீது தன் வேதனைகளை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் என்னுடைய தனிமையுணர்வு என் போன்ற வயதினர் அநேகருக்கு ஏற்படுவதுதான். தாவீது கைவிடப்பட்டவராக உணர்வதற்கு காரணமிருக்கிறது. சவுல் ராஜா, தாவீதைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கையில் இந்த வார்த்தைகளை எழுதுகின்றார் (1 சாமு. 22:1, 24:3-10). தாவீது இஸ்ரவேலரின் எதிர்கால அரசனாக அபிஷேகிக்கப்பட்டான் (16:13). அவன் அநேக வருடங்கள் சவுல் ராஜாவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது பயத்தினால் தன் ஜீவனைத் தப்புவிக்க ஓடிக் கொண்டிருக்கிறான். தனிமையின் மத்தியில் தாவீது தேவனை நோக்கி, ‘‘நீரே என் அடைக்கலமும் ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர்” (சங். 142:5) எனக் கதறுகின்றார்.
நாமும் தனிமையையுணரும் போது தாவீதைப் போன்று தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். அவருடைய அன்பின் அடைக்கலத்தினுள் நம்முடைய கூப்பிடுதலுக்கு பதிலளிக்கமாறு கேட்போம். தேவன் நம் தனிமையை மாற்றுவதில்லை. மாறாக நம்முடைய வாழ்வின் இருண்ட குகையில் நம்முடைய துணையாயிருக்கின்றார். நம்மைக் கவனிப்பார் யாருமில்லை என உணரும் வேளைகளில், தேவன் நம்மைக் கவனிக்கின்றார்.
நமது கண்ணோட்டத்தில் சிறிய மாற்றம்
முப்பது ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரிய குளிரை என்னுடைய பட்டணம் அனுபவித்தது. முடிவில்லாத பனியை மணிக்கணக்காக தோண்டியெடுத்ததால் என் தசைகளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தன. பயனளிக்காத முயற்சியால் சோர்வடைந்து என்னுடைய பூட்ஸ்சுகளை உதறிவிட்டு வீட்டினுள்ளே சென்ற போது, நெருப்பின் வெப்பத்தாலும், அதனைச் சுற்றியிருந்த என் குழந்தைகளாலும் வாழ்த்தப் பெற்றேன். வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியே பார்த்தபோது, அந்த குளிர்காலத்தினை நான் பார்த்த கோணம் முற்றிலும் மாறிப்போனது. இன்னமும் அதிக வேலையிருக்கிறது என்று காண்பதை விட்டுவிட்டு, நான் அந்தப் பனி, மரக்கிளைகளிலும், நிலப்பரப்பின் மீதும் வெண்மையாய் பரம்பியிருப்பதைப் பார்த்து மகிழ ஆரம்பித்தேன்.
சங்கீதம் 73ல் ஆசாபின் வார்த்தைகளை வாசிக்கும்போது, இதைப் போன்று, இன்னும் அதிக வருத்தத்தைத் தரக்கூடிய காலத்தைக் காண்கின்றோம். ஆரம்பத்தில் அவர், இவ்வுலகில் தவறிழைப்பவர்கள் செழித்திருப்பதைக் கண்டு புலம்புகிறார். பெருங்கூட்ட மக்களிடமிருந்து மாறுபட்டு, பிறருடைய நலனுக்காக வாழ்வதால் பயனென்ன என சந்தேகிக்கின்றார் (வச.13). ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழையும்போது, அவருடைய கண்ணோட்டம் மாறுகிறது (வச. 16-17). தேவன் இவ்வுலகையும் அதன் பிரச்சனைகளையும் திறம்படக் கையாளுவார் என்பதை நினைக்கின்றார். எனவே நாம் எப்பொழுதும் தேவனோடு இருப்பதே நல்லது என்கின்றார் (வச.28).
இவ்வுலகத்திலுள்ள தீராத பிரச்சனைகளை நாம் காணும்போது நாம் உறைந்துவிடுகிறோம். நாம் தேவனுடைய ஸ்தலத்தினுள் ஜெபத்தின் மூலம் பிரவேசித்து, நம்முடைய வாழ்வையும், நம்முடைய கண்ணோட்டத்தையும் மாற்றுகின்ற அவருடைய உண்மையைக் கண்டுபிடிப்போம். அது நம்மை பெலப்படுத்தும். அவருடைய நியாயத்தீர்ப்புகள் எப்பொழுதும் நம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை. நம்முடைய சூழ்நிலைகள் மாறப் போவதில்லை. ஆனால், நம்முடைய கண்ணோட்டத்தை நாம் மாற்றிக் கொள்வோம்.
பாடுவதற்கான காரணம்
எனக்கு பதிமூன்று வயதிருக்கும்போது, என் பள்ளி மாணவர்கள் இல்லற பொருளாதாரம், கலை, பாடகர்குழு மற்றும் தச்சுவேலை எனும் தலைப்புகளில் நான்கு ஆராய்ச்சி பாடங்களை படிக்கவேண்டியதாயிருந்தது. பாடகர்குழு பாடத்தின் முதல்நாளில், பயிற்றுனர் ஒவ்வொரு மாணவனையும் பியானோ இசைக்கு பாடவைத்து அவர்களுடைய குரலை கேட்டு அவரவரின் சுருதிக்குத் தக்க அவர்களை பிரித்து ஒரு அறையில் அமர்த்தினார். என்னுடைய முறை வந்தபோது, பியானோவில் அவர்கள் திரும்ப திரும்ப வாசித்த இசைக்குறிப்புகளுக்கு நான் பாடினாலும், எந்த ஒரு பிரிவிற்கும் நேராக என்னை அவர் நடத்தவில்லை. மாறாக, பல முயற்சிகளுக்குப் பின், ஆலோசனை மையத்திற்கு சென்று வேறொரு பாடத்தை தெரிந்தெடுக்கச் சொன்னார். அந்த நிமிடத்திலிருந்து, நான் இனி பாடக்கூடாது, என் குரல் எந்த பாடலிலும் தொனிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.
ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கும் மேலாக இதே எண்ணத்தை கொண்டவனாக இருந்த நான் என் வாலிப வயதில் ஒருமுறை சங்கீதம் 98-ஐ வாசிக்கலானேன். அதன் ஆக்கியோன் “கர்த்தருக்குப் பாடுங்கள்” (சங். 98:1) என்கின்ற அழைப்புடன் அதனை ஆரம்பிக்கிறார். பாடவேண்டிய காரணத்திற்கும் நம் குரலின் தரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் தம் பிள்ளைகள் பாடும் பாடல்களிலே அவர் பிரியப்படுகிறார். “அவர் செய்த அதிசயங்களுக்காக” (வச. 1) நாம் அவரைப் பாடவேண்டும் என்று நம்மை அழைக்கிறார்.
கர்த்தரை நாம் நம் முழுசிந்தையோடும், பாடல்களோடும் ஆனந்தகளிப்புடன் துதிப்பதற்கு இரண்டு அற்புதமான காரணங்களை சங்கீதக்காரர் குறிப்பிடுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவன் நிறைவேற்றும் இரட்சிப்பின் கிரியை மற்றும் இடைவிடாமல் தொடரும் அவருடைய உண்மைக்காகவும் அவரைப் பாடவேண்டும். தேவனுடைய பாடகர்குழுவில், அவர் நமக்காய் செய்த அதிசயங்களைப் பாடுவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இடமுண்டு.
நாம் எதைக் கேட்க விரும்புகிறோம்
நம்முடைய அபிப்பிராயங்களுடன் ஒத்துப்போகும் ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மனித இயல்பு. நம் கருத்துக்களை ஆதரிக்கும் தகவல்களை நாம் இரண்டு மடங்கு கூடுதலாக தேட முற்படுகிறோம் என்று ஒரு ஆராய்ச்சி அறிவிக்கிறது. நம்முடைய கொள்கைகளின்மேல் ஓர் அசைக்கமுடியாத பற்று கொண்டிருந்தால், எதிர்மறை சிந்தனைகள் நமக்கு விடுக்கும் சவால்களை நாம் அறவே தவிர்ப்போம்.
ஆகாப் ராஜா இஸ்ரவேலை ஆண்டபோதும் இப்படியே நடந்தது. அவனும் யூதாவின் ராஜா யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தம் புரியலாமா கூடாதா? என்று ஆலோசித்தபோது, ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை – தன்னால் நியமிக்கப்பட்டு தான் விரும்புகின்ற காரியத்தை உரைக்கும் மனிதர்களை-வரவழைத்து யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு ஒவ்வொருவரும், “தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார்” என்றார்கள் (2 நாளா. 18:5). யோசபாத்து, “நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா” என்று கேட்டான். அதற்கு ஆகாப் தயக்கத்துடன், தேவனுடைய தீர்க்கத்தரிசி மிகாயா என்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால், அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான் (வச. 7). அப்படியே, அவர்கள் யுத்தத்தில் தோற்றுப்போவார்கள் என்றும், மக்கள் எல்லாம் “மலைகளில் சிதறிப்போவார்கள்” என்றும் அவன் உரைத்தான் (வச. 16).
இந்தக் கதையை வாசிக்கும்போது நானும் எப்படி எனக்கு ஒத்துவராத நல் ஆலோசனைகளை தவிர்க்கிறேன் என்பதை புரிந்துகொண்டேன். ஆகாபின் விஷயத்தில், தனக்கு “இசைவாக பேசுகின்ற 400 தீர்க்கத்தரிசிகளுக்கு செவிகொடுத்தது அழிவில் முடிந்தது (வச. 34). நாமும் சத்தியத்தின் சத்தத்திற்கு, வேதத்தில் காணப்படும் தேவனுடைய வார்த்தைகளுக்கு, அவைகள் நம்முடைய சொந்த விருப்பங்களுக்கு மாறாக இருந்திட்டாலும், கீழ்ப்படிய ஒப்புக்கொடுப்போம்.
நான்கெழுத்து நம்பிக்கை
எனக்குள் இருக்கும் அவநம்பிக்கையின் காரணமாக, நான் என் வாழ்வின் சூழ்நிலைகள் எப்படி முடியும் என்பதைக் குறித்து எதிர்மறையான முடிவையே எடுப்பேன். என்னுடைய ஒரு வேலையில் நான் எடுக்கும் முயற்சி தோல்வியைச் சந்திக்கும் போது, நான் மிக எளிதில், நான் மேற்கொள்ளும் மற்றெந்த வேலையும் வெற்றி பெறாது என்ற முடிவுக்கு வந்து விடுவேன். நான் தோல்வியைக் கண்ட வேலைக்கும் மற்ற வேலைகளுக்கும் தொடர்பேயில்லாதிருந்தும், நான் என் முடிவுகளை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறினேன். ஐயோ! நான் பரிதாபத்துக்குரிய ஒரு தாய். என்னால் எதையுமே சரியாகச் செய்ய முடியவில்லை. ஓர் இடத்தில் நான் சந்திக்கும் தோல்வி, தேவையில்லாமல் என்னுடைய மற்றெல்லா உணர்வுகளையும் பாதிக்கிறது.
எனக்கு எளிதாக ஆபகூக்கைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேவன் அவருக்குக் காட்டியவற்றில் அவருடைய எண்ணம் எவ்வாறிருந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு வரும் துன்பங்களைப் பார்த்து அவர் எத்தனை விரக்தியடைந்திருப்பார். நீண்ட வருடங்களாக, அவர்கள் துன்பத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. காரியங்கள் மிக மோசமாக நடந்தது. மரங்களில் கனியில்லை, சாப்பிட மாமிசமில்லை, உயிர் வாழ ஒரு சுகமுமில்லை. எல்லாவற்றிலும் மோசமான விளைவுகளையே எதிர்நோக்கி அவநம்பிக்கையில் வாழும் எனக்குள், அவருடைய நான்கெழுத்து வார்த்தை ‘‘ஆனாலும்” என்னை விழிக்கச் செய்தது. ‘‘ஆனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்” (ஆப. 3:17-18) ஆபகூக் தேவன் எத்தகையவர் என்பதைக் கண்டு கொண்டதால், எத்தனை கஷ்டங்களை எதிர்நோக்கினாலும் அவரால் மகிழ்ச்சியாயிருக்க முடிந்தது.
ஒரு வேளை நாம் நம்முடைய பிரச்சனைகளைப் பெரியதாகப் பார்க்கத் தூண்டப்படலாம். ஆனால் ஆபகூக் மிக அதிகமான கஷ்டங்களையே சந்தித்தார். அந்த நேரத்திலும் அவரால் தேவனை மகிமைப்படுத்த முடியும் போது, நம்மாலும் முடியும். நாம் நம்பிக்கையிழந்து துயரத்தின் ஆழத்திலிருந்தாலும் நம்மைத் தூக்கியெடுக்கவல்ல தேவனை நோக்கிப் பார்ப்போம்.
நேரடி அறிவுரைகள்
என்னுடைய இரண்டாவது குழந்தை, ‘‘பெரிய படுக்கையில் அவளுடைய சகோதரியின் அறையில் தூங்குவதற்கு மிகவும் ஆவலாயிருப்பாள். ஒவ்வொரு இரவும் நான் பிரிட்டாவை போர்வைக்குள் மூடியபின், அவளுடைய படுக்கையில் இருக்கும்படி கண்டிப்பான அறிவுரைகளை வழங்கி, தவறினால் அவளைத் தொட்டில் கட்டிலுக்கு அனுப்பிவிடுவதாக எச்சரிப்பேன். ஒவ்வொரு இரவும் நான் அவளை கூடத்தில் கண்டுபிடித்து மீண்டும், தைரியமிழந்த என்னுடைய அன்பு மகளை அவளுடைய தொட்டிலுக்கு வழி நடத்த வேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கத்தைக் குறித்து தெரிந்து கொண்டேன். தன்னுடைய அறையைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத மூத்த சகோதரி, ஒவ்வொரு நாளும் பிரிட்டாவிடம் அம்மா அவளைக் கூப்பிடுவதாகக் கேட்கிறது எனச் சொல்வாள். பிரிட்டா தன்னுடைய சகோதரியின் வார்த்தையை நம்பி, என்னைத் தேடி வந்து, இப்படியாக மீண்டும் தன்னுடைய தொட்டில் கட்டிலினுள் வந்து சேர்ந்து விடுவாள்.
தவறான சத்தத்திற்குச் செவி கொடுக்கும் போது பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தேவன் ஒரு மனிதனை பெத்தேலுக்கு அனுப்பி, அவர் சார்பாக பேசும் படி சொல்கிறார். தேவன் தெளிவான கட்டளைகளை அவனுக்குக் கொடுக்கிறார். நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் போன வழியாய்த் திரும்பாமலும் இரு (1 இரா. 13:9) என கட்டளையிடுகிறார். யெரொபெயாம் அவனைத் தன்னோடு உணவருந்தும்படி அழைக்கின்றான். ஆனால் தீர்க்கதரிசி மறுத்து, தேவனுடைய அறிவுரையைப் பின்பற்றினான். ஆனால் கிழவனான ஒரு தீர்க்கதரிசி அவனை உணவருந்த அழைத்தபோது அம்மனிதன் முதலில் மறுக்கிறான். பிற்பாடு வற்புறுத்தப்படும் போது அவன் சாப்பிட்டு விடுகிறான். அங்கிருந்த மூத்தவர்கள் தேவதூதன் அவனைச் சாப்பிடக் கூறியதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். நான் என்னுடைய மகள் பிரிட்டா அவள் விரும்பிய பெரிய கட்டிலில் தூங்கட்டும் என்று விரும்பியது போல, தேவனுடைய அறிவுரைக்குச் செவி கொடுக்காத அம்மனிதனைக் குறித்து தேவனும் வருந்தியிருப்பார் என நான் நினைக்கிறேன்.
நாம் தேவனை முற்றிலுமாக நம்ப வேண்டும். அவருடைய வார்த்தைகளே நம் வாழ்விற்கு பாதையைக் காட்டும். நாம் அவற்றைக் கவனிக்கவும் கீழ்ப்படியவும் ஞானமாயிருக்க வேண்டும்.