எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Jolene Philoகட்டுரைகள்

ஏதோவொன்று தவறாக உள்ளது

எங்களுடைய மகன் ஆலன் பிறந்த மறுநாள் காலை, எனது கட்டிலோரத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்த மருத்துவர், “ஏதோவொன்று தவறாக உள்ளது” எனக் கூறினார். வேளிப்புறம் பரிபூரணமாக காணப்பட்ட எங்கள் மகனிற்கு பிறப்பிலேயே உயிருக்கு ஆபத்தான ஒரு குறைபாடு இருந்ததால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய 700 மைல்களுக்கு அப்பால் இருந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாயிருந்தது.

உங்கள் குழந்தைக்கு ஏதோ ஒரு குறைபாடு உள்ளது என மருத்துவர் கூறும்பொழுது, உங்கள் வாழ்க்கை மாறிவிடுகிறது. நமக்கு முன் இருக்கிற காரியங்களை குறித்து பயந்து, ஆவியில் நொறுங்குண்டு, நாம் தள்ளாட ஆரம்பிக்கிறோம். அப்பொழுது, கலங்கிப் போயிருக்கும் நாம் நம்முடைய பிள்ளையை போஷிக்க நமக்கு தேவையான பெலத்தை தந்து நம்மை தேற்றி ஆற்றும்படி தேவனையே நோக்கி காத்திருக்கிறோம்.

அன்புள்ள தேவன் இதை அனுமதிப்பாரா? என குழம்புகிறோம். என் குழந்தை மீது அவருக்கு அக்கறை உள்ளதா? அவர் என் குழந்தையோடு இருக்கின்றாரா? என்று அக்காலை வேளையிலே பல எண்ணங்கள் என் விசுவாசத்தை நிலைகுலுங்கச் செய்தது.

பின்பு அங்கு வந்த என்னுடைய கணவர் ஹீராமிடம் மருத்துவர் அச்செய்தியைக் கூறினார். மருத்துவர் சென்ற பிறகு, “ஜோலீன், நாம் ஜெபம் செய்வோம்,” என்று என் கணவர் கூறினார். நான் சரி என்று தலையசைத்தேன். அப்பொழுது அவர் என் கரங்களை பற்றிக்கொண்டு, “பிதாவே நீர் ஆலனை எங்களுக்கு கொடுத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனாலும் அவன் எங்களுடையவனல்ல, உமக்குரியவனே. நாங்கள் அவனை அறியும் முன்னமே நீர் அவனை நேசித்துள்ளீர். ஆகவே அவன் உம்முடையவனே. நாங்கள் அவனோடு இருக்கக்கூடாமற்போயினும் நீர் அவனோடு தயவாய் இருந்தருளும் ஆமென்” என ஜெபித்தார்.

என்னுடைய கணவர் ஹீராம் பொதுவாக அதிகம் பேசமாட்டார். அவருடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ள சிரமப்படுவார். எப்பேற்பட்ட அமைதலான தருணங்களையும் போதுமான வார்த்தைகளைக் கொண்டு என்னால் நிரப்ப முடியும் என்பதை அவர் அறிந்திருந்ததால், அநேகந்தரம் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளக் கூட முயற்சிக்க மாட்டார்.

ஆனால் அன்றைய தினம் விசுவாசமின்றி உடைந்து போன இருதயத்தோடு, ஆவியிலே நொறுங்குண்டு இருந்த பொழுது, என்னால் கூற முடியாத வார்த்தைகளை என் கணவர் கூறி ஜெபிக்கும்படி தேவன் அவரை பெலப்படுத்தினார். இன்னும் என் கணவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டிருந்த நான், ஆழ்ந்த அமைதியின் மத்தியில், பல கண்ணீர் துளிகளின் ஊடாய் தேவன் எனக்கு மிக அருகில் உள்ளார் என்பதை உணர்ந்தேன்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).

 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்துவந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது. 

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார்.