எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Francis Neil G. Jalando-onகட்டுரைகள்

என்னை அனுப்பும்

1890ன் பின்பகுதியில் ஸ்வீடிஷ் மிஷனரி எரிக் லண்ட், ஊழியத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல தேவனால் அழைக்கப்பட்டதை உணர்ந்தபோது, உடனடியாகக் கீழ்படிந்தார். அங்கே அவர் குறைந்த அளவிலே வெற்றி கண்ட போதும், தேவனுடைய அழைப்பில் திடநம்பிக்கையோடு தன்னுடைய மிஷினரி வேலையைத் தொடர்ந்தார். ஒரு நாள் அவர் பிரௌலியோ மணிக்கன் என்ற பிலிப்பைன் நாட்டு மனிதனைக் கண்டு அவரோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.

லண்ட் மற்றும் மனிக்கன், இருவரும் சேர்ந்து உள்ளுர் பிலிப்பைன்ஸ் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து, பிறகு முதல் பாப்திஸ்து மிஷன் தளத்தைப் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பித்தனர். தீர்க்கதரிசியான ஏசாயாவைப் போல, லண்டும் தேவனுடைய அழைப்பிற்கு உடனடியாகக் கீழ்படிந்ததினால், அநேகர் இயேசுவிடம் திரும்பினர். 

ஏசாயா 6:8ல், நிகழ்காலத்திற்குரிய நியாயத்தீர்ப்பையும், வருங்காலத்திற்குரிய நம்பிக்கையையும் இஸ்ரவேலருக்கு அறிவிக்க விருப்பமுள்ள ஒருவரை தேவன் கேட்டபொழுது, “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று ஏசாயா தைரியமாக முன்வந்தார். அவர், தான் “அசுத்த உதடுகளுள்ள மனிதன்”(வச. 5) என்று அவர் முன்னதாக ஒப்புக்கொண்டதால், அவர் தன்னைத் தகுதியுள்ளவராக நினைக்கவில்லை. ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்தத்தைக் கண்டு, தன்னுடைய சொந்தப் பாவத்தை உணர்ந்து, தேவனுடைய சுத்திகரிப்பைப் பெற்றுக்கொண்டதாலும் (வச. 1-7), அவர் தேவனுடைய அழைப்பிற்கு மனதாரக் கீழ்படிந்தார். 

அவருக்காக ஏதாவது செய்ய தேவன் உங்களை அழைக்கிறாரா? நீங்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதல் மூலமாக தேவன் உங்களுக்குச் செய்த எல்லாவற்றையும் நினைவுக் கூறுங்கள். நமக்கு உதவி செய்யவும், நம்மை வழிநடத்தவும் தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்திருக்கிறார் (யோவான் 14:26; 15:26-27). பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய அழைப்பிற்கு கீழ்படிய நம்மை ஆயத்தப்படுத்துவார். ஏசாயாவைப் போல நாமும் “என்னை அனுப்பும்” என்று கூறுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனுடைய நீதியும் கிருபையும்

பிரிட்டிஷ் ஓவியர் ஜான் மார்ட்டின் (1789-1854) நாகரிகங்களின் அழிவை சித்தரிக்கும் அபோகாலிப்டிக் நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றவர். இந்த அற்புதமான காட்சிகளில், மனிதர்கள் அழிவின் அளவைக் கண்டு வியப்படைகிறார்கள்; நெருங்கி வரும் அழிவுக்கு எதிராக பெலனற்றவர்களாக இருக்கிறார்கள். இவருடைய ஒரு ஓவியம், “நினிவேயின் வீழ்ச்சி,” இருண்ட உருளும் மேகங்களின் கீழ் பெருகிவரும் அலைகளின் அழிவிலிருந்து மக்கள் தப்பி ஓடுவதை சித்தரிக்கிறது.

மார்ட்டின் ஓவியம் வரைவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தீர்க்கதரிசியான நாகூம் நினவேக்கு விரோதமான நியாயத்தீர்ப்பை அறிவித்தார். தங்கள் சுய ஆதாயத்திற்காய் மற்றவர்களை ஒடுக்குகிறவர்களின் மீதான தேவ கோபத்தை அறிவிக்கும்பொருட்டு, மலைகள் நடுங்குவது, மலைகள் உருகுவது, பூமி நடுங்குவது போன்ற உருவகங்களை நாகூம் பயன்படுத்துகிறார் (நாகூம் 1:5). பாவத்திற்கான தேவனுடைய கோபாக்கினையில் கிருபை இடம்பெறாமல் இல்லை. தேவனுடைய வல்லமையைக் குறித்த மற்றவர்களுக்கு நினைவூட்டும் நாகூம், தேவனை “நீடிய சாந்தமுள்ளவர்” (வச. 3) என்றும் “தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்” (வச. 7) என்றும் சித்தரிக்கிறார். 

நியாயத்தீர்ப்பு செய்தியை வாசிப்பது கடினமாய் தோன்றலாம். ஆனால் தீமையை மேற்கொள்ளாத உலகம் பயங்கரமானதாக இருக்கும். நியாயத்தீர்ப்பு செய்தியோடு நாகூம் முடித்துவிடவில்லை. தேவன் ஒரு நல்ல மற்றும் நீதியான உலகத்தை விரும்புகிறார் என்பதை அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்: “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது” (வச. 15). அந்த நற்செய்தி இயேசுவாகும். அவர் பாவத்தின் விளைவுகளை சுமந்தார். அதனால் நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடிகிறது (ரோமர் 5:1, 6). 

 

ஞானமுள்ள மகிழ்ச்சியை கண்டறிதல்

தொற்றுநோய் ஜெயமெடுத்துக்கொண்டிருந்தது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற உறுதிபூண்டுள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர அறை மருத்துவருக்கு அப்படித்தான் தோன்றியது. அவர் எப்படி சிறந்ததை கொடுக்க முடியும்? அந்த சிரமத்தின் மத்தியில், பனிக்குமிழிகள் புகைப்படத்தை பெரிதாக்கி தன் மகிழ்ச்சியை தேடிக்கொண்டார். இது முட்டாள்தனமாய் தெரிகிறது என்று அந்த மருத்துவர் கூறுகிறார். ஆனால் சிறிய ஆனால் அழகான ஒன்றில் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்பது, “என்னுடைய சிருஷ்டிகரோடு பிணைக்கப்படுவதற்கும், ஒரு சிலரால் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் இந்த உலகத்தை பிரம்மாண்டமாய் பார்க்க நம்மை தூண்டுகிறது” என்று அந்த மருத்துவர் குறிப்பிடுகிறார்.

இந்த வழிகளில் மகிழ்ச்சியை தேடுவது என்பது, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நெகிழ்ச்சியை வளர்ப்பதற்கும் இந்த மருத்துவத் தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மருத்துவர் கூறுகிறார். அவர் “அனைவரும் மூச்சிவிடுவது அவசியம்; அதற்கு நேரம் ஒதுக்கி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்” என்று எல்லோருக்கும் ஆலோசனை கொடுக்கிறார்.

சங்கீதக்கான் தாவீது இந்த எண்ணத்தை சங்கீதம் 16 இல் வெளிப்படுத்துகிறார். “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்” என்றும் “ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்” (வச. 5,9) என்று குறிப்பிடுகிறார்.

தங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு இன்று மக்கள் பல வழிகளை கையாளுகின்றனர். ஆனால் இந்த மருத்துவரோ தன்னை சிருஷ்டிகருக்கு நேராய் திசை திருப்பும் ஞானமான மகிழ்ச்சியின் பாதையை கண்டுபிடித்தார். “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு” (வச. 11). அவரில் நாம் நித்திய மகிழ்ச்சியை சுதந்தரிக்கிறோம்.

 

தேவனுடைய பொறுமையான அன்பு

எங்களின் அழகான, பஞ்சுபோன்ற பூனைக்கு, வயிற்றைத் தடவி அதனுடன் விளையாடும் போதோ, மாலையில் அது என் மடியில் உறங்கும் போதோ, சில வருடங்களுக்கு முன்பு நாம் சந்தித்த அதே பூனை தான் அது என்று நம்புவது சில சமயங்களில் கடினமாக இருக்கும். எனது செல்லப் பூனை, எடை குறைவாகவும், அனைவருக்கும் பயந்தும் தெருக்களில் வாழ்ந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் நான் அதற்கு உணவு வைக்க ஆரம்பித்தவுடன் அது படிப்படியாக உருமாற்றம் அடைந்தது. ஒரு நாள் அது என்னுடைய செல்லப்பிராணியாய் மாறியது. மீதியெல்லாம் வரலாறே.

என் பூனையின் மாற்றம் பொறுமை மற்றும் அன்புடன் வரக்கூடிய சிகிச்சைமுறையின் நினைவூட்டலாகும். ஏசாயா 42-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய இருதயத்தை அது எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு, அவருடைய ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு ஊழியக்காரனைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது (வச. 1). அவர் தேவனுடைய நியாயத்தை பூமியிலே நிலைப்படுத்தும் வரை உண்மையாய் செயல்படுவார் (வச. 3-4).

அந்த ஊழியக்காரர் இயேசுவே (மத்தேயு 12:18-20). அவர் வன்முறையின் மூலமாகவோ அல்லது அதிகாரத்தைத் தேடுவதன் மூலமாகவோ தேவனுடைய நீதியை நிலைநாட்டமாட்டார். மாறாக, அவர் அமைதியாகவும், மென்மையாகவும் இருப்பார் (ஏசாயா 42:2). மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களை, காயமடைந்தவர்களை மென்மையாகவும் பொறுமையாகவும் கவனித்துக்கொள்வார் (வச. 3).

தேவன் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. காயப்பட்ட நம் இருதயங்கள் இறுதியாக குணமடையத் தொடங்கும் வரை அவற்றை எல்லா நேரங்களிலும் கவனித்துக்கொள்கிறார். அவருடைய மென்மையான, பொறுமையான அன்பின் மூலம் நாம் படிப்படியாக மீண்டும் ஒருமுறை நேசிக்கவும் நம்பவும் கற்றுக்கொள்கிறோம்.