எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் உல்ப்கட்டுரைகள்

தேவனை அறியும் அறிவு

எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே ஒரு தாயாக வேண்டும் என்று அதிகமாய் வாஞ்சித்தேன். திருமணமாகும், கருத்தரிப்பேன், குழந்தை பிறக்கும், கையிலெடுத்து கொஞ்சுவேன் என்றெல்லாம் கனவு காண்பேன். ஒருவழியாக எனக்கு திருமணமும் ஆனது. நானும் என் கணவரும் கர்ப்பத்தின் கனி பிறக்க ஆவலாய் இருந்தோம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் கர்ப்பப் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வரும்போது, மலட்டுத்தன்மையோ என்னவோ? என்று பயந்தோம். மாதக்கணக்கில் மருத்துவமனை சந்திப்புகளுக்குப்பின் அடுத்தடுத்து மிஞ்சியது கண்ணீரே. சூறாவளிக்குள் இருந்தது போன்ற உணர்வு. இந்த நிலையை ஜீரணிக்கமுடியாத எங்களுக்கு தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் மேல் இருந்த விசுவாசம் தடுமாறியது.

எங்களுடைய பயணத்தைப் பார்க்கும்போது, யோவான் 6-ஆம் அதிகாரத்தில், புயலின் நடுவே சிக்கின சீடர்களின் கதை தான் ஞாபகம் வருகிறது. புயல்வீசும் இரவில் அலைமோதும் படகில் அவர்கள் தவிக்கையில், எதிர்பாராதவிதமாக கொந்தளிக்கும் அலைகளின்மேல் இயேசு அவர்களிடமாய் நடந்துவந்தார். தம்முடைய பிரசன்னத்தின் மூலம் அவர்களை அமைதியாக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார் (வச. 20).

சீடர்களைப் போன்றே, எங்களுடைய வாழ்க்கையில் வீசிக்கொண்டிருந்த இந்தப் புயலின் நடுவே என்ன நடக்குமென்றும் அறியாதிருந்தோம். ஆனாலும், எப்போதும் சத்தியம் நிறைந்தவராய், உண்மையுள்ளவராய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டோம். ஒருவேளை எங்களுடைய எதிர்பார்ப்பின்படி எங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லாதுபோனாலும், எங்களுடைய எல்லா போராட்டங்களிலும் எங்களை அமைதிப்படுத்தும் அவருடைய வல்ல பிரசன்னத்தை உணர்ந்திடமுடியும் என்பதை புரிந்துகொண்டோம். எங்களுடைய வாழ்க்கையில் அவர் வல்லமையாய் இடைபடுவதால், நாங்கள் கலங்கவேண்டியதில்லை.

கவலைக்கு மருந்து

என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டிடும் என்ற பட்டியலைப் பார்த்தபொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).

தனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிரிட இருக்கும் சவால்களையும் அறியாதநிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச. 6) என்றெழுதினார்.

பவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக்கொண்டது. அது வாழ்க்கையைத் தலைகீழாக்குகிற பெரிய மாற்றமாயிருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாயிருக்கலாம், உடல் நலக்கேடாயிருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாயிருக்கலாம், இவையெல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுகொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக்குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கிறார். நாம் அதைச் செய்யும்பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்கிறார்.

எது வரைக்கும்?

எனக்கு திருமணம் ஆனவுடனேயே எனக்கு குழந்தைகள் பிறந்துவிடும் என்று எண்ணினேன். உடனே குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தை பெறுவதற்கு இயலாத என்னுடைய நிலைமையினால் ஏற்பட்ட மனவேதனை குழந்தை பேற்றுக்காக தேவனிடம் மன்றாட எனக்கு வழிவகுத்தது. நான் அடிக்கடி தேவனிடம் “எவ்வளவு காலம்?” என்று முறையிடுவேன். எனது சூழ்நிலைகளை தேவனால் மாற்றி அமைக்க இயலும். என்று அறிவேன். ஆனால், அவர் ஏன் மாற்றவில்லை?

நீங்கள் தேவனுக்கு காத்திருக்கிறீர்களா? நாம் வாழும் இப்பூமியிலே நியாயம் நிலை நிறுத்தப்பட எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா? கேன்சர் நோய் சுகமாகக் கூடிய காலம் எப்பொழுது வரும் என்று கேட்கிறீர்களா? நான் கடனில் விழுந்து விடாமல் இருக்க எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா?

ஆபகூக் என்ற தீர்க்கன் அதுபற்றி தெளிவான எண்ணம் கொண்டிருந்தான். “கர்த்தாவே நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் கேளாமல் இருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் என்னை இரட்சியாமல் இருக்கிறீரே. நீர் எனக்கு அக்கிரமத்தை காண்பித்து என்னை தீவினையை பார்க்கப் பண்ணுகிறது என்ன?” (ஆப. 1:2-3) என்று அவன் தேவனை நோக்கிக் கதறினான். நீதியும் வல்லமையுமுள்ள தேவன், பொல்லாப்பு அநீதி, சீர்கேடு ஆகியவற்றை எவ்வளவு காலம் தொடர தேவன் அனுமதிப்பார் என்று அவன் அங்கலாய்த்தான். ஏன் தேவன் இடைப்படவில்லை. ஏதும் செயல்படவில்லை என்ற கேள்விகளைக் குறித்து ஆபகூக் அதிகமாக சிந்தித்தான்.

நாமும் இவ்விதமாக தேவன் ஏன் செயல்படாமலிருக்கிறாரென்று எண்ணுகிற நாட்கள் உண்டு. ஆபகூக்கைப் போல “எது வரை?” என்று தேவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆயினும் நான் தனிமையாக இல்லை. ஆபகூக்கின் குரலைக் கேட்டவர் நம்முடைய பாரங்களைப் பற்றியும் விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியினால் நமது பாரங்களை அவர்மேல் வைத்துவிட வேண்டும். தேவன் நமது விண்ணப்பங்களை கேட்கிறார். அவரது நேரத்தில் அவர் அவைகளுக்குப் பதிலளிப்பார்.

தடைகளை அகற்றுதல்

முன்னால் கைதிகள் மீண்டும் சமுதாயத்தோடு இணைந்து வாழ உதவும் ஒரு அமைப்பாகச் செயல்படும் அந்த இல்லத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் நான் மேரியைப் பார்ப்பதுண்டு. என்னுடைய வாழ்வு அவளுடைய வாழ்க்கையை விட வித்தியாசமானது. அவள் இப்பொழுதுதான் சிறையை விட்டு வெளியே வந்தவள். போதையிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மகனிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டாள். இப்படியாக அவள் சமுதாயத்தின் ஓர் ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.

மேரியைப் போன்று சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்வதென்றால் என்னவென்று அடிமையான ஒநேசிமுக்குத் தெரியும். ஒநேசிமு தன்னுடைய கிறிஸ்தவ எஜமான் பிலேமோனுக்குத் துரோகம் இழைத்த காரணத்தினால், இப்பொழுது சிறையில் இருக்கிறான். அங்கிருக்கையில் அவன் பவுலைச் சந்தித்து, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையுள்ளவனாகிறான் (வச. 10). மனம்மாறியவனாக இருந்த போதிலும் ஒநேசிமு ஒரு அடிமை. பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் ஒரு கடிதத்தோடு அனுப்புகிறான். அதில் ஒநேசிமுவை “இனிமேல் அவன் அடிமையானவனாக அல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும், பிரியமுள்ள சகோதரனாகவும் இருக்கும்படிக்கு (பிலே. 1:15) ஏற்றுக் கொள்ளும்படி எழுதுகிறான்.

பிலேமோன் இப்பொழுது ஒநேசிமுவை அடிமையாகவா? அல்லது கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாகவா? எதைத் தேர்வு செய்யப் போகிறான்? நானும் இப்பொழுது எதைத் தேர்ந்து கொள்ளப் போகிறேன்? மேரியை ஒரு முன்னாள் குற்றவாளி, போதையின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டு வருபவளாகவா? அல்லது இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் முழுவதும் மாற்றப்பட்டவளாகவா? மேரி கிறிஸ்துவுக்குள் என்னுடைய சகோதரி எங்களுடைய விசுவாசப் பயணத்தில் இருவரும் இணைந்து நடக்கும் பாக்கியம் பெற்றவள்.

நம்முடைய சமுதாய பொருளாதார நிலைகள், பரிவுகள், கலாச்சார வேறுபாடுகள் நம்மை எளிதில் பிரித்துவிடலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இந்த அனைத்துத் தடைகளையும் அகற்றி நம் வாழ்வையும் உறவுகளையும் நிரந்தரமாக மாற்றி நம்மைப் புதிப்பிக்கும்.

பயத்திலிருந்து விசுவாசத்துக்கு!

மருத்துவரின் சொற்கள் அவளது இருதயத்;தை அதிரவைத்தது. அது புற்று நோய். அவளது கணவரையும் பிள்ளைகளையும் நினைத்தபோது அவளது உலகமே நின்றது போலிருந்தது. வேறு விதமான முடிவை வேண்டி அவர்கள் கருத்தாய் ஜெபித்தார்கள். இப்போது அவர்கள் என்ன செய்யக்கூடும்? கன்னங்களில் நீர் கொட்ட அவள் மென்மையாய் ஜெபித்தாள், “தேவனே, இது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது தயவுசெய்து நீர் எங்கள் பெலனாயிரும்.”

நமது முன்கணிப்பு, நம்பிக்கையைச் சிதறடிப்பதாகவும் நமது சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு மீறினதாகவும் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம்? நமது எதிர்காலம் நம்பிக்கையற்றதாய்த் தோன்றும்போது நாம் எங்கே நோக்குகிறோம்?

தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் நிலைமை அவரது கட்டுப்பாட்டில் இல்லை, அவர் மிகவும் திகிலடைந்தார். வருகின்ற நியாயத்தீர்ப்பு பேரழிவைக் கொண்டுவருவதாயிருந்தது (ஆபகூக் 3:16-17) என்ற போதிலும், வரப்போகின்ற குழப்பங்களின் மத்தியில் தன் விசுவாசத்தில் நிலைகொண்டிருக்க (ஆபகூக் 2:4) ஆபகூக் தெரிந்துகொண்டார். தேவனில் மகிழத் தீர்மானித்தார் (3:18). தனது சூழ்நிலைகளின் மேல் தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையம் வைக்காமல், தேவனுடைய நற்குணம் மற்றும் வல்லமையைச் சார்ந்துகொள்ள முடிவு செய்தார். தேவன் மேலுள்ள தனது நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார்: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்” (3:19)

வியாதிகள், குடும்பப் பிரச்சனை, நிதி நெருக்கடி போன்ற கடின சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது நாம் நமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தேவனில் வைக்க வேண்டும். அவர் எந்தச் சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிறார்.

தலை சிறந்த மேன்மை

நான் ஜமைக்காவில் வளர்ந்த பொழுது என் பெற்றோர் என்னையும், என் சகோதரியையும் “நன் மக்களாக” இருக்கத்தக்கதாக எங்களை வளர்த்தார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிதல், உண்மையைச் சொல்லுதல், பள்ளியிலும் மற்ற வேலைகளிலும் தலை சிறந்துவிளங்குதல். கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர்காவது ஆலயத்திற்குச் செல்லுதல், இவைகளே நல்லவர்கள் என்பதின் அடையாளமாக எனது வீட்டில் இருந்தது. நான் மேலே கூறிய விளக்கமே எல்லா நாட்டிலும் நல்லவர்கள் என்பதற்கு சரியான விளக்கமாக இருக்குமென்று நான் கற்பனை செய்கிறேன். உண்மையில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் நல்லவர் என்ற பதத்திற்கு கொடுத்துள்ள விளக்கமானது, அதைவிட மேலான ஒரு காரியத்தை குறிப்பதாக இருக்கிறது .

பவுல் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தியுள்ள யூதனாக நியாயப்பிரமாண விதிகளை ஒழுங்காக கைக்கொண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த கல்வியை கற்று, சிறந்த மதத்தை கைக் கொண்டு வந்தார். யூத பழக்க வழக்கங்களை கைக் கொண்டு நடப்பதில் பவுல் உண்மையாகவே நல்ல மனிதனாக விளங்கினார். அவர் விரும்பினால், அவருடைய மேன்மையான குணங்களைப்பற்றி அவர் மேன்மை பாராட்டலாம் என்று வசனம் 4இல் கூறுகிறார். அவர் மிக நல்லவர்தான் ஆயினும் நல்லவராக இருப்பதைவிட மேலான ஒரு காரியம் உள்ளதென்று, அவருடைய நிருபத்தை வாசிப்பவர்களுக்கு (நமக்கும்) கூறியுள்ளார். நல்லவராக கருப்பதும் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதும் ஒரே காரியம் அல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார்.

இயேசுவை பிரியப்படுத்துவது என்பது, இயேசுவை அறிந்து கொள்வதுதான் என்று வசனம் 7,8ல் பவுல் எழுதியுள்ளார். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதும், இயேசு கிறிஸ்துவின் மேன்மைகளைய ஒப்பிடும் பொழுது, அவருடைய மேன்மைகள் எல்லாம் குப்பை என்று கருதினார். நாம், நமது மேன்மையை நம்பாமல், நமது நம்பிக்கையும், விசுவாசமும் கிறிஸ்துவில் மட்டுமே இருக்கும் பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோம், தேவனை பிரியப்படுத்துகிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.