அன்பினைப்பெற வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை
சிலவேளைகளில் என்னுடைய நாய், என்னுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, எனக்குச் சொந்தமான எதையாகிலும், தன்னுடைய வாயில் கவ்விக்கொண்டு, எனக்கு முன்பாக நடந்துவரும். ஒரு நாள், நான் என்னுடைய அறையில் எழுதிக் கொண்டிருந்த போது, எனக்குப் பின் புறமாக வந்த மாக்ஸ் என்ற என்னுடைய நாய், என்னுடைய பணப்பையை கவ்விக் கொண்டு வெளியேறியது. ஆனால் நான் அந்தக் காரியத்தை கவனிக்கவில்லை என்று மாக்ஸ் தெரிந்து கொண்டபோது, அது, பணப்பையைக் கவ்வியபடியே திரும்பி வந்து தன் மூக்கினால் என்னைத்தொட்டது, உற்சாகத்தில் அதன் கண்கள் உருண்டன, வாலை ஆட்டியது, அதனோடு விளையாட வரும்படி என்னைக் கடிந்து கொண்டது.
மாக்ஸின் இந்தச் செயல் எனக்கு சிரிப்பை உண்டாக்கினாலும், எல்லா நேரங்களிலும், முக்கியமாக நான் மற்றவர்களோடு நேரம் செலவிடும் போது, அது அவ்வாறு இருப்பதில்லை. நான் அதிக நேரத்தை என்னுடைய குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவிட வேண்டுமென விரும்புவதாலும், மற்றும் சிலவேலைகள் என்னுடைய மனதில் இடம் பிடித்திருப்பதாலும், எப்படியாகிலும் அந்த நாள் முடிவதற்குள் என்னுடைய அன்பு நாயிடம் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு எனக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.
நம்முடைய பரலோகத் தந்தை, சர்வ வல்லவர், நம் ஒவ்வொருவரையும் மிக நெருக்கமாகச் சந்தித்து வருகின்றார். நம்முடைய நுரையீரலுக்குள் செல்லும் ஒவ்வொரு மூச்சையும், நம்முடைய வாழ் நாள் முடியும் மட்டும் தாங்கிப் பிடிக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது, எத்தனை ஆறுதலாகவுள்ளது. அவர் தம் பிள்ளைகளுக்கு, “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசா.46:4) என்று வாக்களிக்கின்றார்.
தேவன் நமக்கென்று எப்பொழுதும் நேரம் செலவிடுகின்றார். நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் புரி ந்துகொள்கின்றார். அது எத்தனை கடினமானதாயினும், சிக்கலானதாயினும், நாம் ஜெபத்தில் கூப்பிடும் போது அவர் அங்கேயிருக்கிறார். நமது இரட்சகரின் எல்லையில்லா அன்பினைப்பெற நாம் வரிசையில் காத்திருக்க அவசியமில்லை.
ஜெபிக்கும்படி தூண்டப்படல்
“அநேக ஆண்டுகளுக்கு முன்பு, உனக்காக ஜெபிக்கும் படி, நான் அடிக்கடி தூண்டப்பட்டேன். ஏன் என்று தெரியாமல் ஆச்சரியப்பட்டேன்.” இந்தச் செய்தியின் வார்த்தைகள், என்னுடைய ஒரு பழைய சிநேகிதியிடமிருந்து வ ந்தது. அத்தோடு, அவளுடைய வேதாகமத்தில் வைத்துள்ள ஒருஜெபக்குறிப்பின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தாள். “ஜேம்ஸ்ஸுக்காக ஜெபி, அவனுடைய மனது, எண்ணங்கள், வார்த்தைகளுக்காக ஜெபி.” என்றிருந்தது. என்னுடைய பெயருக்கு அருகில், அவள் மூன்று தனித் தனியான வருடங்களைக் குறிப்பிட்டிருந்தாள்.
நான் அந்த வருடங்களைப் பார்த்த போது, திகைத்துப் போனேன். நான் மீண்டும் அவளிடம், எந்த மாதத்திலிருந்து ஜெபிக்கத் துவங்கினாள் எனக் கேட்டேன். அவள், “ஏறத்தாள ஜுலை மாதத்திலிருந்து,” என பதிலளித்தாள்.
அந்த மாதத்திலிருந்து தான், நான் உயர் கல்விக்காக, வெளிநாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அங்கு, நான் அறிமுகமில்லாத கலாச்சாரத்தையும், மொழியையும் சந்திக்க வேண்டும். எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, என்னுடைய விசுவாசத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். நான் அந்த ஜெபக் குறிப்பை பார்த்தபோது, விலையேறப்பெற்ற ஈவாகிய ஜெபத்தைப் பெற்றுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.
என்னுடைய சிநேகிதியின் கரிசனை, மற்றும் ஒருவர் ஜெபிக்கத் “தூண்டுவதை,” எனக்கு நினைப்பூட்டியது. இளம் ஊழியரும் நண்பருமான தீமோத்தேயுவுக்கு பவுல் ஆலோசனை கூறும் போது,” நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனின், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும்,வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.”(1 தீமோ 2:1).இதில் “பிரதானமாய்” என்ற சொல், மிக முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறியும் அறிவை அடையவும், தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்.”(வ.4) என பவுல் இயேசுவைக் குறித்து விளக்குவதால், நம்முடைய ஜெபங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனத் தெரிகின்றது.
விசுவாசமுள்ள ஜெபத்தின் மூலம், தேவன் எண்ணற்ற வழிகளில் பிறரைச் சந்தித்து, உற்சாகப்படுத்தி, அவர்களைத் தம்மண்டை இழுத்துக்கொள்கின்றார். சிலரைக் குறித்து நினைவு வரும் போது, அவர்கள் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம், ஆனால் தேவன் அறிவார். நாம் அவர்களுக்காக ஜெபிக்கும் போது, தேவன் அந்த நபருக்கு உதவி செய்வார்!
கொடுப்பதில் வளருதல்
“நான் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்” என்று என்னுடைய இரண்டு வயது பேரன், மகிழ்ச்சியில் கத்திக் கொண்டே, என்னுடைய கரங்களில் ஒரு பெட்டியைத் திணித்தான். “அவனே அதைப் தெரிந்தெடுத்தான்” என்று என்னுடைய மனைவி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அந்தப் பெட்டியைப் பிரித்த போது, அங்கு அவனுக்குப் பிடித்தமான கார்டூன் அங்கத்தினரின் உருவம், கிறிஸ்மஸ் பரிசாக வைக்கப்பட்டிருந்தது. “நான் பார்க்கலாமா?” என்று ஆவலோடு கேட்டான். பின்னர் அவன் அந்த, “என்னுடைய” பரிசை வைத்து அந்த நாள் முழுவதும் விளையாடினான், நான் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டேன்.
கடந்த காலங்களில், நான் விரும்பியவர்களுக்குக் கொடுத்த பரிசுகளை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, என்னுடைய மூத்த சகோதரனுக்கு இசை ஆல்பம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன், அதைக் கேட்பது எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னும் தாராளமாகக் கொடுக்கும்படி, தேவன் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்று நினைத்துப் பார்த்தேன்.
கொடுப்பது என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு. “மற்றெல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறது போல, இந்த தர்மக் காரியத்திலும் பெருகவேண்டும்” என்று பவுல் எழுதுகின்றார்
(2 கொரி. 8:7). நம்மிடம் இருப்பவையெல்லாம் தேவன் தந்தவை என்று எண்ணி, நாம் கொடுக்கும் போது கிருபை பெருகும். ஏனெனில், “வாங்குகிறதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே பாக்கியம்” என்று இயேசு கூறியிருக்கிறாரே. (அப். 20:35).
தேவன் மிகச் சிறந்த தன்னலமற்ற ஈவை, நமக்காகத் தந்துள்ளார். தன்னுடைய ஒரேகுமாரனை, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும்படி ஒப்புக்கொடுத்து, பின்னர் அவரை உயிரோடு எழுப்பினார். இந்த விலையேறப்பெற்ற ஈவைப் பெற்றுக்கொண்டவர்கள், அளவற்ற செல்வத்தைப் பெற்றுக் கொண்டவர்கள். நம்முடைய இருதயம் தேவனுக்கு நேராகத் திருப்பப்படும் போது, நம்முடைய கரங்கள் அன்போடு மற்றவர்களுக்குக் கொடுக்கும்.
எச்சரிப்பு வட்டங்கள்
ஆப்ரிக்கா தேசத்தின் வெளிமான்கள் திறந்த புல் வெளிகளில் ஓய்வு எடுக்கும் போது, தங்கள் உள்ளுணர்வு தூண்டுதலின் படி “எச்சரிப்பு வட்டங்களை” ஏற்படுத்திக் கொள்கின்றன. அவை, கூட்டமாகச் சேர்ந்து, ஒவ்வொன்றும் வெளிநோக்கிய திசையில், சற்றே மாறுபட்ட கோணத்தில் படுத்திருக்கும். இதன் மூலம் அவைகளால் 360 டிகிரி கோணத்தில் சுற்றுப்புறம் முழுவதையும் கண்காணித்து, வருகின்ற ஆபத்துகளைக் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்க முடியும்.
தங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ள நினைக்காமல், தங்களுடைய குழுவிலுள்ள அனைவரின் மீதும் கரிசனை கொள்கின்றன. இயேசுவைப் பின் பற்றுபவர்களுக்கு தேவன் தரும் ஆலோசனையும் இதுவே. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடி வருதலை… விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்” (எபி. 10:24-25).
எபிரெயர் நிருபத்தை எழுதியவர், கிறிஸ்தவ வாழ்வு தனிமையானதல்ல என்று விளக்குகிறார். இணைந்து வாழும் போது நாம் வலிமை பெறுகிறோம், ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல முடிகிறது (வச. 25). “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்ய திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2 கொரி. 1:4) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள், ஏனெனில், “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்” (1பேது. 5:8).
நாம் ஒருவரையொருவர் தாங்குவதன் நோக்கம் தப்பிப் பிழைப்பதற்கு மட்டுமல்ல. நம்மை இயேசுவைப் போல மற்றுவதற்கும், இவ்வுலகில், அன்பினால் தேவனுக்குப் பணிசெய்யவும், அவருடைய ராஜியத்தின் வருகையை நம்பிக்கையோடு, விசுவாசிகளோடு இணைந்து எதிர்பார்க்கவுமே. ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவது, நம் அனைவருக்குமே தேவை. நாம் அன்பினால் மற்றவர்களுக்கு உதவ, தேவன் நமக்கு உதவுவார். நாம் இணைந்து தேவனை நெருங்கி வாழுவோம்.
மிகவும் பாதுகாப்பான இடம்
வடக்கு கரோலினாவில் வில்மிங்க்டன் என்ற இடத்தை பிளாரன்ஸ் என்ற புயல், பேரழிவை ஏற்படுத்தும் வலிமையோடு தாக்கிய போது, என்னுடைய மகள் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். புயலின் வலிமை தணிந்து விடும் என்று எண்ணி, கடைசி நேரம் வரை, அவள் தாமதித்துக் கொண்டேயிருந்தாள். இப்பொழுது வேக வேகமாய் சில முக்கிய பொருட்களை எடுக்க எண்ணி, எடுக்கலாம் எனத் திணறிக் கொண்டு, “வீட்டை விட்டு வெளியேறுவது இத்தனை கடினமானது என்று நான் நினைக்கவில்லை, நான் மீண்டும் இங்கு வரும் போது ஏதாகிலும் மீதி இருக்குமா என்றும் தெரியவில்லை” என்றாள்.
நம் வாழ்விலும் அநேக வழிகளில் புயல் நம்மைத் தாக்குகின்றது சூறாவளி, சுழல் காற்று, நிலநடுக்கம், வெள்ளம் என எதிர் பாராத பிரச்சனைகள் நம்முடைய திருமண வாழ்வை, குழந்தைகளை, உடல் நலத்தை, அல்லது பொருளாதாரத்தைத் தாக்கலாம். நாம் மிக விலையேறப் பெற்றதாகக் கருதுபவை, ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகலாம்.
இத்தனை புயலின் மத்தியிலும், வேதாகமம் நமக்கொரு பாதுகாப்பான இடத்தைக் காட்டுகின்றது.”தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துனையுமானவர். ஆகையால் பூமி நிலை மாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்,… நாம் பயப்படோம்” (சங். 46:1-3).
இந்த சங்கீதத்தை எழுதியவரின் முன்னோர்கள், ஆரம்பத்தில் தேவனுக்கு உண்மையாய் பணிசெய்தனர், பின்னர், கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணினதால் பூமி அதிர்ச்சியில் அழிந்து போயினர் (எண். 26:9-11). இதன் விளைவாக, அவர்கள் தாழ்மையையும், தேவனுடைய மகத்துவத்தையும், அவருடைய இரக்கத்தையும், நம்மை மீட்கும் அவருடைய அன்பையும் பற்றி புரிந்து கொண்டனர்.
துன்பங்கள் வரும், ஆனால் நம் தேவன் அவை எல்லாவற்றையும் விட நீடித்திருப்பவர். அவரிடம் ஓடி, அடைக்கலம் புகுவோர் அவரை யாராலும் அசைக்க முடியாது என்பதைக் கண்டு கொள்வர். என்றும் நிலைத்திருக்கும் அவருடைய அன்பின் கரத்தினுள்ளே சமாதானமாக தங்கும் இடத்தை நாம் கண்டு கொள்வோம்.
காத்திருக்க உகந்தது
டோக்கியோ பட்டணத்தில், ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வெளியே, ஹச்சிகோ என்றழைக்கப்பட்ட ,அகிட்டா வகை நாயின் சிலை, நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹச்சிகோ, தனது எஜமானனிடம் காட்டிய மிகச் சிறந்த விசுவாசத்தை அது நினைவு படுத்துகின்றது. அதன் எஜமானன் ஒரு பல்கலைகழகப் பேராசிரியர். அவர் அந்த ரயில் நிலையத்தின் வழியாக அனுதினமும் பிரயாணம் பண்ணினார். ஒவ்வொரு நாள் காலையும் அந்த நாய் அவரோடு ரயில் நிலையத்திற்கு வரும், மீண்டும் மாலை அவரைச் சந்திக்க, அந்த ரயில் வரும் நேரத்திற்கு வந்துவிடும்.
ஒரு நாள் அந்த பேராசிரியர், அந்த ரயில் நிலையத்திற்கு திரும்பி வரவில்லை. அவர் தன் பணியிடத்திலேயே மரித்துப்போனார். அதிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தன் எஞ்சிய வாழ்நாள் முழுதும் ஹச்சிக்கோ ஒவ்வொரு நாள் மாலையும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வந்துவிடும். ஒவ்வொரு நாளும், எந்தக் காலநிலை இருந்தாலும், தன்னுடைய எஜமானன் திரும்பி வருவதை அந்த நாய் ஆர்வத்தோடு எதிர்பார்த்தது.
தெசலோனிக்கேயரின் விசுவாசத்தை பவுலும் பாராட்டுகின்றார். அவர்களின் “விசுவாசத்தின் கிரியையையும்”, “அன்பின் பிரயாசத்தையும்”, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையின் பொறுமையையும் (1 தெச. 1:2) பாராட்டுகின்றார். மிகுந்த எதிர்ப்புகளின் மத்தியில், அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறையை விட்டு விட்டனர், “இனி வரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” (வச. 9-10) என்று அவர்களைப்பற்றி கூறுகின்றார்
இந்த ஆதி விசுவாசிகள், இரட்சகர் மீது வைத்திருக்கும் விசுவாசமும், தேவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பும், அவர்களை உபத்திரவங்களையும் தாண்டி தங்களுடைய விசுவாசத்தை ஊக்கத்தோடு பகிர்ந்துகொள்ளச் செய்தது. இயேசுவுக்காக வாழ்வதைவிட மேலானது ஒன்றுமில்லை என்பதில் உறுதியாயிருந்தனர். அவர்களை பெலப்படுத்திய அதே பரிசுத்த ஆவியானவர் (வச. 6) நம்மையும் பெலப்படுத்துகின்றார். இயேசுவுக்காக ஊழியம் செய்துகொண்டே, அவருடைய வருகையையும் எதிர்பார்த்திருப்பது எத்தனை நன்மையானது.
அன்பின் நீண்ட எல்லை
மேரி லீ என்பது 16 அடி நீளமும், 3500 பவுண்டு எடையும் கொண்ட பெரிய வெள்ளை சுறாமீன். கடல் ஆய்வாளர்களால் பரப்பி பொருத்தப்பட்டு 2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் கிழக்குச் சமுத்திரத்தில் விடப்பட்டது. அதன் மேல்பக்கத் துடுப்புடன் இணைக்கப்பட்ட பரப்பி, செயற்கைகோள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக மேரி லீ மேற்கொண்ட பயணங்கள் ஆராய்ச்சியாளர்களாலும் , கடலில் பயணிப்பவர்களாலும் நேரடியாகப் பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 40,000 மைல் தொலைவு வரையும் அதனைப் பின் தொடர்ந்தனர். ஆனால், ஒருநாள் அதனோடிருந்த தொடர்பு நின்று விட்டது. ஒருவேளை, அதன் பரப்பியிலுள்ள பாட்டரி செயலிழந்திருக்கலாம்.
மனித அறிவும் ,தொழில் நுட்பமும் இவ்வளவு தான் செயல்பட முடிந்தது. மேரி லீயைப் பின் தொடர்ந்தவர்களெல்லாரும் அதன் பாதையைக் கண்டுபிடிக்க முடியாமல் விட்டு விட்டனர். ஆனால் நீயும் நானும் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தேவனுடைய பார்வையிலிருந்து தவிர்க்க முடியாது. தாவீது, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்’’ (சங். 139:7-8) என்று ஜெபிக்கிறார். “இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது” என வியந்தார்.
தேவன் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.ஏனெனில் அவர் நம்மை நேசிக்கின்றார். அவர் நம் வாழ்வை கவனிப்பதோடு மட்டுமல்ல, பாதுகாத்தும் வருகின்றார். நம் வாழ்வினுள் வந்து அதைப் புதிதாக்குகின்றார். இயேசுவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதலின் மூலம் நம்மை தேவனண்டை இழுத்துக் கொள்கின்றார். நாமும் அவரை அறிந்து கொண்டு, நித்திய காலமாக அவரையே நேசிப்போம். தேவனுடைய அன்பின் எல்லையை விட்டு நம்மால் கடந்து செல்ல முடியாது.
வளர வளர தெரிந்து கொள்ளல்
“நீ வேறு இடத்திற்கு பரிமாற்று மாணவனாகப் போகிறாய்”. நான் பதினேழு வயதாயிருந்த போது, ஜெர்மனி தேசத்திற்குச் சென்று படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன் எனக் கேட்ட போது புல்லரித்துப் போனேன். நான் அங்கு செல்வதற்கு இன்னமும் மூன்றே மாதங்களிருந்தன. நான் இன்னமும் ஜெர்மானிய மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை. அந்நாளிலிருந்து நான் ஜெர்மானிய மொழியைக் கற்க ஆரம்பித்தேன். அதிக மணி நேரங்களைப் படிக்க செலவழித்தேன். மனப் பாடம் செய்தேன், சில வார்த்தைகளை என் உள்ளங்கைகளில் எழுதி வைத்து மனனம் செய்தேன்.
பல மாதங்களுக்குப் பின், நான் ஜெர்மனி தேசத்தில் என்னுடைய வகுப்பறையில் அமர்ந்திருந்தேன். நான் மிகவும் சோர்வுற்றிருந்தேன், ஏனெனில் நான் இன்னமும் அம்மொழியை நன்கு தெரிந்து கொள்ளவில்லை. அந்நாளில் ஓர் ஆசிரியர், எனக்கு ஓர் ஆலோசனையைக் கொடுத்தார். “ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதென்பது மணல் குன்றின் மேலேறுவதற்குச் சமம். சில வேளைகளில் நீ கொஞ்சமும் ஏறாதது போலத் தோன்றும். ஆனால் நீ முயற்சி செய்து கொண்டேயிரு. உன்னால் உச்சியை அடைய முடியும்” என்றார்.
நான் இந்த ஆலோசனையின் உட்கருத்தை சிந்தித்துப் பார்ப்பேன். இயேசுவின் சீடனாக வளர்வதென்பது என்ன என்று சிந்திக்கும் போது, அப்போஸ்தலனாகிய பவுல், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாக இருக்கக் கற்றுக் கொண்டேன்” என்கின்றார். பவுலுக்கும் இந்தச் சமாதானம் ஒரே நாளில் கிடைத்து விடவில்லை. அவர் இந்த நிலைக்கு வளர்ந்து வந்திருக்கின்றார். அவர் தன்னுடைய வளர்ச்சியின் இரகசியத்தைப் பகிர்ந்து கொள்கின்றார். “என்னைப் பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.” என்கின்றார் (பிலி. 4:11-13).
வாழ்வில் அநேக சவால்களுள்ளன. “நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33) என்பவரிடம் நாம் திரும்பும் போது, அவர் நம்மையும் வெற்றிப் பாதையில் வழி நடத்திச் செல்ல உண்மையுள்ளவராயிருக்கிறாரெனக் கண்டு கொள்வோம். நாம் அவரோடு கூட நடப்போமாகில் அவர் நமக்குச் சமாதானத்தைத் தந்து அவர் மீது நம்பிக்கையோடிருக்கச் செய்கின்றார். நம் பயணத்தைத் தொடர தேவையான பெலனையும் தருகின்றார்.
மாறாதவர்
எங்களோடு கல்லூரியில் பயின்றவர்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்திக்கும்படி என் மனைவி கேரியும் நானும் சமீபத்தில் கலிபோர்னியாவிலுள்ள சான்டா பார்பரா என்ற இடத்திற்குச் சென்றிருந்தோம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த பட்டணத்தில் தான் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து நேசிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய வாலிபவயதில், எஙகளுடைய சிறந்த நேரங்களைச் செலவிட்ட சில இடங்களைப் பார்க்கும்படியாகத் திட்டமிட்டிருந்தோம். எங்களுக்கு மிகவும் விருப்பமானமெக்ஸிக்கன் சிற்றுண்டிச்சாலை இருந்த இடத்தை அடைந்தபோது, அவ்விடத்தில் கட்டடப்பொருட்கள் விற்கும் கடையிருப்பதைக் கண்டோம். அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஓர் இரும்புதகட்டில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம், அங்கிருந்த சிற்றுண்டிச்சாலை நாற்பது ஆண்டுகள் அந்தச் சமுதாயத்தினருக்குச் சேவை செய்ததை நினைவுபடுத்தியது.
ஒரு காலத்தில் வண்ண மேசைகளாலும் நிழற்குடைகளாலும் நிரம்பியிருந்த நடைபாதை இப்பொழுது வெறுமையான பாதையாயிருந்தது. நம்மைசுற்றியுள்ள அனைத்தும் முற்றிலும் மாறிவிட்டன. அத்தகைய மாற்றங்களின் மத்தியில் தேவனுடைய உண்மைமட்டும் மாறவில்லை. தாவீதும் இதனையே "மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது (சங். 103:15-17).தாவீது இச்சங்கீதத்தை, "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி" என்ற வார்த்தைகளோடு முடிக்கின்றார்.
பண்டை கால தத்துவஞானி ஹெராகிளிடஸ் என்பவர் "நீ ஒரு முறை கால் வைத்த அதே ஆற்றில் இன்னொரு முறை கால் வைக்கமுடியாது" (ஓடும் ஆற்றில் தண்ணீர் ஓடி மாறுவதால் அதே நீரில்)என்கிறார். வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், தேவன் என்றும் மாறாதவராயும் ,தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற என்றும் நம்பிக்கைக்குரியவராயிருக்குக்கிறார். தலைமுறை தலைமுறையாக அவருடைய உண்மையும் அன்பும் மாறாமல் நிலைத்திருக்கின்றது.