எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் உல்ப்கட்டுரைகள்

தேவனை அறியும் அறிவு

எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே ஒரு தாயாக வேண்டும் என்று அதிகமாய் வாஞ்சித்தேன். திருமணமாகும், கருத்தரிப்பேன், குழந்தை பிறக்கும், கையிலெடுத்து கொஞ்சுவேன் என்றெல்லாம் கனவு காண்பேன். ஒருவழியாக எனக்கு திருமணமும் ஆனது. நானும் என் கணவரும் கர்ப்பத்தின் கனி பிறக்க ஆவலாய் இருந்தோம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் கர்ப்பப் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வரும்போது, மலட்டுத்தன்மையோ என்னவோ? என்று பயந்தோம். மாதக்கணக்கில் மருத்துவமனை சந்திப்புகளுக்குப்பின் அடுத்தடுத்து மிஞ்சியது கண்ணீரே. சூறாவளிக்குள் இருந்தது போன்ற உணர்வு. இந்த நிலையை ஜீரணிக்கமுடியாத எங்களுக்கு தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் மேல் இருந்த விசுவாசம் தடுமாறியது.

எங்களுடைய பயணத்தைப் பார்க்கும்போது, யோவான் 6-ஆம் அதிகாரத்தில், புயலின் நடுவே சிக்கின சீடர்களின் கதை தான் ஞாபகம் வருகிறது. புயல்வீசும் இரவில் அலைமோதும் படகில் அவர்கள் தவிக்கையில், எதிர்பாராதவிதமாக கொந்தளிக்கும் அலைகளின்மேல் இயேசு அவர்களிடமாய் நடந்துவந்தார். தம்முடைய பிரசன்னத்தின் மூலம் அவர்களை அமைதியாக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார் (வச. 20).

சீடர்களைப் போன்றே, எங்களுடைய வாழ்க்கையில் வீசிக்கொண்டிருந்த இந்தப் புயலின் நடுவே என்ன நடக்குமென்றும் அறியாதிருந்தோம். ஆனாலும், எப்போதும் சத்தியம் நிறைந்தவராய், உண்மையுள்ளவராய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டோம். ஒருவேளை எங்களுடைய எதிர்பார்ப்பின்படி எங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லாதுபோனாலும், எங்களுடைய எல்லா போராட்டங்களிலும் எங்களை அமைதிப்படுத்தும் அவருடைய வல்ல பிரசன்னத்தை உணர்ந்திடமுடியும் என்பதை புரிந்துகொண்டோம். எங்களுடைய வாழ்க்கையில் அவர் வல்லமையாய் இடைபடுவதால், நாங்கள் கலங்கவேண்டியதில்லை.

கவலைக்கு மருந்து

என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டிடும் என்ற பட்டியலைப் பார்த்தபொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).

தனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிரிட இருக்கும் சவால்களையும் அறியாதநிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச. 6) என்றெழுதினார்.

பவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக்கொண்டது. அது வாழ்க்கையைத் தலைகீழாக்குகிற பெரிய மாற்றமாயிருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாயிருக்கலாம், உடல் நலக்கேடாயிருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாயிருக்கலாம், இவையெல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுகொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக்குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கிறார். நாம் அதைச் செய்யும்பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்கிறார்.

எது வரைக்கும்?

எனக்கு திருமணம் ஆனவுடனேயே எனக்கு குழந்தைகள் பிறந்துவிடும் என்று எண்ணினேன். உடனே குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தை பெறுவதற்கு இயலாத என்னுடைய நிலைமையினால் ஏற்பட்ட மனவேதனை குழந்தை பேற்றுக்காக தேவனிடம் மன்றாட எனக்கு வழிவகுத்தது. நான் அடிக்கடி தேவனிடம் “எவ்வளவு காலம்?” என்று முறையிடுவேன். எனது சூழ்நிலைகளை தேவனால் மாற்றி அமைக்க இயலும். என்று அறிவேன். ஆனால், அவர் ஏன் மாற்றவில்லை?

நீங்கள் தேவனுக்கு காத்திருக்கிறீர்களா? நாம் வாழும் இப்பூமியிலே நியாயம் நிலை நிறுத்தப்பட எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா? கேன்சர் நோய் சுகமாகக் கூடிய காலம் எப்பொழுது வரும் என்று கேட்கிறீர்களா? நான் கடனில் விழுந்து விடாமல் இருக்க எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா?

ஆபகூக் என்ற தீர்க்கன் அதுபற்றி தெளிவான எண்ணம் கொண்டிருந்தான். “கர்த்தாவே நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் கேளாமல் இருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் என்னை இரட்சியாமல் இருக்கிறீரே. நீர் எனக்கு அக்கிரமத்தை காண்பித்து என்னை தீவினையை பார்க்கப் பண்ணுகிறது என்ன?” (ஆப. 1:2-3) என்று அவன் தேவனை நோக்கிக் கதறினான். நீதியும் வல்லமையுமுள்ள தேவன், பொல்லாப்பு அநீதி, சீர்கேடு ஆகியவற்றை எவ்வளவு காலம் தொடர தேவன் அனுமதிப்பார் என்று அவன் அங்கலாய்த்தான். ஏன் தேவன் இடைப்படவில்லை. ஏதும் செயல்படவில்லை என்ற கேள்விகளைக் குறித்து ஆபகூக் அதிகமாக சிந்தித்தான்.

நாமும் இவ்விதமாக தேவன் ஏன் செயல்படாமலிருக்கிறாரென்று எண்ணுகிற நாட்கள் உண்டு. ஆபகூக்கைப் போல “எது வரை?” என்று தேவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆயினும் நான் தனிமையாக இல்லை. ஆபகூக்கின் குரலைக் கேட்டவர் நம்முடைய பாரங்களைப் பற்றியும் விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியினால் நமது பாரங்களை அவர்மேல் வைத்துவிட வேண்டும். தேவன் நமது விண்ணப்பங்களை கேட்கிறார். அவரது நேரத்தில் அவர் அவைகளுக்குப் பதிலளிப்பார்.

தடைகளை அகற்றுதல்

முன்னால் கைதிகள் மீண்டும் சமுதாயத்தோடு இணைந்து வாழ உதவும் ஒரு அமைப்பாகச் செயல்படும் அந்த இல்லத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் நான் மேரியைப் பார்ப்பதுண்டு. என்னுடைய வாழ்வு அவளுடைய வாழ்க்கையை விட வித்தியாசமானது. அவள் இப்பொழுதுதான் சிறையை விட்டு வெளியே வந்தவள். போதையிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மகனிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டாள். இப்படியாக அவள் சமுதாயத்தின் ஓர் ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.

மேரியைப் போன்று சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்வதென்றால் என்னவென்று அடிமையான ஒநேசிமுக்குத் தெரியும். ஒநேசிமு தன்னுடைய கிறிஸ்தவ எஜமான் பிலேமோனுக்குத் துரோகம் இழைத்த காரணத்தினால், இப்பொழுது சிறையில் இருக்கிறான். அங்கிருக்கையில் அவன் பவுலைச் சந்தித்து, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையுள்ளவனாகிறான் (வச. 10). மனம்மாறியவனாக இருந்த போதிலும் ஒநேசிமு ஒரு அடிமை. பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் ஒரு கடிதத்தோடு அனுப்புகிறான். அதில் ஒநேசிமுவை “இனிமேல் அவன் அடிமையானவனாக அல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும், பிரியமுள்ள சகோதரனாகவும் இருக்கும்படிக்கு (பிலே. 1:15) ஏற்றுக் கொள்ளும்படி எழுதுகிறான்.

பிலேமோன் இப்பொழுது ஒநேசிமுவை அடிமையாகவா? அல்லது கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாகவா? எதைத் தேர்வு செய்யப் போகிறான்? நானும் இப்பொழுது எதைத் தேர்ந்து கொள்ளப் போகிறேன்? மேரியை ஒரு முன்னாள் குற்றவாளி, போதையின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டு வருபவளாகவா? அல்லது இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் முழுவதும் மாற்றப்பட்டவளாகவா? மேரி கிறிஸ்துவுக்குள் என்னுடைய சகோதரி எங்களுடைய விசுவாசப் பயணத்தில் இருவரும் இணைந்து நடக்கும் பாக்கியம் பெற்றவள்.

நம்முடைய சமுதாய பொருளாதார நிலைகள், பரிவுகள், கலாச்சார வேறுபாடுகள் நம்மை எளிதில் பிரித்துவிடலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இந்த அனைத்துத் தடைகளையும் அகற்றி நம் வாழ்வையும் உறவுகளையும் நிரந்தரமாக மாற்றி நம்மைப் புதிப்பிக்கும்.

பயத்திலிருந்து விசுவாசத்துக்கு!

மருத்துவரின் சொற்கள் அவளது இருதயத்;தை அதிரவைத்தது. அது புற்று நோய். அவளது கணவரையும் பிள்ளைகளையும் நினைத்தபோது அவளது உலகமே நின்றது போலிருந்தது. வேறு விதமான முடிவை வேண்டி அவர்கள் கருத்தாய் ஜெபித்தார்கள். இப்போது அவர்கள் என்ன செய்யக்கூடும்? கன்னங்களில் நீர் கொட்ட அவள் மென்மையாய் ஜெபித்தாள், “தேவனே, இது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது தயவுசெய்து நீர் எங்கள் பெலனாயிரும்.”

நமது முன்கணிப்பு, நம்பிக்கையைச் சிதறடிப்பதாகவும் நமது சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு மீறினதாகவும் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம்? நமது எதிர்காலம் நம்பிக்கையற்றதாய்த் தோன்றும்போது நாம் எங்கே நோக்குகிறோம்?

தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் நிலைமை அவரது கட்டுப்பாட்டில் இல்லை, அவர் மிகவும் திகிலடைந்தார். வருகின்ற நியாயத்தீர்ப்பு பேரழிவைக் கொண்டுவருவதாயிருந்தது (ஆபகூக் 3:16-17) என்ற போதிலும், வரப்போகின்ற குழப்பங்களின் மத்தியில் தன் விசுவாசத்தில் நிலைகொண்டிருக்க (ஆபகூக் 2:4) ஆபகூக் தெரிந்துகொண்டார். தேவனில் மகிழத் தீர்மானித்தார் (3:18). தனது சூழ்நிலைகளின் மேல் தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையம் வைக்காமல், தேவனுடைய நற்குணம் மற்றும் வல்லமையைச் சார்ந்துகொள்ள முடிவு செய்தார். தேவன் மேலுள்ள தனது நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார்: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்” (3:19)

வியாதிகள், குடும்பப் பிரச்சனை, நிதி நெருக்கடி போன்ற கடின சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது நாம் நமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தேவனில் வைக்க வேண்டும். அவர் எந்தச் சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிறார்.

தலை சிறந்த மேன்மை

நான் ஜமைக்காவில் வளர்ந்த பொழுது என் பெற்றோர் என்னையும், என் சகோதரியையும் “நன் மக்களாக” இருக்கத்தக்கதாக எங்களை வளர்த்தார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிதல், உண்மையைச் சொல்லுதல், பள்ளியிலும் மற்ற வேலைகளிலும் தலை சிறந்துவிளங்குதல். கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர்காவது ஆலயத்திற்குச் செல்லுதல், இவைகளே நல்லவர்கள் என்பதின் அடையாளமாக எனது வீட்டில் இருந்தது. நான் மேலே கூறிய விளக்கமே எல்லா நாட்டிலும் நல்லவர்கள் என்பதற்கு சரியான விளக்கமாக இருக்குமென்று நான் கற்பனை செய்கிறேன். உண்மையில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் நல்லவர் என்ற பதத்திற்கு கொடுத்துள்ள விளக்கமானது, அதைவிட மேலான ஒரு காரியத்தை குறிப்பதாக இருக்கிறது .

பவுல் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தியுள்ள யூதனாக நியாயப்பிரமாண விதிகளை ஒழுங்காக கைக்கொண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த கல்வியை கற்று, சிறந்த மதத்தை கைக் கொண்டு வந்தார். யூத பழக்க வழக்கங்களை கைக் கொண்டு நடப்பதில் பவுல் உண்மையாகவே நல்ல மனிதனாக விளங்கினார். அவர் விரும்பினால், அவருடைய மேன்மையான குணங்களைப்பற்றி அவர் மேன்மை பாராட்டலாம் என்று வசனம் 4இல் கூறுகிறார். அவர் மிக நல்லவர்தான் ஆயினும் நல்லவராக இருப்பதைவிட மேலான ஒரு காரியம் உள்ளதென்று, அவருடைய நிருபத்தை வாசிப்பவர்களுக்கு (நமக்கும்) கூறியுள்ளார். நல்லவராக கருப்பதும் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதும் ஒரே காரியம் அல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார்.

இயேசுவை பிரியப்படுத்துவது என்பது, இயேசுவை அறிந்து கொள்வதுதான் என்று வசனம் 7,8ல் பவுல் எழுதியுள்ளார். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதும், இயேசு கிறிஸ்துவின் மேன்மைகளைய ஒப்பிடும் பொழுது, அவருடைய மேன்மைகள் எல்லாம் குப்பை என்று கருதினார். நாம், நமது மேன்மையை நம்பாமல், நமது நம்பிக்கையும், விசுவாசமும் கிறிஸ்துவில் மட்டுமே இருக்கும் பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோம், தேவனை பிரியப்படுத்துகிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அந்நியரை உபசரித்தல்

“எவ்ரிதிங் சாட் இஸ் அன்ட்ரூ” என்ற புத்தகத்தில், டேனியல் நயேரி தனது தாய் மற்றும் சகோதரியுடன் சித்திரவதையிலிருந்து தப்பிக்க, ஒரு அகதி முகாம் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பான இடத்திற்கு ஒடி வந்த கொடூரமான பயணத்தை விவரிக்கிறார். அவர்களுக்கு நிதி உதவிசெய்ய, முன்பின் தெரியாத ஒரு வயதான தம்பதியினர் முன்வந்தனா். பல ஆண்டுகள் கழிந்தும், டேனியல் அதைக் கிரகிக்கக் கூடாமல், “உங்களால் நம்ப முடிகிறதா? கண்மூடித்தனமாக அதைச் செய்தனர். நாங்கள் சந்தித்ததே இல்லை. நாங்கள் தீயவர்களாக இருந்திருந்தால், அதற்கான விலைக்கிரயத்தை அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். என் வாழ்வில் அதுபோன்ற துணிச்சல், இரக்கம் மற்றும் தீவிரத்தைக் கண்டதேயில்லை” என்று எழுதுகிறார்.

இப்படிப்பட்ட கரிசனையைப் பிறர் மீது நாம் காட்டும்படி தேவன் விரும்புகிறார். அந்நியரிடம் இரக்கமாயிருக்கும்படி, இஸ்ரவேலரிடம் தேவன் கூறினார். “நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே” (லேவியராகமம் 19:34). இயேசுவுக்குள்ளான புறஜாதி விசுவாசிகளுக்கு (நம்மில் பெரும்பாலானோர்) “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், . . . புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 2:12) என்று நினைவூட்டினார். ஆகவே, யூதரும் புறஜாதியுமான முன்பு அந்நியராயிருந்த நம் அனைவர்க்கும், “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்” (எபிரெயர் 13:2) என அவர் கட்டளையிடுகிறார்.

இப்போது தனக்கென ஒரு குடும்பத்துடன் வளர்ந்துள்ள டேனியல், தங்களுக்கு உதவிய ஜிம் மற்றும் ஜீன் டாவ்சனை, “அவ்வளவு கிறிஸ்தவ தன்மையோடு இருந்தனர், அகதிகளின் குடும்பத்தை தங்களுக்கு வீடு கிடைக்கும் வரை தங்களோடு வாழ அனுமதித்தனர்” பாராட்டுகிறார்.

தேவன் அந்நியரை ஏற்றுக்கொள்கிறார், அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு நம்மையும் தூண்டுகிறார்.

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம்.