எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெப்ப் ஒல்சன்கட்டுரைகள்

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி விளையாடினோம். நான் ஒளிந்துகொண்டேன். என்னுடைய ஐந்து வயது மாமா மகன் என்னை நெருங்கி வந்து கேட்டது. ‘இப்போது கண்டுபிடித்துவிடுவான்’ என்று நினைக்கும்போதே என்னுடைய இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஐந்து எட்டுதான். “கண்டுபிடித்து விட்டேன்!” என்றான்.

கண்ணாமூச்சி விளையாட்டு, சிறுவயதில் எல்லாருமே இந்த விளையாட்டை விளையாடியிருப் போம். கண்டுபிடிக்கப்படுவது என்பது வாழ்க்கையில் சிலசமயம் விளையாட்டான அனுபவமாக இருக்காது, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்கிற உள்ளுணர்வுதான் மேலோங்கி இருக்கும். தங்களுடைய நிலையை மக்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் அவ்வாறு ஓடுவார்கள்.

விழுந்துபோன உலகின் பிள்ளைகளாகிய நாமும் கண்ணாமூச்சி விளையாடுகிற நிலையில்தான் இருக்கிறோம். என்னுடைய நண்பன் அதை நமக்கும் தேவனுக்கும் இடையிலான “ஒரு வகையான கண்ணாமூச்சி விளையாட்டு” என்று சொல்லுவான்.  அதில் ஒளிந்துகொள்வதுபோல நாம் நடிக்கத்தான் முடியும். ஏனெனில் நம்முடைய சகல எண்ணங்களையும் தவறான தீர்மானங்களையும் அவர் நன்றாகவே அறிவார். அது நமக்கும் தெரியும், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியாததுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

ஆனாலும் தேவன் தொடர்ந்து நம்மைத் தேடிவருகிறார். “வெளியே வா. உன்னுடைய அவலட்சணமிக்க பகுதியைக்கூட நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தேவன் அழைக்கிறார். இதே சத்தம்தான் நம்முடைய முதல் பெற்றோரையும், அவர்கள் பயத்தால் ஒளிந்திருந்த போதும் அழைத்தது: “நீ எங்கே இருக்கிறாய்?” (ஆதி. 3:9). அது ஓர் அன்பான அழைப்புதான், ஆனாலும் அந்தக் கேள்வி அவர்களுக்கு குத்தலாக இருந்திருக்கவேண்டும். “அன்பு பிள்ளையே, நீ ஒளிந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வா. மீண்டும் என்னோடு உறவுவைத்துக்கொள்.”

இது மிகவும் அபாயகரமானதாகவும், ஆபத்தானதாகவும்கூட தோன்றலாம். ஆனால் நாம் யாரானாலும், எப்படிப்பட்ட தவறைச் செய்திருந்தாலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யத் தவறியிருந்தாலும், நம்முடைய பிதாவின் அரவணைப்பில், அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் பெறலாம்.

சகிக்க முடியாத துயரங்களையும் தாங்கி வாழல்

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அனுபவ செயல் திட்டம் என்ற அலைவழித் தொடர்புடைய ஒரு மிகப் பெரிய சமுதாயம், அந்த இணையதளத்தில் பல கோடி மக்கள் தங்களுடைய ஆழமான வேதனை தரும் அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அந்த உள்ளம் உடைக்கும் அனுபவங்களை நான் வாசித்தபோது, தங்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பார்க்கக்கூடியவர்கள் இருக்க மாட்டார்களா என ஏங்கிப் பரிதவிக்கும் இருதயங்களைக் குறித்துக் சிந்திக்கலானேன்.

இத்தகைய வாழ்வு தரும் கொடை எப்படி உதவ முடியும் என்பதை, ஆதியாகமத்தில் ஓர் இளம் பணிப்பெண் வெளிப்படுத்துகின்றாள். எகிப்தின் மன்னன் பார்வோன் ஆபிராமுக்கு கொடுத்த அடிமைப் பெண் ஆக ஆகார் இருக்கலாம். (ஆதி. 12:16,16:1). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தபடியால் அவள் ஆபிராமைத் தன்னுடைய அடிமைப் பெண் ஆகார் மூலம் தனக்கு பிள்ளை தரும்படி கேட்கின்றாள். இது நமக்கு ஏற்றுக் கொள்ள வருத்தமானதாக இறுப்பினும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. ஆகார் கர்ப்பவதியானபோது, அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. சாராய் அவளைக் கடினமாக நடத்தினபடியால் அவள் தன் நாச்சியாரைவிட்டு வனாந்திரத்திற்குத் தப்பி ஓடினாள் (16:1-6).

ஆகார் சங்கடமான சூழலிலிருக்கின்றாள். கர்ப்பிணியாயிருக்கின்றாள், தனிமையில் கடினமான பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஆனால். பரிசுத்தரின் கண்களுக்கு அவள் மறைவாயிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் ஆகாரைப் பார்த்து அவளோடு பேசி, அவளை ஊக்குவிக்கிறார். (வச. 7-12). இப்பொழுது அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வச. 13) என வெளிப்படுத்துகின்றாள்.

ஆகார் தன்னைக் கண்டவரைப் போற்றுகின்றாள். அதே தேவன் இயேசுவின் மூலம் இவ்வுலகில் வெளிப்பட்டபோது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டு பொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல்; மனதுருகினார்” (மத். 9:36). ஆகார் தன்னைப் புரிந்துகொண்ட தேவனைச் சந்தித்தாள்.

ஆகாரைக் கண்டு, புரிந்துகொண்ட தேவன் நம்முடைய வேதனைகளையும் காண்கின்றார் (எபி. 15-16) பரத்திலிருந்து நாம் தேற்றப்படுவதால், நம்மால் தாங்கக் கூடாத வேதனைகளையும் அவர் தாங்கக்கூடியதாக மாற்றுகின்றார்.

வாழ்வு தரும் தேவன்

சில குளிர்காலங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த பட்டணம் அசாதாரணமான, எலும்பையும் துளைக்கக் கூடிய குளிர்ந்த காலநிலையை நீண்ட நாட்கள் அனுபவித்தது. ஆனால், இறுதியாக அது ஒரு வெப்பமான வசந்த காலத்திற்கு வழிவகுத்தது. இரு வாரங்கள் தொடர்ச்சியாக வெளிப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே தள்ளப்பட்டது (-20°c;-5°).

அப்படியொரு மிகக் குளிர்ந்த நாள் காலையில் கிரீச்சிடும் பறவைகளின் ஓசை, இரவின் அமைதியைக் கலைத்தது. நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கள் இருதயத்தின் எண்ணங்களைப் பாடின. அந்த சிறிய உயிரினங்கள் தங்களைப் படைத்தவரை நோக்கி, தயவாய் அனைத்தையும் வெப்பமாக்கித் தாரும் என்று கதறுவதாக நான் உறுதியாகக் கூறமுடியும்.

பறவை நிபுணர்கள், பிந்தின குளிர்காலங்களில் நாம் கேட்கும், பறவையின் பாடல்களையெல்லாம் பாடுவது, அநேகமாக ஆண் பறவைகளே. அவை தங்கள் துணைகளை ஈர்ப்பதற்கும், தங்கள் எல்லைகளை உறுதிப்படுத்தவும் பாடுகின்றன என்கின்றார். தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், வளப்படுத்திக் கொள்ளவும் தேவன் தன் சிருஷ்டிப்புகளை நமக்கு சீர்ப்படுத்தியுள்ளார் என்பதை அவற்றின் குரல்கள் நினைப்பூட்டுகின்றன. ஏனெனில் அவர்தான் வாழ்வு தரும் தேவன்.

தேவன் படைத்த, வளங்கள் நிறைந்த பூமியை வியந்து சங்கீதக்காரன் “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர்” எனப் பாடுகிறார். மேலும் “அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்” (சங். 104:12) என பாடுகிறார்.

பாடுகின்ற கூடுகட்டி வாழ்கின்ற பறவைகள் முதல் பெரிதும் விஸ்தாரமான சமுத்திரம் வரை “அதிலே சஞ்சரிக்கும் எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அத்தனையும் படைத்தவரும், அவைகள் அத்தனையும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றவருமாகிய நம்முடைய சிருஷ்டிகரே போற்றத் தகுந்தவர்.

காட்சியை ரசியுங்கள்

சூரிய அஸ்தமனம். தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு அதை காண்பார்கள்..... புகைப்படம் எடுப்பார்கள்.... அழகிய காட்சியை ரசித்து அனுபவிப்பார்கள். 

சமீபத்தில் நானும் எனது மனைவியும், மெக்ஸிகோ வளைகுடாவில் சூரியன் மறைவதைக் கண்டோம். தினமும் நடைபெறும் இந்த இரவுக்காட்சியை கண்டுகளிக்க எங்களைப்போல் பலர் அங்கு கூடியிருந்தனர். அடிவானத்தில் சூரியன் முழுவதுமாக மறைந்தவுடன் எல்லோரும் சத்தமாக ஆராவாரித்தனர். 

மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தபொழுது சங்கீதங்களில் இதற்கான துப்பு கிடைத்தது. சூரியன் தன் சிருஷ்டிகரை துதிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டுள்ளார் என்று சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 148:3). அதனால்தான் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் படர்வதைக் கண்டவுடன், மக்கள் தன்னிலை மறந்து பரவசத்துடன் அதனோடு சேர்ந்து துதிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஓடிக்கொண்டேயிருக்கும் நம்மை, தேவனுடைய அற்புதமான படைப்பு நிதானிக்க வைத்து, வாழ்வில் மிகவும் முக்கியமான காரியம் எது என்பதனை எடுத்துரைக்கிறது. இறுதியில், பிரமிக்கத்தக்க உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் பின்னால் ஒரு சிருஷ்டிகர் உண்டு என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. தாம் படைத்த பூமியையும் அதன் நிறைவையும் அளவற்ற அன்புடன் நேசித்தபடியால், சிருஷ்டிகரான அவர்தாமே அதற்குள் பிரவேசித்து அதனை மீட்டு புதுப்பித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.