Jennifer Benson Schuldt | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

பெலவீனத்தில் பெலன்

என்னுடைய மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு முன்பதாக, எங்கள் வீட்டில் இன்னும் கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை நான் யோசித்துப்பார்த்தேன். சுறுசுறுப்பாய் சுற்றித்திரியும் என் சிறுபிள்ளையை நான் எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்றும் அடுப்பறையில் நின்று எவ்வாறு சமையல் செய்யப்போகிறேன் என்பதையும் குறித்து என்னால் சற்றும் கற்பனை செய்யமுடியவில்லை. என்னுடைய இந்த பலவீனம் எங்கள் சுமூகமான வாழ்க்கையை பாதித்ததைக் குறித்து நான் சோர்வுற்றேன்.  
கிதியோனுடைய சேனைகள் மீதியானியரிடத்தில் யுத்தம்செய்வதற்கு முன்னர் தேவன் அவர்களை பெலவீனமடையச் செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் திரும்பிப் போகும்படிக்கு சொல்லப்பட்டது. அதில் இருபத்தி இரண்டாயிரம் பேர் திரும்பப் போய்விட்டனர் (நியாயாதிபதிகள் 7:3). மீதமிருந்த பத்தாயிரம் பேர்களில், தண்ணீரை கையில் அள்ளிப் பருகியவர் மட்டும் இருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் மூந்நூரு பேர் மாத்திரம் மீதமிருந்தனர். ஆனால் இந்த குறைவான எண்ணிக்கை அவர்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைக்க விடாமல் பாதுகாத்தது (வச. 5-6). அவர்கள் “என் கை என்னை ரட்சித்தது” (வச. 2) என்று இப்போது சொல்லமுடியாது.  
நம்மில் பலர் இதுபோன்ற சோர்வுற்று பெலவீனமான தருணங்களை அனுபவிப்பதுண்டு. இந்த அனுபவம் எனக்கு நேரிடும்போது, தேவன் எனக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்துகொண்டேன். தேவன் தன்னுடைய ஆவியைக்கொண்டு உள்ளுக்குள்ளும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெளியரங்கமாகவும் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக எண்ணினேன். ஆனால் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ள பழகிக்கொண்டேன். நம்முடைய தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியாத பட்சத்தில், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்ற வார்த்தைகள் நம்மை தேற்றும்.  

நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்

பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.

சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், ​​​​என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால்,  "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், ​​தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).

 

சுமைகளை அகற்றுதல்

கல்லூரியில், நான் ஒரு பருவ தேர்விற்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்பைப் படித்தேன். வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் எழுதிய அனைத்தையும் கொண்ட மாபெரும் பாடப்புத்தகம் தேவைப்பட்டது. புத்தகம் பல கிலோ எடையுள்ளதாக இருந்தது, நான் அதை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல  சில மணிநேரங்கள் தேவைப்பட்டது. அந்த சுமையைக் கட்டி சுமப்பது  என் முதுகில் காயத்தை ஏற்படுத்தியது, அது இறுதியில் என் புத்தகப்பையில் ஒரு உலோக இணைப்பையும் உடைத்தது!

சில விஷயங்கள் நம்மால் சுமக்க முடியாத அளவுக்கு கனமானவை. உதாரணமாக, கடந்த காலத்தில் உண்டான காயம் கொண்டுவருகிற உணர்வுபூர்மான சுமைகள், கசப்பாலும் வெறுப்பாலும் நம்மை மூழ்கடிக்கலாம். ஆனால், பிறரை மன்னிப்பதாலும், முடிந்தால் அவர்களுடன் ஒப்புரவாவதின் மூலமாகவும் நாம் விடுதலை பெற்றிடத் தேவன் விரும்புகிறார் (கொலோசெயர் 3:13). ஆழமான காயம் ஆற, அதிகமான நேரம் ஆகலாம். பரவாயில்லை. தனது சேஷ்டபுத்திரபாகத்தையும் ,ஆசீர்வாதத்தையும் திருடியதற்காக யாக்கோபை மன்னிக்க ஏசாவுக்கு பல ஆண்டுகள் ஆனது (ஆதியாகமம் 27:36).

இருவரும் இறுதியாக மீண்டும் இணைந்தபோது, ​​​​ஏசா கருணையுடன் தனது சகோதரனை மன்னித்து, "அவனைத் தழுவினார்" (33:4). அவர்கள் இருவரும் கண்ணீர் வடிக்கும்வரை ஒரு வார்த்தை கூட பரிமாறிக்கொள்ளவில்லை. காலப்போக்கில், கொலை செய்யக்கூட தூண்டும் கோபத்தை ஏசா விட்டுவிட்டார் (27:41). அந்த ஆண்டுகளில், யாக்கோபு தனது சகோதரனுக்கு இழைத்த பொல்லாங்கு எப்பேர்பட்டது என்பதை உணர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் இணைகையில், முழுவதும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார் (33:8-11).

இறுதியில், இரு சகோதரர்களும் மற்றவரிடமிருந்து எதுவும் தேவைப்படாத நிலைக்கு வந்தனர் (வ. 9, 15). மன்னிக்கவும் மன்னிக்கப்படவும் மற்றும் கடந்த காலத்தின் கனமான சுமையிலிருந்து விடுபட்டு நடப்பது மட்டுமே போதுமானதாயிருந்தது.

கிறிஸ்துவில் நிலைத்திருத்தல்

ஒரு தீ பல்சோரா பாப்டிஸ்ட் தேவாலயத்தை தரைமட்டமாக்கியது. தீ தணிந்த பிறகு தீயணைப்பு மற்றும் சமூக உறுப்பினர்கள் கூடிவந்தபோது, காற்றில் புகை மற்றும் சாம்பலுக்கு இடையே ஒரு கருகிய சிலுவை நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு தீயணைப்பு வீரர் கருத்து தெரிவிக்கையில், தீ “கட்டிடத்தை எரித்தது, ஆனால் சிலுவையை எரிக்கவில்லை. அந்த கட்டிடம் ஒரு கட்டிடம் தான்; ஆலயம் என்பது அங்கிருக்கும் மக்கள் கூட்டமே என்பதை நினைவுபடுத்துகிறது.” 

தேவாலயம் ஒரு கட்டிடம் அல்ல, ஆனால் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சிலுவையால் ஒன்றுபட்ட ஒரு சமூகம். இயேசு பூமியில் வாழ்ந்தபோது, அவர் பேதுருவிடம் தனது உலகளாவிய தேவாலயத்தைக் கட்டுவதாகக் கூறினார், எதுவும் அதை அழிக்காது (மத்தேயு 16:18). இயேசு உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளை ஒரு குழுவாகச் சேர்ப்பார், அது காலம் முழுவதும் தொடரும். இந்த சமூகம் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ளும், ஆனால் அவர்கள் இறுதியில் ஜெயங்கொள்ளுவார்கள். தேவன் அவர்களுக்குள்ளே தங்கி அவர்களை ஆதரிப்பார் (எபேசியர் 2:22).

ஸ்தல தேவாலயங்களை நிறுவுவதற்கு நாம் போராடும்போது, அவை தேங்கி நிற்கும் போது, கட்டிடங்கள் அழிக்கப்படும்போது, அல்லது உலகின் பிற பகுதிகளில் விசுவாசிகள் போராடுவதைப் பற்றி நாம் கவலைப்படும்போது, இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம். தேவ ஜனம் விடாமுயற்சியுடன் செயல்பட அவர் நமக்கு உதவுகிறார். இன்று அவர் கட்டும் தேவாலயத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். அவர் நம்முடனும் நமக்காகவும் இருக்கிறார். அவருடைய சிலுவை மட்டும் அப்படியே நிலைத்திருக்கிறது. 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் "சத்தியத்தை அறிவோம்", பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

கிறிஸ்துவுக்காக உற்சாகத்தை பகிர்தல்

எங்கள் அயலகத்தரான மணியை நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவர் கையில் வைத்திருந்த பையிலிருந்து நன்கு தேய்ந்த வேதாகமத்தை வெளியே எடுத்தார். கண்கள் பிரகாசிக்க, அவர் வேதத்தைப் பற்றி விவாதிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நாங்களும் தலையசைக்க, அவர் குறிப்பெடுத்த சில பத்திகளை புரட்டினார். அவர் தனது குறிப்புகள் நிறைந்த ஒரு பதிவேட்டை எங்களிடம் காட்டினார், மேலும் கணினியை பயன்படுத்தி விளக்க இது தொடர்பான பிற தகவல்களை தான் தயாரித்திருப்பதாக கூறினார்.

அவர் ஒரு கடினமான குடும்ப சூழ்நிலையிலிருந்து எவ்வாறு வந்தார் என்பதை எங்களிடம் கூறினார். மேலும், தனியாக மோசமான நிலையில், இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் தனது நம்பிக்கையின் அடித்தளமாக ஏற்றுக்கொண்டார் (அப்போஸ்தலர் 4:12). வேதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற ஆவியானவர் உதவியதால் அவருடைய வாழ்க்கை மாறிவிட்டது. மணி தனது வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே தேவனிடம் அர்ப்பணித்திருந்தாலும், அவரது உற்சாகம் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருந்தது.

இவரது வைராக்கியம்; இயேசுவுடன் பல வருடங்கள் நடந்துகொண்டிருந்த ஒருவராக எனது ஆவிக்குரிய ஈடுபாட்டை கருத்தில் கொள்ள என்னை தூண்டியது. "அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்" (ரோமர் 12:11) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இயேசு எனக்காகச் செய்த அனைத்திற்கும் தொடர்ந்து நன்றி செலுத்துவதைப் பிரதிபலிக்கும் மனப்பான்மையை என்னில் வளர்க்க வேதத்தை நான் அனுமதிக்காத வரை, அது ஒரு கடினமான கட்டளையாக தோன்றுகிறது.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் உணர்வுபூர்வமான ஏற்றத் தாழ்வுகளைப் போலல்லாமல், கிறிஸ்துவுக்கான வைராக்கியம் அவருடன் எப்போதும் பெருகிக்கொண்டேயிருக்கும் உறவிலிருந்தே வருகிறது. அவரைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு விலைமதிப்பற்றவராக அவர் மாறுகிறார், மேலும் அவருடைய நற்குணம் நம் ஆத்துமாவை நிரப்பி இவ்வுலகில் வழிந்தோடுகிறது.

நட்சத்திர வீரரின் தாழ்மை

ஒரு போட்டிக்குப் பின், ஒரு கல்லூரி கூடைப்பந்து நட்சத்திர வீரர், காகிதம் மற்றும் உணவுக் குப்பைகளை அகற்றிய துப்புரவாளர்களுக்கு உதவினார். இதை ரசிகர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதை, எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர். ஒருவர் கூறுகையில், [அந்த வீரன்] "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் மிகுந்த தாழ்மையான மனிதர்களில் ஒருவர்" என்றார். எந்த ஒரு கூடைப்பந்து வீரரும் தன் அணியின் வெற்றியை சகவீரர்களுடன் இணைந்து கொண்டாடுவது சகஜம். அதற்கு மாறாக, அவர் இப்படிப்பட்ட கைமாறு கிடைக்காத சேவைக்கு முன்வந்தார்.

தாழ்மையின் விசேஷித்த குணம் இயேசுவில் காணப்பட்டது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். (பிலிப்பியர் 2:7). இயேசு அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் மனமுவந்து இதைச் செய்தார். பூமியில் அவருடைய ஊழியத்தில் போதிப்பது, குணப்படுத்துவது, அனைவரையும் நேசித்து அவர்களை இரட்சிக்க மரித்து உயிரோடு எழுவது ஆகியவை அடங்கும்.

நம்மை மிகவும் அற்பமான வேலையை செய்யும்படி உந்தலாம், இருப்பினும் இந்த தாழ்மை பிறருக்கான நமது அணுகுமுறையில் கலந்து வெளிப்படுமானால், அது இன்னும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கும். மெய்யான தாழ்மை என்பது நம் உள்ளார்ந்த சுபாவமாகும். இது நமது செயல்களை மட்டுமல்லாமல், நமது முக்கியத்துவங்களையும் மாற்றும் "ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண” (வ.3) தூண்டுகிறது.

எழுத்தாளரும், பிரசங்கியாருமான ஆண்ட்ரூ முரே, "தாழ்மை என்பது பரிசுத்தத்தின் மலர்ச்சியும் அழகும்" என்று கூறினார் அவருடைய ஆவியின் வல்லமையால், கிறிஸ்துவின் சிந்தையைப் பிரதிபலித்திட, நம் வாழ்வும் இவ்வழகைப் பிரதிபலிக்கட்டும். (வ.2:5).

ஒரு மெல்லிய சத்தம்

நியூயார்க் நகரின் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் உள்ள கிசுகிசுக்கும் சுவர், அப்பகுதியின் ஆரவாரத்திலிருந்து ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த தனித்துவமான இடம் முப்பது அடி தூரத்தில் இருந்து மக்கள் அமைதியான செய்திகளை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. கிரானைட் வளைவின் அடிவாரத்தில் ஒருவர் நின்று சுவரில் மென்மையாகப் பேசும்போது, ஒலி அலைகள் வளைந்த கல்லின் மேல் ஏறி, மறுபுறம் கேட்பவருக்குப் பயணிக்கின்றன.

யோபு கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்த சோகத்தால் நிரம்பியபோது, தன்னை சுற்றியிருக்கும் ஆரவாரத்தின் மத்தியில் ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்க நேரிட்டது (யோபு 1:13-19; 2:7). அவரது நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசினர். அவரது சொந்த எண்ணங்கள் முடிவில்லாமல் பொங்கின. மேலும் அவரது இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரச்சனை ஆக்கிரமித்தது. ஆனாலும், இயற்கையின் மகத்துவம் தேவனுடைய தெய்வீக சக்தியைப் பற்றி அவரிடம் மென்மையாகப் பேசியது.

வானத்தின் மகிமை, விண்வெளியில் நிறுத்தப்பட்ட பூமியின் மர்மம் மற்றும் அடிவானத்தின் உறுதிப்பாடு ஆகியவை, உலகம் தேவனுடைய உள்ளங்கையில் இருப்பதை யோபுக்கு நினைவூட்டியது (26:7-11). கொந்தளிக்கும் கடலும், சலசலக்கும் சூழ்நிலையும் கூட, “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்” (வச. 14) என்று சொல்லத் தூண்டியது. 

உலகின் அதிசயங்கள் தேவனுடைய மகத்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றால், அவருடைய சக்தி அதைப் புரிந்துகொள்ளும் திறனை மீறுகிறது என்பது தெளிவாகிறது. உடைந்த காலங்களில், இது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. துன்பத்தின் நேரத்தில் யோபுவுக்கு தேவன் செய்த நன்மைகள் உட்பட அவரால் எதையும் செய்ய முடியும். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.