எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Francis Neil G. Jalando-onகட்டுரைகள்

என்னை அனுப்பும்

1890ன் பின்பகுதியில் ஸ்வீடிஷ் மிஷனரி எரிக் லண்ட், ஊழியத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல தேவனால் அழைக்கப்பட்டதை உணர்ந்தபோது, உடனடியாகக் கீழ்படிந்தார். அங்கே அவர் குறைந்த அளவிலே வெற்றி கண்ட போதும், தேவனுடைய அழைப்பில் திடநம்பிக்கையோடு தன்னுடைய மிஷினரி வேலையைத் தொடர்ந்தார். ஒரு நாள் அவர் பிரௌலியோ மணிக்கன் என்ற பிலிப்பைன் நாட்டு மனிதனைக் கண்டு அவரோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.

லண்ட் மற்றும் மனிக்கன், இருவரும் சேர்ந்து உள்ளுர் பிலிப்பைன்ஸ் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து, பிறகு முதல் பாப்திஸ்து மிஷன் தளத்தைப் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பித்தனர். தீர்க்கதரிசியான ஏசாயாவைப் போல, லண்டும் தேவனுடைய அழைப்பிற்கு உடனடியாகக் கீழ்படிந்ததினால், அநேகர் இயேசுவிடம் திரும்பினர். 

ஏசாயா 6:8ல், நிகழ்காலத்திற்குரிய நியாயத்தீர்ப்பையும், வருங்காலத்திற்குரிய நம்பிக்கையையும் இஸ்ரவேலருக்கு அறிவிக்க விருப்பமுள்ள ஒருவரை தேவன் கேட்டபொழுது, “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று ஏசாயா தைரியமாக முன்வந்தார். அவர், தான் “அசுத்த உதடுகளுள்ள மனிதன்”(வச. 5) என்று அவர் முன்னதாக ஒப்புக்கொண்டதால், அவர் தன்னைத் தகுதியுள்ளவராக நினைக்கவில்லை. ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்தத்தைக் கண்டு, தன்னுடைய சொந்தப் பாவத்தை உணர்ந்து, தேவனுடைய சுத்திகரிப்பைப் பெற்றுக்கொண்டதாலும் (வச. 1-7), அவர் தேவனுடைய அழைப்பிற்கு மனதாரக் கீழ்படிந்தார். 

அவருக்காக ஏதாவது செய்ய தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலமாக தேவன் உங்களுக்குச் செய்த எல்லாவற்றையும் நினைவுக் கூறுங்கள். நமக்கு உதவி செய்யவும், நம்மை வழிநடத்தவும் தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்திருக்கிறார் (யோவான் 14:26; 15:26-27). பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய அழைப்பிற்கு கீழ்படிய நம்மை ஆயத்தப்படுத்துவார். ஏசாயாவைப் போல நாமும் “என்னை அனுப்பும்” என்று கூறுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவை உடுத்திக்கொள்ளுதல்

முதன்முறையாக எனது புதிய கண்ணாடியை அணிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு நான் அவற்றை தூக்கி எறிய விரும்பினேன். அந்த புதிய கண்ணாடியை அணிந்தபோது என் கண்களில் வலி ஏற்பட்டது மற்றும் தலை சுற்றியது. எனக்கு பழக்கமில்லாத அந்த புதிய சட்டங்களால்(பிரேம்) எனது காதுகள் புண்பட்டன. அடுத்த நாள் நான் அதை அணியவேண்டும் என்று நினைத்தபோது கூச்சலிட்டேன். அந்த கண்ணாடியை என்னுடைய சரீரம் ஏற்றுக்கொள்வதற்காக, அதை நான் மீண்டும் மீண்டும் அணியவேண்டியிருந்தது. அதற்கு பல வாரங்கள் எடுத்தது. ஆனால் அதன் பிறகு, நான் அந்த கண்ணாடியை அணிந்திருப்பதை மறந்துவிட்டேன்.

புதிதாக ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு சில மாற்றங்கள் அவசியப்படுகிறது. ஆனால் காலப்போக்கில், அதோடு நாம் பழகிவிடுகிறோம். அதுவும் நமக்கு பொருத்தமாய் மாறிவிடுகிறது. அவற்றிலிருந்து சில புதிய அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது. ரோமர் 13இல், அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் “ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்” (வச. 12) என்றும் சரியான ஜீவியம் வாழும்படிக்கும் அறிவுறுத்துகிறார். அவர்கள் இயேசுவை நம்பியிருந்தவர்கள், ஆனால் அவர்கள் தற்போது நித்திரைகொள்வதில் மனநிறைவடைந்திருக்கிறார்கள்; அவர்கள் தூக்கத்தைவிட்டு எழுந்திருக்கவும், கண்ணியமாக நடந்துகொள்ளவும், எல்லா பாவங்களையும் விட்டுவிடவும் அவர்களை அறிவுறுத்துகிறார் (வச. 11-12). பவுல் அவர்களை இயேசுவை அணிந்துகொண்டு, அவர்களுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் அவரைப் போலவே இருக்குமாறு ஊக்கப்படுத்துகிறார் (வச. 14).

இயேசுவின் அன்பான, கனிவான, இரக்கமுள்ள, கருணை நிறைந்த, உண்மையுள்ள வழிகளை நாம் ஒரே இரவில் பிரதிபலிக்கத் தொடங்குவதில்லை. அவை சங்கடமாகவோ அல்லது கடினமாகவோ தெரிந்தாலும், ஒவ்வொரு நாளும் “ஒளியின் ஆயுதங்களை” தரிந்துகொள்ள தீர்மானிப்பது என்பது ஓர் நீண்ட செயல்முறையாகும். காலப்போக்கில், அவர் நம்மை சிறப்பாக மாற்றுகிறார். 

 

 

பட்டணத்தில் மகிழ்ச்சி

2024 உலக டி20 கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகளில் ஒன்று என்று பலர் அழைக்கும் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டாவது டி 20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, நாடே கொண்டாட்டத்தில் வெடித்தது. மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். பல நகரங்கள் மூவர்ணக் கொடிகளால் நிறைந்த காட்சியை ஒரு விண்ணிலிருந்து கானும்போது அது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்து வதாயிருந்தது.. மகிழ்ச்சியின் வெடிப்பில் நகரமே அதிர்ந்தது போல் இருந்தது

மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).

நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார். 

ஐந்து நற்காரியங்கள்

தங்களிடம் இருப்பவைகளுக்காக நன்றிசொல்லும் குணம்கொண்டவர்கள் நல்ல தூக்கம், குறைவான நோயின் அறிகுறிகள், மற்றும் அதிக மகிழ்ச்சியை சுதந்தரிக்கின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஈர்க்கக்கூடியவைகள். உளவியலாளர்கள் நமது நல்வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு வாரமும் நாம் நன்றி செலுத்தவேண்டிய ஐந்து காரியங்களை ஒரு “நன்றி செலுத்தும் குறிப்பில்” எழுதும்படிக்கு பரிந்துரைக்கின்றனர்.

வேதம் நீண்ட காலமாக நன்றியுணர்வு நடைமுறையை ஊக்குவித்துள்ளது. உணவு மற்றும் திருமணம் முதல் (1 தீமோத்தேயு 4:3-5) படைப்பின் அழகுகள் (சங்கீதம் 104) வரை, இதுபோன்ற விஷயங்களை வரமாகப் பார்க்கவும், அவற்றை நமக்கு அருளும் தேவனுக்கு நன்றி செலுத்தவும் வேதம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சங்கீதம் 107, நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடிய ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறது: வனாந்திரத்திலிருந்து அவர்களை மீட்டதற்காய் (வச. 4-9), சிறையிருப்பிலிருந்து விடுவித்ததற்காய் (வச. 10-16), நோயிலிருந்து குணப்படுத்தியதற்காய் (வச. 18-22), செங்கடலிலிருந்து பாதுகாத்ததற்காய் (வச. 23-32), மற்றும் வறண்ட நிலத்தில் அவர்களை செழிப்பாய் வாழச்செய்ததற்காய் (வச. 33-42). “கர்த்தரைத் துதியுங்கள்” என்று சங்கீதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இவை அனைத்தும் தேவனுடைய “மாறாத அன்பின்” அடையாளங்கள் (வச. 8, 15, 21, 31).

உங்கள் கைகளில் சிறிய நோட்டு கைவசம் இருக்கிறதா? இப்போது நீங்கள் நன்றி செலுத்த விரும்பும் ஐந்து நல்ல விஷயங்களை ஏன் எழுதக்கூடாது? அவை நீங்கள் இப்போது சாப்பிட்ட உணவாக இருக்கலாம், உங்கள் திருமணமாக இருக்கலாம் அல்லது இஸ்ரேலைப்போல் இன்றுவரை உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய மீட்பு கிரியைகளாய் இருக்கலாம். வெளியே பாடும் பறவைகளுக்கும், உங்கள் சமையலறையிலிருந்து வரும் வாசனைக்கும், உங்கள் நாற்காலியின் வசதிக்கும், அன்புக்குரியவர்களின் முணுமுணுப்புகளுக்கும் நன்றி சொல்லுங்கள். அவைகள் ஒவ்வொன்றும் நமக்கருளப்பட்ட வரங்கள்; தேவனுடைய மாறாத அன்பின் அடையாளங்கள்.