ஒரு மெல்லிய சத்தம்
நியூயார்க் நகரின் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் உள்ள கிசுகிசுக்கும் சுவர், அப்பகுதியின் ஆரவாரத்திலிருந்து ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த தனித்துவமான இடம் முப்பது அடி தூரத்தில் இருந்து மக்கள் அமைதியான செய்திகளை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. கிரானைட் வளைவின் அடிவாரத்தில் ஒருவர் நின்று சுவரில் மென்மையாகப் பேசும்போது, ஒலி அலைகள் வளைந்த கல்லின் மேல் ஏறி, மறுபுறம் கேட்பவருக்குப் பயணிக்கின்றன.
யோபு கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்த சோகத்தால் நிரம்பியபோது, தன்னை சுற்றியிருக்கும் ஆரவாரத்தின் மத்தியில் ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்க நேரிட்டது (யோபு 1:13-19; 2:7). அவரது நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசினர். அவரது சொந்த எண்ணங்கள் முடிவில்லாமல் பொங்கின. மேலும் அவரது இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரச்சனை ஆக்கிரமித்தது. ஆனாலும், இயற்கையின் மகத்துவம் தேவனுடைய தெய்வீக சக்தியைப் பற்றி அவரிடம் மென்மையாகப் பேசியது.
வானத்தின் மகிமை, விண்வெளியில் நிறுத்தப்பட்ட பூமியின் மர்மம் மற்றும் அடிவானத்தின் உறுதிப்பாடு ஆகியவை, உலகம் தேவனுடைய உள்ளங்கையில் இருப்பதை யோபுக்கு நினைவூட்டியது (26:7-11). கொந்தளிக்கும் கடலும், சலசலக்கும் சூழ்நிலையும் கூட, “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்” (வச. 14) என்று சொல்லத் தூண்டியது.
உலகின் அதிசயங்கள் தேவனுடைய மகத்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றால், அவருடைய சக்தி அதைப் புரிந்துகொள்ளும் திறனை மீறுகிறது என்பது தெளிவாகிறது. உடைந்த காலங்களில், இது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. துன்பத்தின் நேரத்தில் யோபுவுக்கு தேவன் செய்த நன்மைகள் உட்பட அவரால் எதையும் செய்ய முடியும்.
அழகான வடிவமைப்பு
ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.
இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது.
தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.
வழிநடத்துதலை ஏற்றல்
என்னுடைய சிநேகிதி மிச்செல் என் மகளுக்கு குதிரை ஏற்றம் கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை லாயத்தில் இருந்த தோல் மற்றும் வைக்கோல் வாசனை காற்றில் வந்தது. மிச்செலின் வெள்ளைக் குதிரையின் வாயில் எப்படி கயிற்றின் வளையத்தைப் பொறுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை வாயை திறந்து காண்பித்தது. அதன் காதுகளுக்கு மேல் கடிவாளத்தை இழுத்தபோது, குதிரையை மெதுவாக நகர்த்துவதற்கும் இடது அல்லது வலது பக்கம் அதை இயக்குவதற்கும் அனுமதித்ததால், அந்த கடிவாளத்தில் இருக்கும் அந்த வளையம் மிகவும் முக்கியமானது என்று மிச்செல் விளக்கினார்.
குதிரையின் வாயோராமாய் இருக்கும் அந்த வளையம் மனிதனின் நாக்கைப் போன்று முக்கியமானது. இரண்டும் பெரிய ஒன்றை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. அந்த சிறு கடிவாள வளையம் குதிரையையும், சிறிய நாக்கு மனிதனின் வார்த்தைகளையும் கட்டுப்படுத்துகிறது (யாக்கோபு 3:3,5).
நம்முடைய வார்த்தைகள் அனைத்து திசைகளுக்கும் தீவிரமாய் பரம்பும். “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்” (வச. 9). ஆனால், வார்த்தைகள் இருதயத்திலிருந்து புறப்படுவதால், நாவை கட்டுப்படுத்துவது கடினம் என்று வேதம் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது (லூக்கா 6:45). ஆனால் நமக்கும் வாசமாயிருக்கும் கர்த்தருடைய ஆவியானவர், பொறுமை, நற்குணம், இச்சையடக்கம் ஆகிய ஆவியின் சுபாவங்களில் வளருவதற்கு நமக்கு உதவிசெய்கிறார் (கலாத்தியர் 5:22-23). ஆவியானவரோடு நாம் ஒத்துழைத்தால், நம்முடைய இருதயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அது நம்முடைய வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறது. வீணான வார்த்தைகள் துதியின் சத்தமாய் மாறுகிறது. பொய்யானது சத்தியமாய் மாறுகிறது. விமர்சன உதடுகள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச எத்தனிக்கிறது.
நாவை அடக்குவது என்பது சரியான வார்த்தைகளை பேசுவதற்கான பயிற்சி மட்டுமன்று. அது ஆவியானவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, உலகத்திற்கு தேவையான தயவும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் நம்மிலிருந்து பிறப்பிக்கச் செய்யும் ஆவியானவருடைய கிரியை.
நம் எல்லா நாட்களின் தேவன்
ஒரு வெற்றியடையாத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஜோனின் மருத்துவர் ஐந்து வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். நேரம் செல்ல செல்ல, பதட்டம் உருவானது. ஜோனும் அவரது கணவரும் வயதுசென்றவர்கள். அவர்களது குடும்பம் வெகு தொலைவில் வசித்து வந்தது. அவர்கள் இனி புதிய இடத்திற்கு செல்லவேண்டும். சிக்கலான மருத்துவமனை அமைப்பிற்கு செல்ல வேண்டும். மற்றொரு புதிய மருத்துவரை அவர்கள் சந்திக்கவேண்டும்.
இந்த சூழ்நிலைகள் அவர்களை மேற்கொண்டாலும், தேவன் அவர்களை பாதுகாத்தார். அவர்கள் காரில் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு வழிகாட்டும் ஜீ.பி.எஸ் சிஸ்டம் தோல்வியடைந்தது. ஆனால் அவர்களிடம் வழிகாட்டும் மேப் பேப்பரில் கைவசம் இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேரமுடிந்தது. தேவன் அந்த ஞானத்தை அவர்களுக்கு அருளினார். அந்த மருத்துவமனையில் ஒரு கிறிஸ்தவ போதகர் அவர்களுக்காக ஜெபம் செய்து, மீண்டும் அன்றைக்கு மாலையில் அவர்களுக்கு உதவிசெய்தார். தேவன் அவர்களுக்கு உதவி அருளினார். அந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, அது நல்ல முறையில் நடத்தேறியது என்னும் நற்செய்தியையும் ஜோன் கேள்விப்பட்டார்.
நாம் எல்லா நேரத்திலும் சுகத்தையும் மீட்டையும் பெற்றுகொள்ளாவிட்டாலும், இளைஞரோ முதியவரோ, தேவன் பெலவீனமான அனைவரோடும் எப்போதும் இருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பாபிலோனின் சிறையிருப்பு இஸ்ரவேலர்களைப் பலவீனப்படுத்தியபோது, தேவன் அவர்களைப் பிறப்பிலிருந்தே ஆதரித்தார் என்றும் அவர்களைத் தொடர்ந்து பாதுகாப்பார் என்றும் ஏசாயா அவர்களுக்கு நினைப்பூட்டினார். “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்” (ஏசாயா 46:4) என்று தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.
தேவனுடைய தேவை நமக்கு அவசியப்படும்போது, அவர் நம்மை கைவிடுவதில்லை. அவர் நம் தேவைகளை சந்தித்து, நம்முடைய ஜீவியத்தின் அனைத்து பகுதிகளிலும் நம்மோடிருக்கிறார் என்பதை நமக்கு நினைப்பூட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் எல்லா நாட்களிலும் நம்முடைய தேவன்.
ஜெபத்தினால் கிரியைசெய்தல்
என் மகனுக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை அவசியப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன். பணி ஓய்வுபெறும் தருவாயில் இருந்த அந்த மருத்துவர், இதே பிரச்சனையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதாக எங்களுக்கு உறுதியளித்தார். ஆகிலும் அவர் அறுவை சிகிச்சையை துவங்கும் முன்பு ஜெபம் செய்து, அந்த அறுவை சிகிச்சை நலமாய் முடியவேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய அந்த ஜெபத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
மிகவும் அனுபவசாலியான யோசபாத் ராஜா, அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜெபம் செய்கிறான். அவனுக்கு எதிராகவும் அவனுடைய ஜனத்துக்கு எதிராகவும் மூன்று தேசங்கள் படையெடுத்து வந்தது. அவனுக்கு ஏற்கனவே இருபது ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், என்ன செய்ய வேண்டும் என்று அவன் தேவனிடம் கேட்கிறான். அவன் ஜெபிக்கும்போது, “எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்” (2 நாளாகமம் 20:9) என்று ஜெபிக்கிறான். மேலும், “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (வச. 12) என்று சொல்லி ஜெபிக்கிறான்.
தனக்கு முன்வைக்கப்பட்ட சவாலை தாழ்மையாய் அணுகிய விதம், உற்சாகத்தையும் அந்த சவாலுக்கு தேவனுடைய இடைபாட்டையும் வரவழைத்தது (வச. 15-17, 22). சிலவேளைகளில் நமக்கு எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும், நமது தேவையின்போது தேவனிடத்தில் ஜெபிப்பது என்பது நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்கிறது. அவர் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. விளைவு எப்படியிருந்தாலும் அவர் நம்முடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தாழ்மையான இடத்தில் இது நம்மை கொண்டுபோய் வைக்கிறது.
பெலவீனத்தில் பெலன்
என்னுடைய மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு முன்பதாக, எங்கள் வீட்டில் இன்னும் கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை நான் யோசித்துப்பார்த்தேன். சுறுசுறுப்பாய் சுற்றித்திரியும் என் சிறுபிள்ளையை நான் எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்றும் அடுப்பறையில் நின்று எவ்வாறு சமையல் செய்யப்போகிறேன் என்பதையும் குறித்து என்னால் சற்றும் கற்பனை செய்யமுடியவில்லை. என்னுடைய இந்த பலவீனம் எங்கள் சுமூகமான வாழ்க்கையை பாதித்ததைக் குறித்து நான் சோர்வுற்றேன்.
கிதியோனுடைய சேனைகள் மீதியானியரிடத்தில் யுத்தம்செய்வதற்கு முன்னர் தேவன் அவர்களை பெலவீனமடையச் செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் திரும்பிப் போகும்படிக்கு சொல்லப்பட்டது. அதில் இருபத்தி இரண்டாயிரம் பேர் திரும்பப் போய்விட்டனர் (நியாயாதிபதிகள் 7:3). மீதமிருந்த பத்தாயிரம் பேர்களில், தண்ணீரை கையில் அள்ளிப் பருகியவர் மட்டும் இருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் மூந்நூரு பேர் மாத்திரம் மீதமிருந்தனர். ஆனால் இந்த குறைவான எண்ணிக்கை அவர்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைக்க விடாமல் பாதுகாத்தது (வச. 5-6). அவர்கள் “என் கை என்னை ரட்சித்தது” (வச. 2) என்று இப்போது சொல்லமுடியாது.
நம்மில் பலர் இதுபோன்ற சோர்வுற்று பெலவீனமான தருணங்களை அனுபவிப்பதுண்டு. இந்த அனுபவம் எனக்கு நேரிடும்போது, தேவன் எனக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்துகொண்டேன். தேவன் தன்னுடைய ஆவியைக்கொண்டு உள்ளுக்குள்ளும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெளியரங்கமாகவும் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக எண்ணினேன். ஆனால் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ள பழகிக்கொண்டேன். நம்முடைய தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியாத பட்சத்தில், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்ற வார்த்தைகள் நம்மை தேற்றும்.
நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்
பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.
சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால், "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).
சுமைகளை அகற்றுதல்
கல்லூரியில், நான் ஒரு பருவ தேர்விற்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்பைப் படித்தேன். வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் எழுதிய அனைத்தையும் கொண்ட மாபெரும் பாடப்புத்தகம் தேவைப்பட்டது. புத்தகம் பல கிலோ எடையுள்ளதாக இருந்தது, நான் அதை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல சில மணிநேரங்கள் தேவைப்பட்டது. அந்த சுமையைக் கட்டி சுமப்பது என் முதுகில் காயத்தை ஏற்படுத்தியது, அது இறுதியில் என் புத்தகப்பையில் ஒரு உலோக இணைப்பையும் உடைத்தது!
சில விஷயங்கள் நம்மால் சுமக்க முடியாத அளவுக்கு கனமானவை. உதாரணமாக, கடந்த காலத்தில் உண்டான காயம் கொண்டுவருகிற உணர்வுபூர்மான சுமைகள், கசப்பாலும் வெறுப்பாலும் நம்மை மூழ்கடிக்கலாம். ஆனால், பிறரை மன்னிப்பதாலும், முடிந்தால் அவர்களுடன் ஒப்புரவாவதின் மூலமாகவும் நாம் விடுதலை பெற்றிடத் தேவன் விரும்புகிறார் (கொலோசெயர் 3:13). ஆழமான காயம் ஆற, அதிகமான நேரம் ஆகலாம். பரவாயில்லை. தனது சேஷ்டபுத்திரபாகத்தையும் ,ஆசீர்வாதத்தையும் திருடியதற்காக யாக்கோபை மன்னிக்க ஏசாவுக்கு பல ஆண்டுகள் ஆனது (ஆதியாகமம் 27:36).
இருவரும் இறுதியாக மீண்டும் இணைந்தபோது, ஏசா கருணையுடன் தனது சகோதரனை மன்னித்து, "அவனைத் தழுவினார்" (33:4). அவர்கள் இருவரும் கண்ணீர் வடிக்கும்வரை ஒரு வார்த்தை கூட பரிமாறிக்கொள்ளவில்லை. காலப்போக்கில், கொலை செய்யக்கூட தூண்டும் கோபத்தை ஏசா விட்டுவிட்டார் (27:41). அந்த ஆண்டுகளில், யாக்கோபு தனது சகோதரனுக்கு இழைத்த பொல்லாங்கு எப்பேர்பட்டது என்பதை உணர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் இணைகையில், முழுவதும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார் (33:8-11).
இறுதியில், இரு சகோதரர்களும் மற்றவரிடமிருந்து எதுவும் தேவைப்படாத நிலைக்கு வந்தனர் (வ. 9, 15). மன்னிக்கவும் மன்னிக்கப்படவும் மற்றும் கடந்த காலத்தின் கனமான சுமையிலிருந்து விடுபட்டு நடப்பது மட்டுமே போதுமானதாயிருந்தது.
கிறிஸ்துவில் நிலைத்திருத்தல்
ஒரு தீ பல்சோரா பாப்டிஸ்ட் தேவாலயத்தை தரைமட்டமாக்கியது. தீ தணிந்த பிறகு தீயணைப்பு மற்றும் சமூக உறுப்பினர்கள் கூடிவந்தபோது, காற்றில் புகை மற்றும் சாம்பலுக்கு இடையே ஒரு கருகிய சிலுவை நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு தீயணைப்பு வீரர் கருத்து தெரிவிக்கையில், தீ “கட்டிடத்தை எரித்தது, ஆனால் சிலுவையை எரிக்கவில்லை. அந்த கட்டிடம் ஒரு கட்டிடம் தான்; ஆலயம் என்பது அங்கிருக்கும் மக்கள் கூட்டமே என்பதை நினைவுபடுத்துகிறது.”
தேவாலயம் ஒரு கட்டிடம் அல்ல, ஆனால் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சிலுவையால் ஒன்றுபட்ட ஒரு சமூகம். இயேசு பூமியில் வாழ்ந்தபோது, அவர் பேதுருவிடம் தனது உலகளாவிய தேவாலயத்தைக் கட்டுவதாகக் கூறினார், எதுவும் அதை அழிக்காது (மத்தேயு 16:18). இயேசு உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளை ஒரு குழுவாகச் சேர்ப்பார், அது காலம் முழுவதும் தொடரும். இந்த சமூகம் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ளும், ஆனால் அவர்கள் இறுதியில் ஜெயங்கொள்ளுவார்கள். தேவன் அவர்களுக்குள்ளே தங்கி அவர்களை ஆதரிப்பார் (எபேசியர் 2:22).
ஸ்தல தேவாலயங்களை நிறுவுவதற்கு நாம் போராடும்போது, அவை தேங்கி நிற்கும் போது, கட்டிடங்கள் அழிக்கப்படும்போது, அல்லது உலகின் பிற பகுதிகளில் விசுவாசிகள் போராடுவதைப் பற்றி நாம் கவலைப்படும்போது, இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம். தேவ ஜனம் விடாமுயற்சியுடன் செயல்பட அவர் நமக்கு உதவுகிறார். இன்று அவர் கட்டும் தேவாலயத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். அவர் நம்முடனும் நமக்காகவும் இருக்கிறார். அவருடைய சிலுவை மட்டும் அப்படியே நிலைத்திருக்கிறது.